ஜூலை 2, 1961-ம் ஆண்டு.
அன்று வழக்கத்திற்கு மாறாக விடியும் முன்பே விழித்துக் கொண்டார் அந்தப் பெரியவர்.
மனைவி மேரியை ஒருமுறை பரிவுடன் பார்த்துவிட்டு, வீட்டின் அடித்தளத்தை நோக்கி சோர்வுடன் நடந்துசென்றார். அங்குதான் வேட்டையாடுவதற்காக அவர் பயன்படுத்தும் பல்வேறு வகையான துப்பாக்கிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அவருக்கு மிகவும் பிடித்தமான கைத்துப்பாக்கி ஒன்று, முதல் வரிசையில் அவரின் வருகைக்காகக் காத்திருந்தது. நேராக அதனருகில் சென்றவர், இறுதியாக ஒருமுறை அதனைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார்.
இந்நாள் வரை பறவைகளையும் விலங்குகளையும் மட்டுமே குறி பார்த்த அது, முதன் முறையாக முதலாளியின் தலையைக் குறி பார்த்தது.
சிறிது நேரத்தில் அங்கே கேட்ட பெருஞ்சத்தம், அந்தக் காலைப் பொழுதின் அமைதியை முற்றிலுமாக உருக்குலையச் செய்தது. முதல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த மேரி, சத்தம் கேட்டு அவசர அவசரமாகக் கீழே வந்து பார்த்தபோது மூளைச் சிதறி பிணமாகக் கிடந்தார் உலகின் ஆகச் சிறந்த எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே.
ஆம்! அவரது தந்தை கிளாரன்ஸ்போலவே தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார் ஹெமிங்வே!
நோபல் பரிசு பெற்ற, உலகின் முக்கிய எழுத்தாளராக வலம் வந்த ஹெமிங்வே, தற்கொலை செய்துகொண்டது ஏன்? அவருக்கிருந்த உளவியல் பிரச்னைகள் என்னென்ன?
பார்ப்போம்…
0
மூளை மடிப்புகளைப் போலவே ஹெமிங்வேயின் ஆரம்பகால வாழ்க்கை, பல சிக்கல்களைக் கொண்டது. அதற்குக் காரணம், அவருடைய பெற்றோர்கள்தான் என்றால் நம்ப முடிகிறதா?
ஹெமிங்வே 1899-ம் ஆண்டு, அமெரிக்காவின் இலினோய் மாகாணத்தில் ஜூலை 21-ல் பிறந்தார். அவருடைய தந்தை, கிளாரன்ஸ். தாய், கிரேஸ்.
கிளாரன்ஸ் ஒரு மருத்துவர். மிகவும் கண்டிப்பு மிக்க தந்தையாகவே ஹெமிங்வேயிடம் இருந்திருக்கிறார். சிறு தவறு செய்தால்கூட அடி விழும். பொறுமை, கருணை, இரக்கம் போன்ற வார்த்தைகளுக்கு கிளாரன்ஸின் அகராதியில் இடமில்லை. அதனால், தந்தை கிளாரன்ஸைக் கண்டாலே அஞ்சி நடுங்குவார் ஹெமிங்வே. தந்தை மீதிருந்த பயம், விரைவிலேயே வெறுப்பாக மாறியது.
ஹெமிங்வேயின் உளவியலை ஆராய்ந்த மனநல மருத்துவர் ஒருவர், ‘ஹெமிங்வேவிற்கு தன்னுடைய தந்தையைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே இருந்திருக்கிறது’ என்கிறார்.
கிளாரன்ஸுக்கு மன அழுத்த நோய் இருந்திருக்கிறது. 1928-ம் ஆண்டு அது தீவிரமடைய, தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துபோனார் அவர்.
தந்தையின் தற்கொலை, ஹெமிங்வேயை நிறையவே பாதித்திருக்கிறது. சிறுவயதில் தனக்கு இருந்த தந்தையின் மீதான வெறுப்பு, அவர் தற்கொலை செய்துகொண்ட பிறகு குற்றவுணர்ச்சியாக உருமாறியது.
‘தந்தையின் தற்கொலைக்குக் காரணம் நீ தான்…’ எனத் தாயான கிரேஸை வெளிப்படையாகவே பழித்தார் ஹெமிங்வே. இது ஒருவகையில், அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்ட ஒரு பாதுகாப்புக் கவசமே.
புகழ்பெற்ற அவருடைய சிறுகதைகள் பலவற்றில், தற்கொலை செய்துகொள்ளும் தந்தை கதாபாத்திரம் ஒன்று நிச்சயம் இடம்பெறும். அவருடைய முக்கியமான நாவலான, For Whom The Bell Tolls (யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது)-ல் கூட, ராபர்ட்டின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார்.
தாய் கிரேஸுடனும் அவருக்கு எப்போதுமே இணக்கம் இருந்ததில்லை. ஹெமிங்வேயின் நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமாகிய ஜான் டோஸ் பாஸ்சோஸ், ஹெமிங்வேக்கும் அவர் தாய்க்கும் இருந்த உறவை இப்படிச் சொல்லியிருக்கிறார்.
‘தன்னுடைய தாயை உண்மையில் வெறுத்த, நான் அறிந்த ஒரே மனிதன் என்றால் அது ஹெமிங்வே மட்டும்தான்…’
தந்தை கண்டிப்பானவர், அதனால் பிடிக்கவில்லை சரி. தாயை ஏன் வெறுக்க வேண்டும்? அதற்குப் பல காரணங்களை முன் வைக்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
கிரேஸ் எப்போதும் ஹெமிங்வேயைச் சுதந்திரமாக விட்டது இல்லை. இயல்பிலேயே ஆதிக்க குணம் கொண்டவர் கிரேஸ். அவர் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்க வேண்டும்.
அக்காலத்தில் விக்டோரியா நாட்டின் வழக்கப்படி, ஆண் சிறுவர்களுக்குப் பெண்களைப்போல உடையணிவது வழக்கம். ஹெமிங்வே அதை வெறுத்தார். ஆனால் கிரேஸ், ஹெமிங்வேவைக் கட்டாயப்படுத்தி அப்படிப்பட்ட ஆடைகளை அணிவித்திருக்கிறார். மேலும் அவர் அணிவித்த ஆடைகளோ மிகுந்த பெண்மைத்தன்மை கொண்டதாக இருந்திருக்கின்றன. இதுபற்றி தாயிடம் சொன்னால் அடுத்து என்ன நடக்கும் என்பது ஹெமிங்வேக்கு நன்கு தெரியும். எனவே எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு அமைதியாகி விடுவார் ஹெமிங்வே.
ஐந்து வயது முதல், பதின்ம வயது தொடக்கம் வரையிலான காலகட்டம்தான் பிள்ளைகளின் மனவளர்ச்சிக்கு முக்கியமான காலகட்டம். அப்போதுதான் அவர்களுடைய குணாதிசயங்கள் ஒருநிலைப்படும். இந்த நேரத்தில்தான் ஏகப்பட்ட உளவியல் சார்ந்த குழப்பங்கள் அவர்களுக்குள் உண்டாகும். அதைத் தீர்க்க வேண்டிய கடமை, பெற்றோர்களிடம் இருக்கிறது.
ஆனால், ஹெமிங்வேக்கு இந்தக் காலகட்டம்தான் பிரச்னையாகவே அமைந்தது. பெற்றோர்கள் மூலம் அவர் சந்தித்த நெருக்கடிகள் எல்லாமே, பின்னாளில் அவருக்கு ஏற்பட்ட உளவியல் பிரச்னைகளுக்குக் காரணமாக அமைந்தன.
எனில், சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட இதுபோன்ற பிரச்னைகள்தான் ஹெமிங்வேயின் தற்கொலைக்குக் காரணமா?
அதுவும் ஒரு காரணமே தவிர, அதுதான் காரணம் என்றில்லை.
0
ஹெமிங்வேயின் தந்தை, மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார் என்பதை முன்பே பார்த்தோம் அல்லவா? அவர் மட்டுமல்ல, ஹெமிங்வேயின் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். (ஹெமிங்வேயையும் அவரது தந்தையையும் சேர்த்து).
மற்ற மூன்று பேருடைய விவரங்கள்:
1. லெய்செஸ்டர்: ஹெமிங்வேயின் இளைய சகோதரர். இவரும் ஓர் எழுத்தாளரே. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய 67 வயதில் துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு இறந்துபோனார்
2. உர்சுலா: ஹெமிங்வேயின் சகோதரிகளுள் ஒருவர். புற்றுநோயாளியான இவர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய 64 வயதில் அதிக அளவிலான மாத்திரைகளை உட்கொண்டு இறந்துபோனார்.
3. மார்காக்ஸ்: ஹெமிங்வேயின் பேத்தி. இவர் ஒரு நடிகை. தன்னுடைய 42 வயதில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் – மன அழுத்தம். தேர்வு செய்த வழி – அதிக அளவிலான மாத்திரைகளை உட்கொண்டது.
இப்படி ஹெமிங்வேயின் குடும்ப மரபணுக்களிலேயே வாடகைக்குக் குடியிருந்திருக்கிறது ‘தற்கொலை’. ஆக, ஹெமிங்வேயின் தற்கொலைக்கு மரபியல் சார்ந்த விஷயங்களும் முக்கியக் காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது.
சரி, ஹெமிங்வேக்கு இருந்த நேரடி உளவியல் பிரச்னைகளைப் பற்றி பார்ப்போம்.
0
அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் மார்ட்டின் எனும் மனநல மருத்துவர், ‘Ernest Hemingway: A Psychological Autopsy of a Suicide’ என்ற தலைப்பில் நீண்ட ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில், ஹெமிங்வேக்கு இருந்த உளவியல் சிக்கல்கள் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளன.
ஹெமிங்வே, பைபோலார் டிசார்டர் (Bipolar Disorder) எனப்படும் மனநல நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார் மார்டின்.
இந்நோய் உள்ளவர்கள், சில சமயம் மன எழுச்சியாலும் சில சமயம் மனச் சோர்வாலும் பாதிக்கப்படுவர்.
எழுச்சியின்போது எல்லா விஷயங்களையும் அதிவேகமாக அவர்களால் செய்ய முடியும். உலகம் வண்ணமயமாகத் தெரியும். எந்நேரமும் அதீத ஆற்றலுடன் சோர்வே அடையாமல் வேலை செய்வர். தூக்கத்தைத் தூக்கித் தூர வைத்துவிடுவர். ரிஸ்க் எடுப்பதெல்லாம் இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போன்று. இதற்கு அப்படியே நேர் எதிரானது மனச் சோர்வின் நிலை.
ஹெமிங்வே இரண்டு வகையாலும் பலமுறை பாதிக்கப்பட்டிருக்கிறார்.
மன எழுச்சியின்போது, நேரம் காலம் பார்க்காமல் எழுதித் தள்ளியிருக்கிறார். ஹெமிங்வேயின் முதல் நாவலான ‘The Sun Also Rises’, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் எழுதப்பட்டதுதான். 1924-ல் மட்டும் ஏழு சிறுகதைகளை அடுத்தடுத்து எழுதியிருக்கிறார் ஹெமிங்வே.
ஆனால், மனச் சோர்வின்போது அவரால் அப்படி இயங்க முடியவில்லை. தற்கொலை எண்ணம் மட்டுமே அவருடைய மூளை முழுக்கப் பரவியிருந்தது.
‘நான் மாபெரும் ரத்தம் தோய்ந்த வெறுமையையும் ஒன்றுமில்லாததையும் உணர்கிறேன். இனி எப்போதும் என்னால் எழுத முடியாது, சண்டையிட முடியாது, சாப்பிட முடியாது. இது என் மரணத்திற்கான ஆரம்பம்…’
மனச் சோர்வில் இருந்தபோது தன்னுடைய நண்பர் பாஸ்சோஸிடம், ஹெமிங்வே சொன்ன வார்த்தைகள் இவை.
இவருடைய மனநோய் பற்றி நன்கு அறிந்த நண்பர்கள் சிலர், ‘அவர் சில நேரம் நன்றாகப் பேசுவார். சில நேரம் கோபமாகப் பேசுவார். சில நேரங்களில் பேசுவதே இல்லை. திடீரெனச் சிரிப்பார். திடீரென வெடித்து அழுவார். அவருக்கிருந்த உளவியல் பிரச்னைகள், அவரைப் பாடாய் படுத்தின…’ என்கின்றனர்.
இதனாலேயே ஹெமிங்வேயால் யாருடனும் நீண்ட நாட்களுக்கு நட்பு பாராட்ட முடிந்ததில்லை. திருமண வாழ்க்கையில் அடுத்தடுத்து தோல்வியுற்றார். மேரி, அவருடைய நான்காவது மனைவி.
மேலும், ஹெமிங்வேக்கு மற்ற எல்லா மேற்கத்திய எழுத்தாளர்கள் போலவும் மிதமிஞ்சிய குடிப்பழக்கம் இருந்தது. இது அவருக்கிருந்த உளவியல் பிரச்னைகளை மேலும் தீவிரப்படுத்தியது.
ஹெமிங்வேவுக்கு எத்தனை முறை விபத்துகள் நடந்திருக்கின்றன என்பது பற்றி, ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அந்த அளவுக்கு மரணத்துடன் ‘கபடி’ விளையாடியிருக்கிறார். மனைவியுடனான ஆப்பிரிக்கப் பயணத்தின்போது அவர் சென்ற விமானம் விபத்தில் சிக்கி, அதில் அவர் உயிர் பிழைத்தது அப்போதைய முன்னணிப் பத்திரிகைகளில் முதல் பக்கச் செய்தியாக வெளியானது.
காளைச் சண்டையிலும், வேட்டையாடுவதிலும் ஈடுபாடு கொண்ட ஹெமிங்வே, உடல் முழுக்கப் பல வீரத் தழும்புகளைப் பரிசாக வாங்கியுள்ளார். முக்கியமாகத் தலைப்பகுதியில் (ஹெமிங்வேயின் நெற்றியில் மினி இட்லி ஸைசில் இருக்கும் தழும்பைத் தேடிப் பார்க்கவும்).
இப்படி மாதத்திற்கு ஒருமுறை தவணை முறையில் தலையில் அடிபட்டதால், அவருடைய நினைவாற்றலில் சிக்கல் முளைத்தது. இதனால் எழுதுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டார் ஹெமிங்வே.
தற்கொலைக்குச் சில மாதங்கள் முன்புதான், அமெரிக்காவின் புகழ்பெற்ற மயோ க்ளினிக் மருத்துவமனையில் மன அழுத்தத்திற்கான சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஹெமிங்வே. ஆனால், எவ்வளவு நாட்கள்தான் மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியும்?
தற்கொலை ஒரு நிழலைப்போல வாழ்நாள் முழுவதும் ஹெமிங்வேயைப் பின்தொடர்ந்திருக்கிறது. காலம் முழுக்க அவருடன் கண்ணாமூச்சி ஆட்டம் போட்ட அது, இறுதியாக அன்றைய விடியற்காலைப் பொழுதில் வென்றுவிட்டது.
0
சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட உளவியல் சார்ந்த சிக்கல்கள், குடும்பத்தில் பிணைந்திருந்த தற்கொலைகள், குடிப்பழக்கம், தலையில் பலமுறை அடிபட்டது என இவையெல்லாம் சேர்ந்தே ஹெமிங்வேயின் உயிரைக் குடித்திருந்தன.
இறுதி வரையில் ஹெமிங்வேயின் மனைவி மேரி, ‘ஹெமிங்வே தற்கொலை செய்து கொள்ளவில்லை. துப்பாக்கியைச் சுத்தம் செய்தபோது நடந்த விபத்தில்தான் இறந்தார்…’ என்றே நம்பி வந்தார்.
ஆனால் ஹெமிங்வேயின் உளவியலை ஆராய்ந்தால், அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான சாத்தியக்கூறுகள்தான் அதிகம் இருப்பதாக எனக்குத் தோன்றியது.
‘The Old Man and The Sea (கடலும் கிழவனும்)’ போன்ற மென்மையான நாவலை உருவாக்கிய ஹெமிங்வேயின் வாழ்க்கை, கடலைப்போலவே பல மர்மங்களை உள்ளடக்கியது.
ஹெமிங்வேயின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மைக்கேல் ரெனால்ட்ஸ், ‘ஹெமிங்வே ஆழமான கிணறு போன்றவர். அதில் குதித்துவிட்டால் மேலே ஏறி வருவது சிரமம்’ என்கிறார்.
உண்மை தான்.
(தொடரும்)