‘யார் அது?’
‘நான் தான்…’
‘நான் என்றால்…? உனக்கு பெயர் இல்லையா?’
‘என் பெயர் வின்சென்ட் வான்கோ.’
‘அது என்னுடைய பெயர்.’
‘என்னுடைய பெயரும் அதுதான்.’
‘விளையாடாதே… உனக்கு இப்போது என்ன வேண்டும்?’
‘நீ தான்.’
‘நானா?’
‘ஆம்…’
‘நீ என்னுடைய ஓவியங்களைக் கேட்கிறாயா?’
‘உன் உப்பு சப்பில்லாத ஓவியங்கள் யாருக்கு வேண்டும்?’
‘பிறகு?’
‘நீதான் எனக்கு வேண்டும்.’
‘தெளிவாகச் சொல்.’
‘ஹாஹா… புரியவில்லையா? நீ என்றால், உன்னுடைய உயிர். உன்னுடைய உயிர்தான் எனக்கு வேண்டும்…’
வான்கோவுக்கு மட்டுமே கேட்ட அந்த மாயக் குரல், அவருடைய உயிரைக் குடிப்பதிலேயே குறியாக இருந்தது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவர், ‘என்னுடைய உயிர்தானே உனக்கு வேண்டும்? இதோ…எடுத்துக் கொள்…’ என ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருடைய வயது முப்பது ஏழு!
‘ஓவியத்துறையின் ஒரிஜினல் தாதா’ என்று இப்போது கொண்டாடப்படும் வான்கோ, வாழ்ந்த காலத்தில் அதற்குண்டான எந்தப் பலனையும் அனுபவிக்காமலேயே இறந்து போனார். இன்று கோடிக் கணக்கில் விலை போகும் அவருடைய ஓவியங்கள், வரையப்பட்ட நேரத்தில் ஒன்றுகூட விலை போகாமல் வீட்டில் முடங்கிக் கிடந்தது காலத்தின் முரண்!
தீவிர உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சாகும் வரை ஓவியங்கள் வரைவதை மட்டும் நிறுத்தவே இல்லை.
முகத்தில் சோக ரேகைகள் ஓடும், வான்கோவின் ‘Self Portrait’ ஓவியங்களை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அவையெல்லாம், இறுக்கமான மனச் சூழலில் அவர் வரைந்ததே!
சரி, யார் இந்த வான்கோ? அவருக்கிருந்த உளவியல் சிக்கல்கள் என்னென்ன? அவை, அவர் வரைந்த ஓவியங்களில் எவ்வாறு பிரதிபலித்தன?
பார்ப்போம்…
0
வான்கோவின் முழுப்பெயர், ‘வின்சென்ட் வில்லியம் வான்கோ’.
மார்ச் 30, 1853 அன்று நெதர்லாந்தின் ஒரு சிறிய கிராமத்தில் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறக்கிறார் வான்கோ.
தியோவைச் சேர்த்து அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஐந்து பேர். வான்கோவின் தந்தை ஒரு பாதிரியார்.
தன்னுடைய பதினாறாவது வயதில், உறவினர் ஒருவருடன் இணைந்து ஓவியங்கள் விற்கும் தொழிலை மேற்கொண்டார் வான்கோ. அதுவே பின்னாளில் அவருக்கு ஓவியங்கள் மீது ஈர்ப்பு வரக் காரணமாக அமைந்தது.
தம்பி தியோவின் உதவியுடன் ஓவியம் பயின்றார். அவர் வரைந்த ஓவியங்களை எப்படியாவது நல்ல விலைக்கு விற்று விட வேண்டும் என்பது மட்டுமே தியோவின் முழு நேர வேலையாக இருந்தது. அன்பின் வெளிப்பாடாக இருவரும் பரிமாறிக் கொண்ட கடிதங்கள், இன்றும் உலகப் புகழ் பெற்றவை.
ஓவியக் கலையில் வான்கோவுக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அந்நாளில் பிரபலமாய் இருந்த பல ஓவியர்களிடம் வான்கோவை நட்பு பாராட்ட வைத்தார் தியோ. அதில் ஒருவர்தான் புகழ்பெற்ற ஃப்ரெஞ்ச் ஓவியரான பால் காகின்.
வான்கோவுக்கும் காகினுக்கும் இருந்த நட்பு வினோதமானது. 1888-ம் ஆண்டு ஃப்ரான்ஸில் சந்தித்துக் கொண்ட இவர்கள், இரண்டே மாதங்களில் தங்களுடைய நட்பை முறித்துக் கொண்டனர்.
இந்தக் காலகட்டத்தில் தான் வான்கோவின் உளவியல் சிக்கல்கள் மெல்ல எட்டிப்பார்த்தன. மித மிஞ்சிய குடிப்பழக்கம், அச்சிக்கல்களை மேலும் தீவிரப்படுத்தின.
வான்கோவின் சிந்தனைகள், நிலையில்லாமல் தத்தளித்தன. கவனச் சிதைவு உண்டானது. காதில் யாரோ பேசுவது போன்ற மாயக்குரல் ஒலித்தது. எளிதில் கோபமுற்றார். தூக்கமின்றித் தவித்தார்.
சின்னச் சின்ன ஏமாற்றங்களையும் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கோபத்தையும் அழுகையையும் மாறி மாறி வெளிப்படுத்தினார்.
இவையெல்லாம் ‘சீசோஃப்ரேனியா’ எனப்படும் மனச்சிதைவின் வெளிப்பாடே!
டிசம்பர் 24, 1888.
வான்கோவின் மனச்சிதைவு, உச்சத்தை எட்டிய ஒரு சம்பவம் அரங்கேறியது.
ஆம்…வான்கோவை விட்டு வெளியேற வேண்டும் என்கிற எண்ணத்துடன் இருந்தார் காகின். ஏதோ ஒரு வாக்குவாதத்தில் இருவருக்கும் சண்டை முற்றியது. சண்டையின் முடிவில், காகினின் முகத்தைக் கண்ணாடிக் கோப்பைக் கொண்டு காயப் படுத்தினார் வான்கோ.
அன்று இரவே கூரிய கத்தியைக் கொண்டு, தன்னுடைய இடது பக்கக் காதை தானே அறுத்துக் கொண்டார். அறுபட்ட காதை, தனக்கு மிகவும் பிடித்த விலைமாதுவான ரேச்சலிடம் கொண்டு போய் கொடுத்தார்!
தன்னுடைய காதை தானே அறுத்து, அதை ஒரு பெண்ணுக்குப் பரிசாகக் கொடுத்த ஒரு சம்பவம் வரலாற்றில் வேறெங்கும் நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை.
மூன்று வாரங்களுக்குப் பிறகு தலையில் கட்டுடன் இருக்கும் தன் முகத்தை, தானே அவர் வரைந்த ஓவியம் பிரபலமான ஒன்று.
மனச்சிதைவால் பாதிக்கப்பட்டு தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளும் நோயின் பெயர், ‘Von Gogh Syndrome’. இப்பெயர் உருவாகக் காரணமாக இருந்தது இந்நிகழ்வே!
0
வான்கோவுக்கு இருந்த உளவியல் சிக்கல்கள் குறித்துப் பல உளவியல் நிபுணர்கள் பலவிதமாக எழுதியுள்ளனர்.
2016ஆம் ஆண்டு நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் வான்கோ அருங்காட்சியகத்தில், வான்கோவுக்கு இருந்த உளவியல் சிக்கல்கள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இருபதுக்கும் மேற்பட்ட உள்வியல் மருத்துவர்கள் அதில் கலந்து கொண்டனர்.
தன்னுடைய இருபதாவது வயதில் ஏற்பட்ட ஒரு பெண்ணின் நிராகரிப்பு, வான்கோவின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. மன அழுத்தத்தில் சில நாட்கள் இருந்திருக்கிறார். பின்பு அதிலிருந்து விடுபட்டு, ஓவியங்கள் வரைவதில் கவனம் செலுத்தினார்.
ஆனால் குடிப்பழக்கம், பண நெருக்கடி, தனிமை என ‘சூழ்நிலை’ சார்ந்த விஷயங்கள், அவரை மீண்டும் மன அழுத்தத்திற்குத் தள்ளியது. மன அழுத்தம் மனச் சிதைவாக உருமாறியது. 1889 சமயத்தில், தியோவின் உதவியுடன் ஃப்ரான்ஸில் உள்ள, ‘சென்ட் ரெமி’ எனும் மனநல விடுதியில் சேர்ந்தார் வான்கோ.
சில மாதங்கள் உள் நோயாளியாகத் தங்கியிருந்த அவர் எழுதிய கடிதங்களும், வரைந்த ஓவியங்களும் உலகப் புகழ் பெற்றவை. அதில் ஒன்று தான் ‘The Starry Night’ ஓவியம்.
வான்கோவின் ஓவியங்களுள், ‘The Starry Night’ ஓவியம் முக்கியமானது. இந்த ஓவியம், இன்று நியூயார்க் மார்டன் மியூசியத்தில் உள்ளது.
‘The Starry Night’ ஓவியம், விழித்திருப்பவனின் இரவைப் படம் பிடித்துக் காட்டுகிறது. வான்கோவின் இரவைப் பிரதிபலிக்கிறது.
வான்கோவின் இரவு நீண்டது. அடர்த்தியானது. தனிமை சூழ்ந்தது. இருளில் மூழ்கிக் கிடக்கும் நிழலைப் போல உருவமற்றது.
ஓவியத்திற்கு வருவோம்…
கடல் அலைகள்போலப் பொங்கியெழும் அடர் நீல மேகங்கள், வான்கோவின் வெறுமையான மனநிலையைக் காட்டுகிறது. மஞ்சள் நிற நட்சத்திரங்களும், அதிலிருந்து பீறிடும் கதிர்களும் அவருடைய குழப்பமான மனநிலையைக் காட்டுகின்றன.
கீழே சிறு பகுதியாக மட்டுமே வரையப்பட்டிருக்கும் கிராமப்புற வீடுகள், அவர் மனதின் ஏதோ ஒரு மூலையில் மிச்சமாக ஒட்டிக் கிடக்கும் அமைதியைக் குறிக்கின்றன.
வான் உயர வளர்ந்து நிற்கும் ‘சைப்ரஸ்’ தாவரம், ஓவியத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது. சைப்ரஸ் தாவரத்தை மரண சடங்கில் பயன்படுத்துவார்கள்.
எனில், இவ்வோயிம் மரணத்தின் குறியீடா?
அமெரிக்காவைச் சேர்ந்த மூளை சிகிச்சை மருத்துவக் குழு ஒன்று, ‘The Neuro Anatomical Interpretation of The Painting – Starry Night’ என்ற பெயரில் ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள்.
அதில், ‘The Starry Night’ ஓவியத்தை மனித மூளையுடன் ஒப்பிடுகிறார்கள்!
மூளையில் உள்ள ‘ஹிப்போகாம்பஸ்’ எனும் பகுதி, ‘The Starry Night’ ஓவியத்துடன் ஒத்துப்போகிறது என்ற அவர்களுடைய ஆராய்ச்சி தனித்துவமானது. மேலும், ஓவியத்தில் உள்ள நட்சத்திரங்களை, மூளையின் முக்கிய ரத்தக்குழாய்களோடு ஒப்பிடுகிறார்கள்.
வான்கோ, தன்னுடைய ஆழ் மனதின் வழியாக, தன்னை அறியாமலேயே இந்த ஓவியத்தை மனித மூளையோடு ஒத்து வரைந்திருக்கிறார் என இக்கட்டுரை கூறுவது வியப்பே!
வான்கோவின் பெரும்பாலான ஓவியங்கள், மஞ்சள் நிறத்தில் வரையப்பட்டிருக்கும்.
தனது பிரதான நிறமாக மஞ்சள் நிறத்தை ஏன் அவர் தேர்ந்தெடுக்க வேண்டும்?
‘Creativity and Chronic Disease of Vincent Van Gogh (1853 – 1890)’ எனும் தலைப்பில், பால் வூல்ஃப் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் இதற்கான விடை கிடைக்கிறது.
இரண்டு முக்கியக் காரணங்களை அவர் முன்வைக்கின்றார்.
1. ‘Absinthe’ எனப்படும் ஒரு வகையான மதுவுக்கு அடிமை ஆகியிருந்தார் வான்கோ. அதில் இருக்கும் ‘Thujone’ எனப்படும் சேர்மம், கண் பார்வையைப் பாதிக்கக் கூடியது. அதன் விளைவாகவே அவர் மஞ்சள் நிறத்தில் வரைந்தார்.
2. வான்கோவின் தீராத வலிப்பு நோய்க்கு உதவும் ‘Digitalis’ எனும் மருந்தின் பக்கவிளைவே அவரை மஞ்சள் நிறத்தில் வரைய வைத்தது.
இதில், இரண்டாவது காரணம் ஏற்கும்படியாக இருக்கிறது.
‘Digitalis’, அந்த காலத்தில் வலிப்பு நோய்க்கான முக்கிய மருந்து. ஆனால், பல்வேறு பக்கவிளைவுகளால் அது சிகிச்சை முறையிலிருந்து கைவிடப்பட்டது. அதன் ஒரு பக்கவிளைவு, தான் பார்க்கும் இடமெல்லாம் மஞ்சளாகத் தெரிவது.
வான்கோவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘At Eternity’s Gate (2018)’ திரைப்டத்தின் முக்கியக் காட்சிகள் அனைத்தும், மஞ்சள் நிறப் பின்னணியில்தான் வருகின்றன.
வான்கோ தன்னுடைய இறுதி நாட்களை, பாரிஸிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு கிராமத்தில்தான் கழித்தார். தனியறை ஒன்றில் தங்கியிருந்தார்.
ஜூலை 29, 1890.
வழக்கம்போல தான் தங்கியிருந்த அறையின் அருகில், வழக்கம்போல ஓவியம் வரைந்து கொண்டிருந்தார் வான்கோ.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென ஓவியம் வரைவதை நிறுத்தினார். துப்பாக்கியால் தன்னைத்தானே நெஞ்சுப் பகுதியில் சுட்டுக்கொண்டார். அப்போது அவரைத் தவிர அங்கே வேறு யாரும் இல்லை.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இந்நிகழ்வை ஒரு கட்டுரையில் இப்படி எழுதியிருப்பார்.
‘துப்பாக்கியின் வெடிச்சத்தம் கேட்டுப் பறப்பதற்கு, அங்கே காகங்கள்கூட இல்லை…’
வான்கோவின் உயிர், அந்த இரவு முழுவதும் ஊசலாடிக் கொண்டிருந்தது. பாரிஸில் இருந்து அவரச அவசரமாக தியோ வரவழைக்கப்பட்டார். தியோவின் மடியில் வான்கோவின் உயிர் பிரிந்தது.
சாகும்போது தியோவிடம் அவர் சொன்ன வார்த்தைகள்: ‘எனது துயரங்களில் இருந்து நிரந்தரமாக நான் விடுபடப் போகிறேன்…’
0
இன்று ஓவியக் கலையில் சாதிக்க விரும்புவோர், வான்கோவையே முன்மாதிரியாகக் கொண்டு ஓவியம் வரைய வருகிறார்கள். கலையை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் வான்கோ, ஒரு தவிர்க்க முடியாத பிம்பமாகி இருக்கிறார்.
ஆனால் வாழ்ந்த காலத்தில் அவருக்குத் தன்னுடைய உளவியல் சிக்கல்களுடன் போராடவே நேரம் சரியாக இருந்தது.
வான்கோவின் வாழ்க்கை வரலாறை, ‘Lust For Life’ என்ற பெயரில் இர்விங் ஸ்டோன் புத்தகமாக எழுதியிருக்கிறார்.
இன்றும், ‘The Starry Night’ ஓவியத்தை முன்வைத்து பற்பல கோட்பாடுகள் வெளியாகின்றன. ‘Sunflowers’, ‘The Potato Eaters’, ‘Wheatfield With Crows’ போன்ற அவருடைய மற்ற ஓவியங்களும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுகின்றன.
எல்லா ஓவியங்களிலும் அந்த மஞ்சள் வண்ணத்தின் பின்னே ஒளிந்து கொண்டு நம்மைப் பார்த்து அவர் கண் அசைப்பது போலவே உள்ளது.
(தொடரும்)