Skip to content
Home » சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #3 – துடிப்பாகத் தொடங்கிய ராஃபில்ஸ்

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #3 – துடிப்பாகத் தொடங்கிய ராஃபில்ஸ்

பொ.உ. 18 ,19-ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளின் பெருந்தொழில் நிறுவனங்கள் அரசுகளிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்ததையும், அவர்கள் சொற்படி அரசுகள் முடிவுகள் எடுத்ததை வரலாறு விவரிக்கிறது. ஈஐசி என்ற கிழக்கிந்தியக் கம்பெனி, பிரித்தானிய அரசுக்கான நாடுபிடிக்கும் நடவடிக்கைகளில் பெருந்துணையாக தென்கிழக்காசியப் பகுதியில் இருந்ததும் கண்கூடு. இந்தப் பின்னணியில்தான் ஒவ்வொரு நிலப் பிரதேசத்திலும், தமக்கான தொழிற்கேந்திர இடங்களைப் பிடிக்க இந்தத் தொழில் நிறுவனங்கள் போட்டி போட்டதை சென்ற பகுதியில் பார்த்தோம். தென்கிழக்காசியாவில் இவ்வாறு போட்டியிட்ட தொழில் நிறுவனங்களி்ல் கிழக்கிந்திய நிறுவனமும், டச்சுச் காரர்களும், போர்ச்சுகீசியர்களும் பிரெஞ்சுக்காரர்களும் முக்கியமானவர்கள்.

1800-களின் தொடக்கத்தில் மலாக்கா நீரிணைப் பகுதியில் டச்சுக்காரர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. அக்கடல்பகுதியின் துறைமுகங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தன. கிழக்கிந்திய கம்பெனி வைத்திருந்த பிரித்தானிய இந்தியாவுக்கும் சீனத்துக்கும் இடையில் நடைபெற்ற வணிகப் போக்குவரத்துகளுக்கான வழி, மலாக்கா நீரினைப் பகுதி வழியாகவே சென்றது. இத்துறைமுகங்களைக் கடக்கவும் பயன்படுத்தவும் டச்சுக்காரர்கள் பிரித்தானியக் கலங்களுக்கு மிக அதிக வரி வசூலித்தார்கள்.[1] அவர்களோடு வெளிப்படையாக முரண்டவும் பிரித்தானிய நிறுவனங்களால் இயலாதிருந்தது. ஏனெனில் ஐரோப்பாவில் உட்கண்ட பிரெஞ்சின் ஆதிக்கத்தை சமனப்படுத்துவதற்கு அவர்களுக்கு ஹாலாந்தின் தயவு வேண்டியிருந்தது. எனவே பிரித்தானியர்களும் கிழக்கிந்திய கம்பெனியும் அகலாது அணுகாது டச்சுக்காரர்களைக் கையாள வேண்டியிருந்தது. எனவேதான் கிழக்கிந்திய கம்பெனியை மலாக்கா நீரிணைப்பகுதியில் தனக்கான துறைமுகங்கள், வணிகக்கட்டமைக்குகள் வேண்டும் என்று நினைத்தது.

அதன் விளைவே சென்ற பகுதியில் பார்த்தபடி கிழக்கிந்திய கம்பெனி மலாக்கா, பினாங்கு ஆகிய பகுதிகளை வாங்கி, வணிகக் கட்டமைப்பை நிறுவியதன் காரணம். ஆனால் இந்தக் கட்டமைப்பு எளிதாக நடந்து விடவில்லை. இதற்காக ராஃபில்ஸ் தேர்ந்தெடுத்து அனுப்பப் பட்டபோது, இந்தியப்பகுதியில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) இருந்தவர் மார்க்குவெஸ் ஹாஸ்டிங்ஸ். இவரது காலத்தில்தான் இவரது பதிலியாகவும் (Agent), சுமத்ரா பகுதியின் உதவி ஆளுனராகவும் இருந்த ராஃபில்ஸ் நிலம் தேடி கடற்பயணம் வருகிறார். அவருக்கு யோகர் நிலநீர்ச்சந்தியில் இருந்த மலேயப் பரப்புதான் பிடிக்கிறது. ஆனால் கிழக்கிந்திய கம்பெனி வாங்குகின்ற நிலப்பகுதி டச்சுக்காரர்கள் ஊடுருவி வராத நிலமாக இருக்கவேண்டும் என்றும் அவர் நினைத்தார்; எனவே மேலும் சுற்றிவரும் போதுதான் கழிமுகத்தீவாக இருந்த தெமாஸக் என்றழைக்கப்பட்ட சிங்கப்பூர் நிலப்பரப்பு அவரது கண்ணைக் கவர்நது. காரணம், சிங்கப்பூர் துறைமுகம் கப்பல்கள் வந்து செல்ல ஒரு நல்ல இடமாக அவருக்கும் தோன்றுகிறது.

பலருக்கும் தோன்றாத அது அவருக்குத் தோன்றியதுதான் சிறப்பு. ஏனெனில் அவர் சிங்கப்பூர் கடற்கரையில் கால்பதித்த 1819-க்கு முன்னரே இருநூறு, முந்நூறு ஆண்டுகளாக தென்சீனக் கடல், இந்தியப் பெருங்கடல் இரண்டுக்குமான சந்தியில் இருக்கும் சிங்கப்பூரின் துறைமுகம் ரியாவ், லிங்கா ஆகிய தீவுகளின் நீரால் பாதுகாக்கப்பட்டிருந்ததால், இயல்பான நல்ல ஒரு கவர்ச்சிகரமான துறைமுகமாக விளங்கியது. சீன மரக்கலங்கள், தொழில் மரக்கலங்கள் அல்லது பாய்மரக்கலங்கள் இவை ஏதாக இருப்பினும், வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவக்காற்றுகள் ஒன்றுக்கொன்று மாறும் காலத்தில் பாதுகாப்பாக இருக்க வசதியான துறைமுகமாக சிங்கப்பூர் துறைமுகம் விளங்கியது. இதனைத் தனது நுண்பார்வையில் உணர்ந்ததே ராஃபில்ஸின் திறன்.

ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் போட்டி

1800களில் யோகர் சுல்தானின் பிரதிநிதியாக சாபாண்டார் அல்லது அமைச்சராக இருந்த ஒருவர் துறைமுக அதிகாரியாக சிங்கப்பூரில் இருந்தார். சிங்கப்பூரைச் சுற்றி இருந்த கடல்வழியைப் பயன்படுத்த வரும் மரக்கலங்களிடம் வரி வசூல் செய்வதற்காக அந்த அதிகாரி இருந்தார். 1819-ல் அவ்வாறு சுல்தான் நியமித்திருந்த அதிகாரி, தெமோங்காக் அப்துல் ரகுமான். அப்போது சிங்கப்பூரில் இருந்த மனிதர்கள் எண்ணிக்கை சுமார் 400 பேர். அவர்கள் ஓராங் லாவுட் மற்றும் ஓராங் சிலேத்தார் இனத்தவர்கள் (சிங்கப்பூரில் அப்போது இருந்த சீன மலாய் பழங்குடியினர்) ஆவர்.

ராஃபில்ஸ் சிங்கப்பூர் தீவின் கடற்கரையில் இறங்கியபோது நேரில் பார்த்த வா ஆக்கிம் கூறுவது பின்வருமாறு. ‘அந்தப் படகு காலையில் கரையை அடைந்தது. அதில் இரண்டு வெள்ளையர்களும் ஒரு சிப்பாயும் இருந்தனர். ஒரு வெள்ளையர் சிறிது குள்ளமாக இருந்தார். அவர்கள் கரையில் இறங்கியவுடன் நேரே தெமாங்கோங்கின் வீட்டுக்குச் சென்றனர். அவர்களுக்கு தெமாங்கோங் உபசரிப்பு அளித்தார். ரம்புத்தான் (சிங்கப்பூர், மலாயாப் பகுதிகளில் விளையும் ஒரு வகைப் பழம். சிவப்பு நிறத்தோலுடன் எருக்கங்காய் வடிவத்தில் முள் முனைகள் வெளிப்புறத்தில், உள்ளிருக்கும் சதைப்பகுதி வெண்மையாக இருக்கும்) உள்ளிட்ட பல வகையான பழங்களை அவர்களுக்குக் கொடுத்தார். அந்தச் சிப்பாய் துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தபடி இருந்தார்’. வருணனையில் குள்ளமாக இருப்பதாகச் சொல்லப்படுவபவர்தான் ராஃபில்ஸ்.

பேச்சுவார்த்தை முடிந்து சிங்கப்பூர் தீவின் குத்தகை, யோகர் சுல்தானிடமிருந்து ராஃபில்ஸால் பெறப்படுகிறது. உடனடியாக மலாய் பிரதேசத்தில் ஒரு பிரித்தானிய தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. வருடக் குத்தகை 5000 வெள்ளிக்கு ஒப்பந்தம். டச்சுக்காரர்களுக்கு உள்ளூர எரிச்சல் எழுந்தாலும் அவர்களால் ஏதும் செய்து விட இயலவில்லை. எனவே வட்டாரத்தின் வணிகத்தை அமைதியான இரு தரப்பினரும் மேற்கொள்ளும் வகையாக 1824-ல் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியுடன் மேலும் ஓர் ஒப்பந்தம் போடுகிறார்கள். அதன் படி இருவரும் ஒருவர் வணிகத்தில், வணிக வழிகளில் மற்றவர்கள் தலையிடப்போவதில்லை; சிங்கப்பூர், மலாய் மூவலந்தீவில் (தீபகற்பம்) கிழக்கிந்திய கம்பெனி எந்த வணிக முயற்சிகளையும் எடுக்கலாம்; டச்சுக்காரர்கள் சிங்கப்பூர் நீரிணைக்கும் தெற்குப் பகுதியில் தமது வணிகத்தை விரிவுபடுத்திக் கொள்வதில் கிழக்கிந்திய கம்பெனிக்கு ஏதும் ஆக்கினைகள் கிடையாது; உன்வேலையை நீ பார், என் வேலையை நான் பார்க்கிறேன்; இருவரும் வட்டாரத்தைச் சுரண்டுவோம்’ என்ற புரிதலுக்கு வருகிறார்கள். [2]

ஆனால் சிங்கப்பூரில் கிழக்கிந்திய கம்பெனி காலூன்றுவது ஐரோப்பியப் பெரு வணிக நிறுவனங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது. சீனத்துடன் வணிகத் தொடர்புக்காக கலங்களை அனுப்பும்போது இடைநிலையில் பயணத்துக்கு அனுகூலமாக ஓர் அருமையான துறைமுகம் அவர்களுக்குக் கிடைக்கப்போகிறது.

கட்டுக்களில்லா வளர்ச்சியின் தொடக்கம்

ராஃபில்ஸ், சிங்கப்பூரைத் திட்டமிட்டது ஒரு வணிக மையமாகத்தான். அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை அவர் திட்டமிட்டார், நிருமாணிக்க ஆணைகள் பிறப்பித்தார். ஆனால் அவருக்குப் பின்னர் கிழக்கிந்திய பிரித்தானிய பிரதியிதியாக வந்த ஜான் கிராஃபோர்ட்தான் முதன்முதலில் சிங்கப்பூரைக் கட்டுப்பாடுகளற்ற துறைமுகம் (Free Port) ஆக்கினார். வழக்கமாக பல கட்டுப்பாடுகள் நிறைந்த துறைமுகங்களாகவே அக்காலத்தின் பல துறைமுகங்கள் இருந்தன. புதிய சிந்தனையான இந்தக் கட்டுப்பாடுகளற்ற துறைமுகம் என்ற அமைப்பு, சிங்கப்பூரின் கவர்ச்சியை அதிகப்படுத்தியது. இன்றும் தென்கிழக்காசியத் துறைமுகங்களில் அதிகக் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத துறைமுகமாக சிங்கப்பூர் விளங்குவதே அதன் வணிகம் பாய்ச்சல் பெருக்கத்தில் அமைந்திருப்பதன் காரணம்.

சிங்கப்பூர் பிரித்தானியாவின் உடைமை என்ற நிலை அளித்த பாதுகாப்புணர்வு, வட்டாரத்திற்கான புதிய முதலீடுகளையும், புதிய தொழில் முயற்சிகளையும் வெகு வேகமாக ஈர்க்கத் தொடங்கியது. கட்டுப்பாடற்ற துறைமுகமாக இருந்ததாலும், கூடவே எல்லா இனங்கள், சமயங்கள், நிறங்கள் கொண்ட மக்கள், வேறுபட்ட அரசியல் நோக்கம் கொண்ட மக்கள் ஒன்றிணைந்து வணிகம் செய்து பணம் சம்பாதிக்கும் இடமாகவும் இருந்ததால், சிங்கப்பூர் நிறமாற்றம் பெற்றது. கிழக்கிற்கும் மேற்குக்கும் இடையே அப்படி ஒரு சந்திக்குமிடம் வேண்டியதன் தேவை அப்போது இருந்தது. அந்த வாய்ப்பைக் கப்பென்று பிடித்துக் கொண்ட சிங்கப்பூர் வெகுவேகமாக வளர்ந்ததில் வியப்பென்ன?

புதிய துறைமுகங்கள், மேலும் வளர்ச்சி

கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே சரக்குகள் வைத்திருந்த முக்கிய வியாபாரிகள், வணிகம் செய்வதற்காக உற்பத்திப் பொருட்கள் அல்லது பணம் வைத்திருக்கும் வாங்குபவர்கள் போன்றோருக்கு இடையான தரகு வியாபாரியாக சிங்கப்பூர் தன்னை உயர்த்திக் கொண்டது. இதுதான் இறக்குமதி, ஏற்றுமதி வணிகத்தின் மூலத் தொடக்கம். இதன் காரணமாக சீன மரக்கலங்கள், பெரும் பாய்மரக் கப்பல்கள் போன்றவை சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்தில் குவிகிந்தன. மேலும் மேலும் இது நடப்பது பின்னால் 1869-ல் கெப்பெல் துறைமுகம் (Keppel Bay) உருவாவதன் அவசியத்தைத் தீர்மானித்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், பெருஞ்சீன நாட்டில் அரசியல் நிலையின்மை நிலவியது. பஞ்சம், பெருகிய நோய்கள், போர்கள் போன்றவை அதிகரித்தன. எனவே சீனர்கள் பெரும் எண்ணிக்கையில் தென்கிழக்காசியாவின் வேறு வட்டாரங்களில் வாழ்க்கை வசதிகளைத் தேடினர். பிரித்தானியப் பொறுப்பின் கீழ் அமைதியான, ஆனால் சுறுசுறுப்பான வணிகம் நடைபெறும் இடமான சிங்கப்பூர் அவர்களைப் பெருமளவில் ஈர்த்தது. ஏற்கெனவே சிங்கப்பூரில் இருக்கின்ற குறைவளவு சீனர்கள் அவர்களுக்கு வேண்டும் உதவிகள் செய்ய, சீனக் குடியேறிகள் வருகை சிங்கப்பூரில் வெகுவேகமாக வளர்ந்தது. 1830களுக்குள் சீனர்களின் எண்ணிக்கை சிங்கப்பூரில் மலாய் இனமக்களை மீறத் தொடங்கியது.

காலம் செய்த முடிவு

நவீன சிங்கக்கப்பூரைக் கட்டமைத்த முதல் சிற்பி ஐயத்துக்கிடமில்லாமல் ராஃபில்ஸ்தான். சிங்கப்பூரை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்காக கண்டுபிடித்த பெருமையும் அவருக்குத்தான். ஆனால் ராஃபில்ஸ் சிங்கப்பூருக்கு மூன்று முறைதான் வந்திருக்கிறார் என்று அறிந்தால் வியப்புக்குள்ளாவோம். முதல் முறை சில நாட்கள் மட்டும் 1819-ல் சிங்கப்பூர் தீவை யோகர் சுல்தானிடமிருந்து ஒப்பந்ததிற்கு வாங்குவதற்காக. இரண்டாவது முறை 1822-ல். அதுவும் குறுகிய காலப் பயணம்தான். மூன்றாவதும் கடைசியுமான முறை 1822 அக்டோபர் மாதம். அப்போது வந்தவர், 1823 ஜூன் மாதம் வரை எட்டு மாதங்கள் தங்கியிருந்தார். இந்தக் குறுகிய காலத்தில்தான் சிங்கப்பூர் நகருக்கான நகர அமைப்புகள் அவரால் உருவாக்கம் பெற்றன. கருத்து வேறுபாடுகள் காரணமாக ஏற்கெனவே சிங்கப்பூரின் பொறுப்பாளராகத் தங்கியிருந்த ஃபார்குவாரைப் பதவி நீக்கம் செய்தார். தீவின் கட்டமைப்புப் பொறுப்பைத் தானே ஏற்றார். நகரத் திட்டங்களும், கட்டடத் திட்டங்களும் மாற்றியமைக்கப்பட்டன. சிங்கப்பூரில் ஒரு வர்த்தக வட்டாரத்தையும் (CBD என்ற Central Business District) , இனவாரியான குடியிருப்புப் பகுதிகளுக்கான திட்டமும் வரையப்பட்டன. (பார்க்க படம்). வணிக சதுக்கம் (Raffles Square) திட்டமிடப்பட்டு, அதற்காக ஒரு சதுப்பு நிலம் மீட்கப்பட்டது. தற்போதை போட் கீ (Boat Quey) ஆற்றோரமாக ஆற்றங்கரையில் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டது. உள்நாட்டு மக்களின் மொழியையும் மரபுகளையும் கற்றுக் கொள்ளும், கற்றுக் கொடுக்கும் அமைப்புகள், மலாய் ஆட்சியார்கள், நிர்வாகிகள் ஆகியோரின் வாரிசுகளுக்குக் கல்வி கற்கும் அமைப்புகள் போன்றவை பற்றி சிந்திக்கப்பட்டன. தனக்கான ஒரு மாளிகையை இன்றைய ஃபோர்ட் கானிங் மலையில் கட்டத் திட்டமிட்டார். அன்று அது புகிட் லாரங்கான் (Forbidden Hill) என்று அழைக்கப்பட்டது.

(சிங்கப்பூர் – தேச உருவாக்கம் நோக்கிய பயணம் நூலிலிருந்து நன்றியுடன்)

சிங்கப்பூருக்கான இத்தனை திட்டமும் கிழக்கிந்திய கம்பெனிக்காக ராஃபில்ஸால் தீட்டப்பட்டது. ஆனால் உண்மையில் லண்டனில் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையகம் அப்போது சிங்கப்பூரை வாங்குவதில் இருந்து பின்வாங்கி விடலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தது என்பதுதான் விநோதம். இன்றைக்குப்போல தகவல் தொடர்புகள் அன்றைக்கு எளிதாக இருந்திருந்தால் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி சிங்கப்பூரைக் கட்டமைப்பதில் இருந்து பின்வாங்கியிருக்கவும் கூடும். ஆனால் முடிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம், அதனைத் தகவலாக அனுப்புவதில் தாமதம் முதலிய காரணங்களால், இந்தத் ‘தாமதப்படுத்தும்’ ஆணை கிடைப்பதற்குள் 1824-ல் சிங்கப்பூர் தீவு யோகர் சுல்தான்களிடம் இருந்து மொத்தமாக ராஃபில்ஸால் வாங்கப்பட்டுவிட்டது. லண்டன் தலைமையகம் சிங்கப்பூரைப் பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருக்கும் அதே நேரம், சிங்கப்பூர் சுறுசுறுப்பாக வளர்ந்தது. 1819-ல் சிங்கப்பூரில் 400 என்ற எண்ணிக்கை அளவில் அதுவும் பழங்குடிகள்தான் வாழ்ந்தார்கள் என்று பார்த்தோம். ஆனால் 1824-ம் ஆண்டில், அதாவது ஐந்தாண்டுகளுக்குள் சிங்கப்பூரில் 10683 பேர் மக்கட்தொகை இருந்ததாக பிரித்தானிய ஆவணங்கள் பதிவு செய்கின்றன. எனவே லண்டன் தலைமையகம் சிங்கப்பூரை அப்படியே விட்டது.

காரணம் எதுவாக இருந்தாலும், ராஃபில்ஸ், அந்த வருவதறியும் கண்கள் கொண்டு கண்டடைந்ததே சிங்கப்பூர் தீவு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. முடிவாக சிங்கப்பூரின் துடிப்பான நவீனத்தின் தொடக்கமாக ராஃபில்ஸ் அமைந்ததன் காரணம், கிழக்கிந்திய கம்பெனி மட்டுமல்ல, காலம் செய்த முடிவும் கூட. ஏனெனில் லண்டன் தலைமையகம் சிங்கப்பூரை வாங்கிய பின், அதனைத் தொடர்ந்து வைத்துக் கொள்வதில் தயக்கங்களோ, சிந்தனைகளோ கொண்டிருந்த காலத்திற்குள், ராஃபில்ஸின் சிங்கப்பூர், பற்றிக் கொண்ட விண்கலம்போல பாய்ச்சல் முன்னேற்றத்தில் தள்ளப்பட்டது காலத்தின் முடிவன்றி வேறென்ன?

(தொடரும்)

__________

[1] https://en.wikipedia.org/wiki/Founding_years_of_modern_Singapore

[2] சிங்கப்பூர்-தேச உருவாக்கம் நோக்கிய பயணம். சிங்கை அரசின் தேசிய மரபுடைமைக் கழகம் வெளியீட்ட நூலில் இருந்து

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *