The tough gets going when the goings get tough – A proverb
ஆகத்து மாதம் 15ஆம் நாள் யப்பான் இரண்டாவது உலகப் போரில் நேச நாடுகளின் படைகளிடம் சரணடைந்தது.
1945ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் பிரித்தானியத் துருப்புகள் மீண்டும் ஆரவாரமும் மகிழ்ச்சியும் நிரம்பிய வரவேற்புக்கிடையில் சிங்கப்பூருக்குத் திரும்பின.
1945ஆம் ஆண்டு செப்டம்பர் பன்னிரெண்டாம் நாள். நேரம் காலை 10:30 மணி.
சிங்கப்பூர் நகரில் நகரமண்டபத்துக்கு ஏழு யப்பானிய உயர் இராணுவ அதிகாரிகள் சீருடையில் வந்தார்கள். அவர்களது பார்வை நேராகவும், கவனம் கலையாமலும், முகக்குறி கடமையுணர்வைக் காட்டுவதாகவும் இருந்தது. முன்னதாக யப்பானியப் பேரரசர் ஆணைப்படி யப்பானிய இராணுவம் சரணடைந்திருந்தது. தங்களது மன்னரின் சொல்லை உயிர்போல மதிக்க வேண்டியவர்களாக அந்த அதிகாரிகள் தோற்றம் தந்தார்கள். பேரரசர் ஆணை இல்லையென்றால், சரண்டைவதற்குப் பதிலாக தம்மைத் தாமே மாய்த்துக் கொள்ளும் செயலைக் கூடச் செய்யும் உறுதி படைத்தவர்களாக அவர்கள் தோற்றம் தந்தார்கள். அவ்வாறே அவர்களது முகத் தோற்றம் உணர்த்தியது. அந்த அதிகாரிகள் நகர மண்டபத்துக்கு வந்தபோது, சுற்றிக் கூடியிருந்த மக்கள் கூச்சலிட்டு அவர்களைப் பரிகசித்தார்கள். அவற்றால் அந்த அதிகாரிகள் சிறிதும் பாதிப்படையவில்லை.
45 நிமிடங்கள் கழித்து தென்கிழக்காசியாவின் பிரித்தானிய காலனி அரசின் தலைமைத் தளபதியாக இருந்த மௌன்ட்பேட்டன் பிரபு தனது வெள்ளை நிற கப்பற்படைச் சீருடையில் வந்தார். அவரோடு மற்ற பிரித்தானிய அதிகாரிகளும், படைத்தலைவர்களும் வந்தார்கள். முறைப்படி யப்பானிய இராணுவம் பிரித்தானிய பொறுப்பு இராணுவத்திடம் சரணடைந்தது.
மக்கள் பழைய பிரித்தானிய ஆட்சியின் இலகுவான, இனிமையான நாட்கள் மீண்டும் வந்துவிடும் என்று நினைத்து மகிழ்ச்சியும் ஆரவாரமும் கொண்டு கூச்சலிட்டார்கள். ஆனால் நிலைமை அத்தனை விரைவாகச் சீரடையாது என்று புரிந்து கொள்ள மக்களுக்குச் சிலகாலம் பிடித்தது.
போரின் பின்விளைவுகள்
1945 ஆகத்துக்குப் பிறகு சிங்கப்பூர் நகரம் போர்வீரர்கள் மற்றும் அவர்களுடைய தளவாடங்களால் நிரம்பியிருக்கும் நகராக மாறியது. ஆக்கிரமிப்புக் காலத்தில் மூடப்பட்ட பழைய வணிகக் கடைகள் எல்லாம் உடனடியாக மீண்டும் திறக்கப்படவில்லை; ஒன்று அந்த நிறுவனங்களின் முதலாளிகள் நகரை விட்டுப் போயிருந்தார்கள்; அல்லது முன்னாளில் பணி செய்த பணியாளர்கள் காணாமல் போயிருந்தார்கள். அதோடு சரக்குகளின் வரத்தும் மிகுந்த பற்றாக்குறையாகவும், நினைத்த நேரத்திலும் நிகழ்ந்தது. கப்பல்கள் வழமையாக வர இயலவில்லை; தானியங்களோ பாலோ போதுமான அளவுக்கு கிடைக்கவில்லை. இங்கிலாந்திலேயே உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு அளவு-முறை (ரேசன்) புழக்கத்தில் இருந்தது. நினைத்த பொருட்களை எல்லாம் எவரும் வாங்கி விட இயலவில்லை. பிரித்தானிய இராணுவத்துக்கும் சிங்கப்பூரில் இருந்த நிலைப்படைக்கும், இந்த நிலை புரிந்திருந்தது. இயன்றவரை அவர்கள் மக்களோடு இணக்கம் காட்ட முயற்சி செய்தார்கள்; சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட சிகரெட்டுகள், பானங்கள் போன்றவற்றை தங்களுக்கு அறிமுகமான பொதுமக்களுக்கு நட்போடு அளித்தார்கள். எனினும் மக்கள் பொதுவாக அத்தியாவசியப் பொருள்களுக்குக் காத்திருக்க வேண்டியிருந்தது. இது பதுக்கல்களை ஊக்குவித்தது. கருப்புச் சந்தை புழங்கியது; ஆனால் அது புழங்கியது அனைவருக்கும் தெரிந்தே இருந்தது என்பதும், அதனை அடக்கி ஒடுக்க எவரும் முயலவில்லை என்பதுமே புதிய மாற்றமாக இருந்தது.
போருக்குப் பின்னான அந்தக் காலத்தில் மக்களின் இடர்களைக் குறைக்கும் வகையி்ல ஆங்காங்கே இயன்றவர்கள் பொது மக்களுக்கு உதவிகள் செய்தார்கள். பிரின்சப் தெருவில் இருந்த ஒரு மருந்தகத்தில் காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை அன்னதானம் – இலவச உணவு வழங்கப்பட்டதற்கான பதிவுகள் வரலாற்றில் உள்ளன. [1]
பிரித்தாண்டிருந்த யப்பானியர்கள்
யப்பானியர்களின் அடக்குமுறை பல்வேறு இனக்குழுக்களிடையே பலவிதங்களில் வெளிப்பட்டது என்பதைப் பார்த்தோம். இதில் ஒருவாறு அதிகம் பாதிக்கப்பட்ட குழுவாக சீன இனத்தவரே இருந்தனர். எனவே அவர்கள் எளிதாக யப்பானியர்களுக்கு எதிராக ஒன்றிணைந்தனர். மலாயா மக்கள் யப்பானிய எதிர்ப்பு இராணுவம் என்ற பெயரில் (Malaysian People Anti Japan Association MPAJA) ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இதனைப் பின்னின்று உருவாக்கியது சீனத்தின் கம்யூனிசுட் கட்சியின் (Malaysian Communist Party) உறுப்பினர்கள், அதன் பற்றாளர்கள்; அவர்களின் பின்புலம் சீனப் பெருநாடு. அவர்கள் மிகத் தீவிரமாக மலாயாவிலும், சிங்கப்பூரிலும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த அமைப்பில் சீனர்களைத் தீவிரமாக ஈடுபடுத்த சீனத்தின் கம்யூனிச அரசியல் குழுக்களும் பின்னணியில் களத்தில் இறங்கின. அவர்களது விசுவாசம் பிரித்தானியாவின் மீது இல்லை; பதிலாக தாயக சீனத்தின் மீது இருந்தது.
இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு யப்பானியர்கள் சீனர்களுக்கும் மலாய் இனத்தவர்களுக்கும் இடையே வேண்டுமென்றே வெறுப்பை வளர்த்தனர். அவர்கள் சரணடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூட இரு குழுக்களுக்கும் இடையே பகையை மூட்டி கலகத்தை வளர்த்து விட்டனர் என்பதற்கான சாட்சிகள் வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன. [2]
யப்பானிய ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்த காலத்தில், பிரித்தானியா ஆரவாரமாக சிங்கப்பூரில் உள்நுழைந்தது. அவர்கள் யப்பானிய இராணுவத்தை எதிர்த்தவர்கள் என்ற எதிரிக்கு எதிரி என்ற நோக்கில் மேற்கண்ட இரண்டு அமைப்புகளையும் ஆதரித்தார்கள். ஆயினும் பிரித்தானியாவுக்கு கம்யூனிசக் கொள்கைகள் மீதிருந்த இயற்கையான வெறுப்பும், அவர்களது எதிர்கால அரசியல் நோக்கத்தைப் பற்றி பிரித்தானியாவுக்கு அவர்கள் மீது ஐயமும் இருந்ததால், அவர்களை என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். சரி, போகிறது, எம்சிஏ இயக்கத்தினரைத் தோழமையாக ஏற்றுக் கொள்கிறோம்; ஆனாலும் அவர்கள் ஆயுதங்களை வைத்திருப்பதை நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை; தாங்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைக்கும் எம்சிபி’யின் உறுப்பினர்களுக்கு தலா 350 வெள்ளி அன்பளிப்பாகத் தரப்படும் என்று சிங்கப்பூரின் திரும்பி வந்த பிரித்தானிய அரசு அறிவித்தது. திசம்பர் 1945 இலிருந்து, சனவரி 1946க்குள் சுமார் 6500 எம்பிசி குழுவைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு ஆயுதங்களை ஒப்படைத்துப் பணம் வாங்கினார்கள்; அந்தக் குழுவி்ன் தலைவராகக் கருதப்பட்டவர் சின் பெங் என்ற சீனப் போராளிக் குழு உறுப்பினர். அவருக்கு சிங்கப்பூர் நகர மண்டபத்தில் 1946ஆம் ஆண்டு சனவரி 6ஆம் நாள், பிரித்தானியத் தீவுக் காலனி நிருவாகம் பர்மா சுடர் (Burma Star) என்ற விருதை அளித்துக் கௌரவித்தது. இவற்றின் மூலம் அவர்களைத் தங்கள் பக்கம் வைத்துக் கொள்ளலாம் என்பதே பிரித்தானிய காலனி நிருவாக அரசின் நோக்கம்.
பிரித்தானிய நிருவாகம் – போர் தந்த புதிய சிக்கல்கள்
இவ்வாறு எம்பிசி குழுவினரை தமக்கு ஆதரவாக மாற்றிக் கொள்ளலாம் என்று காலனி நிருவாகம் நம்பினாலும் அது முழு முற்றாக களத்தில் நடைபெறுவதை, சீன கம்யூனிசக் கட்சி விரும்பவில்லை. எனவே கிடைத்த ஆலோசனைகளின் பேரில், ஆயுதங்களைக் கொடுக்காத சிலர், மேலும் இரகசியமாக ஆயுதங்களைச் சேகரித்துக் கொண்டு இருந்தனர்.
மலாயான் கம்யூனிசக் கட்சி யப்பானியர்களையும் பிரித்தானியர்களையும் அதிகம் வித்தியாசப் படுத்திப் பார்க்கவில்லை. அவர்களுக்கு பிரித்தானியர்களும் எதிரிகளே. போலவே பிரித்தானியா கம்யூனிச உறுப்பினர்களை, போகப் போக கடுமையோடும், ஐயத்தோடும்தான் அணுகியது.
எம்சிபி என்ற மலாயா கம்யூனிசக் கட்சி, மலாயா பகுதிகளில் பிரித்தானியரை எதிர்த்து அறிவிப்புகள் ஏதுமின்றிப் போர் தொடங்கியது. இந்தத் தாக்குதல்கள் மறைந்து தாக்கும் கெரில்லாப் போர்முறையில் இருந்ததால் மலாயாவில் இருந்த பிரித்தானியர் பலர் கொல்லப்பட்டார்கள். இதனை எதிர்த்து எடுக்கப்பட்ட நடவடிக்கையே 1948இல் காலனி நிருவாகம் அறிவித்த அவசரநிலை. இந்த அவசரநிலையைத் தொடர்ந்து எம்சிபி மற்றும் எம்டியு என்ற மலாயன் மக்களாட்சிக் கூட்டணி போன்ற கட்சிகள் தடை செய்யப்பட்டன; இந்த அவசர நிலையும், அதனைத் தொடர்ந்த நடவடிக்கைகளும் மலாய்களுக்கும் சீனர்களுக்கும் இருந்த பிளவை அதிகப்படுத்தின.
தனி நிருவாக அலகானது சிங்கப்பூர்
போருக்கு முன்னர் சிங்கப்பூர் மலாயா பகுதியின் காலனி நிருவாகத் தலைமையகமாக இருந்தது. ஆனால் போருக்குப் பின்னர் சிங்கப்பூர் மலாயாவின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிக்கப்படுகிறது. 1945 செப்டம்பர் முதல் 1946 மார்ச்சு வரை பிரித்தானிய இராணுவ நிருவாகத்தின் கீழிருந்த சிங்கப்பூர், பின்னர் முடியாட்சியின் காலனி நிருவாகத்தின் கீழான தனிப்பகுதியாக மாறியது. மலாயா ஒன்றியத்தில் பினாங்கு, மலாக்கா போன்ற மற்ற பகுதிகள் அங்கம் பெறுகின்றன. இந்த மாறுதல் மலாய்க் காரர்களுக்கு திகைப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் பிரித்தானிய மலாயாவின் புதிய பகுதிகளில் ஆறு மாவட்டங்களைத் தவிர வணிகப் பெரும்பான்மையினராக சீனர்களே இருந்தனர். சிங்கப்பூரை உள்ளடக்கிய மலாயா ஒன்றியத்தில் சீனர்கள் 44.7 விழுக்காடும், மலாயர்கள் 38.2 விழுக்காடும், மற்றவர்கள் 5.29 விழுக்காடும் இருந்தனர். எனவே சீனர்கள் அடர்வு அதிகம் கொண்டிருந்த சிங்கப்பூரைத் தனி நிருவாகப் பிரிவாகப் பிரித்து விட்டால், சிங்கப்பூர் தவிர்த்த மலாயா ஒன்றியத்தில் மலாய்க் காரர்களின் எண்ணிக்கைப் பெரும்பான்மை பேணப்பட்டு விடும் என்பதும் காலனி நிருவாகம் எடுத்த இந்த முடிவுக்கு இன்னொரு முக்கியக் காரணம். காலனி நிருவாகத்தின் இந்த மேலாண்மை நடவடிக்கை மலாய் சமூகத்தினரால் அவ்வளவு இரசிக்கப்படவில்லை.
இது மலாய்க்காரர்களின் பொருளியல் திறத்தன்மையைக் குறைத்துவிட்டதாக அவர்களுக்கு பிரித்தானிய காலனி நிருவாகத்தின் மீது அங்கலாய்ப்பு இருந்தது. சமூக இனக்குழுக்கள் ஒன்றின் மீது மற்றொன்றுக்கு அவநம்பிக்கையும் ஆதங்கமும் அதிகப்பட்டிருந்தன.
தவிர இந்த நேரத்தில் 1948இல் தென்கிழக்காசியாவின் இன்னொரு முக்கியப் பகுதியான இந்தியாவுக்கு விடுதலை கொடுத்து விட்டு பிரித்தானியா வெளியேறுகிறது. எனவே தென்கிழக்காசியாவில் காலனி நிருவாகம் என்ற சொல் விரும்பத்தகாத ஒரு சொல்லாக மெதுவாக மாறுகிறது. தென்கிழக்காசிய நாடுகள் எல்லாவற்றில் இருந்தும் ஒன்றன் பின் ஒன்றாக தாம் வெளியேற வேண்டியிருக்கும் என்ற எண்ணம் பிரித்தானிய முடியாட்சி நிருவாகத்துக்குப் புரிந்தது. எனவே இயன்றவரை காலனி நிருவாகப் பிடியை வைத்திருக்க வேண்டிய செயல்களைச் செய்ய வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.
இத்தகைய கலந்து கட்டிய சூழலில் சிங்கப்பூரில் 1948 இல் போருக்குப் பின்னரான முதல் தேர்தல் நடைபெறுகிறது. அதில் நிறைய புதிதாகத் தோன்றிய மற்றும் ஏற்கனவே இருந்த அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. சிங்கப்பூர் நிருவாக அமைப்பு போருக்குப் பிறகு எவ்வாறு கையாளப் பட்டது என்பதை அடுத்தடுத்த பகுதிகளில் அலசுவோம்…
சிங்கப்பூரும் லீ க்வான் யூவும்
சிங்கப்பூரின் ஆட்சி இவ்வாறு பிரித்தானிய முடியாட்சிக் காலனி நிருவாகத்தின் கீழ் அல்லாடிக் கொண்டிருந்த போது, லீ க்வான் யூ என்ன செய்து கொண்டிருந்தார்? பின்னாட்களின் சிங்கப்பூரின் அடையாளமாகப் போகிற லீ க்வான் யூ என்பவர் இந்த நேரத்தில் யாராக இருந்தார்? சிறிது பார்த்து விடுவோம்.
லீ க்வான் யூ பிறந்தது செப்டம்பர் 16, 1923ஆம் ஆண்டு. இதே ஆண்டில்தான் யோகர் பாலம் சிங்கப்பூர் நகரையும் யோகரையும் இணைத்துக் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது என்பது ஒரு கூடுதல் ஒப்பீட்டுச் செய்தி. லீ க்வான் யூ பிறந்தது சிங்கப்பூரின் 92, கம்போங் யாவா தெருவில் இருந்த ஒரு இரண்டு மாடி பங்களா வீட்டில். அவரது தாய் சுவா யிம் நியோ(Chia Jim Neo) வுக்கு அப்போது 16 வயது; தந்தை லீ சின் கூன் (Lee Chin Koon); அவருக்கு வயது 20. லீ க்வான் யூவின் தந்தை ஒரு பணக்காரரின் மகனாக வளர்ந்தவர். அவருக்கு அப்போதை சிங்கப்பூரின் இரண்டு புகழ்பெற்ற மேற்கத்திய கடைத் தொகுதிகளான (டிபார்ட்மெண்டல் சுடோர்), இராபின்சனிலும், யான் லிட்டில் (Robinson , John Little) என்ற இரண்டு கடைகளிலும் வரம்பு இல்லாத பொருள் வாக்கிங்கொள்ளும் கணக்கு இருந்ததாக லீ க்வான் யூ தனது தந்தையைப் பற்றி தனது நூலில் பதிவு செய்கிறார். லீ க்வான் யூவின் குடும்ப வரலாறு அவரது தந்தை வழியில் கொள்ளுத் தாத்தாவிலிருந்து சிங்கப்பூரில் தொடங்கிய ஒன்று. யப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் லீ க்வான் யூ, சிங்கப்பூரின் புகழ் பெற்ற இராபிஃல்சு கல்வி நிலையத்தில் பள்ளி இறுதி வகுப்பை முடித்திருந்தார் என்று ஏற்கனவே பார்த்தோம்.
அடுத்த சில பகுதிகளில் லீ க்வான் யூ உருவான கதையையும், சிங்கப்பூர் எப்படி அவரைப் பற்றிக் கொண்டது என்பதையும் பற்றிச் சிறிது அலசுவோம்.
(தொடரும்)
__________
1. சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பக மூலங்களில் இருந்து.
2. Yeng Hoon – an accountant who had been an accountant in the Japanese occupied singapore had given this information in an interview – From the resources of Singapore National Archive book- Singapore: a journey of Nation Buliding