வெறும் முப்பது நாட்களில் ஒரு முழு நாவல் எழுதுவது சாத்தியம் தானா?
இல்லை… வாய்ப்பே இல்லை.
யோசிக்காமல் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டோமே. இப்போது என்ன செய்வது?
வேறு வழியே இல்லை. எழுதித்தான் ஆகவேண்டும். இல்லையெனில், அடுத்து எழுதப்போகும் எல்லாப் படைப்புகளின் உரிமையும் அவனிடமே சென்றுவிடும். அதுவும் இலவசமாக!
ஒரு நாவல். ஒரே ஒரு நாவல். முப்பது நாட்களில்…
ஆனால் என்ன எழுதுவது?
ரஷ்யாவின் இப்போதைய அரசியல் மாற்றங்களை மையமாக வைத்து எழுதலாமா? வேண்டாம். சமீபத்தில் தானே அதைப்பற்றி எழுதினோம்?
சைபீரியாவில் சிறைப்பட்டுக் கிடந்தோமே? அதை எழுதலாமா? இல்லை. அதையும் முன்பே எழுதியாகிவிட்டது.
அந்த ‘சகோதரர்கள்’ பற்றிய கதை! மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதை எழுதினால் என்ன? ஹூஹூம்…அதை முப்பது நாட்களில் எழுத முடியாது. குறைந்தது மூன்று ஆண்டுகள் தேவைப்படும்.
பிறகு எதைத்தான் எழுதுவது?
தஸ்தயேவஸ்கிக்கு நேரம் செல்லச் செல்லப் பதற்றம் கூடியது. வாழ்க்கையில் இப்படியொரு நெருக்கடியை அவர் சந்தித்ததே இல்லை.
பாழாய் போன சூது. அதுவரை சம்பாதித்த பணத்தையெல்லாம் சுருட்டி வாரிக் கொண்டது.
சிங்கிள் டீக்குக்கூட வழியில்லாமல் தாடியைத் தடவிக் கொண்டிருந்தார் தஸ்தயேவஸ்கி.
‘சூது… சூது…’
அட…! பேசாமல் இந்தச் சூதாட்டம் பற்றியே எழுதினால் என்ன? நமக்குத்தான் நிறைய அனுபவங்கள் இருக்கிறதே!
தஸ்தயேவஸ்கியின் முகத்தில் புன்சிரிப்பு.
பரபரவென்று வேலையை ஆரம்பித்தார். உதவிக்கு அன்னா என்ற பெண்ணை நியமித்தார். தஸ்தயேவஸ்கி சொல்லச் சொல்ல அன்னா எழுத வேண்டும்.
இரவும் பகலும் மாறி மாறி வந்து போவது மட்டும் தெரிந்தது. நிர்பந்திக்கப்பட்ட தேதிக்கு முன்பே மொத்த நாவலையும் எழுதி முடித்துவிட்டார் தஸ்தயேவஸ்கி. அதாவது இருபத்து ஆறு நாட்களில்!
இப்படி அவசர அவசரமாக 1866-ல் தஸ்தயேவஸ்கி எழுதிய நாவல்தான் ‘சூதாடி (The Gambler)’. தஸ்தயேவஸ்கி நாவல்களுள் மிகவும் தனித்துவமானது. உலகப் புகழ் பெற்றது.
தஸ்தயேவஸ்கி. தாஸ்தாயெவ்ஸ்கி. தஸ்தாயெவெஸ்கி. எப்படி வேண்டுமானாலும் நீங்கள் அவரை அழைக்கலாம். ஆனால் இந்த ‘விஸ்கி’ தந்த இலக்கியப் போதையிலிருந்து இன்னமும் பலர் தெளியவில்லை என்பதே உண்மை.
ஆம்… தஸ்தயேவஸ்கி, இலக்கிய உலகின் பிதாமகன். ரஷ்ய இலக்கியத்தை உலகெங்கிலும் பரப்பிய ‘கொரானா வைரஸ்’. பத்தொன்பதாம் நூற்றாண்டின் அடையாளங்களுள் ஒருவர்.
ஆனால் அவருக்கிருந்த சூதாட்டப் பழக்கம், ‘ரங்கராட்டினம்’ போல அவருடைய வாழ்க்கையை மேலும் கீழுமாக அலைக்கழித்து அல்லல்படுத்தியது. இதனால் பல்வேறு உளவியல் சிக்கல்களுக்கு ஆளானார் தஸ்தயேவஸ்கி.
வெறும் ‘பழக்கம்’ என்றளவில் இல்லாமல், சூதாட்டத்திற்குக் கிட்டத்தட்ட அடிமையாகவே இருந்தார் தஸ்தயேவஸ்கி. இதன்மூலம் அவர் சந்தித்த உளவியல் சிக்கல்கள் என்னென்ன? சூதாட்டம் அவருடைய படைப்புகளில் எவ்வாறு பிரதிபலித்தன?
பார்ப்போம்…
0
அக்டோபர் 30, 1821. மாஸ்கோ, ரஷ்யா.
மனைவி மரியா, பிரசவ வலியில் இருக்கும்போது கணவரான மிக்கைல் என்ன செய்ய வேண்டும்?
குறுக்க மறுக்க நடக்க வேண்டும். கைகளைப் பிசைந்தபடி மருத்துவரின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம், பதற்றத்துடன் முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா?
ஆனால் தஸ்தயேவஸ்கி பிறந்தபோது, இவை எதையும் மிக்கைல் செய்யவில்லை. ஏனெனில் அவரே ஒரு மருத்துவர்தான். அதுமட்டுமல்ல, அவர் வேலை பார்த்த இடத்தில்தான் தஸ்தயேவஸ்கி பிறந்தார்.
மிக்கைல், மிகவும் கண்டிப்பு மிக்கவர். தந்தையைக் கண்டாலே ஏழடி தூரம் தள்ளி நிற்பது தஸ்தயேவஸ்கியின் வழக்கம். ஆனாலும் மிக்கைல், பிள்ளைகளை நேசிக்காதவரல்ல. சுமாராகப் படிக்கும் தஸ்தயேவஸ்கியின் எதிர்காலம் குறித்த கவலை அவருக்கிருந்தது.
ஆனால் மரியா அப்படியல்ல. ‘இந்த ஆணி போய், ஆடி போய், ஆவணி வந்தா அவன் டாப்பா வருவான்…’ என்று ஊக்கப்படுத்தும் ‘தமிழ் சினிமா’ அம்மா டைப். சிறுவயது முதலே அம்மா பிள்ளையாகத் தான் வளர்ந்தார் தஸ்தயேவஸ்கி.
தந்தை ஒரு மருத்துவராக இருந்தாலும், தஸ்தயேவஸ்கியின் குடும்பம் வறுமையின் பிடியில்தான் இருந்தது. கூடவே, விதவிதமான நோய்களும் அவ்வபோது வீட்டின் கதவைத் தட்டின.
காசநோய் தீவிரமடைந்து மரியா இறந்தபோது, தஸ்தயேவஸ்கியின் வயது பதினாறு மட்டுமே. அடுத்த இரண்டே ஆண்டுகளில் மர்மமான முறையில் மிக்கைலும் இறந்துவிட, உடன்பிறந்தவர்களே தஸ்தயேவஸ்கிக்கு உறுதுணையாக இருந்தனர்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த தஸ்தயேவஸ்கி, பாடப் புத்தகங்களைவிட ரஷ்ய இலக்கியங்களைத்தான் விரும்பி வாசித்தார். எழுத்தாளர் நிக்கோலை கோகோலைத் தன்னுடைய வழிகாட்டியாக எடுத்துக் கொண்டார்.
1847-ல் எப்படியோ இன்ஜினியரிங் படிப்பை முடித்தார் தஸ்தயேவஸ்கி. கிட்டத்தட்ட அந்த நேரத்தில்தான், தஸ்தயேவஸ்கியின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான சம்பவம் அரங்கேறியது.
0
பாவப்பட்டவர்கள் (Poor Folk), வெண்ணிற இரவுகள் (White Nights) போன்ற நாவல்களை எழுதி ஓரளவுக்குப் புகழ் பெற்றிருந்த தஸ்தயேவஸ்கி, புரட்சிகர சோசலிஸ்ட்டாகிய பெத்ரஷேவ்ஸ்கியின் முற்போக்குக் கூட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்தார்.
தடை செய்யப்பட்ட குழு ஒன்றில் இணைந்து…கைதாகி…மரண தண்டனை விதிக்கப்பட்டு…
தஸ்தயேவஸ்கியின் இந்த வாழ்க்கைப் பகுதியை மட்டும் படமாக்கினால், நெட்பிளிக்ஸில் நல்ல விலை போகும்!
‘அண்ணே…உங்கள் எழுத்து சேவை, இந்த நாட்டுக்குத் தேவை…’ என்று ‘விதி’ நினைத்ததோ என்னவோ, மரணத்தின் அகண்ட கைகளுக்குள் சென்று, கடைசி தருணத்தில் நழுவிக்கொண்டார் தஸ்தயேவஸ்கி.
‘நான் செத்துப் பொழச்சவன்டா…எமனை பாத்து சிரிச்சவன்டா…’ என்று சைபீரிய சிறையில் நான்கு ஆண்டுகள் பாடிக்கொண்டிருந்த அவருக்கு, மேலும் நான்கு ஆண்டுகள் சைபீரிய ராணுவப் படையில் வேலை காத்திருந்தது.
இப்படியே 1850 முதல் 1858 வரை, எட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. சிறை அனுபவங்களைக் கொண்டு பின்பு அவர் எழுதிய புத்தகம்தான், மரண வீட்டின் குறிப்புகள் (The House of the Dead).
இப்படி வறுமை, வெறுமை, நோய், ஜெயில் என ‘உள்ளூர் ரோடு’ போல் இருந்த தஸ்தயேவஸ்கியின் வாழ்க்கை, கொஞ்சம் கொஞ்சமாக ‘நேஷனல் ஹைவே’ மீது ஏறத் தொடங்கியது.
மரியா.
அவளைப் பார்த்த உடனே தஸ்தயேவஸ்கிக்கு பிடித்துவிட்டது. அம்மாவின் அதே பெயர். கண்களில் அவ்வளவு அன்பு. உடலில் அவ்வளவு செழுமை. ஆனால் அவளை அடையச் சில பிரச்சினைகள் இருந்தன.
அவளுக்கு ஒரே ஒருமுறை திருமணம் ஆகியிருந்தது. ஒரே ஒரு கணவர் இருந்தார். ஒரே ஒரு மகனும் இருந்தான்!
அதனால் என்ன? ‘இவள்’தான் என்னுடைய ‘அவள்’ என்று தஸ்தயேவஸ்கி எப்போதோ முடிவு செய்து விட்டார்.
அதற்கேற்ப மரியாவின் முதல் கணவரும் இறந்துவிட 1857-ல் மரியாவைத் திருமணம் செய்துகொண்டார் தஸ்தயேவஸ்கி. ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. 1864-ல் மரியாவும் அதே காசநோய் பாதிப்பால் இறந்து போகிறார்.
புத்தக வியாபாரிகள், அவருக்கு வரவேண்டிய ராயல்டி தொகையைத் தராமல் இழுத்தடித்தனர். கடன் கொடுத்தவர்கள், பணத்தைத் திரும்பக் கேட்டு நச்சரித்தனர். வளர்ப்பு மகன் வேறு ஒருபக்கம் தன் பங்குக்குக் குடைச்சல் கொடுத்தான். தஸ்தயேவஸ்கிக்கு அடி மேல் அடி!
இப்போது என்ன செய்வது?
பணம் சம்பாதிக்க வேண்டும். அதுவும் விரைவில். விரைவில் அல்ல, ஒரே நாளில். ஒரே நாளில் எப்படி? இருக்கவே இருக்கிறது சூதாட்டம்.
தஸ்தயேவஸ்கியின் சூதாட்டப் பழக்கம் இப்படித்தான் ஆரம்பித்தது. எல்லோரையும் போலவே பணத்துக்காக விளையாட ஆரம்பித்து, இருக்கும் கொஞ்சம் பணத்தையும் இழக்க ஆரம்பித்தார் தஸ்தயேவஸ்கி. நாட்கள் செல்லச் செல்லச் சூதாட்டம் மட்டுமே கதி என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தீவிரமாக அவர் சூதாடியிருப்பது தெரிகிறது.
அந்த நேரத்தில், பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தார் அவர். அதில் ஒன்றுதான், நாம் முன்னுரையில் பார்த்தது. அதாவது ஒரு நாவல் எழுதிச் சம்பாதிப்பதற்காகத் தன்னுடைய மொத்தப் படைப்புகளையும் அடமானம் வைத்தார் தஸ்தயேவஸ்கி.
0
‘மை டியர் அன்னா. என்னை மன்னித்து விடு. நான் தவறு செய்துவிட்டேன். நீ அனுப்பி வைத்த எல்லாவற்றையும் நான் இழந்துவிட்டேன். இனி உன் முகத்தில் நான் எப்படி முழிப்பேன்? என்மீது நீ வைத்திருந்த நம்பிக்கையைக் கெடுத்துவிட்டேனே! இதை நினைத்து நான் மிகவும் கவலை கொள்கிறேன். என்னை முழுமையாகத் தண்டிக்காதே! சூதாட்டத்தை நான் முற்றிலுமாக வெறுக்கிறேன்.
ஆரம்பத்தில் கொஞ்சம் பணத்தைத்தான் இழந்தேன். ஆனால் தொடர்ந்து இழக்கத் தொடங்கியதும், அதை மீட்டெடுக்க நிறைய விளையாடத் தொடங்கினேன். இன்னும் அதிகமாக இழந்தேன். தயவுசெய்து உடனே என் பயணச் செலவுக்குச் சிறிது பணம் அனுப்பு…’
மனைவி அன்னாவுக்கு தஸ்தயேவஸ்கி எழுதிய கடிதம் இது.
அன்னா – பெயரை எங்கேயோ கேள்விப்பட்டதுபோல இருக்கிறதா? ‘சூதாடி’ நாவல் எழுதும்போது ஒரு பெண்ணை உதவிக்கு நியமித்தாரே! அதே அன்னாவைத்தான் இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார் தஸ்தயேவஸ்கி.
கடிதத்தின் இறுதியில், ‘பணம் அனுப்பு…’ என்கிறார். அது கண்டிப்பாகப் பயணச் செலவுக்காக இருந்திருக்காது அல்லவா?!
0
சரி, விஷயத்துக்கு வருவோம்.
சூதாட்டம் உளவியல் சிக்கல்களை உண்டுபண்ணுமா?
அட…சூதாட்டமே ஓர் உளவியல் சிக்கல்தான்.
புகையிலை, மது, கஞ்சா போன்ற போதை வஸ்துக்களுக்கு அடிமையாவது போன்றுதான் இந்தச் சூதாட்டமும். மற்றவை, மனநலனுடன் சேர்த்து உடல்நலத்தையும் கெடுக்கும். சூதாட்டம், மனநலத்தைக் கெடுப்பதோடு நின்றுவிடும். அவ்வளவுதான் வித்தியாசம்.
நம் மூளையின் ஓரத்தில் ‘ரிவார்ட் பாத்வே (Reward Pathway)’ எனும் சமாச்சாரம் ஒன்று இருக்கிறது. அளவற்ற மகிழ்ச்சியின்போது அது உயிர் பெறும். உயிர்பெறும் போதெல்லாம், தன்னுடைய தோஸ்த்தான ‘டோபமைன்’ எனும் ஹார்மோனையும் கூடவே அழைத்து வரும். இந்த இரண்டு ஆசாமிகள்தான் எல்லாவிதமான போதைகளுக்கும் காரணமாக இருப்பவர்கள். (உண்மையில் நம்மூர் மதுப் பிரியர்களின் மனைவிகள், ‘என் குடிய கெடுத்துட்டிங்களே டா…’ என்று இந்த இரண்டு ஆசாமிகளைத் தான் கேள்வி கேட்க வேண்டும்!)
ஒரு சூதாட்ட அடிமை, ‘இதுல அப்படி என்ன தான் இருக்கு…’ என்று பரிசோதிக்கவே முதலில் விளையாட ஆரம்பிப்பான். சிலமுறை ஜெயித்து பணம் பார்க்கும் அவனுக்கு, சூதாட்டம் ஒரு உத்வேகத்தைத் தரும்.
‘சீக்கிரம் பணம் சம்பாரிச்சா, சீக்கிரம் கடனை அடைக்கலாம்…’ என்கிற எண்ணம், மேலும் மேலும் விளையாட வைக்கும்.
முதலில் கையில் இருக்கும் பணம் போகும். பிறகு சேமிப்பு. அடுத்து வீட்டில் இருக்கும் பொருட்கள். கடைசியாக மனைவியின் தாலி.
தஸ்தயேவஸ்கிக்கும் சாட்சாத் இதேதான் நடந்தது. ரஷ்யா என்பதால் தாலிக்கு பதில் மோதிரம்!
சூதாட்டம் ஒரு பு(போ)தைக்குழி. அதில் விழுந்துவிட்டால் மேலேறி வருவது சிரமம். எவ்வளவுதான் மேலே ஏற முயற்சி செய்தாலும், ஒருவனை அது கீழேதான் தள்ளிவிட பார்க்கும். தஸ்தயேவஸ்கியை அது கீழே மட்டும் தள்ளவில்லை. தீவிர மன அழுத்தத்திற்கும் தள்ளியது.
மன அழுத்தம் எனும் ஏணியில் ஏறும்போதெல்லாம், வலிப்பு நோய் பாம்புபோல கீழே இறங்கி தஸ்தயேவஸ்கியின் கால்களைச் சுற்றிக்கொள்ளும்!
பொதுவாக வலிப்பு உண்டாகும்போது, சுற்றி நடக்கும் எந்த விஷயமும் தெரியாது. அதாவது சுயநினைவை இழந்து விடுவர். ஆனால் தஸ்தயேவஸ்கி, தனக்கிருந்த வலிப்பு நோய் பற்றித் தெளிவாக எழுதியிருக்கிறார்.
‘தி இடியட்’ நாவலின் நாயகன் மிஷ்கினுக்கு அடிக்கடி வலிப்பு உண்டாகிறது. வலிப்பின்போது அவனக்கு இருக்கும் மனநிலையை மிகத் துல்லியமாக பதிவு செய்கிறார் தஸ்தயேவஸ்கி. இவை அவருடைய சொந்த அனுபவங்கள் என்றே கூறப்படுகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில் தஸ்தயேவஸ்கிக்கு இருந்தது வலிப்பு நோயே இல்லை எனலாம்.
‘Pseudo Seizures’ எனப்படும் பொய்யான வலிப்பு நோயாக அது இருந்திருக்கலாம். இது ஒரு உளவியல் சிக்கல் ஆகும். மன அழுத்தத்தால் ஏற்படுவது. தஸ்தயேவஸ்கிக்கு முதன் முதலில் அவருடைய தந்தை இறந்தபோது வந்திருக்கிறது. பின்பு ஒவ்வொரு முறையும் மன அழுத்தம் தீவிரம் கொள்ளும்போது வந்திருக்கிறது.
தஸ்தயேவஸ்கிக்கு இருந்த உளவியல் சிக்கல்களுக்கு, அவர் எவ்விதமான
சிகிச்சையும் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. அவருக்கு இருந்த ஒரே சிகிச்சை அன்னா. அன்னாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு, சூதாடுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டார் தஸ்தயேவஸ்கி.
0
மனிதர்களின் மனநிலையை அப்பட்டமாக எழுத்தின் மூலம் உலகுக்குக் கொண்டுவந்த தஸ்தயேவஸ்கி, 1881-ம் ஆண்டு பிப்ரவரி 9-ல் நுரையீரல் பாதிப்பால் இறந்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பேர் கலந்துகொண்டனர்.
சாகும்வரை தஸ்தயேவஸ்கியின் கூடவே இருந்தார் அன்னா. அதுமட்டுமின்றி, தஸ்தயேவஸ்கியின் எல்லாப் படைப்புகளையும் தொகுத்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், தஸ்தயேவஸ்கிக்கு மியூசியம் ஒன்றை உருவாக்கினார். இப்போதும் அது செயல்பட்டு வருகிறது.
தஸ்தயேவஸ்கி வாழ்ந்த காலத்தில் சூதாட்டம் என்பது மக்களின் கலாச்சாரத்தோடு கலந்து இருந்தது. சூதாட்டத்தைப் பெருமையாக அவர்கள் எண்ணினர். ஆனால் இன்று சூதாட்டம் ஓர் உளவியல் பிரச்சினை. ‘Gambling Disorder’ என்று பெயர் வைத்து தனியாக அதற்கு வைத்தியம் பார்க்கிறார்கள். ஒருவேளை தஸ்தயேவஸ்கி இப்போது பிறந்திருந்தால், இந்நேரம் ஏதோவொரு உளவியல் மருத்துவரின் அப்பாயிண்ட்மெண்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருப்பார். என்ன, உலகமே கொண்டாடும் அவருடைய படைப்புகள் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம்!
இறுதியாக…
‘தஸ்தயேவஸ்கியை வாசிப்பது என்பது பதற்றமுற்ற மனிதன் ஒருவனுடன் கை குலுக்குவது போன்றது…’ என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். தஸ்தயேவஸ்கியைப் பற்றி வாசித்தபோதும் அப்படித்தான் இருந்தது.
(தொடரும்)