Skip to content
Home » சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #5 – தொடங்கியதொரு கொடுங்கனவு

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #5 – தொடங்கியதொரு கொடுங்கனவு

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின் (திருக்குறள் 484)

தகுதியான காலத்தை ஆராய்ந்து, அதனை ஏற்ற இடத்திலும், உலகத்தையே வென்று கைக்கொள்ள நினைத்தாலும் அது இயலும் செயலே

அதிர வைத்த குண்டுகள்

1941ஆம் ஆண்டு, திசம்பர் திங்கள் 8 ஆம் நாள். அதிகாலை 4 மணி அளவு.

சிங்கப்பூர் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

யப்பானிய விமானங்கள் காகிதத்தினால் செய்தவை என்று சிங்கப்பூரில் இருந்த பிரிட்டானியப் படைத் தலைமை சொல்லிக் கொண்டிருந்தது என்று பார்த்தோம். அந்தக் ‘காகித விமானங்கள்’ வீசிய குண்டுகள் தட், தட்டென்று சிங்கப்பூரில் விழுந்தன! யப்பானியர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்திகள் வந்தபோதும், தென்கிழக்காசியப் பகுதியின் தலைமைத்தளமாக அப்போது இருந்த சிங்கப்பூரின் காலனி நிர்வாகமோ, அங்கிருந்த பிரித்தானியப் படைகளோ எந்த வித ஆயத்தமோ, பயிற்சிகளோ கொண்டிருக்கவில்லை. ஆனால் இரண்டாவது உலகப் போரைத் தொடங்கிய ‘அச்சு நாடுகளின்'[1] முக்கியக் கூட்டாளியான யப்பானியர்களோ, தென்கிழக்காசியாவுக்கான தெளிவான திட்டமும், தீர்க்கமான தளபதிகளையும் கொண்டிருந்தார்கள்.

இரண்டாவது உலகப் போரை செருமனி தொடங்கினாலும், அதன் முக்கியக் கூட்டாளிகளாக இத்தாலியும் யப்பானும் இருந்தன. இரண்டாவது உலகப் போரின் தொடக்கம் செருமனி போலந்தைக் கைப்பற்றியதன் மூலமே தொடங்கியது; யப்பான், தென்கிழக்காசியாவில் இந்த மூக்கூட்டணியின் பங்காளிப் பங்கை ஆற்றியது.

ஆக்கிரமிப்புத் தாக்குதலின் முக்கியப் பங்களிகளான இத்தாலிலியும், செருமனியும் பல கூட்டு ஒப்பந்தங்களை அறிவித்திருந்தன. இரண்டு நாடுகளின் தலைநகர்களான ரோம், பெர்லின் ‘இணைந்த அச்சின்’ இயக்கத்தில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனவே போரைத் தொடங்கிய இந்த ஆக்கிரமிப்பு நாடுகள் அச்சு நாடுகள் (Axis Countries) என்று அழைக்கப்பட்டன. இந்தத் தாக்குதலைச் சமாளித்து ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணைந்த பிரித்தானியா,பிரான்சு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்த நாடுகள் (Allied Countries) என்று அழைக்கப்பட்டன.

’1941ஆம் ஆண்டு 8 ஆம் நாள் காலை 4 மணிக்கு இராபிஃல்சு பள்ளியின் ஈ பிளாக் விடுதியில் நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, மந்தமான ஆனால் அழுத்தமாகத் தட்டென்று கேட்ட குண்டு வெடிப்புச் சத்தம் என்னை எழுப்பியது. யப்பானோடு சண்டை தொடங்கிவிட்டது. அந்தக் குண்டுவீச்சு எதிர்பார்த்திருக்காத, வியப்பளித்த ஒன்றாக இருந்தது. தெரு விளக்குகளோ இன்னும் ஒளிர்ந்துகொண்டு இருந்தன! (போரை, தாக்குதலை எதிர்பார்த்திருக்கும் நாடு பொதுவாக இரவுகளில் விளக்குகளை அணைத்து விடும். அதனைக் குறிப்பிட்டே எந்த அளவு மெத்தனமாக சிங்கப்பூர் காலனி நிருவாகம் இருந்தது என்று சுட்டவே இதனைக் குறிப்பிடுகிறார் லீ க்வான் யூ) அந்தக் குண்டுகள் சிங்கப்பூரில் வீசப்படும் வரை, வான் தாக்குதலை எதிர்பார்த்துச் செய்யப்படும் அபாயச் சங்குகள் ஏதும் ஒலிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் அந்தக் குண்டுவீச்சு 60 பேர்களைக் கொன்றிருந்தது; 130 பேர்களைக் காயப்படுத்தியிருந்தது; சிங்கப்பூரின் பிரித்தானிய காலனி நிர்வாகம் அந்த குண்டுவீச்சுத் தாக்குதலைப் பற்றி மிகவும் அடக்கி வாசித்தது.’ என்று அப்போது இராபிஃல்சு பள்ளியில் மாணவனாகப் படித்துக் கொண்டிருந்த லீ க்வான் யூ, பின்னாட்களில் தனது ‘தி சிங்கப்பூர் சுடோரி’ (The Singapore Storey) நூலின் மூன்றாவது அத்தியாயத்தில்,[2] சிங்கப்பூரின் மீது நடந்த யப்பானியக் குண்டுவிச்சு பற்றிப் பதிவு செய்திருக்கிறார்.

எதிர்பாரா புதுவரவு- தளபதி யமாசிட்டா

தெற்கு நோக்கி முன்னேறும் யப்பானியப் படைகளைச் சமாளிக்க இயலாத பிரித்தானியத் துருப்புகள், தென்கிழக்காசியப் பகுதிகளில் இருந்த நிலைகளை விட்டுவிட்டு சிறிது சிறிதாகப் பின்வாங்கி, கப்பற்படைத் தளத்தையும், மூன்று விமான இறங்குமிடங்களையும் கொண்டிருந்த தென்கிழக்காசியப் பகுதியின் பிரித்தானியத் தலைமையகமான சிங்கப்பூரை அடைகின்றன. ஆனால் சிங்கப்பூரின் கப்பற்படைத் தளத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த பிரித்தானிய வீரர்கள், போர் அனுபவமோ, போதுமான பயிற்யோ, களத்தின் தீரமோ இல்லாதவர்களாக இருந்தார்கள்.

இலண்டன் நிருவாகம் சிங்கப்பூரைக் காக்கவும், சிங்கப்பூர் படைகளுக்கு உதவவும் அனுப்பிய இரிப்பல்சு, பிரின்சு ஆஃப் வேல்சு (Ripples , Prince of Wales) என்ற இரண்டு போர்க்கப்பல்களும் யப்பானிய விமானங்களால் கடலில் மூழ்கடிக்கப்பட்டன. மலாயாத் தீபகற்பத்தைத் தாண்டி யப்பானியர்கள் மேலும் மேலும் முன்னேறி சிங்கப்பூரை நோக்கி வருகின்றனர். ’அவர்கள் தளவாடங்கள், மோட்டார் வண்டிகள் போன்றவற்றில் வரத் தாமதமாகும்; அவர்கள் வருவதற்கான சரியான வழி இல்லை’ என்று சிங்கப்பூரில் இருந்த காலனி நிர்வாகப் படை நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் நினைத்தே பார்த்திராத ஒன்று நடந்தது. யோகர் ஆற்றின் மறுகரையில் இருந்த காடுகளை ஊடறுத்துக் கொண்டு வந்த யப்பானியப் படை மிதிவண்டிகளில் சாரிசாரியாக யோகர் பாலத்தைக் கடந்து சிங்கப்பூருக்குள் நுழைந்தது !!! (பார்க்க படம்) [3]

சிங்கப்பூருக்குள் நுழைந்த யப்பானியப் படைக்குத் தலைமை வகித்தவர் தளபதி யமாசிட்டா (Yamashitta). அவர்கள் அதிகமான வீரர்களுடனும், மிதிவண்டிகளில் மிகக் குறைந்த போர்த்தளவாடங்களோடும் பயணித்து வருவார்கள் என்று சிங்கப்பூரில் இருந்த காலனிப் படை நினைத்தும் பார்க்கவில்லை. வியப்பின் கூறோடு, சிங்கப்பூருக்குள் நுழைந்த யப்பானியப்படையின் முன்னர் ‘உலகின் வெல்லப்படமுடியாத’ நாட்டின் படையான பிரித்தானியப்படையால் ஏழு நாட்கள் கூடத் தாக்குப்பிடிக்க இயலவில்லை. சிறிது கூட அணியமற்று இருந்த பிரித்தானிய சிங்கப்பூர் காப்புப் படையும், கப்பற்தளமும் யப்பானியர்களிடம் ஏழாவது நாள் வீழ்ந்தது. ஏழுநாள் நடந்த கடுமையான, ஆனால் சிறிதும் நம்பிக்கை இல்லாத சண்டைக்குப் பிறகு பிரித்தானியப் படையின் தளபதியான ஏ.இ. பெர்சிவல், யப்பானியப் படைத் தளபதியான யமாசிட்டாவிடம் சரணடைந்தார். அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது அச்சம்; தீவில் இருந்த குடிநீர் தீர்ந்து போய்விடும் என்ற அச்சம்! நீரின்றிச் சாக விரும்பாத அவர்கள் 1942ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள், சீனப் புத்தாண்டின் முதல்நாள் சரணடைந்தார்கள். ஏழு நாட்களுக்குள் சிங்கப்பூரைப் பிடித்தது யப்பான்.

அகமும் முகமும் மாறியதே…

சிங்கப்பூரின் பெயர் சோனான் என்று யப்பானிய மொழியில் மாற்றப்பட்டது. அதன் பொருள் தெற்கின் ஒளி என்பது. ஆனால் சிங்கப்பூர் சந்தித்ததோ மறக்கவியலாததொரு கொடுங்கனவு. சிங்கப்பூரின் கடிகாரங்கள் தோக்கியோ நேரத்துக்குத் திருத்தி அமைக்கப்பட்டன. காலனித்துவ ஆக்கிரமிப்பிலிருந்து சக ஆசியர்களை மீட்க வந்தவர்களாக யப்பானியர்கள் தங்களை வரித்துக் கொண்டார்கள். அவ்வாறே அறிவிக்கவும் செய்தார்கள். ஆனால் அவர்களின் ஆதிக்கத்தின் கீழிருந்த சுமார் நான்காண்டுகளில் சிங்கப்பூர் குடிமக்கள் கொடும் சித்திரவதைகளை அனுபவிக்க நேர்ந்தது. சீன இனத்தைச் சேர்ந்த வசதி மிக்க வணிகர்கள், போருக்கு முன்பாக யப்பானுக்கும், யப்பானிய முயற்சிகளுக்கும் எதிராகச் செயல்பட்டார்கள் என்பதை அந்தப் படை நினைவு வைத்திருந்தது. அவர்கள் குறிவைத்து ‘பாடம் கற்பிக்கப்’பட்டார்கள். நூற்றுக் கணக்கில் (ஆயிரக்கணக்கில் கூட இருக்கலாம் என்று சில செய்தி மூலங்கள் சொல்கின்றன) சீனர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்; அல்லது காணாமற் போகிறார்கள். யப்பானிய இராணுவ நடவடிக்கைகளுக்காக சீன வணிகர்களிடமிருந்து 50 மில்லியன் டாலர்கள் பணம் ‘வலிந்த நன்கொடை’யாக வசூலிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் இருந்த இந்தியத் தமிழர்களை மட்டும் சிறிது பரிவோடு அணுகுகிறார்கள் யப்பானியர். இந்தியாவும் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்ளப் போராடுவதால் அவர்களை ஆதரிப்பதாக தங்கள் நிலையை முன்வைக்கிறது யப்பான். சிங்கப்பூரில் இருந்த இந்தியத் தமிழர்களுக்கு ஒப்பீட்டளவில் கொடுமைப்படுத்தல்கள் இல்லாத கண்காணிப்பு வேலைகள் வழங்கப்படுகின்றன. இந்திய தேசியப்படையை அக்காலகட்டத்தில் உருவாக்கிக் கொண்டிருந்த இந்திய விடுதலைப் போரின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுபாசு சந்திர போசை ஆதரிக்கும்படி யப்பானிய மேலிடம் யப்பானியப் படைகளுக்கு உத்தரவிடுகிறது. இந்திய தேசியப்படையில் அதிக அளவில் சிங்கப்பூரிலிருந்த இந்தியத் தமிழர்கள் சேர்கிறார்கள். சிங்கப்பூரை பிரித்தானிய நிர்வாகத்திடமிருந்து வென்றுவிட்ட யப்பானிய இராணுவம், இந்த இந்திய தேசியப் படையின் சிங்கப்பூர்ப் பிரிவினரோடு இணக்கமாகவும், நீக்குப் போக்காகவும் நடந்து கொள்கிறது. பிரித்தானிய காலனி நிருவாகத்தின் கீழ் இருந்தபோது, சிங்கப்பூரின் இந்தியத் தமிழர்கள் நினைத்தும் பார்த்திருக்க இயலாத அதிகாரம் மிக்க பதவிகளில், யப்பான் இராணுவ நிருவாகம் அவர்களை அமர்த்துகிறது. இதே விதமான அணுசரனையாக போக்கை மலாய் இனத்தவர்களிடமும் யப்பானியப் படை காட்டுகிறது. மலாயாவின் மற்ற இடங்களில் இருக்கும் மலாய்க் காரர்கள், சிங்கப்பூரின் மலாய்க்காரர்களோடு தொடர்பு கொள்ள ஊக்கப்படுத்தப் படுகிறார்கள். இது மலாய் இனத்தவர்களிடையேயும் யப்பானிய இராணுவப் படையைப் பற்றியும் நிருவாகத்தைப் பற்றியும் நம்பிக்கையைக் கொடுக்கிறது.

நடப்பதொரு கொடுங்கனவு

சிங்கப்பூர், யப்பானிய ஆதிக்கத்தின் கீழ் நான்காண்டுகள் இருக்கவேண்டியிருந்தது.யப்பானிய இராணுவம் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது சிங்கப்பூரில் இருந்த பலர், மலாயாவின் உள்பகுதிக்குள் சென்று விட்டால் போரின் இடர்களிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் யப்பானியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்த அதே நாள், மலாயாவின் கோத்தாபாருவிலும்(Kota Bharu) இறங்கினார்கள் என்ற செய்தி பின்னரே வந்தது. ஏற்கெனவே யப்பானியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய யோகர் ஆற்றின் மறுகரையின் சதுப்பு நிலங்கள் வழி மிதிவண்டிகளில் வந்தார்கள் என்று பார்த்தோம். இது பிரித்தானியர்கள் எதிர்பாராதது. அச்சத்தில் அப்பகுதிகளில் இருந்த பிரித்தானியக் குடும்பங்கள் பின்வாங்கி ஆற்றைக் கடந்து சிங்கப்பூருக்குள் நுழைய வேண்டி வந்தது. அல்லது, தெறித்து ஓடித் தப்பிக்க வேண்டி வந்தது. மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் மத்திய கிழக்குப் பகுதிக்குச் செல்ல வேண்டிய சில ஆசுத்திரேலிய வீரர்களையும் மூன்று கலங்களில் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்திருந்தது இலண்டனின் காலனி நிருவாகம். அவர்கள் எதிர்பார்த்திருந்தது சிங்கப்பூர் விழுந்து விடாது என்பது. ஆனால் சிங்கப்பூரை முன்னிட்டு யப்பானிய இராணுவம் நடத்திய போரின் நான்காவது நாளில், அந்த வீரர்கள் தமது ஆயுதங்களைக்கூட சுமந்து கொள்ளப் பிரியப்படாமல் இருந்ததாக, அப்போது மாணவனாக இருந்த லீ க்வான் யூ தனது சிங்கப்பூர் சுடோரி புத்தகத்தில் பதிவு செய்கிறார். இச்சமயத்தில் பிரித்தானியப் பிரதமராக இருந்த, பின்னால் பெரும் புகழ் பெற்ற வின்சுடன் சர்ச்சில் சிங்கப்பூரின் வீழ்ச்சியை இவ்வாறு பதிவு செய்கிறார், ‘ சிங்கப்பூரின் வீழ்ச்சி பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகுந்த அவமானமிக்க தோல்வியும், கொடுமையான நிகழ்வும் ஆகும்’.

சமூக இனப் பிளவு

சிங்கப்பூரில் இருந்த ஆசிய இனத்தவர்கள், பிரித்தானியர்கள் இரு சமூகத்துக்குமே யப்பானிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த சிங்கப்பூரின் மூன்றரை ஆண்டுகாலம் கொடுங்கனவாகவே இருந்தது. ஏனெனில் 1800கள் முதலே பிரித்தானியர்கள் தங்களது ஆதிக்கத்தை வன்மையுடன் மற்ற ஆசிய சமூகத்தினரிடம் செலுத்தி வந்தார்கள். ஆசிய இனத்தவர்கள் அனைவருக்கும் வெள்ளையினத்தவர் என்றால், அவர் ‘துரை’. வெள்ளையினப்பெண் என்றால் அவர் ‘துரைசானியம்மாள்’. நூறாண்டுக்கும் மேலாக சிங்கப்பூரின் வாழ்வியல் சூழலில் பழகிப் போயிருந்த இது யப்பானியர்கள் ஆக்கிரமிப்பில் சிங்கப்பூர் இருந்த மூன்றரை ஆண்டுகளில் தவிடுபொடியானது. பற்றாக் குறைக்கு இந்தியர்களை யப்பானியர்கள் கண்காணிகளாக நடத்தத் தொடங்கியது பிரித்தானியர்களுக்கு மேலும் சித்திரவதையாக இருந்தது. யப்பானியர்களின் கடுமை சீன இனத்தவரிடமும் பிரித்தானியர்களிடமும் மிகக் கடுமையாகவும், மலாய் இனத்தவரிடம் சிறிது கடுமை குறைந்தும், இந்தியத் தமிழர்களிடம் இன்னும் கடுமை குறைந்தும் காணப்பட்டது. இந்த வேறுபாடு பிரித்தானியர்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்த விளைவு, பின்னால் மீண்டும் பிரித்தானிய ஆட்சியின் கீழ் சிங்கப்பூர் வந்தபோது தெரிந்தது.ஆனால் பொதுவாக சிங்கப்பூர் சமூகத்தைப் பொறுத்தவரை, யப்பானியர்களின் ஒட்டுமொத்தக் கடுமையும், பிரித்தானியர்கள் ஆசிய சமூகத்திடம் நூறாண்டுகளாகக் காட்டி வந்த கடுமையைவிட அதிகமாகவே இருந்தது என்று சொல்லலாம். ஒரே பகுதியைச் சேர்ந்த ஆசியர்கள் என்பதால் யப்பானியர்கள் சிங்கப்பூர் ஆசியர்களை எளிமையாகவெல்லாம் நடத்தவில்லை.யப்பானியர்கள் சிங்கப்பூரைப் பிடித்த தொடக்க சில நாட்களில் பிரித்தானியர்கள், சீனர்களின் தொழில் செல்வங்கள், வீடுகள் சூறையாடப்பட்டன. ஆனால் சீக்கிரமே யப்பானியர்கள் சிங்கப்பூரில் இவ்விதச் சூறையாடல்களுக்கு முடிவு கட்டினார்கள். சில சூறையாடிகள் பிடிக்கப்பட்டு அவர்களது தலைகள் கொய்யப்பட்டுப் பொது இடங்களில் கட்டிவிடப்பட்டன. தண்டனைகள் கொடுமையாக அரங்கேற்றப்பட்டன. கத்தியால் உடலின் மேற்தோல்கள் சீவப்பட்டதெல்லாம் தண்டனைகளாகக் கொடுக்கப்பட்டன.

யப்பானிய இராணுவம் குறிப்பிட்ட சமூகப் பெரியவர்கள், அமைப்புகளிடம் இருந்து தங்களுக்கு வேண்டியதை மிரட்டிப் பெற்றார்கள். வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்கள், தானியங்கள் போன்றவற்றை அள்ளிச் சென்றார்கள். சிங்கப்பூரில் எந்த உணவும் மிகுதியாக உருவாக்கவோ,பயிரிடவோ படவில்லையாதலால் உணவுப் பொருள்கள் அருமைப் பொருள்களாயின.

மக்களின் தினவாழ்வு கொடுமையானதாக மாறியது.

(தொடரும்)

__________

படம்: சிங்கப்பூருக்குள் நுழையும் யப்பானியப் படை – நன்றி சிங்கை தேசிய ஆவணக் காப்பகப் பக்கம்

1. https://www.britannica.com/topic/Axis-Powers
2. The Singapore Story – Memoirs of Lee Kuan Yew, chapter 3.
3. From Singapore Heritage Board resources – With thanks.

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *