Skip to content
Home » சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #6 – கொடுங்கனவின் தீற்றல்கள்

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #6 – கொடுங்கனவின் தீற்றல்கள்

எளியாரை வலியார் அடித்தால் வலியாரை வாசற்படி அடிக்கும் – பழமொழி

சூக் சியாங் கூட்டுக்கொலை

1942இன் பி்ப்ரவரி மாதம்.

18ஆம் தேதி யப்பானிய இராணுவ நிருவாகம் சிங்கப்பூரில் ஒரு அறிவிக்கை செய்தது. இந்த அறிவிக்கை, துண்டறிக்கைகளாக ஒட்டப்பட்டும், இராணுவ வீரர்களால் ஒலிபெருக்கி வழியாகவும் அறிவிக்கப்பட்டன. 18 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட சீன ஆண்கள் அனைவரும் தீவின் குறிப்பிடப்பட்ட ஐந்து இடங்களில் சோதிக்கப்படுவதற்காக வரவேண்டும் என்று அந்த அறிவிப்பு சொன்னது. சிங்கப்பூர் தீவில் இருந்த ஒரு யப்பானிய இராணுவப் பிரிவுக்கு கெம்பெய்டாய் (Kempeitai) என்ற பெயரிடப்பட்டிருந்தது. அந்தப் பிரிவுதான் சிங்கப்பூரில் சோதனைகள், தண்டனைகள் போன்றவற்றை நிறைவேற்றும் பொறுப்பை வைத்திருந்தது. அறிவிப்பின்படி சீன ஆண்கள் வந்து சேரவில்லை என்று தோன்றினால் வீட்டுக்கு வீடு சோதனையிட்டு சீன ஆண்களை முகாம்களுக்கு அள்ளிக் கொண்டு போனார்கள் கெம்பெய்டாய் பிரிவினர். இந்த ஆண்கள் அனைவரும் விக்டோரியா பள்ளியின் விளையாட்டுத் திடல்களில் அடைத்து வைக்கப்பட்டனர். பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நான்கு அல்லது ஐந்து பெரிய பாரமேற்று மோட்டார் வாகனங்கள் அங்கு வந்தன. அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆண்கள் அனைவரையும் அந்த நான்கைந்து வண்டிகளில் ஏற்றிக் கொண்டு தானா மேரா(Tanah Merah) அருகே இருந்த கடற்கரைக்குக் கொண்டு போனார்கள் கெம்பெய்டாய் பிரிவினர்.

தடுக்கப்பட்டு வைத்திருந்த அனைவரின் கைகளைப் பின்புறம் வைத்து, கயிறுகளால் பிணைத்து நீண்ட வரிசையில் அவர்கள் கட்டப்பட்டார்கள். அங்கு கடற்கரை மணலில் இறக்கிவிடப்பட்ட அவர்கள் கடலைநோக்கி வரிசையாக நிற்குமாறு பணிக்கப்பட்டார்கள். பின்புறம் கைகள் பிணைக்கப்பட்ட, நீண்ட வரிசைகளில் நின்ற அவர்கள் கடலை நோக்கி ஒரே அளவில் நடக்குமாறு சொல்லப்பட்டார்கள். அவர்களது பின்புறம் வந்து நின்ற கெம்பெய்டாய் படை, தானியங்கித் துப்பாக்கிகளால் (machine guns) சட சடவென்று அவர்களைச் சுட்டது. அத்தனை சீன ஆண்களும் சிங்கப்பூர் கடற்கரையில் கொத்துக் கொத்தாக விழுந்தார்கள். அப்படி விழுந்தவர்களில் இறந்தும் இறக்காமல் இருந்தவர்களை, துப்பாக்கிக் கட்டையின் கத்திகளால் குத்திக் கொன்றார்கள் கெம்பெய்டாய் பிரிவினர். அனைவரும் கொல்லப்பட்டார்கள் என்று உறுதி செய்யப்பட்டபின், இயங்கு வாகனங்கள் சென்று விட்டன. கடற்கரையில் கூட்டுக் கொலை செய்யப்பட்ட சீன ஆண்களின் பிணங்கள் காக்கைகளும் வல்லூறுகளும் சிதைக்க, கிடந்து அழுகின. முறையான ஒரு அடக்கம் கூட செய்யப்படவில்லை. யப்பானியர்கள் இந்த சூக் சியாங் நடவடிக்கையால் ஏறத்தாழ 6000 சீன ஆண்களைக் கொன்றதாக பின்னாட்களில் ஒப்புக் கொண்டனர். இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னரும், இளமையும் வலிமையும் கொண்டிப்பதாகக் கருதப் பட்ட சீன ஆண்கள் வளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். [1] மேற்கண்டவாறு யப்பானிய கெம்பெய்டாய் கொடுங்கோண்மைப் படை செய்த கூட்டுக் கொலைகள் பலவற்றை வரலாறு பின்னர் பதிவு செய்திருக்கிறது.

Syonan Years – Mass Clensing

இந்த நடவடிக்கைகளை யப்பானிய இராணுவம் அந்த நாட்களிலும், பின்னாட்களிலும் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்காக மேற்கொண்டதாக நியாயப்படுத்தியது. ஆனால் சூக் சியாங் படுகொலை இரண்டு மூன்று நாட்கள் இடைவெளிக்குள் நடந்தது. யப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த சிங்கப்பூரில் ஒட்டுமொத்தமாக, மூன்றாண்டுகளில் ஐம்பதாயிரத்திலிருந்து லிருந்து ஒரு இலக்கம் (50,000 – 1,00,000) வரையான சிங்கப்பூரிய சீன ஆண்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கணக்கீட்டை தனது தி சிங்கப்பூர் சுடோரி நூலில் திரு லீ க்வான் யூ அளிக்கிறார். சிங்கப்பூரின் சிங்லாப், பூங்கோல், சாங்கி போன்ற இடங்களின் கூட்டுப் புதைகுழிகளில் பல பிணங்கள் இட்டுப் புதைக்கப்பட்டன. [2].

அந்தப் புதைகுழிகளில் பலவற்றை, அந்தக் கட்டுப்பட்டவர்களைக் கொண்டே வெட்டுவித்தார்கள் யப்பானியர்.

அரிதானது உணவு

சிங்கப்பூர் ஒரு தீவு என்றும் அது ஒரு துடிப்பான துறைமுக வணிக நகரமாக இருந்தது என்றும் நாம் அறிவோம்; யப்பானிய ஆக்கிரமிப்புக்கு உள்ளான பிறகு போரின் மீது ஏற்பட்ட இயல்பான அச்சத்தால் வணிகப் போக்குவரத்து குறைந்தது. யப்பானிய நிருவாகம் தீவின் மக்களுக்கும் படைகளுக்கும் தேவைப்படும் உணவுப் பொருள்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. உணவுப் பொருள்களின் வரத்து இயல்பாகவே குறைந்தது. தீவிலேயே வசித்த மக்களுக்கு மீன், இறைச்சி போன்ற உணவுப் பொருட்கள் அரிதாயின. வெளியில் கிடைத்த பொருட்களை யப்பானிய இராணுவமும் படைகளும் முதன்மையாக எடுத்துக் கொண்டார்கள். செயலாக இருந்த சீன ஆண்கள் மொத்த, மொத்தமாகக் கொல்லப்பட்ட நிகழ்வுகளோடு, தமது குடும்பத்தின் ஏனையவர்களின் உணவுக்குப் பெண்களும் குழந்தைகளும் உடல் வலிந்து பணி செய்ய வேண்டிய தேவை எழுந்தது.

உணவுக்குத் தவிப்பு

சூழலில் இது மேலும் மேலும் நிச்சயமற்ற தன்மையையும், தினப்படி வாழ்வியல் அழுத்தத்தையும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு ஏற்படுத்தியது. பொருள் கொடுத்தாலும் இராணுவ நிர்வாகம் கொடுக்கும் உணவு அளவுக்குட்படுத்தப்பட்டதாகவே இருந்தது ( rationed supplies). ஒரு ஆணுக்கு ஒரு மாதத்திற்கு சுமார் 12 கிலோ அரிசி என்ற கணக்கில் மட்டுமே தானியம் கொடுக்கப்பட்டது; பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இன்னும் குறைவான அளவு தானியம் கிடைத்தது. தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட இந்த அளவு, போர் தொடரத் தொடர, படிப்படியாக குறைக்கப்பட்டு 1945இல் கிட்டத்தட்ட பாதியாகி ஒரு ஆணுக்கு சுமார் 5 கிலோ அரிசி மட்டுமே ஒரு மாதத்திற்குக் கிடைத்தது. மக்கள் தீவில் மரவள்ளிக் கிழங்கை அதிகம் பயிரிடத் தொடங்கினார்கள். அவித்த மரவள்ளிக்கிழங்கு, கம்போங்குகளில் நீர்நிலைகளில் கிடைக்கும் மீன் போன்ற உணவுகள் வழக்கமான உணவாயின. மக்கள் அவ்வாறு பயிரிட்டாலும் அதனை யப்பானிய இராணுவத்தினர் பறித்துக் கொண்டு போவார்கள் என்ற அச்சத்தினால், நகரத்தை விட்டு வெளியேறி மலாய் பகுதிகளுக்கு மக்கள் செல்லத் தொடங்கினார்கள். இருந்த மக்களை விவசாயம் செய்து விளைபொருட்களை உற்பத்தி செய்யும்படி, தீவின் இராணுவ நிருவாகம் வற்புறுத்தியது. தவறுகள் குற்றங்களாகக் கருதப்பட்டன; குற்றங்களுக்குக் கொடிய தண்டனைகள் அளிக்கப்பட்டன.

மொழி, கல்வி, பொது நிருவாக நிலை

யப்பானியர் அவர்களது மொழியான யப்பானிய மொழியை பள்ளிக் குழந்தைகள் முதல் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். பள்ளிகளில் யப்பானிய மொழி அறிமுகப்படுத்தப்பட்டது.யப்பானிய மொழி கற்றுக் கொள்ளத் தனிப்பள்ளியையும் யப்பானிய இராணுவ நிருவாகம் தொடங்கியது. தினமும் சங்கொலி முழங்கியவுடன், மக்கள் பொது இடங்களில் குழுமி யப்பான் இருக்கின்ற திசை நோக்கி மண்டியிட்டு, யப்பானிய தேசிய கீதத்தை இசைக்க பணிக்கப்பட்டார்கள்.

யப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் இருந்த சிங்கப்பூரில் ஒவ்வொரு மாதமும் சுமாராக 50 கைக்குழந்தைகள் மற்றும் சின்னஞ்சிறு குழந்தைகள், குழந்தை ஏசு தேவாலயத்தின் வாசலில் அநாதையாக விடப்பட்டன என்ற ஒரு புள்ளிவிவரம் தரும் அதிர்ச்சியிலிருந்து சமூக நிலை எவ்வாறு இருந்தது என்பதை உணரலாம்.

குற்றங்களுக்குக் கடும் தண்டனைகளும், சிறைவாசமும் வழங்கப்பட்டாலும், சிறைக் கைதிகள் மிக மோசமான நிலைமையில் இருக்க வேண்டியிருந்தது. பொது சமூகத்துக்கே தேவையான அத்தியாவசியப் பொருட்கள் ஒன்றும் கிடைக்காத நிலையில் சிறைக் கைதிகளின் நிலை எவ்வாறு இருந்திருக்கும்? ஆரோக்கியமான மனிதனுக்கு 2200 கலோரி உள்ள உணவுப் பொருள் தேவைப்பட்ட நிலையில், சிறைக்கைதிகளுக்கு சுமார் 1000 கலோரி அளவுள்ள உணவுப் பொருள் மட்டுமே அளிக்கப்பட்டது.

போதிய பராமரிப்பு இல்லாதது, அளவுக்கதிகமான நெருக்கடி, ஊட்டமற்ற உணவு போன்றவற்றால் சிறைகளில் தொற்று நோய்கள் பெருகின. ஆடை, செருப்பு போன்றவற்றிற்கும் மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏறத்தாழ 14000 சிறைக்கைதிகள் இந்தக் காலகட்டத்தில் மரணமடைந்தார்கள்.

கைதிகளின் கோரநிலை

சிங்கப்பூரின் பணவிடை மாற்றப்பட்டு, யப்பானியப பணம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் பூக்களின் படமும், வாழைமரத்தோடு கூடிய வாழைத்தார் இருக்கும் படமும் இருந்ததால் அது ‘வாழைப்பழநோட்டு’ என்ற பொருளில் பனானா கரன்சி என்று பொதுமக்களால் அடையாளப்படுத்தப்பட்டது.

விண்ணைத் தொட்ட விலைவாசி

சிங்கப்பூரில் ஏற்கனவே இருந்த பிரித்தானிய காலனி நிருவாகம் வெளியிட்டிருந்த பணவிடை முற்றாக யப்பானிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருந்தது; எனினும் தென்கிழக்காசிய வட்டாரத்தின் மற்ற இடங்களில், அந்தப் பணவிடைக்குச் செலாவணி இருந்ததால் அது பெரிதும் மதிப்பில் விழவில்லை. ஆனால் வாழைப்பழ நோட்டுக்கு அந்த செலாவணிப் பெறுமதி சிங்கப்பூரில் இல்லையாதலால், அந்தப் பணவிடைக்கு சந்தை மதிப்பு இல்லாதிருந்ததோடு, நாள் செல்லச்செல்ல மேலும் அதன் மதிப்பு வீழ்ந்தது; அதனை வாங்குவார் அருகினார்கள். விளைவாகப் பொருட்களின் விலை விண்ணுச்சத்திற்குப் போனது. போர் தொடங்குவதற்கு முன்னர் சிங்கப்பூரில் 100 காடிக்கான (60 கிலோ) அரிசியின் விலை சுமார் 5 வெள்ளியாயிருந்தது. அதே பொருள் யப்பானிய ஆக்கிரமிப்பின் 1944 ஆம் ஆண்டு சுமார் 5000 வெள்ளிக்கு உயர்ந்தது![3]

இந்தக் காரணங்களால் ஆக்கிரமிப்புச் சிங்கப்பூரில் கள்ளச்சந்தை துடிப்பாக இயங்கியது.

பிரித்தானிய பணத்தாள்
யப்பானிய வாழைப்பழப் பணத்தாள்

கள்ளச் சந்தையில் தங்க நகைகள், மற்றும் உணவுப் பொருட்கள் பண்டமாற்று முறையில் பரிமாற்றம் பெற்றன. லீ க்வான் யூ தனது தி சிங்கப்பூர் சுடோரி நூலிலும் அந்நாட்களில் கள்ளச் சந்தை எவ்வாறு இயங்கியது என்றும், அப்போது பதின்மத்தில் மாணவனாக இருந்த தான் எவ்வாறு கையில் இருந்த பணத்தைக் கொண்டு, செலாவணி ஆகக் கூடிய சிறு தங்கத் தோடு போன்றவற்றை வாங்கி, பின்னர் சில நாட்கள் கழித்து விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை, எவ்வாறு தனது குடும்பத்தின் உணவு சம்பாத்திய தேவைக்குப் பயன்படுத்த முடிந்தது என்பனவற்றை விவரித்து எழுதியிருக்கிறார்.

இரணகளத்திலும் யப்பானியர்களுக்கான கிளுகிளுப்பு

சிங்கப்பூரின் வசதி படைத்த சமூகங்கள் வசித்த பல பகுதிகளில் இருந்த வீடுகள் ‘சொகுசு நிலைய’ங்களாக யப்பானிய இராணுவத்தினரால் மாற்றப்பட்டன. வீட்டுச் சொந்தக்காரர்கள் தாமே ஓடிப்போயிருந்தார்கள் அல்லது சில இடங்களில் விரட்டியடிக்கப்பட்டார்கள். கொரிய, மலாய், தாய்லாந்து மற்றும் சீனப் பெண்கள் அந்த வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டார்கள். யப்பானிய இராணுவப் படையின் காமத் தேவைகளைத் தீர்த்து வைக்கவேண்டுவதே அவர்களது பணி. அந்தப் பெண்களில் 14 வயதேயான இளஞ்சிறுமிகளில் இருந்து 35 வயது வரையான பெண்கள் வரை பலர் இருந்தார்கள். வார இறுதி நாட்களில் இந்த வீடுகள் இருந்த பகுதிகளில் நெடும் வரிசைகளில் படையினர் சாரிசாரியாகக் காத்து நிற்பார்கள். அந்த வீடுகள் இருந்த பகுதிகள் மரப் பலகைத் தடுப்புகளால் அரண் போல அமைக்கப்பட்டன. ஒரு பெண், ஒரு நாளில் ஏறக்குறைய 30 லிருந்து 40 ஆண்களுக்கு காமப்பணி செய்யவேண்டியிருந்தது. இந்த கொடும் சுமையில் பெண்கள் நோய்ப்படுவதும் இறப்பதும் பெரும் எண்ணிக்கையில் நடந்தன. அந்த எண்ணிக்கை கொரியா, பர்மா, தாய்லாந்து போன்ற இடங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட புதிய பெண்களால் மீண்டும் நிரப்பப்பட்டன. இந்த நிலையங்களில் சில யப்பானியப் பெண்களாலும் நிரப்பப் பட்டன; அவர்கள் யப்பானிய இராணுவ அதிகாரிகளின் தேவைக்காக மட்டும் வேலை செய்தார்கள். பெரும் சமூக அவலமாக இது நடந்தாலும், இந்த வடிகால் ஏற்பாட்டினால் ,பொது சமூகத்தில் இராணுவத்தினரால் ஏற்படும் கற்பழிப்புகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்ததாக சில கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

ஆக்கிரமிப்பின் ஆவணங்கள்

சிங்கப்பூர் யப்பானிய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த நாட்களை அதிகாரப் பூர்வமாக விவரிக்கும் நூல்களில் முக்கியமானது லீ கெயோக் போய் (Lee Geok Boi) எழுதிய தி சியானன் இயர்சு (The Syonan Years – Singapore under Japanese rule 1942-1945) என்பது. இது இந்தக் கொடுங்காலத்தை மிகச் சரியாக ஆவணப்படுத்துகிறது. இது தவிர லீ க்வான் யூ அவர்களின் தி சிங்கப்பூர் சுடோரியின் ஒரு அத்தியாயம் பல செய்திகளை நேரடி சாட்சியாக ஆவணப்படுத்துகிறது. அப்போது லீ அவர்கள் பதின்ம வயது பள்ளி மாணவர். இன்னும் சில ஆவணங்கள், அந்த நாட்களின் சாட்சியாயிருந்தவர்கள் பலரை, பின்னாட்களில் சந்தித்து அவர்களது அனுபவத்திலிருந்த பல செய்திகள் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை சிங்கை மரபுடைமை ஆவணக் காப்பகம் மற்றும் சிங்கை தேசிய நூலகத்தின் கருவூலங்கள் போன்றவற்றில் காணக் கிடைக்கின்றன. இந்த ஆவணங்கள் பொதுவான நோக்கில் பின்வரும் நான்கு விதமான வகைப்பாட்டில் இந்த கொடுங்காலத்தின் உண்மைகளைப் பதிவு செய்கின்றன. 1. சமூக, பொருளாதார நோக்கில் கள்ளச்சந்தை, கூட்டுக் கொலைகள் போன்றவற்றை ஆவணப்படுத்துவது; 2. புவியியல் நோக்கில் வாழ்வியல் இடங்களில் நிகழ்ந்த மாற்றங்கள், இடப்பெயர்வுகள்; 3. சிங்கப்பூரில் மற்றும் தென்கிழக்காசியாவில் அக்காலகட்டத்தில் இருந்த இந்தியர்களுக்கு யப்பானியர்கள் கொடுத்த அணுசரனையான சலுகை, பதவிகள், வாய்ப்புகளால் சுபாசு சந்திர போசின் இந்திய தேசியப் படையும் அதன் இயக்கம் இந்திய விடுதலைப் போரில் செலுத்திய தாக்கம் பற்றிய செய்திகள்; 4. யப்பானிய மொழியை திறந்த மனத்தோடு கற்றுக் கொண்ட சிங்கப்பூர் சமூகத்தின் சிலரோடு சமூக அளவில் யப்பானியர்கள் எந்த அளவு ஒன்ற முடிந்தது என்பது பற்றியும், அது விளைவித்த சமூக மென்மாற்றங்கள் பற்றியும்; என இந்த நான்கு நிலைகளில் இந்த ஆய்வுக் குறிப்புகள் அக்காலகட்டத்தின் நிகழ்வுகளையும், விளைவுகளையும் ஆவணப்படுத்தியிருக்கின்றன.

(தொடரும்)

__________

1.  The Singapore Story – Memoirs of Lee Kuan Yew – From the part of ‘The Japanese Invaders’.
2. Syonan Years – யப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தின் நேரடிச் சாட்சிகள் விவரித்த சம்பவங்களில் இருந்து தொகுக்கப்பட்ட சிங்கை தேசிய ஆவணக் காப்பக குறிப்பேடுகளில் இருந்து
3. https://en.wikipedia.org/wiki/Japanese_occupation_of_Singapore – விக்கிபீடியா தளம் தரும் குறிப்பில் இருந்து.

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *