Skip to content
Home » ஹெலன் கெல்லர் #4 – ஸல்லிவனும் எழுத்தும் – ஓர் அறிமுகம்

ஹெலன் கெல்லர் #4 – ஸல்லிவனும் எழுத்தும் – ஓர் அறிமுகம்

ஹெலனின் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் மார்ச் 3, 1887. ஆசிரியர் மிஸ். ஸல்லிவன் ஹெலனைச் சந்தித்த நாள் அது. ஆனால் ஹெலனால் அன்று நடக்கவிருப்பதை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பனிமூட்டம் மறைத்திருக்கும் நேரத்தில் நிகழும் கடல் பயணம் போன்ற மனநிலை. கப்பல் வெண் புகையில் மாட்டிக்கொண்டது. பதற்றத்துடன் கப்பல் தன் எடையைத் தூக்கிக்கொண்டு கரையை நோக்கி வருகிறது. என்ன நடக்கும் என்று தெரியாது. ஆனால் நிம்மதி தரக்கூடிய ஒன்று நடக்க வேண்டும். அதற்கு எப்படி இதயம் துடிக்குமோ அப்படியான துடிப்பில் இருந்தார் ஹெலன்.

ஸல்லிவனைப் பார்ப்பதற்கு முன், கல்வி ஆரம்பமாவதற்கு முன் ஹெலனின் நிலை இதுதான். அவரிடம் திசை காட்டும் கருவியோ, கடலின் ஆழத்தை அளவிடும் கருவியோ அப்போது கிடையாது. துறைமுகம் எவ்வளவு அருகில் இருக்கிறது என்பதை அறியாத குழந்தையாகத் துடித்தபடி இருந்தார்.

தனக்கு ‘ஒளி வேண்டும்’ என்பதுதான் அவர் ஆன்மாவின் கதறலாக இருந்தது. ஒளி என்றால் நேரடிக் கண் பார்வை அல்ல. ஏதோ ஒரு வெளிச்சம். அந்த வெளிச்சத்தைச் சுமந்துகொண்டு கூடவே அன்பையும் பாய்ச்ச வந்தார் ஸல்லிவன்.

வீடு ஒரே பரபரப்பாக இருந்தது. தன் தாய் அங்கும் இங்கும் பரபரப்பாக ஓடும் சைகைகளை வைத்து வீட்டில் வழக்கத்திற்கு மாறான புதிய செயல் நடக்கப்போவதை உணர்ந்துகொண்டார். அதனால்தான் வீட்டின் முகப்புப் பந்தலில் அப்படி ஒரு மௌனத்தில் அமர்ந்திருந்தார்.

அந்தப் பந்தலில் மஞ்சள், இளஞ்சிவப்பு வண்ணங்களில் பூக்கள் பூக்கும். அதன் வழியே ஊடுருவி வந்த சூரிய ஒளி ஹெலன் மீதும் தன் வண்ணங்களைப் பூசியது. வசந்த காலத்தை வரவேற்பதற்காகப் பூத்திருந்த பூக்கள். அப்படியே ஆசிரியரையும் வரவேற்கத் தயாராகின. அதற்கு முன் ஹெலனின் கைகளை வருடிப்பார்த்தன. எப்படிப்பட்ட அதிசயத்தை எல்லாம் தரப்போகிறது எதிர்காலம் என்பது அறியாமல் பூக்களின் மென் தீண்டலுக்கு இணங்கி அமர்ந்திருந்தார் ஹெலன்.

காலடிகள் நெருங்கி வருவதை உணர்ந்தார். தாயை நோக்கி கையை நீட்டும் குழந்தையைப்போல் இரு கரங்களையும் நீட்டினார். யாரோ அதைப் பிடித்துக் கொண்டு அணைப்பது தெரிந்தது. அந்தக் கரங்கள் ஹெலனின் திறன் அனைத்தையும் வெளிப்படுத்த வந்த கரங்கள். அன்பைப் பொழிய வந்த அணைப்பு. அது, ஆசிரியர் ஸல்லிவனுடையது என்பதில் ஐயமில்லை.

மறுநாள் ஆசிரியர் ஸல்லிவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு ஹெலனை அழைத்துச் சென்றார் அவரது தாயார். ஸல்லிவன் ஹெலனுக்கு ஒரு பொம்மையைப் பரிசாகக் கொடுத்தார். பெர்க்கின்ஸ் இன்ஸ்ட்டட்யூட்டின் பார்வையற்ற குழந்தைகள் கொடுத்தது அப்பொம்மை. லாரா பிரிட்ஜ்மேன் என்பவர் அந்தப் பொம்மைக்கு ஆடை அலங்காரம் செய்தனுப்பி இருந்தார். இதெல்லாம் ஹெலனுக்குப் பின்னர்தான் தெரியவந்தது.

அந்தப் பொம்மையைக் கையில் கொடுத்த அடுத்த நிமிடம் ஸல்லிவன் தன் பாடத்தைத் தொடங்கினார். ஹெலன் கையில் d o l l என்று ஒவ்வொரு எழுத்தாக எழுதிக் காட்டினார்.

ஆரம்பிக்கும்போதே இந்த விரல் விளையாட்டு ஹெலனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதை அப்படியே திருப்பி எழுதிக் காட்ட முயன்றார். கடைசியில் அதில் வெற்றியும் பெற்றார். அந்தப் பெருமிதத்தில் முதன் முறையாக வெட்கச் சந்தோஷம் பட்டார். கீழே இறங்கிப்போய் தன் தாயின் கரங்களில் அந்த வார்த்தையை எழுதிக்காட்டினார்.

அது ஒரு விளையாட்டு அவ்வளவுதான் என்ற அளவில் ஹெலன் அதைப் புரிந்திருந்தார். அத்தனை எழுத்துகளும் சேர்ந்து ஒரு வார்த்தை என்று தெரியாது. அந்த வார்த்தைக்கு ஓர் அர்த்தம் இருக்கிறது என்பதும் தெரியாது. அதுதான் அந்தப் பொம்மை. அதைத்தான் ஆசிரியர் சொல்கிறார் என்பதும் அப்போது புரியவில்லை.

சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல்…. இல்லை…. பேசத்தெரியாது, செய்வதைச் செய்யும் குரங்குபோல் செய்தார். இந்தப் பாணியிலே அடுத்தடுத்த வார்த்தைகளை எழுதக் கற்றுக்கொண்டார். ஏதாவது ஒரு பொருளுக்கான வார்த்தைகள் அவை. அதுவும் மூன்று எழுத்து வார்த்தைகள். Pin, Cup, hat இப்படி எழுதிக்காட்டினார் ஸல்லிவன்.

அதன் பிறகு sit, stand, walk போன்ற வினைச் சொற்களையும் சொல்லிக் கொடுத்தார். ஆசிரியர் வந்து சேர்ந்த பல வாரங்களுக்குப் பிறகுதான் எல்லாவற்றிற்குமே ஒரு பெயர் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார் ஹெலன்.

அதுவரை ஆசிரியருக்கு அடங்கிய சாதுவாகவும் நடக்கவில்லை. வழக்கம்போல் தன் குறும்புத்தனங்களைக் கட்டவிழ்த்தார். ஆக்ரோஷமின்றி அமைதியாக ஸல்லிவனுக்கும் ஒரு பூட்டு வைத்தியம் செய்தார்.

அம்மா ஆசிரியரிடம் ஒரு பொருளைக் கொடுக்கச் சொல்லி அனுப்பினார். மேல் அறைக்குச் சென்று கொடுத்தவருக்கு மின்னல் வேகத்தில் ஒரு புத்தி தோன்றியது. வேகமாக வெளியே வந்து கதவைப் பூட்டிவிட்டார். ஓர் ஆடை அலமாரிக்குக் கீழ் சாவியைத் தள்ளிவிட்டார். சாவி எங்கே இருக்கிறது என்பதை யாராலும் சொல்ல வைக்கமுடியவில்லை. வேறு வழியின்றி கெல்லர் ஓர் ஏணியை எடுத்துச்சென்று சாளரம் வழியாக ஆசிரியர் கீழே இறங்க உதவினார்.

என்னென்ன மீட்பு நடவடிக்கை நடக்கிறது என்பதை ஹெலன் உணர்ந்துகொண்டு சந்தோஷப்பட்டார். வெளியே வந்தபிறகுகூட உடனே சாவியை எடுத்துக் கொடுத்தால் அந்தச் சந்தோஷம் மறைந்துவிடும் என்று பல மாதங்களுக்குப் பிறகே அதை எடுத்துக்கொண்டார்.

ஒருநாள் ஹெலன் புதிய பொம்மை ஒன்றோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீணான துணிகளைக் கொண்டு செய்த பொம்மை ஒன்றை எடுத்துவந்து ஹெலனின் மடியில் வைத்தார் ஸல்லிவன். அப்படி வைக்கும்போதே d o l l என்று எழுதி இதுவும் பொம்மைதான், இரண்டுமே பொம்மைதான் என்பதைப் புரியவைக்க முயற்சி செய்தார்.

அதற்குமுன் m u g, w a t e r போன்ற வார்த்தைகளுக்காக இருவரும் போராடிக் கொண்டிருந்தனர். வாட்டர் என்றால் வாட்டர், மக் என்றால் மக். தண்ணீர் வேறு அது இருக்கும் பாத்திரம் வேறு என்பதைப் புரிய வைப்பதற்குக் கடும் முயற்சி செய்தார் ஸல்லிவன். ஆனால் குழந்தை இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக்கொண்டது. சரியான சந்தர்ப்பம் வாய்க்கும்போது இதைக் கண்டிப்பாகப் புரிய வைத்துவிட வேண்டும். இப்போதைக்குக் குழந்தையை அதிகம் கஷ்டப்படுத்தக்கூடாது என்று விட்டுவிட்டார்.

மீண்டும் ஸல்லிவன் முயற்சி செய்தபோது ஹெலன் தன் பொறுமையை இழந்தார். அந்தப் புதிய பொம்மையைத் தூக்கி எறிந்தார். அது உடைந்து அவர் காலடியில் சிறுசிறு துண்டுகளாகச் சிதறியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

தன் ஆவேசத்திற்காக அவர் வருத்தப்படவில்லை. அந்தப் பொம்மை வந்ததிலிருந்தே அதன் மீது அவ்வளவு பிரியம் இல்லை. அதனால் உடைத்ததில் ஹெலனுக்கு வருத்தமில்லை. ஸல்லிவன் உடைந்த துண்டுகளைக் கணப்படுப்புவரை பெருக்கித் தள்ளுவதைத் தன் கால்கள் மூலம் உணர்ந்தார்.

அந்த வேலையை முடித்ததும் தொப்பியைக் கொண்டுவந்து ஹெலன் கையில் கொடுத்தார் ஸல்லிவன். அது தொப்பி என்பதை உணர்ந்ததும் இருவரும் வெளியில் செல்லப்போகிறோம் என நினைத்தார். வார்த்தை, எழுத்துப் பரிமாற்றம் ஏதுமின்றி எல்லாம் செய்கையும் சிந்தனை புரிதலும்தான்.

வெளியில் செல்வதென்றால் ஹெலனுக்கு அவ்வளவு குஷி. குதியாட்டம் போட்டார். பொன்வண்டுபோல் ஆசிரியர் பின்னால் ஊர்ந்தார். அது கிணற்றடிக்குப் போகும் பாதை. பாதையெங்கும் இளஞ்சிவப்பு, மஞ்சள் வண்ணப் பூக்களின் மணம் வீசியது.

கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்கள். கிணற்றடிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் கொட்டிக்கொண்டிருக்கும் தண்ணீரில் ஹெலனின் கையை இழுத்து நீட்டினார். குளிர்ந்த நீரில் ஒரு கை நனைந்துகொண்டிருக்கும்போதே இன்னொரு கையில் w a t e r என்று எழுதினார். மீண்டும் வேகமாக water என்று எழுதிக்காட்டினார்.

ஹெலன் அசைவின்றி நின்றார். அவருடைய கவனம் முழுவதும் ஸல்லிவன் விரலின் இயக்கத்தில் நிலைத்தது. அப்போதுதான் குளிர்ச்சியாகக் கொட்டிக்கொண்டிருக்கும் அதன் பெயர்தான் வாட்டர் என்பதை உணர்ந்தார்.

உயிருள்ள அந்த வார்த்தையும் அதன் குளிர்ச்சியும் அவருடைய ஆழ்மனதைத் தொட்டது. மொத்த மூளையையும் விழிப்படைய வைத்தது. நம்பிக்கை, ஒளி, மகிழ்ச்சி எல்லாம் மாறி மாறி பிறந்தன. இதுவரை தனக்குத் தடையாக இருந்ததையெல்லாம் இனி தகர்த்துவிட முடியும் என நினைத்தார். அப்படியே மெல்ல மெல்ல மேலே பறந்தார்.

முதல் வார்த்தைக்குப் பொருள் கண்டுகொண்டார். அதன்பிறகு மேலும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் புயலைப்போல் புறப்பட்டது. உடனே கிணற்றடியைவிட்டுப் புறப்பட்டார்கள். ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் உண்டு. அதற்கெல்லாம் ஒரு பொருள் உண்டு என்பதை ஸல்லிவன் தன் விடா முயற்சியால் உணர்த்திவிட்டார். ஹெலனுக்குத் திரும்பிச் செல்லும் வழியில் தான் தொட்டதெல்லாம் உயிர் பெற்றுவிட்டதைப்போல் உணர்ந்தார். தனக்குக் கிடைத்த ஒரு புதிய பார்வையில் இப்படி எல்லாம் யோசித்தார்.

அன்றைய தினமே நூற்றிற்கும் மேற்பட்ட வார்த்தைகளைக் கற்றுக்கொண்டார். அதில் Father, Mother, Sister, Teacher போன்ற வார்த்தைகள் இருந்தன. இந்த வார்த்தைகள்தான் ஹெலனின் உலகை மாற்றி மலர வைத்த வார்த்தைகள்.

இருந்த வேகத்திற்கு எதைக் கரைத்துக் குடித்தாலும் குடித்திருப்பார். அவ்வளவு வேகமும் எதையும் கற்றுத்தெளிய வேண்டும் என்ற ஆர்வமும் பற்றிக்கொண்டது.

அன்றைய தினத்தில் ஹெலனைவிட அதிகம் சந்தோஷப்பட்ட குழந்தைகள் யாரும் இல்லை. அந்த அளவிற்குத் தன் இருள் நீங்கியதை நினைத்து குஷிப்பட்டார்.

அவருடைய கால்கள் கணப்படுப்பை நோக்கிச் சென்றன. அங்குதான் ஸல்லிவன் உடைந்த அந்தப் பொம்மைகளைக் கூட்டிவிட்டிருந்தார். அங்கிருந்த துண்டுகளைப் பொறுக்கி எடுத்து ஒன்று சேர்த்தார். முடியவில்லை. அப்போதுதான் தன் தவறுக்காக முதன் முறையாக வருந்தினார். கண்களில் கண்ணீர் நிரம்பத் துயரப்பட்டார்.

ஆனாலும் மீண்டும் கற்றுக்கொண்டதை எல்லாம் நினைத்து மீண்டும் பரவசத்தைப் பற்றிக் கொண்டார். படுக்கையில் விழும்போது அடுத்தநாள் விடியலுக்காக, புதிதாகக் கற்கப்போவதற்காக ஆவலோடு காத்திருந்தார்.

(தொடரும்)

பகிர:
ஸ்ரீதேவி கண்ணன்

ஸ்ரீதேவி கண்ணன்

ஸ்ரீதேவி கண்ணன், கடலூர் மாவட்டம். சென்னையில் அரசுப்பணியில் இருக்கிறார். சொல்ஒளிர் கானகம், TNPSC தேர்வு வழிகாட்டி போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். 5 கிண்டில் நூல்களைப் பதிப்பித்துள்ளார். இணைய வார இதழ், மல்லிகை மகள் போன்ற இதழ்களில் எழுதிவருபவர். தொடர்புக்கு sridevikannan20@gmail.com.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *