Skip to content
Home » சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #4 – வளர்ச்சிக் காரணிகள்

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #4 – வளர்ச்சிக் காரணிகள்

காவல்

சிங்கப்பூர் ஒரு தீவு என்பது நமக்குத் தெரியும். அதுவும் நிலப்பரப்பின் ஒரு சந்தியில் இருக்கின்ற ஒரு சிறு புள்ளி. பெரும்நிலப்பரப்பின் எல்லைப் பரப்பில் இருக்கின்ற பகுதிக்குரிய இயல்பான குண இயல்புகளுடனேயே சிங்கப்பூர் இருந்தது. கண்காணிப்போ, கட்டுக் காவலோ இல்லை. வழியற்ற குடியேறிகள், வேறு இடங்களில் சட்டத்தின் தாக்கத்தில் இருந்து தப்பி ஓடிவரும் குற்றவாளிகள், சீனத்திலிருந்த வந்த கூட்டத்தில் கலந்து வந்த அபின் வணிகர்கள், சீன இரகசியக் கும்பல்கள், கிழக்கிந்திய கம்பெனியே கொண்டு வந்து இறக்கிய இந்திய தமிழகச் சிறைவாசிகள் (அடிமை வேலைகளுக்காக!), துணிச்சலும் துடிப்புமான வியாபாரிகள் என்று அனைவரும் சங்கமித்துப் புழங்கும் இடமாக சிங்கப்பூர் அப்போது இருந்தது. இதோடு கிழக்கிந்திய கம்பெனியின் வணிகத்துக்கும் வர்த்தகத்தும் உதவி புரிவதற்காகக் கொண்டுவரப்பட்ட அல்லது அந்த வேலை வாய்ப்புகளுக்காக வந்த குடியேறிகளும் இருந்தார்கள்.

ஒரு புறம் பணப்புழக்கமும், உழைத்து, வணிகம் செய்து பிழைக்க வந்த பணம் சம்பாதிக்கும் கூட்டம்; மறுபுறம் ஏதிலிகள், ஒளிந்து கொள்ள வந்த குற்றவாளிகள் போன்றவர்கள். எளிதாகக் குற்றச் செயல்கள் நடக்கத் தொடங்கின. (சீனத்தில் அபின் என்ற போதைப்பொருளைப் புழங்க விட்டது பிரித்தானியர்தான். அதன்மூலம் சீனத்தையும் வளைக்கத் திட்டமிட்டார்கள். பிரித்தானியர்கள் சீனத்தில் அபினை இறக்கிச் செய்த உள்ளடி வேலைகளும், கொடுமைகளும் ஒரு பெரும் நெடுங்கதைக்கு உரிய பொருண்மை உள்ளவை. சீனர்கள் பெரும்பான்மையினர் அப்போது பிரித்தானியாவால் இறக்கிவிடப்பட்ட அபினுக்கு அடிமையானார்கள்; சீனர்களில் பெரும்பான்மை போதைப்புழங்கிகள் அப்போதைய தலைமுறையில் இருந்து வந்தவர்களே என்று சொன்னால் இது மிகையில்லை; சிங்கப்பூரிலும் கிழக்கிந்திய அபின் பண்ணைகளை வைத்திருந்தது. போருக்கு முந்தைய நிலையில் கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய வருமானத்தின் ஒரு பகுதி சிங்கையின் அபின் பண்ணைகளில் இருந்து வந்தது என்பதைக் கருதினால், அபினை முன்வைத்து பிரித்தானியர்கள் என்னவற்றை நடத்தினார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.)

எனவே சிங்கப்பூர்க் காவல்படை ஒன்றை காலனித்துவ நிர்வாகம் தொடங்கியது. முறையான காவல்படை இயங்கத் தொடங்கியது தேவையற்ற, தான்தோன்றித்தனமாகக் குற்றச்செயல்கள் நடப்பதைத் தடுத்து, வணிகத்துக்கு உதவி செய்தது.

வளர்ச்சியின் கூறுகள்

பாய்மரக் கப்பல்களிலிருந்து நீராவிக் கப்பல்களுக்கு கப்பல் போக்குவரத்து மாறியபோது, இடைத்துறைமுகமான சிங்கப்பூரில் வர்த்தகர்கள் இந்தச் சேவைக்கான தேவையை உணர்ந்தார்கள். எனவோ தஞ்சோங்பாகரில் ஒரு நிலக்கரி வழங்கும் நிலையம் அமைக்கப்பட்டது. மலாக்கா நீரிணையில் ஒருமுனையாக இருக்கும் அதன் இருப்பிடம், சூயஸ் கால்வாயின் வழியாகச் செல்லும் நீராவிக் கப்பல்களின் நிறுத்திச் செல்லும் துறைமுகமாக சிங்கப்பூர் இருந்தது அதன் வணிகத்தை மேலும் பெருக்கியது. எண்ணெய், நீலக்கரிச் சேவைகள், வழங்கீட்டுப் பொருள்கள் போன்றவற்றின் காரணமாக சிங்கப்பூரின் வணிகம் வளர்ந்தது. 1926-ம் ஆண்டு சிங்கப்பூர் துறைமுகம் 1886 மில்லியன் வெள்ளிகள் என்ற உச்ச வணிகநிலையை அடைந்ததாக கிழக்கிந்திய கம்பெனியின் வணிகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 1933-ம் ஆண்டின் மாபெரும் மந்தநிலையில்கூட அதன் வணிகம் 512 மில்லியன் வெள்ளிகள் என்ற அளவில் இருந்தன.

இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் சிங்கப்பூரில் இருந்து ஏற்றுமதி வணிகம் பெரிதாக நடைபெறவில்லை; சொல்லப்போனால் அறவே இல்லை என்றே சொல்லலாம். துறைமுகத்தின் முக்கிய வருமானம் பண்டசாலை வர்த்தகமே. அதாவது மற்ற இடங்களில் உற்பத்தி செய்யப்பட்டு, சிங்கப்பூருக்குள் நுழைந்து செல்லும் சரக்குகள் அங்கிருந்து மற்ற இடங்களுக்கு மறுவிநியோகம் செய்யப்பட்டதால் வந்தவை. இதுபோலவே பதனம் செய்யும் நிலையங்களின் மூலமும் வருமானம் வந்தது. பொருட்களைப் பிரித்து அடுக்கும் வரை அவை பதன நிலையங்களில் வைக்கப்பட்டன. மலாயாவில் தயாரிக்கப்பட்டு வரும் ஈயம், இரப்பர் தொழிற்பண்டங்கள் சிங்கப்பூர் துறைமுகம் முக்கியத் துறைமுகமாக வளர்ந்து மேம்படுவதற்கு உதவின.

கல்வி

சிங்கப்பூர் கிழக்கிந்திய கம்பெனியால் தென்கிழக்காசிய வட்டாரத்தில் வாங்கப்பட்டது என்று பார்த்தோம். கம்பெனியின் இந்திய வட்டாரத்தின் தலைமையகம் அன்றைய கொல்கத்தாவில்தான் இருந்தது. எனவே சிங்கப்பூரும் கொல்கொத்தாவில் இருந்தே மேலாண்மை செய்யப்பட்டது. இதனால் இயல்பாக சிங்கப்பூரின் மேலாண்மையில் ஒரு தொய்வு இருந்தது. கிழந்திய கம்பெனியின் வணிகத்துக்குக் கட்டாயமாகத் தேவைப்பட்ட வளர்ச்சிக் கூறுகளில்தான் அவர்கள் கவனம் செலுத்தினார்கள். அதாவது வர்த்தகத்திலும் வருமானத்திலும். மற்றவற்றில் சிங்கப்பூருக்கான போதிய கவனம் கம்பெனிக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. இது அங்கிருக்கின்ற சமூகங்களின் சமூக வாழ்க்கைத் தேவைக்கான ஈடுபாடுகளை அந்தந்தத் சமூகங்களே கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளியது. சிங்கப்பூரில் சீனர்கள், ஏற்கெனவே பழங்குடிகளாக வாழ்ந்த மலாய் இனத்தவர்கள், கம்பெனியால் கொண்டு வரப்பட்ட இந்தியத் தமிழர்கள், இவர்களுடன் வணிகம் வர்த்தகத்துக்காக வந்த மேற்குலகச் சமூகம் என்று நான்கைந்து சமூகங்கள் இருந்தன. இச்சமூகங்களின் சமூக ஒழுங்குகள், நடவடிக்கைகள், குலமரபு போன்றவை அந்தந்தச் சமூகங்களுக்குள்ளேயே நிகழ்ந்தன. இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், ஈடுபாடு காட்டவும் கிழக்கிந்திய கம்பெனியின் காலனி நிர்வாகம் அக்கறை காட்டவில்லை. ஆனால் இச்சமூகங்களின் சார்பாக காலனி நிர்வாகத்தோடு தொடர்பு கொள்ள, ஆங்கிலம் தெரிந்த,மொழியறிவு தேவைபட்ட ஒரு சிறு சமூகத் தலைவர்கள் கூட்டம் தேவைப்பட்டது; அவர்களும் உருவானார்கள். அவர்கள் தத்தமது சமூக மக்களின் தேவை, கல்வி போன்றவற்றைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார்கள்.

இந்தத் தேவையை நிறைவு செய்ய சமயத் திருப்பணியினரும், சீனத்தின் கொடைவள்ளள்களும் முன்வந்தார்கள். ராஃபில்ஸோ, காலனி நிர்வாகமோ இதில் போதிய அக்கறை செலுத்தாததால், சமூகக் குழுக்களின் மூலம் உருவான இத்தகைய பள்ளிகள் அந்தந்த தாய்மொழி வழிக் கல்வி நிலையங்களாக உருவாகின. ஆனால் சமயத் திருப்பணியினரால் உருவாக்கப்பட்ட பள்ளிகள், ஆங்கிலமொழிவழிக் கல்விக்கு விரைவில் மாறின. காலனி நிர்வாகத்துக்குத் தேவையான பணியாளர்களை அளிக்க வேண்டிய தேவை இருந்ததை அவர்கள் உணர்ந்ததால் இந்த வாய்ப்பை எடுத்துக் கொண்டார்கள். சீனப் பள்ளிகளின் நிர்வாகத்திலும் கல்வி முறையிலும், காலனி நிர்வாகம் ஈடுபடாததால், சீன அரசாங்கம் அவற்றில் ஊடுருவத் தொடங்கியது.

கம்யூனிசம் வளர்க்கும், சீனத்துவ சிந்தனைகள் சிங்கப்பூரின் சீனப்பள்ளிகளில் உரம்பெறத் தொடங்கின. (இந்தநிலை வளர்ந்து காலனி நிர்வாகத்திற்கு இடரானபோது, 1920-ல் பிரித்தானிய சிங்கப்பூரின் சீனப்பள்ளிகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியைக் கையில் எடுக்கக் காரணமானது). மலாய்ப்பள்ளிகள் பெரும்பாலும் சமயப் பள்ளிகளாகவோஅல்லது அடிப்படைத் திறமைகளைக் கற்பிப்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டவையாகவோதான் தொடக்கத்தில் இருந்தன. மாறாக சீனப்பள்ளிகள் சீனப்பற்றும், கம்யூனிசமும் வளர்த்தாலும், சமூக மற்றும் பொருளாதார வாய்ப்புகளின் மீதும் கண்வைத்து தொடக்கத்திலேயே இயங்கத் தொடங்கின. ஆரம்ப காலத்தில் தொடங்கப்பட்ட குறிப்பிடத்தக்க கல்வி நிலையங்கள் சீனப் பெண்கள் பள்ளி, ராஃபில்ஸ் 1823-ல் தொடங்கிய சிங்கப்பூர் கல்விக் கழகம் (பின்னாளில் ராஃபில்ஸ் கல்விக் கழகம்), 1873-ல் தாமதாகத் தொடங்கப்பட்ட ஆங்கிலோ தமிழ்ப்பள்ளி, சமயத் தொண்டர் பெஞ்சமின் கீசுபாரி தொடங்கிய மலாயப்பள்ளி போன்றவை . [1]

வணிக மையமான சிங்கப்பூர்

தென்சீனக் கடல், இந்தியப் பெருங்கடல் இரண்டுக்கும் இடையே உள்ள கடல் பாதைகளின் சந்தியில் பாதுகாப்பாக அமைந்திருந்தது சிங்கப்பூர். அதோடு அதன் துறைமுகம் இயல்பிலேயே ஆழமானது. இது பாய்மரக்கப்பல்கள் காலத்திலிருந்தே இருந்த நிலை. இதனால் இயல்பான ஒரு நிறுத்து துறைமுகமாகவும் (Stopping Harbour port). பண்டமாற்றுத் துறைமுகமாகவும் சிங்கப்பூர் எளிதில் மாறியது. கிழக்கிந்திய கம்பெனி சிங்கப்பூரை வாங்கிய பிறகு விரைவாக சிங்கப்பூரில் சில அடிப்படைக் கட்டுமானங்களைச் செய்தது என்று பார்த்தோம். அவை ராஃபில்ஸின் முன்னெடுப்புகள். சிங்கப்பூரின் கிழக்கு மேற்குத் தொடர்பு அதன் தொடக்க கால வளர்ச்சிக்குப் பெரும் காரணியாக இருந்தது என்று பார்த்தோம். மேற்கத்தியர்கள் சிங்கப்பூரில் வந்து தங்கியபோது, சிங்கப்பூரைச் சீனாவுக்கான ஒரு நுழைவாயிலாகப் பார்த்தார்கள். மேற்கிலிருந்த வந்த சமயவாதிகள் சீனத்தை மாற்றுவதற்குத் தேவைப்படும் முயற்சிகள், மூலதனங்களுக்காக ஒரு செயல்படும் தளமாக சிங்கப்பூரைக் கருதினார்கள். அவர்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்த காலத்தில் தங்கள் குடும்பத்தினர் படிப்பதற்குப் பள்ளிகளை அமைத்தார்கள்; கிறிஸ்தவ மதநூலான பைபிளை மொழிபெயர்த்தார்கள். அச்சுத் தொழிலை நிர்மாணித்தார்கள்; அதனைக் கற்பித்தார்கள். சீன சந்தையின் மீது கண்வைத்திருந்த வியாபாரிகளுக்கும் சிங்கப்பூர் முதல் துறைமுக இறங்குமிடமாக இருந்தது.

யோகர் பாலம் – அன்றும் இன்றும்

யோகர் பாலம் – இன்றைய தோற்றம் – பக்கவாட்டில் மாபெரும் குடிநீர் குழாய்கள்
யோகர் சிங்கைப் பாலம் 1924 – சிங்கை தேசிய ஆவணத்திற்கு நன்றியுடன்

வேறு சமூக மாற்றங்கள்

இதன் காரணமாக சிங்கப்பூரில் இருந்த வர்த்தக சமூகத்திற்குத் தங்களுக்குத் தேவைப்படும் ஆதரவுவும் கவனமும் கிழக்கிந்திய கம்பெனியால் தரப்படவில்லை என்ற எண்ணத்தைத் தந்தது. தங்களுக்கு ஏற்படும் இடர்களையும் கடினப்பாடுகளையும் கொல்கொத்தா நிர்வாகம் அறிந்து கொள்ளவில்லை என்பதோடு, அவற்றில் ஆர்வமும் காட்டுவதில்லை என்று அவர்கள் நினைக்கத் தொடங்கினர். இது தொடர்ந்து வளர்ந்து, கிழக்கிந்திய கம்பெனியின் மலாயாக் குடியேற்றம் (Straits Settlement) ஒரு கட்டத்தில் லண்டனில் இருந்து ஆளப்படுகின்ற முடியாட்சியின் காலனியாக 1867-ல் மாறியது.

அதிலிருந்து சிங்கப்பூருக்கு இந்தியாவுடனான தொடர்பு சிறிது குறைந்தது. 1869-ல் திறக்கப்பட்ட சூயஸ் கால்வாய் ஆகியவற்றால் லண்டன், சிங்கப்பூருக்கு இடையேயான தகவல் தொடர்புகள் வலிமையும், வேகமும் பெற்றன. 19-ம் நூற்றாண்டின் இறுதிக்குள் (1900) சிங்கப்பூர் மலாயாப் பகுதியில் இருந்த இலண்டனின் காலனித்துவ நிர்வாகத்தின் அதிகார மையமாக மாறியது. சிங்கப்பூரில் இருக்கும் மலாயாக்காரர்களுக்கு எளிதான கல்வி வசதி, மற்ற இனங்களிடையான தொடர்பு, போட்டி ஆகியவற்றால் சமூகம் அறிவுமேன்மை கூடுகிறது. முதல் செய்தித்தாள்கள், தொடக்கக் கால அறிஞர் குழுக்கள், எழுத்துப் படைப்புகள் தோன்றத் தொடங்குகின. 1923-ல் சிங்கப்பூரையும் யோகரையும் இணைக்கும் யோகர் காசவே (Johar Causeway) தரைப்பாலம் கட்டப்பட்டது. [2] இந்தப் பாலத்தின் வழி சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து இரண்டும் சிங்கப்பூருக்கும் மலாயாப் பகுதிக்கும் ஏற்படுகின்றன. இது இருபுறத்திலும் வணிகத்திலும், மக்கள் வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவந்தது. மக்கள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து பெருகியது. 1927-ல் யோகர் சுல்தானுடன் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தம் மூலம் சிங்கப்பூருக்கான குடிநீர், யோகரிலிருந்து பெரும் குழாய்கள் (சுமார் இரண்டு மீட்டர் விட்டம் உடைய பெரும் குழாய்கள் மூன்று) வழியாக வர குழாய் இணைப்பு யோகர் பாலத்தில் இணைக்கப்பட்டது.

சமூக வாழ்வு நோக்கில் பார்த்தால் சிங்கப்பூரில் இருக்கும் மலாய் இனத்தவர்கள் தவிர மற்ற இனத்தவரின் நோக்கு எப்போதும் அவரவர் தாய்நாடு நோக்கியே இருந்தது. 1915-ல் ஏற்பட்ட ஒரு சிறு சிப்பாய்க் கலகம் சிங்கப்பூர் இந்தியர்களை-பெருமளவிலான தமிழர்களை, இந்திய நாட்டுப்பற்று நோக்கித் தள்ளியது. இது திடீரென்று கிளம்பினாலும், சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தினரிடையே ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுவந்தது.

சீனர்களைப் பொறுத்தவரை அவர்களின் தாய்நாடு சீனாதான்; அது அப்போது ஒரு மாற்றத்துக்கான, புரட்சிக்கான ஆயத்தங்களில் இருந்தது. அது நல்லநிலையை அடையும் வரை தற்காலிகமான இல்லமாகவே தென்கிழக்காசியாவைக் கருதினார்கள். ஆனால் ஒன்றுபட்ட சீனம், கம்யூனிசப் பற்று போன்றவற்றை தென்கிழக்காசியாவில் பரந்து வசிக்கும் சீனர்களுக்கிடையே உயிர்ப்புடன் வைத்திருக்க புரட்சித் தலைவர்கள் கவனம் செலுத்தினார்கள். யாட் சென் போன்ற புரட்சித் தலைவர்கள், அடிக்கடி சிங்கப்பூர் போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கு வந்து சீன சமூகத்தினரிடம் அளவளாவி அச்சமூகத்தினரின் சீனம் நோக்கிய பார்வையை உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்தனர். இந்த நேரத்தில் 1937-ல் ஜப்பானியர்கள் சீனாவில் படையெடுத்தனர். இது சீனர்களை ஜப்பானியத் தயாரிப்புகளை, சரக்குகளைப் புறக்கணிக்கத் தூண்டும் காரணியானது. இதற்கு வளமான, வலிமையான சினத் தொழிலதிபர்கள் ஆதரவு கொடுத்தனர். சீனத்தின் நடக்கும் போர் முயற்சிக்காக தென்கிழக்காசிய நாடுகளில் சீன சமூகத்தினரிடம் தோன்றி நிதி திரட்டும் முயற்சி, சிங்கப்பூரிலும் வலிமை அடைந்தது.

ஜப்பானியர்கள் தெற்கு நோக்கி நகர்கிறார்கள் என்ற செய்திகள் வந்தபோதும், பிரித்தானியர்கள் அதனை ஒரு கருதத்தக்க நிகழ்வாக எண்ணவில்லை; அவர்கள் ஜப்பானிய விமானங்கள் காகிதத்தால் செய்யப்பட்டவை என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அதற்கான விலையை லண்டன் காலனி நிர்வாகம் வெகு சீக்கிரமே தென்கிழக்காசியாவில் பரவலாகவும், சிங்கப்பூரில் குறிப்பாகவும் கொடுக்க வேண்டியிருந்தது என்பதுதான் விசேடம்!

(தொடரும்)

__________

[1] சிங்கப்பூர்-தேச உருவாக்கம் நோக்கிய பயணம் – நூலின் காலனித்துவக் கல்விக் கொள்கை பகுதியில் இருந்து – சிங்கப்பூர் தேசிய மரபுடைமைக் கழக வெளியீடு

[2] https://biblioasia.nlb.gov.sg/vol-20/issue-2/jul-sep-2024/singapore-malaysia-johor-causeway/ – சிங்கை நூலக வாரியம் அளிக்கும் யோகர் பாலம் அமைப்பு பற்றிய தகவற்பக்கம்

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *