Skip to content
Home » ஹெலன் கெல்லர் #8 – அறிவின் பாதையில் ரத்தச் சுவடுகள்

ஹெலன் கெல்லர் #8 – அறிவின் பாதையில் ரத்தச் சுவடுகள்

ராட்க்ளிஃப் கல்லூரியின் பிரமாண்டமான கதவுகள் திறந்தபோது, ஹெலன் கெல்லர் வெறுமனே ஒரு மாணவியாக மட்டும் அதனுள் நுழையவில்லை; ஒரு மாபெரும் சமூகச் சவாலைத் தன்னுடைய தோள்களில் சுமந்துகொண்டிருந்த வீராங்கனையாக அவர் இருந்தார். கல்லூரி படிக்கட்டுகளில் அவர் ஏறியபோது, அது கல்வி கற்பதற்காக வந்த ஒரு பெண்ணின் நடையாக அல்லாமல், ஒரு புரட்சியின் தொடக்கமாக இருந்தது.

பார்வை மற்றும் கேட்கும் திறன் குறைபாட்டுடன் கல்லூரியில் பயிலும் முதல் பெண் என்கிற வரலாற்றுப் பொறுப்பு ஹெலன் கெல்லர் வசம் இருந்தது. அதேநேரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு உடல் ரீதியான சித்ரவதைகளை அன்றாடம் அவர் அங்கு எதிர்கொண்டு வந்தார். கல்லூரியின் பழைமையான செங்கல் கட்டடங்களும் அமைதி நிறைந்த நூலகங்களும் ஹெலனின் அறிவுக்குப் பலவிதமான சோதனைகளை அளித்தன. அந்தச் சுவர்களுக்குள் அவர் சந்தித்த சவால்கள், வெறும் கல்வி சார்ந்தவையாக மட்டும் இருக்கவில்லை.

சாதாரண மாணவர்கள் விரிவுரையாளர்களைக் கண்களால் பார்த்தும், அவர்களது உரைகளைச் செவிகளால் கேட்டும் பாடங்களை உள்வாங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், ஹெலனுக்கு அது சாத்தியமில்லை. அவரது உலகம் முழுக்க முழுக்கத் தொடு உணர்வை மட்டுமே சார்ந்திருந்தது. கற்றலுக்காக அவர் பயன்படுத்திய முக்கியக் கருவியும் அதுவே. பெர்கின்ஸ் பள்ளியில் நடந்ததைப்போல் இங்கும் வகுப்புகளின்போது ஹெலனின் கரங்களை இறுகப் பற்றியிருந்தார் ஆனி சல்லிவன். விரிவுரையாளர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் அதன் நுணுக்கமான உட்கருத்தையும், தன்னுடைய விரல்களால் ஹெலனின் உள்ளங்கையில் அவர் எழுத்துகளாக வடித்தார்.

பள்ளி வகுப்பில் எடுக்கப்படும் பாடங்களை இத்தகைய செயல்முறையில் புரியவைக்கும் முயற்சிகூட ஓரளவுக்குப் பரவாயில்லை. ஆனால் கல்லூரிப் பாடங்களை இதே வகையில் புரியவைப்பது எவ்வளவு கடினமானது என்பதை இன்றைய நவீன உலகம் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. ஒரு விரிவுரையாளர் பேசும் வேகத்துக்கு ஈடு கொடுத்து, ஹெலனின் உள்ளங்கையில் அந்தச் சொற்களைக் கொண்டுசேர்ப்பது மிகப்பெரிய சவாலான காரியம். அதைவிடப் பெருஞ்சவால், அந்தச் சொற்களை உள்வாங்கி, ஹெலன் தன்னுடைய அகக்கண்ணால் அவற்றை உணர்வது.

கல்லூரி வகுப்புகளில் நடைபெறும் இந்த இடைவிடாத செயல்முறையால் ஆனி சல்லிவனின் விரல்கள் அன்றாடம் கொப்பளித்துப் போய்விடும். சில சமயங்களில் வீங்கிய விரல்களில் தோல் உரிந்து ரத்தம் கசியும். வலியால் ஆனி சல்லைவன் சோர்ந்துபோகும் நிலை ஏற்பட்டாலும், ஹெலனின் அறிவுத் தாகத்தால், ஒரு நிமிடம்கூட ஓய்வெடுக்க அவர் விரும்பியதில்லை.

இருந்தாலும் இந்தத் தொடர் செய்முறையால் ஆனி சல்லிவனின் கரங்களில் ஒரு கட்டத்தில் நடுக்கம் ஏற்படும். அதை உணர்ந்தபோதெல்லாம், குற்ற உணர்ச்சியால் ஹெலன் உள்ளுக்குள் தத்தளித்தார். ‘நம்மால் நம்முடைய ஆசிரியைக்கு எவ்வளவு வலிகள்! நாம் பிறரைச் சார்ந்திருக்க வேண்டியதாக உள்ளதே?’ என்றெல்லாம் எண்ணி அவர் கலக்கமடைவார். இதையே ஆனி சல்லிவனிடமும் ஹெலன் பகிர்ந்துகொள்வார்.

ஆனால் ஆனியின் காட்டிய உறுதியான அன்பு, விடாமுயற்சி, அரவணைப்பு உள்ளிட்டவை ஹெலனை மீண்டுவரச் செய்யும். கற்றலைச் சாத்தியப்படுத்த இருவரும் இணைந்து மேற்கொண்ட இத்தகைய முயற்சிகள், உண்மையில் அவர்கள் இருவருக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தின. அந்தப் பிணைப்பானது புரிதல் என்கிற உணர்வால் கட்டமைக்கப்பட்டிருந்தது.

கல்லூரியில் பல பிரெய்லி புத்தகங்கள் ஹெலனுக்குக் கிடைத்தன. தடிமனான ஒரு காகிதத்தில், புடைப்பாக அமைந்திருக்கும் புள்ளிகளை விரல் நுனிகளால் தடவிப் பார்த்து, அவற்றை எழுத்துகளாகவும், சொற்களாகவும், வாக்கியங்களாகவும் உணர்ந்து அவற்றின் உட்கருத்துகளையும் அறியவேண்டும். ஒரு சாதாரண புத்தகத்தை எந்தக் குறைபாடும் இல்லாத ஒரு நபர் படித்து முடிக்கவே பல மணிநேரங்கள் ஆகும். இந்நிலையில் யோசித்துப் பாருங்கள், நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட ஒரு பிரெய்லி வரலாற்றுப் புத்தகத்தையோ அல்லது தத்துவ நூலையோ ஹெலன் படித்து முடிக்க எவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்கும்?

நள்ளிரவு தாண்டியும் ஹெலனின் அறையில் விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும். ஆனி சல்லிவன் உறங்கச் சென்ற பிறகும்கூட ஒரு போராளியைப்போல் நூல்களோடு ஹெலன் மல்லுக்கட்டிக்கொண்டிருப்பார். அந்த அறையில் நிலவும் நிசப்தம், அவரது தீவிரமான கவனத்துக்குச் சாட்சியாக இருக்கும். பல மணிநேர தொடர் வாசிப்பால் ஹெலனின் விரல் நுனிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. மென்மையான தோல் தேய்ந்து, சதைகள் காயமுற்று, ரத்தம் கசிவது சகஜமான ஒன்றாக மாறியது. காகிதங்களில் ரத்தக் கரைகள் படிவதும் இயல்பான நிகழ்வானது.

விரல்களில் ஏற்படும் வலி சில நேரங்களில் தாங்க முடியாததாக இருக்கும். அத்தகைய நிலையில் விரல்களைச் சுற்றிக் கட்டுப்போட்டுக்கொண்டு, மீண்டும் அந்தப் புள்ளிகளைத் தடவிப் பார்ப்பார் ஹெலன். அவருடைய அறிவுத் தேடல் எவ்வளவு தீவிரமானது என்பதற்கு அவரது விரல்களில் ஏற்பட்ட காயங்களே சாட்சி. அவரது விரல்களில் இருந்து கசிந்த அந்த ரத்தத் துளிகள், ஒரு பெண் தன்னுடைய இருண்ட உலகிலிருந்து அறிவின் ஒளியை நோக்கி வடிவமைத்த பாதையின் அடையாளங்கள்.

ரத்தம் கசிந்த காகிதங்களை வாசித்து ஹெலன் கல்வியைத் தேடவில்லை, மாறாகத் தன் ஆன்மாவின் தாகத்தைத் தீர்த்துக்கொண்டிருந்தார். அந்தப் புள்ளிகளில் ஓடிய ஒவ்வொரு வரியும் அவருக்குப் புதிய பிரபஞ்சங்களைத் திறந்துகாட்டின. அதன் வழியே அறிவின் புதிய பரிமாணங்களை ஹெலன் கண்டறிந்தார்.

கல்லூரிப் பருவத்தில் இவ்வாறு ஹெலன் அனுபவித்த உடல் சோர்வு சாதாரணமானது அல்ல. ஒரு பக்கம் மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டே மறுபக்கம் உடலை வருத்தியபடி அந்தப் பாடங்களைப் புரிந்துகொள்ளவேண்டும். தத்துவவியல் பாடங்கள் மிகவும் நுணுக்கமானவை. அவற்றை பிரெய்லி எழுத்துகளால் விரல்கள்மூலம் புரிந்துகொள்வது என்பது, ஓர் ஊசி முனையில் உலகத்தைக் கோர்ப்பது போன்றது. ஆனால் தன் முயற்சியில் இருந்து ஒருநாளும் ஹெலன் பின்வாங்கியதில்லை.

‘வலி என்பது உடல் சார்ந்தது, ஆனால் அறிவு என்பது ஆன்மா சார்ந்தது; ஆன்மாவின் தேவையை உடல் வலி தடுக்கக்கூடாது’ என்று அவர் ஆழமாக நம்பினார். சமூகம் தன்மீது விதித்திருந்த எல்லைகளை ஹெலன் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு முறை அவர் பிரெய்லி புள்ளிகளைத் தொடும்போதும், ஏதோ ஓர் உண்மையையோ அல்லது வரலாற்றுத் தகவலையோ தன் அகக்கண்ணால் பார்த்தார்.

ஹெலனின் இந்த அதிதீவிரமான உழைப்பு, அவரைச் சக வகுப்பு மாணவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. மற்றவர்கள் தேர்வுகளுக்காகப் படித்தார்கள், ஹெலன் வாழ்வதற்காகப் படித்தார். அவர் சந்தித்த தடைகள் ஒவ்வொன்றும் அவருக்கான ஒரு வாழ்க்கைப் பாடமாக அமைந்தன. காகிதத்தில் பதிந்த அந்த ரத்தத் துளிகள், வருங்காலத்தில் அவர் எழுதப்போகும் பல நூல்களுக்கான முன்னுரையாக அமைந்தன. ரத்தம் தோய்ந்த அந்தக் காகிதங்கள், மதிக்கத்தக்க வரலாற்று ஆவணங்களாக மாறிப்போயின.

ராட்க்ளிஃப் கல்லூரி நாட்களின்போது ஹெலன் கெல்லர் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம் இதுதான் – ‘வாழ்க்கை என்பது சுகமாக இருப்பதல்ல, வலியின் ஊடே அறிவைச் சேகரிப்பதே’. ஹெலனின் இத்தகைய கடுமையான முயற்சிகள், அவரை ஒரு சாதாரண மனிதர் என்ற நிலையிலிருந்து உயர்த்தி, வரலாற்றின் பக்கங்களில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்க வைத்தன. கல்லூரியில் ஹெலன் எழுதிய தேர்வுகள், நம் ஒவ்வொருவரது வாழ்வுக்குமான ஊக்கத்தை அளிக்கும் கவிதைகள். கல்லூரி நாட்களில் இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி அவர் நடத்திய பயணம், இன்றும் கோடிக்கணக்கான மனிதர்கள் வெற்றிபெறுவதற்கான பாதையைக் காண்பிக்கிறது.

கல்லூரி வாசத்தின் இறுதி நாட்கள் நெருங்கியபோது, தான் கடந்து வந்த பாதை எவ்வளவு கரடுமுரடானது என்பதை ஹெலன் திரும்பிப் பார்த்தார். அந்தப் பாதையில் வழிந்த தன்னுடைய ஒவ்வொரு சொட்டு ரத்தமும் ஒவ்வொரு துளி வியர்வையும் வீணாகவில்லை என்பதை உணர்ந்தார். அங்கு அவர் பெற்ற பட்டத்தைவிட அவரது முயற்சிகள் மேலானவை.

‘எந்தக் கஷ்டம் வந்தாலும், அறிவுத் தேடலை மட்டும் நிறுத்தக்கூடாது’ என்பதே ஹெலன் உலகுக்குச் சொன்ன செய்தி. அந்தப் போராட்ட நாட்கள்தான், பிற்காலத்தில் உலகத்தையே உலுக்கிய ஒரு மாபெரும் ஆளுமையாக அவரை மாற்றியது. ஆம், ஹெலனின் விரல் நுனிகளில் வழிந்த ரத்தம், இன்றும்கூட வரலாற்றின் பக்கங்களில் அழியாத ஒளியாகப் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *