Skip to content
Home » ஹெலன் கெல்லர் #6 – வசந்தமும் இடிமின்னலும்

ஹெலன் கெல்லர் #6 – வசந்தமும் இடிமின்னலும்

புதிய உத்தியாலும் கற்றல் முறையாலும் ஹெலனின் வாழ்க்கையில் வசந்தம் வீசத் தொடங்கியிருந்தது. விடாமுயற்சியும் கடின உழைப்பும் அவளுக்கான அங்கீகாரத்தைத் தேடிக் கொடுத்தன. ‘ஊனமுற்ற ஒரு பெண்… இப்படியெல்லாம் தானே ஓர் உத்தியைக் கண்டறிந்து அதன் மூலமாகப் பேசுகிறாள்’ என ஹெலனின் புகழ் அமெரிக்கா முழுவதும் பரவியது. பெர்கின்ஸ் பள்ளி நிர்வாகிகள், ஹெலனை தங்களுக்குக் கிடைத்த ஒரு பெரும் புதையலாகக் கருதினார்கள். ஆனால் இந்தப் பெருமையும் அங்கீகாரமும் வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை.

சற்றே நிதானமாக யோசியுங்கள். ஒரு மனிதனின் மனம் எப்போது ஒடுக்கப்படுகிறது? அவன் இருட்டிலும் மௌனத்திலும் வாழும்போதா? இல்லை. அந்த இருளைத் தன் கற்பனைத் திறனாலும் மொழி அறிவினாலும் சிரமத்துடன் கடந்து ஒளிரத் தொடங்கும் தருணத்தில், அவனுடைய நேர்மை மீது வீசப்படும் அவதூறு சேற்றினால்தான் அவன் மனம் ஒடுக்கப்படுகிறது. ஹெலனுக்கு 11 வயதானபோது நிகழ்ந்த ஒரு சம்பவம் அவளது மன உறுதியையும் கற்பனைத் திறனையும் கேலிக்குள்ளாக்கியது. அதுவரை உலகமே வியந்து பார்த்த ஓர் அதிசயக் குழந்தையை, ஒரே இரவில் ‘ஏமாற்றுக்காரி’ என்றும் ‘திருட்டுப் படைப்பாளி’ என்றும் குற்றம்சாட்டியபோது, அந்தப் பிஞ்சு மனம் தாங்க முடியாத துயரத்தை அடைந்தது. இதனால் உளவியல் ரீதியாக மட்டுமல்லாமல் நரம்பியல் ரீதியாகவும் ஹெலன் பாதிக்கப்பட்டாள்.

1891ஆம் ஆண்டில் பெர்கின்ஸ் பார்வையற்றோர் பள்ளி இயக்குநரும் தனக்குத் தந்தையைப் போன்ற வழிகாட்டியாகத் திகழ்ந்தவருமான மைக்கேல் அனக்னோஸின் பிறந்தநாளுக்காக ஒரு விசேஷமான பரிசை அளிக்க ஹெலன் விரும்பினாள். அச்சமயம் வார்த்தைகளோடு விளையாடத் தொடங்கியிருந்த அவள், தன் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, இலையுதிர்காலத்தின் அழகையும் பனிக்காலத்தின் வருகையையும் விவரிக்கும் வண்ணம் ஒரு கதையை எழுதினாள். அதற்கு ‘தி ஃபிராஸ்ட் கிங்’ எனப் பெயரிட்டாள்.

அகக் கண்ணால் மட்டுமே உலகைக் காணும் ஒரு சிறுமி, இத்தனை அழகாக, வண்ணமயமான வர்ணனைகளுடன் ஒரு கதையை எழுதியதைக் கண்டு அவளுடைய ஆசிரியர் ஆனி சல்லிவனும், பெர்கின்ஸ் பள்ளி நிர்வாகமும் நெகிழ்ந்து போயின. இந்தக் கதையைத் தன் வாழ்நாளின் ஆகச்சிறந்த பிறந்தநாள் பரிசாக மைக்கேல் அனக்னோஸ் கருதினார். ஹெலனின் இந்த அசாத்தியத் திறமையை உலகம் அறியவேண்டும் என்கிற நோக்கத்தில், பெர்கின்ஸ் பள்ளியின் அதிகாரப்பூர்வ இதழில் அக்கதை பிரசுரிக்கப்பட்டது. தன்னுடைய திறமைக்கும் எழுத்துக்கும் அங்கீகாரம் கிடைத்ததால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள் ஹெலன். ஆனால், சில நாட்களிலேயே அந்த மகிழ்ச்சி பெரும் சாபமாக மாறியது.

பள்ளியின் இதழில் ஹெலனின் கதை வெளியாகி சில நாட்கள் கழித்து, இலக்கிய வட்டாரத்தில் இருந்து ஓர் அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்தது. ஹெலன் எழுதிய ‘தி ஃபிராஸ்ட் கிங்’ கதை, மார்கரெட் கேன்பி என்கிற எழுத்தாளர் ஏற்கனவே எழுதிய ‘தி ஃபேரி ஃப்ரிஜிட்’ கதையை அச்சு அசலாக ஒத்திருந்தது. கதையின் மையக்கருத்து மட்டுமல்லாமல், பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருந்த வர்ணனைகளும் வார்த்தைகளும் அப்படியே இருந்தன.

அதுவரை ஹெலனை கொண்டாடியவர்கள், ஒரே நாளில் தங்களது கண்ணோட்டத்தை தலைகீழாக மாற்றிக்கொண்டார்கள். ‘ஒரு பார்வையற்ற செவித் திறனற்ற சிறுமியால் இப்படியெல்லாம் கற்பனை செய்து சுயமாக எழுத முடியாது என்பது எங்களுக்கு முன்பே தெரியும். தன்னுடைய திறமையின்மையை மறைக்கவும் புகழைத் தக்கவைத்துக்கொள்ளவும் ஹெலன் கெல்லர் வேறொருவருடைய கதையைத் திருடி தன் பெயரில் வெளியிட்டு ஏமாற்றியிருக்கிறாள். அவள் அறிவுத் திருட்டில் ஈடுபட்டவள்’ என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சிறு குழந்தை என்றும் பாராமல் அவள் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானாள்.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அறிந்து ஹெலன் அதிர்ச்சியில் உறைந்துபோனாள். உண்மையிலேயே ‘தி ஃபேரி ஃப்ரிஜிட்’ கதையைப் பற்றி அவளுக்கு நினைவே இல்லை. அதை ஹெலன் வெளிப்படையாகச் சொல்லியும் எவ்வளவோ வாதிட்டும், ஒருவருமே அவளை நம்பத் தயாராக இல்லை.

இதில் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால், ஹெலனுக்கு புகலிடமாக இருந்த பெர்கின்ஸ் பள்ளி அவளை ஒரு குற்றவாளியைப்போல் நடத்தியதுதான். தன் மீது யாரும் பழி போட்டுவிடக்கூடாது என்பதற்காக ஹெலனை விசாரணைக்கு உட்படுத்தும் முடிவை எடுத்தார் பள்ளி இயக்குநர் மைக்கேல் அனக்னோஸ். எட்டு பேராசிரியர்கள் அடங்கிய ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பதினொரு வயதான சிறுமி ஹெலன், ஒரு நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்படுவதைப்போல் அந்தக் குழுவின் முன்னால் நிறுத்தப்பட்டாள். அவளிடம் பல மணிநேரமாக அம்புகளைப்போல் கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டன.

‘இந்தக் கதையை நீ எங்கே படித்தாய்?’

‘யார் உனக்கு இதைச் சொல்லிக் கொடுத்தது?’

‘உன்னுடைய ஆசிரியர் ஆனி சல்லிவன் இதைக் காப்பி அடிக்க உனக்கு உதவினாரா?’

ஒவ்வொரு கேள்விக்கு நடுவிலும், தன்னுடைய கைகளில் ஆனி சல்லிவன் சைகை மொழியால் எழுதியதை மட்டுமே நம்பி அங்கு நின்றுகொண்டிருந்தாள் ஹெலன். அனைத்துக்கும் பதிலளித்தாள். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ளக்கூட முடியாத அந்தப் பிஞ்சு வயதில், ‘நீ ஒரு ஏமாற்றுக்காரி’ என்று முத்திரை குத்தப்பட்டபோது, ஹெலன் அடைந்த மனவேதனைக்கு அளவே இல்லை.

இந்த விவகாரத்தில் உண்மையில் என்னதான் நடந்தது? ஹெலன் வேண்டுமென்றே வேறொருவரின் கதையைத் திருடி எழுதினாளா என்று கேட்டால், அதற்கான பதில் இல்லை என்பதுதான். உளவியல் ரீதியாக இதை ‘கிரிப்டோம்னீசியா’ (Cryptomnesia) அதாவது ‘மறைந்திருக்கும் நினைவாற்றல்’ என்று குறிப்பிடுவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தோழியின் வீட்டில் ஹெலன் தங்கியிருந்தபோது, அங்கிருந்த ஒருவர், மார்கரெட் கேன்பியின் கதையை ஹெலனின் கைகளில் சைகை மொழி மூலமாக வாசித்துக் காட்டியிருக்கிறார். காலப்போக்கில் அந்தக் கதை ஹெலனின் மேல்மனதில் இருந்து முற்றிலுமாக மறைந்துவிட்டது. ஆனால், அவளது ஆழ்மனதில் ஏதோ ஒரு மூலையில் அந்த வார்த்தைகளும் வர்ணனைகளும் அப்படியே பதிந்திருந்தன.

மைக்கேல் அனக்னோஸுக்காக கதை எழுதத் தொடங்கியபோது, ஆழ்மனதில் இருந்த அக்கதையின் நினைவுகளைத் தன்னுடைய சொந்தக் கற்பனை என ஹெலன் நம்பினாள். அந்த வகையில் அவள் செய்தது திருட்டே அல்ல. அச்செயல் ஒரு விசித்திரமான உளவியல் கோளாறு என்பதை இன்றுள்ள உளவியல் நிபுணர்கள் தெளிவாக எடுத்துரைக்கிறார்கள். ஆனால் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், அந்தப் பழைமைவாத சமூகத்தால் ஒரு 11 வயதுக் குழந்தை வேண்டுமென்றே கதையைத் திருட வாய்ப்பில்லை என்பதைக்கூடப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஹெலன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் அதற்காக நடைபெற்ற தீவிர விசாரணையும் அவளது நரம்பு மண்டலத்தைக் கடுமையாகப் பாதித்தன. பார்வையோ கேட்கும் திறனோ இல்லாத ஒரு குழந்தைக்குத் தொடுதல் மற்றும் ஆழ்மன அமைதி மட்டுமே உலகத்தோடு தொடர்புகொள்ள உதவும் கருவிகள். ஆனால் விசாரணை என்கிற பெயரில் அக்கருவிகள் பலமாக உலுக்கப்பட்டபோது, அவளது நரம்பியல் சமநிலை குலைந்தது. இதனால் ஹெலனுக்கு ஏற்பட்ட அவதிகளைச் சொல்லி மாளாது. தொடர்ந்து பல இரவுகள் உறக்கமே வராமல் அவள் விழித்திருந்தாள். படுத்தாலே விசாரணை வளையத்தில் இருக்கும் நினைவுகளும் தன்னை ஏமாற்றுக்காரி எனச் சொல்லும் மனிதர்களின் குற்றச்சாட்டுகளும் மனக்கண்ணில் தோன்றி அவளைத் தூங்கவிடாமல் செய்தன.

சின்னஞ்சிறு விஷயங்களுக்காகக்கூட ஹெலனின் உடல் பயத்தால் நடுங்கத் தொடங்கியது. கைகள் வியர்க்கும் அளவுக்கு அதீத மன அழுத்தமும் ஏற்பட்டது. இவற்றால் ஹெலன் கடுமையான நரம்பியல் குறைபாடுகளுக்கு ஆளானாள். அனைத்துக்கும் மேலாக அவளது தன்னம்பிக்கை சுத்தமாக உருக்குலைந்தது.

‘தனக்குத் தோன்றும் ஒவ்வொரு எண்ணமும் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் தன்னுடையதா அல்லது அவற்றை வேறு எங்கிருந்தோ நாம் திருடிவிட்டோமா?’ என்றெல்லாம் தன் மீதே சந்தேகம் கொள்ளும் மனப்பான்மை ஹெலனுக்கு ஏற்பட்டது. இது ஒரு வகையான தீராத நோயைப்போல் அவளை வாட்டியது. இதனால் பல விபரீதமான விளைவுகள் ஏற்பட்டன. ஹெலன் தன் பேனாவைத் தொடவே பயந்ததுதான் அவற்றில் மிகவும் கொடுமையானது. எழுத்து என்பது அவளுக்கு வெறுமனே ஒரு பொழுதுபோக்காக இருக்கவில்லை; அதுதான் அவள் உலகத்தோடு பேசிய மொழி. அவளது உயிரின் குரல். ஆனால் அதுவே அவளது பலவீனமாக ஆகிப்போனது.

‘நான் எழுதும்போது ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு வரியும் என் ஆழ்மனதிலிருந்து வருகிறதா அல்லது வேறொருவரின் புத்தகத்தில் இருந்து திருடப்பட்டதா என்று யோசித்து நான் பலமுறை பயந்து நடுங்குவேன்’ எனப் பிற்காலத்தில் தன்னுடைய சுயசரிதையில் ஹெலன் உருக்கமாகக் குறிப்பிட்டார். 11 வயதில் சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டால் ஹெலனின் எழுத்துப் பயணம் பல ஆண்டுகளுக்கு முடங்கிப்போனது.

அனைத்தையும் மாற்றும் தன்மை காலத்துக்கு உண்டு என்பார்கள். அந்தக் காலம்தான் ஹெலனையும் மாற்றத்தை அளித்தது. மார்க் ட்வைன் போன்ற உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் ஹெலனின் நிலையைப் புரிந்துகொண்டு அவளுக்கு ஆதரவாக நின்றனர். ‘நம்முடைய அனைத்து எழுத்துகளும் எங்கோ படித்ததன் மறுவடிவம்தான். இதில் ஒரு குழந்தையைக் குற்றவாளியாக்குவது முட்டாள்தனம்’ என்று மார்க் ட்வைன் விமர்சனத்தை முன்வைத்தார்.

அனைத்துக்கும் மேலாக, அசல் கதையை எழுதிய மார்கரெட் கேன்பி, ஹெலனின் நிலையை அறிந்ததும், நெகிழ்ந்துபோய் அவளுக்கு ஓர் உருக்கமான கடிதத்தை எழுதினார். அதில், ‘ஹெலன், உன்னுடைய கற்பனைத் திறன் என் கதையை விடவும் அற்புதம். நீ எதையும் திருடவில்லை. உன் மூளையின் அசாத்திய நினைவாற்றலே இதற்குக் காரணம். நீ தொடர்ந்து எழுதவேண்டும்’ என வாழ்த்தினார். பிரபல எழுத்தாளர்களின் இத்தகைய மனிதநேயமிக்க வார்த்தைகளும் ஆனி சல்லிவனின் கலப்படமற்ற அன்பும் அரவணைப்பும், உளவியல் பிரச்னையில் இருந்து ஹெலனை மெல்ல மெல்ல மீட்டெடுத்தன.

‘தி ஃபிராஸ்ட் கிங்’ கதை சர்ச்சை ஹெலன் கெல்லருக்கு மிகப்பெரிய மனப்புண்ணை உண்டாக்கி, அது ஆறிய பிறகும்கூட ஓர் ஆறாத வடுவை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால், அந்த வடுதான் பிற்காலத்தில் அவள் மேலும் கவனமாகவும் ஆழமாகவும் தன்னுடைய கருத்துகளைப் பதிய வைக்கக் கற்றுக்கொடுத்தது. 11 வயதில் உடைந்த அவளது பேனா, பல ஆண்டுகால நடுக்கத்துக்குப் பிறகு மீண்டும் எழுதத் தொடங்கியபோது, உலக வரலாற்றை மாற்றி எழுதும் வல்லமை கொண்டதாக அது உருவெடுத்தது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *