Skip to content
Home » ஹெலன் கெல்லர் #2 – உடலால் உணர்தல்

ஹெலன் கெல்லர் #2 – உடலால் உணர்தல்

நிசப்த உலகையும், இருண்ட உலகையும் கண்டு ஹெலன் சுருண்டுவிடவில்லை. அவர் தாயைவிட்டுப் பிரியாத குழந்தையாக இருந்தார். தாய் அமர்ந்திருந்தால் மடியில் படுத்திருப்பார். எழுந்து வேலை செய்யச் சென்றால், உடையைப் பிடித்துக்கொண்டே நடப்பார். அம்மா செய்யும் வேலையின் ஒவ்வொரு பொருளையும் தன் கைகளால் தொட்டுப் பார்ப்பார். அதன் மூலம் அப்பொருளைத் தன் கற்பனையால் உணரத் தொடங்கினார்.

தான் நினைப்பதை அல்லது உணர்ந்ததை வெளிப்படுத்த அவருக்குள்ளாகவே ஓர் உந்துதல் ஏற்பட்டது. அதற்காகத் தன்னியல்பாக ஒரு சைகை மொழியைத் தேர்ந்தெடுத்தார். ஆரம்பத்தில் புரிந்துகொள்ள முடியாத கரடுமுரடான மொழியாகத்தான் அது இருந்தது. ஏதேதோ சைகைகளைக் காட்டத் தொடங்கியவர் நாளடைவில் தெளிவு பெற்றார். அதன்பிறகு தேர்ந்த தேர்ச்சியும் பெற்றார்.

தன் பசி தேவைக்கு ரொட்டி வேண்டும். ரொட்டியைக் கையால் தொட்டு உணர்ந்தவர் அல்லவா? ஒரு கையை இன்னொரு கையால் நறுக்கிக் காட்டி அதில் வெண்ணெய் தடவுவதுபோல் பாவனை செய்து காட்டுவார். ஐஸ்கிரீம் வேண்டும் என்றால் கையைக் குவித்து வாயில் வைத்து உறிஞ்சிக் காட்டுவார். அதிக குளிர்ச்சி எனில் தான் நடுங்குவதுபோல் நடித்துக்காட்டி ஹீட்டர் போடச் செய்வார். இதெல்லாம் அதீத புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு. தாய்க்குத் தன் குழந்தை எப்படி இப்படிப் புரியவைக்கிறார் என்பதில் வியப்பு.

கையை நீட்டி இழுப்பதுபோல் சைகை காட்டினால் ‘வா’. தள்ளி விடுவதைப்போல் காட்டினால் ‘போ’. மேல் கீழாகத் தலையாட்டினால் ‘ஆம்’. இடது வலதாகத் தலையாட்டினால் ‘இல்லை’. இவற்றைப் போன்ற சைகைகளைத் தானே செய்ய ஆரம்பித்தார்.

குழந்தை பேசும் சைகை மொழியைப் புரிந்துகொள்வதில் தாய் கரை கண்டுவிட்டார். எத்தனை நாள் குழந்தை அம்மாவின் உடையைப் பிடித்துக் கொண்டு நடக்கும்? இருட்டில் தனியாக நடக்க ஆரம்பித்தார், வாழ்வில் வெளிச்சத்திற்கு வர. எந்தப் பொருள் எங்கு இருக்கிறது என்பதெல்லாம் தொடுதல் மூலம் மனதில் ஏற்றிக்கொண்டார்.

அந்த இருள்தேசப் பயணத்திற்கு முதல் வெளிச்சக் கீற்றைப் பாய்ச்சியவர் ஹெலனின் தாய். தாயன்பினால் தன்னைச் சுற்றி நடப்பதை எளிதாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார் ஹெலன். ஹெலனின் தாயார் குழந்தையின் மொழியிலேயே வேலை பழக்கிவிட்டார். அம்மா என்ன செய்யச் சொன்னாலும் உடனே குழந்தை புரிந்துகொண்டு செய்ய ஆரம்பித்தது. ஏதாவது ஒரு பொருளைக் கொண்டுவரச் சொன்னால் அது மாடியில் இருந்தாலும் கொண்டுவந்துவிடுவார். தன் வேலைகளையும் தானே செய்யக் கற்றுக்கொண்டார்.

ஐந்து வயதில் சலவையிலிருந்து வரும் துணிகளை மடித்துவைப்பார். கையும் மூளையும் சொல்வது எப்போதும் சரியாக இருக்கும். எனவே எது யார் துணி என்று தொட்டுப்பார்த்துத் தனித்தனியாக மடித்து வைத்துவிடுவார். தன் துணியைத் தன் அறையில் வைத்துக்கொள்வார். வீட்டை ஒழுங்கு படுத்துவார்.

அத்தையும் அம்மாவும் உடுத்தி இருக்கும் துணியை வைத்தே கண்டுபிடித்துவிடுவார், அவர்கள் வெளியே செல்லப்போவதை. தன்னையும் அழைத்துச் செல்லும்படி அடம்பிடிப்பார். அவசரமாகச் செல்லும்போதெல்லாம் அழைத்துச் செல்ல முடியாதல்லவா? எனவே விருந்தினர்கள் வந்தால் கொண்டாட்டமாகிவிடும் ஹெலனுக்கு. அம்மாவைப்போல் அத்தையைப்போல் நல்ல உடையாக எடுத்து உடுத்திக்கொள்வார்.

அன்றும் அப்படித்தான் அம்மாவைப் பார்க்க ஒரு தனவான் வந்திருந்தார். கதவு திறக்கப்படும் அதிர்வைக் கால்களின் மூலம் உணர்ந்துகொண்டார். உடனே யாரும் தன்னைத் தடுப்பதற்குள் மாடிக்குச் சென்றார். பிடித்தமான உடையை அணிந்துகொண்டார். மற்றவர்களைப்போலவே கண்ணாடியின் முன்பாக நின்றார். தலையில் எண்ணெய் தடவிச் சீவினார். முகத்தில் பௌடரை அப்பிக்கொண்டார். தோள்வரை தொங்கும் முகத்திரை துணியை எடுத்து தலைமுடியில் பின் செய்து கொண்டார். கீழே இறங்கிவந்து விருந்தினரை மகிழ்வித்தார். அவரை உபசரிக்கும் பணிக்கு அம்மாவிற்கு உதவி செய்ய அடுப்பறைக்குச் சென்றார்.

அன்றுதான் தான் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டிருப்பதை உணர்ந்தார். அம்மாவும் நண்பரும் தன்னைப்போல் சைகைக் காட்டவில்லை. தங்கள் எண்ணங்களை வாயசைப்பதன் மூலம் பரிமாறிக்கொள்கிறார்கள் என்பதை உணர்ந்தார். எல்லாவற்றையும் கற்றுத்தரத்தான் கை இருக்கிறதே. உடனே இருவருக்கும் இடையே மாறி மாறி ஓடினார். வாயசைவை விரலை வைத்துத் தொட்டுப் பார்த்தார். ஆனால் புரிந்துகொள்ள முடியவில்லை. வெறுத்துப்போனார். காதில் விழுந்தால்தானே அந்த அசைவிற்கான ஒலியை உணர முடியும்? ஏதேதோ சைகைகள் செய்துபார்த்து அலுத்துப்போனார். இப்படியான புரிந்துகொள்ள முடியாத தோல்விகள்தான் அவருக்கு ஆத்திரமூட்டும். தரையில் விழுந்து புரள்வார். ஓய்ந்து போகும்வரை கத்துவார்.

தான் செய்யும் மூர்க்கத்தனங்கள் மற்றவர்களைக் கஷ்டப்படுத்தும் என்பதை அறிந்தே செய்வார். இயல்புநிலைக்குத் திரும்பிய பிறகு செய்த செயலுக்காக வருந்துவார். ஆனால் தான் விரும்பியது கிடைக்கும்வரை ஆவேசத்தைச் சற்றும் குறைக்க மாட்டார்.

ஹெலன் மின்னல் வேகச் சுறுசுறுப்பானவர். உடல் வலிமை பெற்றவர். எதிர் விளைவுகள் பற்றித் தெரியாது என்பதால் எதையும் பட்டெனத் துணிந்து செய்துவிடுவார். எதையும் தன் மனம் போனபோக்கில் செய்வார். ஆனால் அதில் துல்லியம் இருக்கும். இந்தப் பாணிதான் அவருடைய தனித்த அடையாளமானது. ஒரு விஷயத்திற்காக எவ்வளவு கடுமையாகப் போராட வேண்டும் என்றாலும் போராடுவார். அதற்காகத் தன் விருப்பத்தை மாற்றிக்கொண்டு பின்வாங்க மாட்டார்.

ஹெலன் வீட்டில் சமையல் வேலை செய்தவரின் மகள் மார்த்தா. ஹெலனைவிட இரண்டு வயது மூத்தவர். தாயைத் தவிர ஹெலன் பேசும் சைகை மொழியைக் குழப்பமில்லாது உடனே புரிந்துகொண்டவர் மார்த்தாதான்.

தான் விரும்பியபடி ஆட்டிவைக்க ஹெலனுக்கு ஓர் உயிர் பொம்மை கிடைத்துவிட்டது. தன் விருப்பங்களை மார்த்தா மூலம் செயல்படுத்திக்கொண்டார். மார்த்தாவை அடி பணிய வைப்பதில் ஹெலனுக்கு அப்படி ஒரு சந்தோஷம். மார்த்தாவும் ஹெலன் ஆவேசப்பட்டால் என்ன நேரும் என்பதைப் புரிந்தவர். எனவே முரட்டுத்தனமான உதையிலிருந்து விடுபடுவதற்காகப் பணிந்துவிடுவார்.

மார்த்தாவும் ஹெலனும் சமையலறைக்குள்தான் அதிக நேரம் செலவிடுவார்கள். ஏனெனில் ஹெலனிடமிருந்து தப்பிக்கும் முயற்சியாக மார்த்தா தன் தாயைத் தேடி வருவார். ஹெலனும் பின்னாலேயே வந்துவிடுவார். பிறகென்ன? அம்மாவிற்கு உதவியவர் அல்லவா? சமையலுக்கும் உதவுவார். ரொட்டிக்கு மாவு பிசைவது, காஃபி கொட்டை அரைப்பது, ஐஸ்கிரீம் தயாரிக்க உதவுவது போன்ற வேலைகள் நடக்கும்.

சமையலறைப் படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டே அங்கே வரும் கோழிகளுக்கு இரை போடுவார். அந்தக் கோழிகள் அவர் கையிலிருப்பதைக் கொத்திச் சாப்பிடும் அளவிற்கு நெருக்கமாயின. பிறகு அவை தங்களைத் தொட்டுத் தடவிப் பார்க்கும் அனுமதியை ஹெலனுக்குக் கொடுத்தன. இப்படித்தான் ஒவ்வொரு உயிரினங்களையும் அறிந்துகொள்ளத் தொடங்கினார்.

ஒருநாள் கையிலிருந்த தக்காளியைக் கோழி கொத்திக்கொண்டு ஓடிவிட்டது. உடனே கோழியைக் குருவாக வரித்துக் கொண்டார் ஹெலன். அந்தப் பாடத்தைத் தானும் செய்து பார்த்தார். அப்போதுதான் செய்து வைத்திருந்த கேக்கைக் கொத்திக்கொண்டு ஓடினார். தோட்டத்தின் மூலையில் இருந்த மரக்கட்டையில் அமர்ந்து, துளியும் மிச்சமில்லாமல் சாப்பிட்டு முடித்தார். ஒரு கேக்கையும் மொத்தமாகச் சாப்பிட்டால் என்னாவது? அடுத்த நாள் உடல் நலமில்லாமல்போனது. இதேபோல் கோழிக்கும் தண்டனை கிடைத்திருக்கும் என நினைத்தார்.

பிடித்தமான வேலைகளில் ஈடுபடுவது ஹெலனின் வழக்கம் அல்லவா? அந்தக் கினியாக் கோழி இரை தேடி தன்னிடம் வராதபோது இவராகத் தேடிச்செல்வார். அது யார் கண்ணிலும் படாத உயரமான புற்களுக்கிடையே தனது கூட்டைப் பொதித்து வைத்திருக்கும். அதைக் கண்டுபிடித்து அதிலுள்ள முட்டைகளை எடுப்பதுதான் ஹெலனுக்கு அளவு கடந்த சந்தோஷத்தைக் கொடுக்கும். கேக் திருடுவது முதல் முட்டை எடுப்பது வரை எதுவானாலும் மார்த்தாவோடு சேர்ந்துதான் வேட்டை நடத்துவார். கூட்டைக் கண்டுபிடித்துவிட்டால் போதும். முட்டைகளை வீட்டிற்கு எடுத்துவரும் பொறுப்பை மார்த்தாவிடம் கொடுக்கமாட்டார். உடைத்துவிடுவாராம். எனவே ஹெலன்தான் சேகரித்ததைப் பொறுப்பாகக் கொண்டுசேர்ப்பார்.

அடுத்த பொழுதுபோக்கிடம் குதிரை லாயங்களும், மாட்டுக் கொட்டகைகளும்தான். ஹெலனுக்குச் சுவாரஸ்யமான விஷயம் மாடு பால்கறக்கும்போது மடியைத் தொட்டுப்பார்ப்பதுதான். அதீத ஆர்வக் கோளாறில் மாட்டிடம் உதையும் பட்டிருக்கார். சோளம் கொட்டி வைத்திருக்கும் கூடாரத்தையும் விட்டு வைக்காமல் ஆராய்வார். அவர் கால்படாத கைப்படாத இடங்களே இல்லை, எனலாம்.

கிறிஸ்துமஸ் நெருங்கினால் குஷியாகிவிடுவார். விதவிதமாகக் கமழும் பலகார மணங்கள் ஹெலனைச் சந்தோஷப்படுத்தும். வால்தனம் செய்யாமல் இருப்பதற்காகச் செய்பவற்றில் சிறிதளவைக் கொடுத்துவிடுவார்கள். குறைவாகக் கிடைப்பதில் குறை இருந்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.

உதவி செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் மீண்டும் உள்ளே செல்வார். மாவு அரைத்துக் கொடுப்பது போன்ற எதையாவது ஒன்றைச் செய்துவிட்டு இனிப்புக் கரண்டிகளை நக்கிக்கொள்வார். சுடுவதற்குத் தயாராக இருக்கும் பொருட்களையும் லவட்டி வாயில் போட்டுக்கொள்வர். இதற்கெல்லாம் யாரும் தடைபோடமாட்டார்கள் என்பதால் வேட்டை சீராக நடக்கும். அடுத்த கனவு கிறிஸ்துமஸ் பரிசு பற்றியது. என்ன கிடைக்கப்போகிறது என்ற ஆர்வத்தில் அன்றிரவு தூங்க மாட்டார்.

ஒரு கத்திரி வெய்யிலில் கத்தரி விளையாட்டை விளையாடினர் மார்த்தாவும் ஹெலனும். இருவரும் சேர்ந்து காகிதப் பொம்மைகளைத் துண்டு துண்டாகக் கத்தரித்தனர். பொம்மை அலுத்துவிடவே அடுத்து ஷூ நாடாக்களைக் கத்தரிக்கத் தொடங்கினர். அடுத்து கைக்கெட்டும் தூரத்தில் இலை செடி கொடிகள் என எது கிடைத்தாலும் கத்தரித்தனர். எல்லாம் முடிந்துவிடவே கடைசியில் கத்தையாகச் சுருண்டிருந்த மார்த்தாவின் முடியின் மீது கவனம் திரும்பியது. முதலில் மார்த்தா ஒப்புக்கொள்ளவில்லை. ஹெலனின் குறும்பில் சிறிதாவது மார்த்தாவிற்கு இல்லாமலா போய்விடும். தானும் ஹெலன் தலையில் விளையாடிவிடலாம் எனக் காட்டினார். மார்த்தா முறை வந்தபோது ஹெலனின் முடி கற்றையாகப் பறிபோனது. இன்னும் சற்று நேரம் ஹெலனின் அம்மா வராமல் இருந்திருந்தால் மொட்டை விழுந்திருக்கும்.

ஹெலனின் இரண்டாவது தோழி பெல்லி என்ற நாய். வயதாகிவிட்டதால் ஹெலனின் சுறுசுறுப்பிற்கு அதனால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஹெலன் தன் சைகை மொழியை அதற்குக் கற்றுத்தரப் படாதபாடு பட்டார். ஆனால் அது எதையும் காதில் வாங்காது. கற்றுக்கொள்ளவும் அக்கறை காட்டாது. எழுந்து நெட்டி முறித்து கணப்பு அடுப்பிற்குப் பக்கத்தில் போய் படுத்துக் கொள்ளும். தோல்வியுற்ற ஹெலன் வழக்கம்போல் மார்த்தாவைத் தேடிக்கொண்டு போவார். ஆனால் ஹெலனைக் கண்டால் சந்தோஷமாகக் குரலெழுப்பும் பெல்லி. பறவையைக் கண்டால் காதுகளை விரைப்பாக வைத்துக்கொள்ளும். அதைத் தொட்டுப்பார்த்து தானும் அப்படியே வைத்துக்கொள்வார் ஹெலன். தான் விரும்புகிறபடி எல்லாம் வளைக்க முடிந்தது மார்த்தாவை மட்டும்தான். பெல்லியை அல்ல என்பதை உணர்ந்துகொண்டார்.

ஒரு நாள் கைத்தவறி உடையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டார் ஹெலன். முகப்பு அறைக்குச் சென்றார். அங்கிருந்த கணப்பு அடுப்பின் முன் நின்று அதை உலர்த்தினார். அது உடனே உலராததால் சாம்பல் குவியலின் மீது துணியைப் போட்டார். ஒரு கணத்திற்குள் உடையில் தீப்பிடித்துக்கொண்டது. சூடு தாங்காமல் பயங்கரமாகக் கூச்சல் போட்டார்.

வினி என்ற வயதான நர்ஸ் ஹெலனைப் பார்த்துக் கொள்வார். இவரின் முரட்டுத்தனத்தைப் பொறுத்துக் கொள்ளச் சிக்கிய அடுத்த அடிமை அவர். ஹெலனின் கூச்சல் காதில் விழவே ஓடிவந்தார். போர்வையைப் போட்டுச் சுருட்டியெடுத்து தீயை அணைத்தார். குழந்தை மூர்ச்சையாகிவிட்டது. கைகளில் தீக்காயம். தலைமுடி பொசுங்கி, உடலில் சிறிதளவு தீக்காயத்தோடு தப்பித்தார்.

ஆனாலும் சுட்டித்தனமும் துடுக்கும் குறையவில்லை. சாவியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டுவிட்டார். உடனே பரிட்சையில் இறங்க வேண்டாமா? சோதனைக்கு அன்று எலிப்பொறியில் மாட்டியது ஹெலனின் அம்மா. ஸ்டோர் ரூமில் வைத்து பூட்டிவிட்டார்.

மூன்று மணி நேரமாகத் தொடர்ந்து கத்திக் கத்திக் கதவைத் தட்டினார். வேலைக்காரர்கள் தோட்டத்தில் இருந்ததால் யார் காதிலும் விழவில்லை. இந்த ஸ்ட்டிரிக்ட் ஆஃபிசரோ சரியாக 3 மணி நேரம் தேர்வெழுதிய பிறகே அறையிலிருந்து வெளியேற அனுமதித்தார். அதுவரை அறையின் வாசலில் அமர்ந்துகொண்டு கதவின் அதிர்வை ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார்.

இந்தச் சம்பவம்தான் ஹெலனுக்குக் கல்வி புகட்ட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது அவரின் தாய்க்கு.

(தொடரும்)

படம்: 1962 movie “The Miracle Worker”

பகிர:
ஸ்ரீதேவி கண்ணன்

ஸ்ரீதேவி கண்ணன்

ஸ்ரீதேவி கண்ணன், கடலூர் மாவட்டம். சென்னையில் அரசுப்பணியில் இருக்கிறார். சொல்ஒளிர் கானகம், TNPSC தேர்வு வழிகாட்டி போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். 5 கிண்டில் நூல்களைப் பதிப்பித்துள்ளார். இணைய வார இதழ், மல்லிகை மகள் போன்ற இதழ்களில் எழுதிவருபவர். தொடர்புக்கு sridevikannan20@gmail.com.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *