ராட்க்ளிஃப் கல்லூரியில் தன்னுடைய சுய அடையாளத்தை மீட்டெடுத்து, தனக்கான அங்கீகாரத்தையும் ஹெலன் கெல்லர் பெற்றிருந்தார். அவரது எழுத்துகள் புகழ்பெறத் தொடங்கியிருந்தன. கல்லூரியின் அறிவுச் சூழல் இவ்வாறு ஹெலனுக்குப் பல புதிய வாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருந்த வேளையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பெரும் இருள் சூழ்ந்திருந்தது.
அந்த இருள், அவரது குடும்பத்தின் நிதி நிலைமை. ஒரு காலத்தில் வசதி வாய்ப்புகளுடனும் சமூகத்தில் அந்தஸ்துடனும் வாழ்ந்த கேட், ஆர்த்தர் கெல்லரின் குடும்பம், கால சுழற்சியில் எதிர்பாராத வகையில் பொருளாதாரச் சிக்கலால் தவித்தது. இத்தகைய நெருக்கடியான நிலையால், குடும்பச் செலவுகளைச் சுருக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது.
அனைத்துக்கும் மேலாக, ராட்க்ளிஃப் கல்லூரியில் இணைந்த பிறகு ஹெலனின் கல்விச் செலவுகள் பல மடங்கு அதிகரித்திருந்தன. அன்றைய காலகட்டத்தில் ஒரு சாதாரணப் பெண், உயர்கல்வி பெறுவதே பெரிய விஷயமாக இருந்த நிலையில், சிறப்புத் தேவைகள் கொண்ட ஹெலனின் கல்விச் செலவுகள், அவரது குடும்பத்தின் வருமானத்தைவிடப் பல மடங்கு அதிகமாக இருந்தன. தன்னுடைய அன்பு மகளின் கனவை நனவாக்கத் தந்தை ஆர்த்தர் கெல்லர் எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்தாலும், பொருளாதார சூழல் என்கிற உண்மை, அவரது முகத்தில் ஓங்கி அறைந்தது. தன்னுடைய மகளுக்காக அவர் குடும்பத்தின் பெருமையை அடகு வைத்து, உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கடன் வாங்கி அவளது படிப்பைத் தொடரச் செய்தார்.
ஆசிரியை ஆனி சல்லிவன், ஹெலனுக்குப் பாடம் கற்பிக்கும்போதே அவருடைய குடும்பத்தின் பொருளாதாரச் சூழலை நுணுக்கமான முறையில் சொல்லாமல் சொன்னார். தன்னுடைய குடும்பத்துக்கு ஏற்பட்டிருந்த நிதிச் சிக்கலை உள்ளுணர்வு மூலமாக ஹெலனால் புரிந்துகொள்ள முடிந்தது. தந்தையின் முகத்தில் படர்ந்திருந்த மெல்லிய கவலையை அவரால் பார்க்க முடியாது என்றாலும், அதை அவர் உணராமல் இல்லை.
தான் படிக்கும் ஒவ்வொரு புத்தகமும் தன்னால் எழுதப்படும் ஒவ்வொரு கடிதமும், தன்னுடைய தந்தையின் முதுகில் பாரத்தைச் சுமத்துவதை எண்ணி ஹெலனின் மனம் மிகவும் வேதனைப்பட்டது. கல்வி என்பது ஒரு வரமாகத் தெரிந்த அதே வேளையில், எதனால் அது பெரும் சுமையாகவும் இருக்கிறது என்கிற கேள்வி, அந்தத் தருணத்தில் அவர் மனதைக் குடைந்தது.
‘நான் ஏன் மற்றவர்களின் கருணையில் வாழ வேண்டும்? நான் ஏன் எனக்காக உழைத்துச் சம்பாதித்து என் செலவிலேயே படிக்கக் கூடாது? என்னால் அது முடியாதா?’ என்பதுபோன்ற கேள்விகள் அவரது மனதை அலைபாய வைத்தன. கேள்விகளோடு நிறுத்திக்கொள்ளாமல் அதற்கான முயற்சிகளிலும் அவர் இறங்கினார். ஆனால் எவ்வளவோ முயற்சி செய்தும், தன்னால் என்ன வேலை பார்க்க முடியும் என்பதை அவரால் கண்டுணர முடியவில்லை. குறிப்பாக, யதார்த்தம் மிகவும் கொடூரமானது என்பதை ஹெலன் உணர்ந்துகொண்டார்.
பார்வையற்ற, செவித்திறனற்ற ஒரு பெண்ணால் அன்றைய சமூக அமைப்பில் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்பே கிடையாது என்பது எழுதப்படாத ஒரு விதியாக இருந்தது. அந்தக் கசப்பான உண்மையை ஹெலன் விழுங்கியே ஆக வேண்டும் என்கிற நிலை. கல்வியை நிறுத்த அவரது மனம் இடம் கொடுக்கவில்லை என்பதால் அவருக்கு வேறு வழியும் இருக்கவில்லை. அதேநேரம், கல்வியைத் தொடர நிதி தேவைப்பட்டது. ஹெலனுக்கு ஆகப்பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திய இந்தத் தேவைதான், அவரது சுயமரியாதையின் உச்சத்தையும் வெளிப்படுத்த வைத்தது.
மார்க் ட்வைன் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களும் ஆண்ட்ரு கார்னே போன்ற மிகப்பெரும் தொழிலதிபர்களும் ஹெலனின் அறிவாற்றலைக் கண்டு வியந்து, அவருக்கு நிதியுதவி அளிக்க முன்வந்தனர். ஹெலனின் திறமையை அவர்கள் ஒரு சமூக முதலீடாகப் பார்த்தார்கள். ஆனால், அத்தகைய உதவிகளைத் தனக்கான கௌரவக் குறைச்சலாகவே ஹெலன் கருதினார்.
உயர்கல்விக்கான உதவித்தொகை வரப்பெறும் ஒவ்வொரு முறையும், வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத பெரும் வேதனையை அவர் உணர்ந்தார். தன்னுடைய தந்தையிடமிருந்து வரும் பணத்தைக்கூட எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மனநிலையில் அப்போது அவர் இருந்தார். அந்நிலையில், முன்பின் பழகிடாத நபர்களிடம் இருந்து உதவி பெறுவதை, அவர் அடிமைத்தனமாகவே கருத நேர்ந்தது. தான் வாங்கும் ஒவ்வொரு டாலர் பணமும், பிறரின் கருணையை நம்பி இருக்கும் தன் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக அவர் நினைத்தார்.
ஒரு தந்தைக்குரிய அன்பைத்தான் எழுத்தாளர் மார்க் ட்வைன் நம்மிடம் காட்டுகிறார் என்பதை ஹெலன் உணர்ந்திருந்தாலும், ‘நிதி உதவி’ அளிக்கும் அவரது செயல்பாடு மட்டும் தன்னை ஒரு பிச்சைக்காரி என்கிற நிலைக்குத் தள்ளுவதுபோல் இருப்பதாக எண்ணி அவர் வருந்தினார். தன்னால் தன்னுடைய குடும்பத்திற்கோ அல்லது தன் எதிர்காலத்திற்கோ எவ்விதமான பொருளாதாரப் பங்களிப்பையும் ஆற்ற முடியவில்லை என்கிற ஆதங்கம் பல நாட்களுக்கு அவரை உறங்கவிடாமல் செய்தது.
ராட்க்ளிஃப் கல்லூரி நாட்களில் ஹெலன் சந்தித்த நிதி நெருக்கடி, பலவிதமாக அவரைச் சிந்திக்க வைத்தது. கல்வியின்மீது அவருக்கு இருந்த காதல் எவ்வளவு ஆழமானதோ, அதே அளவுக்கான தன்மானத்தைக் கொண்டிருந்த பெண்ணாகவும் அவர் இருந்தார். ஒரு மாற்றுத்திறனாளி என்பதால், உலகம் அவரை அனுதாபத்தோடு அணுகியது. ஆனால், பிறரிடம் இருந்து ஹெலன் விரும்பியது அனுதாபத்தை அல்ல, வாய்ப்புகளை. கல்வி கற்பதற்கான ஆர்வமும் தகுதியும் இருந்தும், போதுமான பணம் இல்லாததால், அடுத்தவரின் கையை எதிர்பார்க்கும் அந்தச் சூழல், ஒரு பெண்ணின் சுதந்திரத்தை முடக்கும் சங்கிலியாகவே அவருக்குத் தெரிந்தது.
எனினும் ஒரு கட்டத்தில், அந்த நிதியுதவிகளுக்கு ஒரு புதிய அர்த்தத்தை கொடுத்துக்கொண்டார் ஹெலன். அந்தப் பணத்தை ஒரு கடனாகவோ அல்லது உதவியாகவோ பார்க்காமல், தனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு மாபெரும் பொறுப்பு என்று அவர் மாற்றி யோசித்தார். பெரும் அறிவைப் பெற்று, இத்தகைய உதவிகளுக்குக் கைமாறாக இந்த உலகத்துக்குத் தன்னாலான உதவிகளைச் செய்ய வேண்டும் என்கிற உறுதிப்பாடு அவருக்குள் பிறந்தது.
நிதியுதவி அளித்தவர்களுக்கு, தான் பதில் சொல்லக் கடமைப்பட்டவள் என்கிற முனைப்பு, ஹெலனின் படிப்புத் திறனை மேலும் கூர்மைப்படுத்தியது. தனக்குக் கிடைக்கும் கல்வியும், அதன் மூலமாகத் தன்னிடம் சேரும் அறிவும் ஞானமும், நிதியுதவிகளை அளித்தவர்களுக்கு, தான் அளிக்கும் வட்டி என்று அவர் கருதினார். அத்துடன், கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, ஒரு சுதந்திரமான பெண்ணாகத் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, மேற்கொண்டு யாருக்கும் துளிகூடச் சுமையாக இருந்துவிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
சொல்லப்போனால், தன்னுடைய குடும்பத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்ட சூழலுக்கு மத்தியில்தான், ஒரு முதிர்ச்சியடைந்த சமூகச் சிந்தனையாளராக ஹெலன் கெல்லர் உருவெடுத்தார். தனிப்பட்ட முறையில் நிதி நெருக்கடியை அனுபவித்த காரணத்தால், சமூகத்தில் வறுமை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு எவ்வாறு மக்களை அடிமைப்படுத்துகிறது என்பதை அரசியல் பொருளாதார வகுப்புகளில் அவர் ஆழமாகப் படித்தார்.
மார்க் ட்வைன் உடனான ஹெலனின் உரையாடல்கள், ஓர் அறிவுஜீவியாக எவ்வாறு உரையாடுவது என்பதை அவருக்குக் கற்றுக்கொடுத்தன. மேலும், அந்த உரையாடல்கள் மூலமாகவே, நிதியுதவி பெறும் மாணவி என்கிற நிலையிலிருந்து, அறிவின் மூலமாக உலகை மாற்றத் துடிக்கும் ஒரு போராளியாக அவர் உருமாறினார்.
தன்மானமும் வறுமையும் மோதிக்கொண்ட அந்தக் கல்லூரி நாட்களில், ஹெலன் கெல்லர் மிக முக்கியமான ஒரு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ‘தன்னம்பிக்கை என்பது வெறும் பொருளாதாரச் சுதந்திரம் மட்டுமல்ல, அது எந்தச் சூழலிலும் கண்ணியத்தைத் தளர்த்திக் கொள்ளாத மன உறுதி’ என்கிற வரி அவருடைய மனதில் ஆழமாகப் பதிந்தது.
நிதி நெருக்கடி மிகுந்த சூழலுக்கு மத்தியில், தனக்குக் கிடைத்த ஒவ்வொரு உதவியையும், தன் எதிர்காலச் செயல்பாடுகளுக்கான உந்துசக்தியாக ஹெலன் மாற்றிக்கொண்டார். தன்னால் எழுதப்பட்ட புத்தகங்கள் மற்றும் தான் ஆற்றிய உரைகள் ஆகியவற்றின் மூலமாகக் கிடைத்த பணத்தை, சமூகத்துக்காக அவர் செலவழித்தார்.
வறுமையின் பிடியில் இருந்த நாட்களில் ஹெலன் அனுபவித்த வலியும் தன்மானக் குறைச்சலும், பிற்காலத்தில் அவர் ஒரு மிகப்பெரிய சமூகப் போராளியாக மாறுவதற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தன. பிறரிடம் உதவிபெற்று கல்வி பயின்ற ராட்க்லிஃப் கல்லூரி நாட்கள், ஹெலனின் வாழ்வில் மிகப்பெரிய கசப்பை அளித்த அதேவேளையில், அவருக்கான மிகப்பெரிய பாடத்தையும் கற்றுக் கொடுத்தன.
தன்மானமுள்ள ஒரு பெண், வறுமை என்கிற தடையைக் கடந்து எவ்வாறு அறிவின் சிகரத்தைத் தொட முடியும் என்பதற்கு ஹெலன் கெல்லர் ஒரு நிரந்தரச் சான்றாக இன்றும் விளங்குகிறார். அத்தகைய நிதி நெருக்கடி நிலை அவரை முடக்கவில்லை; மாறாக, அவரை ஒரு பட்டை தீட்டப்பட்ட வைரமாகச் செதுக்கி, உலகுக்கான ஒளியாக மாற்றின. ஆம், வறுமையின் நிழலில் தத்தளித்த அந்த நாட்களில்தான், ஹெலன் கெல்லர் என்கிற மாபெரும் ஆளுமையின் உறுதி உரம் பெற்றது.
(தொடரும்)

