Skip to content
Home » சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #2 – உறை கணத்தோடு இணைந்த மறைகணம் காலக்கோடு

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #2 – உறை கணத்தோடு இணைந்த மறைகணம் காலக்கோடு

சிங்கை வரலாற்றின் காலக்கோடு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. பத்து, பதினோராம் நூற்றாண்டில் பரகேசரி, திரிபுவன சக்கரவர்த்தி மாமன்னன் இராசேந்திர சோழனின் காலம், பதினான்காம் நூற்றாண்டில் ஸ்ரீ திரிபுவன நீல உத்தமன் காலம், பதினெட்டாம் நூற்றாண்டின் சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸின் காலம், இறுதியாக உச்ச நட்சத்திரமான ஆசியாவின் மாபெரும் சுடர்த்தலைவர்களில் ஒருவரான திரு லீ க்வான் யூ அவர்கள் வடிவமைத்த இருபதாம் நூற்றாண்டின் சிங்கப்பூர் – இவையே சிங்கப்பூர் வரலாற்றின் முக்கியமான காலக்கோட்டின் வரையறைகள்.

நவீன சிங்கப்பூரின் வளர்ச்சி கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக ராஃபில்ஸ் மேற்கொண்டதுதான். அதற்கு முன்னர் ஆயிரம் ஆண்டுகளில் அரசர் பரமேசுவர வர்மன், திரிபுவன நீல உத்தமன் போன்றவர்களின் காலங்களும் குறிப்பிடத்தகுந்தவை. ஆனால் அவர்களது சிங்கப்பூர் தொடர்பான பொருண்மையின் விளைவு, தமிழ் மாமன்னன் இராசேந்திர சோழன் ஆட்சி வழியாகவே வந்திருக்க இயலும் என்ற பார்வையையும் நாம் வலுவாகச் சிந்திக்க வேண்டும். இந்தத் தொடர்பு ஒரு மறைகணமாக சிங்கப்பூர் வரலாற்றில் கருதத்தக்கது.

முதலாம் இராசேந்திரன் தொடர்பு

பழந்தமிழ் நாட்டின் சோழர் வரலாறு நமக்குத் தெரியும். சோழர் வரலாறு முற்காலச் சோழர் வரலாறு, பிற்காலச் சோழர் வரலாறு என்று இரண்டு காலங்களைக் கொண்டது. முற்காலச் சோழர் வரலாறு பொது யுகம் முன் இரண்டு நூற்றாண்டுகள் தொடங்கி பொதுயுகம் மூன்றாம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ 400 ஆண்டுகள் கொண்டது. பிற்காலச் சோழர் வரலாறு ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றி பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை தேய்ந்து நீண்டது. இருந்தாலும் அதன் உச்சம் பதினோராம் நூற்றாண்டின் மத்தியப்பகுதியே. சோழர் வரலாற்றின் உச்ச நட்சத்திரம் எந்தவித ஐயமும் இன்றி முதலாம் இராசேந்திர சோழனே. அவனது ஆட்சிக் காலத்தில் உச்சத்தி்ல் தமிழகம் தொடங்கி வங்காள விரிகுடாவின் கரையோரப் பிரதேசங்கள் அனைத்தும் (இன்றைய வியட்நாம் வரை) நெடுகி, பின் கீழிறங்கி, இன்றைய மலேசியாவின் முழுப் பகுதி, இன்றைய இந்தோனேசியாவின் முழுப்பகுதி, இன்றைய தாய்லாந்தின் சில பகுதிகள், சீனத்தின் கரை வரையான பகுதிகள் என்று அனைத்தையும் உள்ளடக்கியது.

முதலாம் இராசேந்திர சோழன் காலத்திய ஆட்சிப் பரப்பும், பொறுப்புப் பரப்பும்
முதலாம் இராசேந்திர சோழன் காலத்திய ஆட்சிப் பரப்பும், பொறுப்புப் பரப்பும்

அவனது ஆட்சிக் காலத்தில் ஆட்சி முறைக்காக மூன்று தலைநகரங்கள் இருந்ததாகவும், அவை முறையே கங்கை கொண்ட சோழபுரம் \ தஞ்சை, ஸ்ரீவிஜயம் (இன்றைய பலெம்பாங்), கடாரம் (இன்றைய கெடா) என மூன்று நகரங்களின் வழி இருந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. (1)

மேலும் கடாரம், சாவகம் (இன்றைய சகார்த்தா) போன்ற தீவுகளுடன் பொ.உ. இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது என்பதற்கு இலக்கியச் சான்றுகளும் கிடைக்கின்றன. கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பட்டினப்பாலை நூலில் உள்ள ஒரு செய்யுளில் ஒவ்வொரு நாட்டின் சிறந்த ஆக்கங்களைப் பற்றிய விவரணை வரும்போது, இன்றைய கெடா என்ற அன்றைய காடகம் என்ற காழக நகரின் ஆக்கங்களைப் பற்றிய சிறப்பு சுட்டப்படுவதையும், அந்த நாடுகளோடு தமிழர்களுக்கு வணிக, தொழில் தொடர்பு இருந்ததையும் உறுதிப்படுத்துகிறது.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்,
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்,
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்,(2)
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு

(இந்தப் பட்டினப்பாலை முற்காலச் சோழர்களின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கரிகால்சோழனின் ஆட்சித்திறத்தை விவரித்து எழுதப்பட்ட நூல். இன்னொரு வியக்கத்தக்க ஒற்றுமை, மாமன்னர் இராசேந்திரனைப் போலவே, கரிகால் சோழனுக்கும் கடல்வணிகத்திலும், நாவாய்கள் மூலம் கடல்வழிப் பிரயாணங்கள், வணிகத்தை ஊக்குவிப்பதிலும் பெரும் ஆர்வம் இருந்திருக்கிறது. அவனது காலத்திய சோழநாட்டின் காவிரிப்பூம்பட்டினம் என்ற பூம்புகார் மிகச்சிறந்த துறைமுக நகராக இருந்திருக்கிறது!)

முதலாம் இராசேந்திர சோழனின் புகழ்ப்பெயர்கள் திரிபுவனச் சக்கரவர்த்தி, கோப்பரகேசரிவர்மன், கடாரம் கொண்டான் என்பவையும் ஆகும் என்பதை இங்கு குறித்து வைத்துக் கொண்டு தொடர்வோம். மாமன்னன் இராசேந்திர சோழனின் உச்ச நிலை பொ.உ 1030-1050 வாக்கில் இருந்தது. தான் வென்ற பகுதிகளில் பலவற்றைத் தனது பொறுப்பாளர்களின் பொறுப்பில் அந்தந்த நாடுகளின் அரசவைகளோடு இணைந்து ஆட்சி செய்து கொள்ளும் வண்ணம் ஏற்பாடு செய்து விட்டு, பொது அதிகாரம் தன்னிடம் இருக்குமாறு இந்தத் தென்கிழக்காசியாவின் நாடுகள் அரசமைப்பை மாமன்னன் இராசேந்திரன் அமைத்திருந்தான்.

0

‘சிங்கப்பூர் கல்’ (3)

பொ.உ.1819-ல் இருந்து சர் ஸ்டாம்ஃபோர்ட் ராபிஃல்ஸின் வழிகாட்டுதலில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் பொறுப்பில் இன்றைய சிங்கப்பூர் கைக்கொள்ளப்பட்டது என்று சென்ற பகுதியில் பார்த்தோம். கிழக்கிந்திய கம்பெனி இந்திய, சீனப் பகுதிகளுக்கு இடையேயான ஒரு வணிக மையமாகச் சிங்கப்பூரை மாற்றியமைக்கும் வண்ணம்.

அதனைச் சீரமைத்தது. இதன் ஒரு பகுதியாக 1847-ல் சிங்கப்பூர் ஆற்றின் கரைகளை ஒழுங்குப்படுத்தினார்கள். சிங்கப்பூர் ஆற்றின் கரையில் இருந்த பல கற்பாறைகள் உடைத்து அகற்றப்பட்டன. இவ்வாறு உடைத்து அகற்றப்பட்ட பாறையின் ஒரு பகுதி பின்னர் ஆய்வறிஞர்களின் கைகளில் அகப்பட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகள் என்ன என்று பல வரலாற்று ஆய்வாளர்கள் அறியத் தலைப்பட்டனர்.

அவர்களில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வறிஞர் இயான் சின்கிளேரும் (Ian Sinclair) ஒருவர். அவர் உடைக்கப்பட்ட பாறைக்கல்லின் பொறிப்பு ‘கேசரிக’ என்ற தமிழ்ச்சொல் என்று கண்டறிந்தார். பரகேசரி என்ற சிறப்புப் பெயர் சோழர்களின் சிறப்புப் பெயர். தவிர அந்தப் பாறைக்கல்லின் காலம் ஏறத்தாழப் பதினோராம் நூற்றாண்டு என்றும் கண்டறிந்தார். எனவே அந்தக் கல்வெட்டு சோழ மாமன்னனான இராசேந்திர சோழன் காலத்தில் சிங்கப்பூரில் வெட்டப்பட்டிருக்கலாம் என்ற கண்டுபிடிப்பை முன்வைத்தார். இது பின்னர் சிங்கப்பூர் இந்தியப் பண்பாட்டுக் கழகத்தில் பணி செய்த திருவாட்டி நந்தினி கோபால் அவர்களாலும் இணைவாராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டது.(4) இந்த ‘சிங்கப்பூர் கல்’லின் எச்சங்கள் இன்றைய சிங்கப்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

தமிழர்-சோழர் தொடர்பின் மறைகணம்

வரையறுக்கப்பட்ட வரலாற்றின் படி பதினான்காம் நூற்றாண்டின் சிங்கப்பூர் எழுச்சி திரிபுவன நீல உத்தமன் என்ற அரசன் வழி வருகிறது. இந்த இளவரசன் ஸ்ரீவிஜய நகரத்தைச் சேர்ந்தவன். அப்போதைய சிங்கப்பூர் கரையில் இந்த இளவரசன் சிங்க விலங்கைக் கண்டதாகவும், எனவே சிங்கபுரம் என்ற பெயரில் ஒரு குடியிருப்பை ஏற்படுத்தினார் என்றும் வரலாறு சொல்கிறது. இந்தச் சொற்கள் தமிழ்ச்சொற்கள் என்பதையும், ஸ்ரீவிஜயம் மாமன்னன் பரகேசரி இராசேந்திரன் ஆளுமைக்குப்பட்டதாக பொ.உ.1050க்குப் பிறகு இருந்தது என்பதையும் கருதல் வேண்டும்.

பொ.உ. 1365 எழுதப்பட்ட சாவக இலக்கியமான நகரகிரேத்தாகமா என்ற நூலில் துமாசிக் என்ற தீவில் இருந்த குடியிருப்பு பற்றிய ஒரு குறிப்பு வருகிறது. துமாசிக் என்ற சொல்லின் வேர் சரிவரத் தெளிவாக அறியப்படாவிட்டாலும், தாசிக் என்ற மலாய்ச் சொல்லின் திரிபு என்று கருதப்படுகிறது. தாசிக் (Tasek) என்ற சொல்லுக்குக் கடல் அல்லது ஏரியால் சூழப்பட்ட இடம் என்ற பொருள் உண்டு. இது ஒரு விரிந்த பொருள்கூறலாக இருந்தாலும், வரலாற்றில் இந்தக் குறிப்பும் முக்கியத்துவமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த நீல உத்தமன் உருவாக்கிய சிங்கபுரம், மயாபாகித் என்ற சயாமியர்களால் வெளியேற்றப்படும் வரை மன்னர் பரமேசுவர வர்மனின் ஆட்சிக்காலத்தில் இருந்தது. (1344-1414). இவர் துமாசிக் என்ற இடத்திலிருந்து (சிங்கப்பூர்) வந்து மலாக்கா பிரதேசத்தை உருவாக்கினார். பரமேசுவரன் என்ற மன்னரும் தமிழ் வழி வந்த மன்னராகவே இருக்க வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் பரமேசுவரா என்ற சொல்லே தமிழ்ச்சொல்தான். [5]

இந்தக் கண்டுபிடிப்புகள் சிங்கப்பூர் பகுதி உட்பட்ட மலேசிய, இந்தோனேசிய, தாய்லாந்துப் நிலப்பரப்புகளின் பெரும்பகுதி மாமன்னன் இராசேந்திரன் ஆளுகைக்கு உட்பட்டதாகப் பதினோராம் நூற்றாண்டிலிருந்து, பின்னர் அவரது பிரதிநிதிகள் தமிழ் மன்னர்கள் வழி தொடர்ந்திருக்க வேண்டும் என்ற சாத்தியங்களை முன்வைக்கின்றன. மாமன்னன் இராசேந்திரனின் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் தென்கிழக்காசியப் பகுதிகளை பொ.உ.1050 வாக்கிலும் ஆண்டு கொண்டிருந்தார்கள். இந்தச் சாத்தியங்களின் வாய்ப்புகள் அதிகம் என்று கொண்டு மேற்செல்வோம்.

0

மாமன்னர் இராசராசன் தென்கிழக்காசியப் பகுதியின் பெரும்பகுதியை வென்றபிறகு, தன்னுடைய வழித்தோன்றல்கள் உறுதியாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் வண்ணம் ஆட்சியை நிலைநிறுத்தியிருந்தால், வட்டாரத்தின் வரலாறு வேறாகவும் இருந்திருக்கக் கூடும். மாறாக சுல்தானிய ஆட்சிப் பொறுப்புகளுக்குள் வந்த மலாக்கா, சிங்கப்பூர் பிரதேசங்கள் 1400களின் மத்தியிலிருந்து, பின்னர் நானூறாண்டுகள் தொடர்ந்து சுல்தானிய ஆட்சிப் பொறுப்புக்குட்பட்ட பிரதேசமாகவே தொடர்ந்தது. இதன்படி சிங்கப்பூர் பகுதி யோகூர் சுல்தானியர்கள் பொறுப்பிற்கு வந்து, சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் 1819-ல் சிங்கப்பூர் கடற்கரைக்கு வரும் வரை அவர்கள் பொறுப்பிலேயே தொடர்ந்தது.

ராஃபில்ஸின் தந்தை பிரித்தானிய கப்பல் தலைவர். ராஃபில்ஸ் பிறந்ததே ஒரு கப்பலில்தான்! அந்தக் கடற்காதல்தான் ராஃபில்ஸுக்கு தனியான கடல்நோக்கைத் தந்திருக்க வேண்டும். வருவதறியும் நுண்ணறிவு கொண்டே அவர் சிங்கப்பூரை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் கேந்திரக் குடியிருப்பு இடமாகத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். சிங்கப்பூரின் கேந்திர முக்கியத்துவத்தை அறியும் ஒரு ஞானக்கண் ராஃபில்ஸுக்கு இருந்தது. சிங்கப்பூரைக் கிழக்கிந்திய கம்பெனிக்காக வாங்கியதோடு மட்டுமல்லாமல், அதனை ஒரு வலுவான கேந்திர வணிகக் குடியிருப்பாகவும் துறைமுகமாகவும் மாற்றும் பல நடவடிக்கைகளை ராஃபில்ஸ் மேற்கொண்டார். அவற்றைப் பற்றி வரும் பகுதிகளில் சிறிது விரித்துப் பார்ப்போம்.

எனவே தொகுக்கப்பட்ட குறிப்புகளிலிருந்து தெரிவது,

1. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கெடா என்ற கடாரம் (கழாகம்), ஸ்ரீவிஜயம் நிலப்பகுதிகளோடு தமிழ் மன்னர்களுக்குத் தொடர்பும் வணிகமும் இருந்திருக்கிறது.

2. பொ.உ 1030 வாக்கில் பரகேசரி, திரிபுவன சக்கரவர்த்தி மாமன்னர் இராசேந்திரன் ஆட்சிப் பொறுப்பில் வருகிறது.

3. பின்னர் நீல உத்தமன், பரமேசுவரன் என்ற பல பெயர்களுடைய மன்னர்கள் சிங்கப்பூரை ஆண்டிருந்தாலும், அவர்கள் மாமன்னன் இராசேந்திர சோழனின் அதிகாரப் பிரதிநிதிகள் வழி வந்தவர்களாகவே இருந்திருக்கக் கூடும். இதற்கான உறுதியான வரலாற்றுச் சான்றுகளை எவரும் தேடிக் கண்டடையவில்லை என்றாலும், இது ஒரு பலமான சாத்தியம்.

4. அதற்கடுத்து யோகர் (Johar) சுல்தான்களின் பொறுப்பில் இருந்த சிங்கப்பூரை 1819-ல் ராஃபில்ஸ் வாங்கியபோது பிரித்தானியர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் பொறுப்புக்கு வந்து, பின்னர் இங்கிலாந்தின் ஆட்சிப் பொறுப்புக்கான காலனியாக மாறியது.

5. காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலையானபோது சிங்கப்பூர், மலேசியாவுடைய பகுதிப் பிரதேசமாக, சுதந்திர நாடாக விடுதலை பெற்றது.

6. எனினும் மலேசியாவுடன் தொடர்ந்து இயங்க முடியாத நிலையில் 1965-ம் ஆண்டில் லீ க்வான் யூவின் தலைமையில் தனிநாடாக ஆகஸ்ட் 9, 1965-ல் மலர்ந்தது. அப்போது நிகழ்ந்த உறைகணத்தைத்தான் முதல் அத்தியாயத்தில் பார்த்தோம்.

சங்க கால சிங்கபுரியின் முக்கியத்துவம் மாமன்னன் இராசேந்திர ஆட்சிக்காலத்தில் இருந்து கிளைத்திருக்கலாம் என்ற சாத்தியத்தையும், நவீன சிங்கப்பூரின் பெருவளர்ச்சி சர் ஸ்டாம்ஃபோர்ட் ராபில்ஸ், பெருந்தலைவர் லீ க்வான் யூ இவர்களின் பார்வையின் வழி முகிழ்ந்தது என்பதையும் இப்போது மனதில் கொள்வோம்.

(தொடரும்)

__________

1. தமிழகத்துக்கும் கழாகம், கடாரம் என்ற கெடா நகரோடு தமிழ்நாட்டுக்கிருந்த வணிகத்தொடர்புக்கான வரலாற்று இலக்கியச் சான்று.

2. Ibid

3. சிங்கப்பூர் கல் – ஒரு வரலாறு ;
சிங்கை நூலக வாரியம் அளிக்கும் செய்தி.

4. சோழ வம்சத்துக்கும் சிங்கப்பூருக்கும் இடையே 1,000 ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு: இயான் சின்கிளேய்ர்

5. மன்னர் பரமேசுவரா, நீல உத்தமன் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்.

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *