Skip to content
Home » பிரபலங்களின் உளவியல் #4 – பீத்தோவன்

பிரபலங்களின் உளவியல் #4 – பீத்தோவன்

நாள் முழுக்க நின்றுகொண்டே பியானோ வாசித்ததால் பீத்தோவனுக்குக் கால்கள் நடுங்கின.

பியானோவை நின்றுகொண்டே ஏன் வாசிக்க வேண்டும்? சாவகாசமாக நாற்காலியில் அமர்ந்து வாசிக்கலாமே! உண்மைதான். ஆனால் அதில்தான் ஒரு ‘உயர’ பிரச்னை இருந்தது.

பீத்தோவனுக்கு பியானோ எட்டவில்லை!

ஆம். ஐந்து வயது சிறுவனுக்கு எப்படி எட்டும்?

உண்மையில் அப்போது பீத்தோவனுக்கு ஐந்து வயதுதான்! எனில், நாற்காலி மீதேறி தானே வாசிக்க முடியும்? அதுசரி, ஆனால் கால்கள் நடுங்கும் அளவுக்கு ஏன் வாசிக்க வேண்டும்?

வாசிக்கத்தான் வேண்டும். இல்லையெனில் பீத்தோவனின் தந்தை அவனை வெளுத்து வாங்கி விடுவார். அவரைப் பொருத்தவரை பீத்தோவன், மொஸார்ட்டைப்போல இசையில் புகழ்பெற வேண்டும். அதுவும் அவரைப் போலவே இளம்வயதில். அதனால்தான் இந்தக் கடும் பயிற்சி.

ஆனால் பீத்தோவனுக்குத் தந்தையுடைய இந்தக் கடுமையான அணுகுமுறை சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவரிடமே இதை நேரடியாகச் சொல்லலாம்தான். ஆனால் அதற்கும் அடி விழுமே.

சரி, நமக்கு வாய்த்தது இந்த பியோனாதான் எனத் தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டான் சிறுவன் பீத்தோவன். அன்று ஆரம்பித்த இசைப் பயணம், நிறுத்தமே இல்லாத தொடர்வண்டிபோல பீத்தோவனின்‌ வாழ்நாள் முழுக்க ஓடியது.

கண்டிப்பு மிக்க தந்தை, பாதியில் முடிந்த பள்ளி வாழ்க்கை, இசையால் அடைந்த புகழ், நிறைவேறாத காதல்கள், செவித்திறன் குறைபாடு, குடிப்பழக்கம், மன அழுத்தம் என பீத்தோவனின் வாழ்க்கை அசாத்தியமானது.

பீத்தோவனின் சாதனைகள் உலகம் அறிந்ததே. ஆனால், தனிப்பட்ட நபராக பீத்தோவன் எப்படி இருந்தார்? அவருக்கிருந்த உளவியல் சிக்கல்கள் என்னென்ன? குடிப்பழக்கம் அவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றியது?

0

பீத்தோவன், 1770-ம் ஆண்டு ஜெர்மனியின் பான் பகுதியில் பிறந்தவர். இவருடைய தாத்தா, தந்தை, உறவினர்கள் என ஒட்டு மொத்த குடும்பமும் இசைத்துறையைச் சேர்ந்தது. ஆரம்பத்தில் சொந்தத் தந்தையிடம் இசை கற்றுக் கொண்ட பீத்தோவன், பின்னர் கிறிஸ்டியன் கோட்லாப் என்கிற இசைக்கலைஞரிடம் இசை பயின்றார்.

ஆறு வயதிலேயே பொது மேடையேறி இசை அரங்கேற்றம் நடத்தியது அக்காலத்தில் அவர் செய்த மாபெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது. எந்த மொஸார்ட்டை முன்மாதிரியாக வைத்து இசை கற்க ஆரம்பித்தாரோ, அவரையே முந்தும் அளவுக்கு இசைத்துறையில் பீத்தோவனின் பெயர் கொடிகட்டிப் பறந்தது.

ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தார் பீத்தோவன். அதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக இருந்தது அவருடைய குணாதிசயங்கள்தான் என்றால் நம்ப முடிகிறதா?

வியன்னாவைச் சேர்ந்த மனநல மருத்துவரான ஆன்ட்ரியாஸ் எர்ஃபர்த் பீத்தோவனின் மனநலச் சிக்கல்கள் குறித்து ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியிருக்கிறார்.

அதில், பீத்தோவனுக்கு ‘Hyperthymic Temperament’ எனும் நிலையற்ற குணாதிசயம் இருந்ததைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அதாவது பீத்தோவன் சிறுவயது முதலே மிகவும் உணர்ச்சிவசப்படும் நபராக இருந்திருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களுக்குக் கோபப்படுவது, எளிதில் மனமுடைந்து அழுவது, பதற்றம், பயம், நடுக்கம் எனச் சிடுமூஞ்சி குமாராகவே அறியப்பட்டிருக்கிறார்.

இந்த ‘Hyperthymic Temperament’ குணாதிசயம் கொண்டவர்கள் பொதுவாக அதீத உடல் ஆற்றலுடன் செயல்படுவர். அவ்வளவு சீக்கிரத்தில் சோர்வடைய மாட்டார்கள். சிறிதளவு நேரம் மட்டுமே தூக்கம் தேவைப்படும். எளிதில் கவனம் சிதறிப் போகும். ஓர் இடத்தில் அமைதியாக இவர்களால் உட்கார முடியாது. வாழ்க்கையில் இவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் எல்லாம்,’நான் தலைகீழாகத்தான் குதிப்பேன்…’ என்பதைப் போலவே இருக்கும்.

புகழ்பெற்ற ஜெர்மானிய எழுத்தாளரான கதே, பீத்தோவனை ஒருமுறை நேரில் சந்தித்திருக்கிறார். பீத்தோவன் பற்றி அவர் எழுதிய குறிப்புகள் இவை: ‘I have never seen an artist more condensed, more energetic and more intimate like Beethoven’.

பீத்தோவனின் நண்பர்களில் ஒருவர், ‘பீத்தோவனை யாரும் அவ்வளவு எளிதில் நெருங்கிவிட முடியாது. அவர் ஒரு புரியாத புதிர்…’ என்கிறார். அதனால் தானோ என்னவோ பீத்தோவனின் மூன்று (சில குறிப்புகளில் நான்கு, ஐந்து என லிஸ்ட் நீள்கிறது) காதல் முயற்சியும் தோல்வியில் முடிந்தன. கடைசிவரை அவர் திருமணம் செய்துகொள்ளவே இல்லை.

ஆனால் இவையெல்லாம் எவ்வகையிலும் பீத்தோவனின் இசை வாழ்க்கையை பாதிக்கவில்லை. புகழின் உச்சிக்கு ஏறிக்கொண்டே இருந்தார். ஏணியாக பியானோ செயல்பட்டது!

0

கிட்டத்தட்ட அந்தச் சமயத்தில் தான் யாரும் எதிர்பார்த்திராத ஒரு திருப்பம் பீத்தோவனின் வாழ்க்கையில் அரங்கேறியது.

ஓர் இசைக்கலைஞனின் ஆன்மா அவனுடைய செவித்திறனில்தான் இருக்கிறது அல்லவா? ஆனால் பீத்தோவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னுடைய செவித்திறனை இழந்துகொண்டிருந்தார்! இருபத்தி எட்டு வயதில் ஆரம்பித்து, நாற்பது வயதை நெருங்கும்போது மொத்தமாகக் கேட்கும் திறனை இழந்திருந்தார் பீத்தோவன்.

செவித்திறனை இழந்ததால் இசையமைப்பதை விட்டுவிட்டாரா?‌ அதுதான் இல்லை. சொல்லப்போனால் அதன்பின்புதான் பீத்தோவனின் ‘மாஸ்டர் பீஸ்’ என அறியப்படும் பல முக்கிய சிம்பொனிகள் உயிர்பெற்றன.

புகழ்பெற்ற அவருடைய ஒன்பதாவது சின்பொனியை மேடையில் அரங்கேற்றியபோது, அவர் இசைப்பதை அவராலேயே கேட்க முடியாமல் போனது. இருந்தும் ஒப்பற்ற அந்தச் சாதனையைத் திறம்பட நிகழ்த்தி முடித்தார் பீத்தோவன்.

பீத்தோவன் இறந்தபோது அவருடைய பிரேதப் பரிசோதனையை கார்ல் ரோகிடான்ஸ்கி எனும் மருத்துவர் மேற்கொண்டார். அதில் பீத்தோவனுடைய காது நரம்புகள் புடைத்திருப்பதைக் கண்டார். மேலும் அப்பகுதியில் இருந்த எலும்புகள் அடர்த்தியாக இருந்தன. இதை வைத்து பீத்தோவனுக்கு பேஜட் நோய் (Paget’s Disease) இருந்திருக்கலாம் என்றார் ரோகிடான்ஸ்கி. பேஜட் நோய் பெரும்பாலும் உடலிலுள்ள முக்கிய எலும்புகளைத் தாக்கும். காது எலும்புகள் உட்பட. இதன் காரணமாகவே பீத்தோவனுக்கு செவித்திறன் இழந்திருக்கலாம் என்பது பெரும்பாலான மருத்துவர்களின் வாதம். சிலர், தந்தை மூலம் சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிகளே காரணம் என்கின்றனர். ஆனால் அதற்குண்டான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை.

1802-ல் பீத்தோவன் தன்னுடைய சகோதரர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், காது கேட்காத தன்னுடைய இயலாமை பற்றியும் தற்கொலை எண்ணத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அவருக்குத் தீவிர மன அழுத்தம் இருந்ததற்கான சான்றுகள் எதுவுமில்லை.

மன அழுத்தமே இருந்தாலும், அதை இரண்டு விஷயங்களின் மூலம் போக்கிக் கொள்ளும் பழக்கம் பீத்தோவனுக்கு இருந்தது.

ஒன்று நாம் அனைவரும் அறிந்ததே.

‘இசை’

மற்றொன்று?

தந்தையை முற்றிலுமாக‌ வெறுத்த பீத்தோவன், அவரிடமிருந்து ஒன்றை மற்றும் விடாப்பிடியாகக் கற்றுக் கொண்டார்.

‘குடிப்பழக்கம்’

தந்தைக்காவது ‘பழக்கம்’ என்கிற அளவில் இருந்தது. ஆனால் பீத்தோவன், குடிக்கு அடிமையாகி இருந்தார். ஏற்கெனவே அவருக்கு இருந்த ‘Hyperthymic Temperament’ குணம், இதை இன்னமும் அதிகப்படுத்தியது. இதைப் பற்றி எர்ஃபர்த் விளக்கும்போது, ‘பீத்தோவன் குடிக்க ஆரம்பித்துவிட்டால், அவரை யாருமே நிறுத்த முடியாது. உணவுகூட இல்லாமல் தொடர்ந்து பல நாட்கள் குடியில் மூழ்கியிருப்பார். மக்கள் மனதை இசையால் கட்டுப்படுத்தி வைத்திருந்த அவரால் குடியைக் கட்டுப்படுத்த முடியவில்லை…’ என்கிறார்.

பியானோவின் சத்தத்தோடும், சாராயத்தின் வாசத்தோடும் வளர்ந்ததாலோ என்னவோ இவ்விரண்டின் மூலமாகவே சந்தோஷத்தைத் தேடிக்கொண்டார் பீத்தோவன். ஆனால் இசையால் வளர்ந்தவர், குடியால் வீழ்ந்தார்.

ரோகிடான்ஸ்கியின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்கூட, பீத்தோவனின் கல்லீரல் குடியால் செயலிழந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது. சொல்லப்போனால் பீத்தோவனின் உயிரைக் குடித்ததே ‘குடி’ தான்!

பீத்தோவன், 1827-ம் ஆண்டு மார்ச் 26 அன்று தன்னுடைய ஐம்பத்து ஆறாவது வயதில் இறந்தார். அவருடைய இறப்புக்குப் பல்லாயிரம் பேர் கூடினர். இசைப்பிரியர்கள் கண்ணீர் வடித்தனர். ஆங்காங்கே பியானோ அலறியது.

0

பீத்தோவன் இறந்து கிட்டத்தட்ட இருநூறு வருடங்கள் ஆகின்றன. இன்று அவரைத் தெரியாதவர்கள் உலகில் யாருமில்லை. இசைத்துறையில் சாதிக்க விரும்பும் எவரும் பீத்தோவனைத் தான் முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறார்கள்.

அவருடைய ‘Fur Elise’ நோட்ஸ் புகழ்பெற்றது. அதைக் கேட்காதவர்கள் உலகில் யாரேனும் இருக்கிறார்களா என்ன? (இதுவரை கேட்கவில்லை என்றால் இப்போதே யூடியூப்பில் தேடிக் கேட்கவும்).

பீத்தோவனின் வாழ்க்கையைப் படிக்கும்போது பல இடங்களில் எனக்கு இசைஞானி இளையராஜாவின் ஞாபகம் வராமல் இல்லை. அதிலும் அந்த ‘Hyperthymic Temperament’ அப்படியே ஒத்துப் போகிறது அல்லவா?

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *