Skip to content
Home » ஹெலன் கெல்லர் #1 – பிறப்பு

ஹெலன் கெல்லர் #1 – பிறப்பு

காது கேட்காத ஒருவர் இசை பைத்தியம் ஆக முடியுமா? கண் தெரியாத ஒருவரால் நயாகராவை ரசித்து, உருகி உருகி கடிதம் எழுத முடியுமா? முடியும் என்கிறது வரலாறு.

ஒரு வரவேற்பறைக்குள் நுழைந்த மனிதர் அங்கிருந்த மேடான கார்பெட்டில் தடுக்கி விழுந்தார். பின்னால் வந்த பார்வையற்றவர் மேட்டை நிதானித்து கடந்து சென்று இருக்கையில் அமர்ந்தார். இதுதான் புலன் நிறைந்தவர்களுக்கும் புலன் குறைந்தவர்களுக்குமான வித்தியாசம். அவர்கள் எப்போதும் சராசரியிலிருந்து கூடுதல் திறத்தோடு அணுகுவார்கள்.

சாலையில் நடந்து சென்றாலும் யார் உதவியும் தேடமாட்டார்கள். மேடு பள்ளத்தைத் தட்டிப்பார்க்கக் கையில் கம்பிருக்கிறது. முன்னால் பின்னால் வரும் வாகன ஒலியைக் கேட்க முடியும். இரைச்சலை வைத்து மக்கள் கூட்டத்தை உணர முடியும். இப்படியாக ஓர் இடத்தை மட்டும் அல்ல, வாழ்க்கையும் மெல்லக் கடந்துசெல்கிறார்கள். காது கேட்காதவர்களும் பேசுவதைக் கவனித்து வாயசைவை வைத்து யூகிப்பார்கள். ஓரளவு வாழ்க்கையைச் சமாளிக்கிறார்கள்.

ஒரு பெண்ணிற்குக் காது கேட்காது. வாய் பேசாது. பார்வையும் கிடையாது. ஐம்புலன்களில் அவளிடம் எஞ்சியிருந்தது மெய்யும் மூக்குமே. அந்த உடம்பாலும் மூக்காலும்தான் உலகைக் கரைத்துக் குடித்தாள். பிறருக்கும் புகட்டினாள்.

நம்மால் எதையும் பார்க்க முடியும். கேட்க முடியும். அதனால் தெரியாத ஒன்றையும் இது இப்படித்தான் இருக்கும் என்று கற்பனை செய்தால் ஓரளவு சரியாக இருக்கும். எதையும் பார்த்து கேட்டு அனுபவிக்காத அந்தப்பெண், தன் வாழ்நாள் முழுவதும் தன்னைச் சுற்றி நடப்பவற்றைக் கற்பனையால் மட்டுமே உணர்ந்து வாழ்ந்தாள். அதுவும் நூறு சதம் உண்மையோடு ஒத்துப்போகும் கற்பனை.

முக்கிய முப்புலன்களை இழந்தவள், எப்படித் தன் விடா முயற்சியால் உலகைத் திரும்பிப் பார்க்கவைத்தாள் என்பதுதான் இக்கதை. போராடி ஒவ்வொன்றாகக் கற்றாள். இல்லை, இப்படிச் சொல்வதைவிட அவள் போராடி, தான் வென்ற கதையை நமக்குக் கற்கக் கொடுத்தாள் எனலாம்.

அவள் ஒரு சக்தி தரும் உற்சாக மருந்து. மனம் சோரும்போதெல்லாம் அவளை நினைத்தால் போதும். எப்பெருந்தடையையும் இடது கையால் தட்டிவிடுவோம். எக் கொடுந்துயரையும் எழுந்து நின்று மிதிப்போம்.

அதற்கு முதலில் அவளை முழுமையாக அறிய வேண்டும். அதன் பிறகு எப்போதெல்லாம் அவளை நினைக்கிறோமோ அப்போதெல்லாம் உடலில் புது ரத்தம் பாய்ச்சுவாள். மனதைத் தெளிய வைப்பாள்.

அந்த ரத்தச் சுத்தியின் பெயர் ஹெலன் கெல்லர். ஜூன் 6, 1880இல் பிறந்த இவள் வாழ்வைப் பற்றி அறிந்துகொள்ள 144 ஆண்டுகளுக்கு முந்தைய வேறோர் பிராந்திய வாழ்க்கைக்குள் நுழைவோம்.

அமெரிக்காவில் வடக்கு அலபாமாவில் உள்ள ஒரு சிறிய நகரம் டஸ்கம்பியா. இங்குதான் ஹெலன் கெல்லரின் குடும்பம் வசித்தது. ஹெலனின் தந்தை வழி மூதாதையர்கள் சுவிஸ்சர்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இந்த வழியில் வந்த காஸ்பெர் கெல்லர் என்பவர் தன் காலத்தில் அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியில் குடியேறினார். சுவிஸ்சர்லாந்தில் உள்ள இவருடைய மூதாதையர்களில் ஒருவர் காது கேட்காதவர்களுக்குப் பாடம் நடத்த வழி கண்டுபிடித்தார். அவர்தான் காதுகேளாதோருக்கான முதல் ஆசிரியர் என்ற பெருமைக்குரியவர். அந்த முன்னோடி அக்கல்வி முறை சம்பந்தமாக ஆராய்ச்சி செய்தார். அதை அப்படியே ஒரு புத்தகமாகவும் எழுதினார். பின்னாளில் தனக்கு இப்படி ஒரு பேத்தி வருவாள் என்று தெரியாமல் செய்த பொதுத்தொண்டு அது.

அடிமைப்பட்டிருந்த நாட்டில் இந்த வம்சம் மட்டும் யாரும் யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை. அந்த காஸ்பெர் கெல்லரின் மகன்தான் ஹெலனின் தாத்தா. இவர் தன் தலைமுறையில் மேரிலாந்திலிருந்து அலபாமாவிற்குக் குடிபெயர்ந்தார்.

அலபாமாவிலிருந்து வருடத்திற்கு ஒருமுறை பிலடெல்பியாவிற்குக் குதிரையில் செல்வார். தன் தொழிலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவருவார். தாத்தாவின் இந்தப் பயணங்கள் பற்றிய கடிதங்களைச் சேகரித்து வைத்திருந்தார் ஹெலனின் அத்தை. இதையெல்லாம் அத்தை சொல்ல ஹெலன் அறிந்துகொண்டாள். பாட்டியின் பின்புலத்திற்கும் குறைவேதுமில்லை. வர்ஜீனிய காலனி ஆட்சியில் கவர்னராக இருந்தவரின் பேத்திதான் பாட்டி.

இந்தத் தாத்தா பாட்டிக்குப் பிறந்தவர்தான் ஹெலனின் தந்தை ஆர்தர் எச்.கெல்லர். இவர் தேசிய ராணுவப் படையின் தளபதி. தன்னைவிடப் பல ஆண்டுகள் வயது குறைந்த பெண்ணை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொண்டார். அவள் பெயர் கேட் ஆடெம்ஸ்.

கேட் ஆடம்ஸின் தாத்தா பெஞ்சமின் ஆடெம்ஸ். அப்பா சார்லஸ் ஆடெம்ஸ். சார்லஸ் அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது தென் அமெரிக்கா சார்பில் போரிட்டவர். அதனால் பிரிகேடியர் ஜெனரலாகப் பதவி உயர்ந்தவர். போர் முடிந்ததும் இவர் தன் மனைவி லூசி ஹெலனுடன் டென்னசியிலுள்ள மெம்ஃபிஸில் குடியேறினார். இவர்களின் புதல்விதான் கேட் ஆடெம்ஸ், ஹெலனின் தாய்.

ஆர்தர் எச்.கெல்லருக்கும் கேட் ஆடெம்ஸூக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் வாழும் பகுதியில் பண்ணை வீட்டருகே ஒரு சிறிய வீட்டைக் கட்டிவைப்பது மரபு. எனவே உள்நாட்டுப் போருக்குப் பின் அப்படியான ஒரு சிறிய வீட்டைக் கட்டிவைத்தார் கெல்லர். ஏதாவது முக்கியமான தருணத்தில் பயன்படும் என்று.

அந்தச் சிறிய வீட்டில்தான் இவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். அதில் இவர்கள் தங்குவதற்கு ஒரு அறையும். வேலைஆள் தங்குவதற்கு ஓர் அறையும் இருந்தன.

மஞ்சள் ஊதா நிறப் பூக்கள் பூத்துக் குலுங்கும் அழகிய வீடது. திராட்சைக் கொடிகள் படர்ந்திருக்கும். பலவகையான ரம்மியச் செடிகளும் வீட்டைச் சூழ்ந்திருக்கும். எனவே அந்தக் கொடியிலேயே வீட்டிற்கான பந்தலும் அமைத்திருக்கும். ரோஜாவால் நுழைவாயில் அமைத்திருப்பது அந்த வீட்டை இன்னும் கூடுதல் அழகாக்கியது. ரோஜாவின் வாசம் அந்த வீட்டிற்கு மட்டுமல்ல அப்பகுதி முழுவதிலும் வீசி சேவை வள்ளல் பட்டம் பெற்றது. பறவைகளுக்கும், தேன் உண்ணும் வண்டுகளுக்கும் சொர்க்கபுரி அவ்வீடு.

இதிலிருந்து சிறிது தூரத்தில் உள்ளதுதான் பண்ணைவீடு. அதில்தான் கெல்லரின் பூர்விகக் குடும்பம் வசித்தது. அவ்வீட்டிற்கு ஐவி பச்சை என்று பெயர். மரங்கள், செடி கொடிகள், வேலி என அனைத்தும் பசுமையால் சூழ்ந்திருக்கும் என்பதால் அப்படிப்பட்ட காரணப் பெயர் உண்டானது அப்பண்ணை விட்டிற்கு. இதைப்போல்தான் தான் வாழும் வீட்டையும் உருவாக்கினார்.

ஐவி கொடி படர்ந்திருந்த அந்தத் தோட்டவெளிதான் ஹெலனின் குழந்தைப் பருவத் தேவலோகம். அது லில்லியோ, ஊதாவோ எந்தப் பூக்களையும் அதன் அதன் வாசனையை வைத்தே கண்டுபிடித்துவிடுவாள். மூர்க்கமாகக் கோபம்கொள்ளும் ஹெலனை இந்தத் தோட்டம்தான் தன் பசுந்தளிரால் சாந்தப்படுத்தியது. இதில் மறைந்துதான் தன் நிதான உணர்வை மீட்டெடுப்பாள். புல் பூண்டுகளில் வேலிகளிலும் தன் முகத்தைப் புதைத்துக்கொள்வாள். நாள் கணக்கில் படுத்திருப்பாள். பூக்கள் நிறைந்த அந்தத் தோட்டத்தில் உலாத்துவதைத்தான் இன்பமென நினைப்பாள்.

திராட்சைக் கொடியின் இலையைக் கொடுத்தாலும், பூவைக் கொடுத்தாலும், அதன் வாசனையை வைத்தே சொல்லிவிடுவாள். அனைத்திலும் ஹெலனைக் கொள்ளைக் கொண்டது ரோஜாதான். காலை வேளையில் பனியில் மூழ்கிய எழுந்த ரோஜாவின் மிருதுவையும் பரிசுத்தத்தையும் மகோன்னதமாக உணர்வாள்.

எல்லாக் குழந்தைகளைப்போல்தான் ஹெலனின் ஆரம்ப நாள்கள் அமைந்தன. முதல் குழந்தை, அதுவும் பெண் குழந்தை என்பதால் பாசத்திற்கும் சீராட்டுதலுக்கும் குறைவேதுமில்லை. குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது எனக் குடும்பமே ஆலோசித்தது. குடும்பத்தின் முதல் குழந்தைக்கு ஏனோ தானோ என்று ஒரு சாதாரணப் பெயரை வைத்துவிட முடியாதே! எல்லோரும் அக்கறையாக ஆலோசனை சொன்னார்கள்.

தன் மூதாதையர்களில் சிறப்பு வாய்ந்தவரான மில்ட்ரெட் கம்பல் என்ற பெயரை வைக்க ஹெலனின் தந்தைக்கு விருப்பம். ஹெலனின் தாய் தனது தாயின் பெயரான ஹெலன் எவ்ரெட் பெயரைச் சூட்டிவிடலாம் என நினைத்தார். மனைவி சொல்லிற்கு மறுப்பு இருக்குமா? பெயர் சூட்டக் குழந்தையைத் தேவாலயத்திற்கு எடுத்துச் சென்றனர். செல்லும் வழியில் மனைவி சொன்ன பெயரின் பாதியை மறந்துவிட்டார் கணவர். தன் வம்சம் சம்பந்தப்படாத பெயர் அல்லவா? ஹெலன் ஆடெம்ஸ் என்று சொல்லிவிட்டார். பிறகு ஆடெம்ஸூம் இல்லாமல் தந்தை பெயரோடு ஹெலன் கெல்லரானார்.

பிறகென்ன? பெயர் வைத்த குழந்தை கைகால் ஆட்டி அளவுக்கதிகச் சுறுசுறுப்போடு படுசுட்டியாக இருந்தாள். ஆரம்பத்திலேயே அழுத்தம், பிடிவாதம், குறுகுறுப்பு என அனைத்தும் நிறைந்த குழந்தை அவள். மற்றவர்கள் செய்வதைப்போல் தானும் உடனே செய்யவேண்டும் என அடம்பிடிப்பாள்.

ஆறாவது மாதத்தில் How’d’ye என்ற வார்த்தையால் மழலைப் பேசினாள். ஒரு நாள் Tea என்று சொல்லி எல்லோரையும் அசர வைத்தாள். வாட்டர் என்ற வார்த்தையும் வந்திருக்கிறது. காய்ச்சலிலிருந்து பிழைத்து தான் பேசிய அந்த ஒரு வார்த்தையைத்தான் அடிக்கடி நினைத்துப்பார்ப்பாள். வாட்டர் என்று முழுமையாகச் சொல்ல முடியாமல் வா… வா… என்ற ஒலியை விடாமல் எழுப்பிக் கொண்டிருப்பாள். ‘வா’… அதைத்தாண்டி அவளால் உச்சரிக்க முடியாது.

ஒரு வயதில் நடக்க ஆரம்பித்துவிட்டாள். குழந்தையைக் குளிக்க வைத்து மடியில் வைத்துத் துடைத்துவிட்டார் ஹெலனின் அம்மா. மரத்திலிருந்து கீழே விழுந்த இலையின் நிழலைக் கவனித்தாள். அதைக் கையிலெடுக்கிறேன் என்று எழுந்து ஓடினாள். கீழே விழுந்தாள். விழுந்தவள் அம்மா வந்து தூக்க வேண்டும் என்பதற்காக அழுதுகொண்டிருந்தாள் அந்தக் குறும்புக்காரி.

இப்படியான சந்தோஷ நாள்கள் அதிகம் நீடிக்கவில்லை. ஆர்வமும் சந்தோஷமும் பொங்கிய அந்தக் குழந்தையின் வாழ்வு விரைவில் முற்றுக்கு வந்தது.

அப்போது அவளுக்கு ஒன்றரை வயது. காய்ச்சல் கண்டு படுத்தாள். வயிற்றிலும் மூளையிலும் கடுமையான பாதிப்பு இருப்பதாக மருத்துவர் கூறினார். குழந்தை உயிர் பிழைக்காது எனச் சிகிச்சை அளித்த மருத்துவர் சொன்னார். ஆனால் மருத்துவருக்கே அதிர்ச்சிதரும் வகையில் குழந்தை உயிர் பிழைத்தாள். மாய மந்திரம்போல் திடீரென வந்த காய்ச்சல் திடீரெனவே சென்றுவிட்டது. அந்தக் காய்ச்சல் பார்வையையும் எடுத்துச் சென்றிருந்தது.

அன்றைய நாள் அந்தக் குடும்பத்தினருக்கு அளவில்லாக் கொண்டாட்டப் பொழுதாக அமைந்தது. இனிமேல் அந்தக் குழந்தையால் பார்க்க முடியாது என்று தெரியாமல் குடும்பம் கொண்டாடிக்கொண்டிருந்தது. ஏன் மருத்துவருக்கே இந்த விஷயம் தெரியாது.

தூக்கத்தின் நடுவே வெளிச்சத்தை உணர்ந்தால் திரும்பிப் படுத்துக்கொள்வாள் குழந்தை. தூங்கி எழுந்தால் கண்களில் ஈரப்பசை இருக்காது. வறண்டிருக்கும். அதனால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. அதுவரை அவளுக்கு வசப்பட்டிருந்த வெளிச்சம் மெல்ல மெல்ல விலகி இருள் கவிழ்ந்தது. ஒவ்வொரு நாளும் படிப்படியாகப் பார்வை மங்கி கடைசியில் நினைவுகளைத் தவிர எல்லாமே கலைந்துபோன கனவாகின.

இருள் மட்டும் அவளைச் சூழவில்லை. இக்கொடுமையைப் பார்க்கச் சகியாத உலகம் தன் வாயை மூடிக்கொண்டது. அவளால் பயங்கர நிசப்தத்தை மட்டுமே உணர முடிந்தது. ஆம் அவளுக்குக் காதும் போய்விட்டது.

அம்மாவை அம்மா என்று அழைக்க முடியவில்லை, தாயின் தாயின் ஸ்பரிச அன்பை மட்டும்தான் அக்குழந்தையால் உணர முடிந்தது. அந்தப் பாச வருடலின் இதம் அக்குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் நினைவில் இருந்தது.

பத்தொன்பது மாதங்கள் பரந்து விரிந்த வயல்வெளிகளையும் பசுமையையும் வானத்தையும் மலர்களையும் பார்த்திருக்கிறாள். பறவை, வண்டுகளின் ரீங்காரத்தைக் கேட்டிருக்கிறாள். இருள் சூழ்ந்தாலும் இக்காட்சிகளும் சத்தங்களும் அக்குழந்தையின் நினைவிலிருந்து முற்றிலும் அழிந்துவிடவில்லை. பேசிய வார்த்தைகளும் காற்றின் வெளியில் கலந்திருந்தன. வேறு வழியின்றி அக்குழந்தை தன்னைச் சூழ்ந்திருந்த மௌனத்திற்கும் இருளுக்கும் பழக்கிக்கொள்ள ஆரம்பித்தாள். தேவைகளுக்குக் கை ஜாடை காட்டத் தொடங்கினாள்.

(தொடரும்)

பகிர:
ஸ்ரீதேவி கண்ணன்

ஸ்ரீதேவி கண்ணன்

ஸ்ரீதேவி கண்ணன், கடலூர் மாவட்டம். சென்னையில் அரசுப்பணியில் இருக்கிறார். சொல்ஒளிர் கானகம், TNPSC தேர்வு வழிகாட்டி போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். 5 கிண்டில் நூல்களைப் பதிப்பித்துள்ளார். இணைய வார இதழ், மல்லிகை மகள் போன்ற இதழ்களில் எழுதிவருபவர். தொடர்புக்கு sridevikannan20@gmail.com.View Author posts

2 thoughts on “ஹெலன் கெல்லர் #1 – பிறப்பு”

  1. மனதிற்கு தெம்பு தரும் ..அமிர்த மொழிகளுள் கானங்கள் கேட்கிறேன் ஹெலன் அவர்களின் வாழ்க்கை ஒரு உத்வேகம் அளிக்கிறது..பல மாதங்களை கட‌ந்து இன்று ..

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *