Skip to content
Home » ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #16 – எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு (1967) – 2

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #16 – எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு (1967) – 2

எம்.ஆர்.ராதா தரப்பில் வாதிடப்பட்டதாவது…

1. எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் தீவிர அரசியல் கருத்து வேறுபாடுகள் நடைபெறும் அளவுக்கு எம்.ஜி.ஆருக்கு தி.மு.கவில் கொள்கைப்பிடிப்போ, செல்வாக்கோ இல்லை.

2. எம்.ஜி.ஆர்தான் எம்.ஆர்.ராதாவைச் சுட்டார் . சம்பவ இடத்துக்கு எம்.ஆர்.ராதா கொண்டு வந்திருந்த மஞ்சள் பையில் எம்.ஜி.ஆரின் ஆள்கள்தான் வெடிக்காத இரண்டு தோட்டாக்களைப் போட்டிருக்கவேண்டும்.

3. எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் ஒருவரிடமிருந்து ஒருவர் துப்பாக்கியைப் பிடுங்குவதற்காக சண்டையிட்டனர். அந்தச் சண்டையில்தான் எம்.ஜி.ஆருக்குக் குண்டடிப்பட்டது. எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை வேண்டுமென்றே சுடவில்லை.

4. சம்பவத்தின்போது எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே நடந்த மோதலில் எம்.ஆர்.ராதாவுக்குக் காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்தின் காரணமாக எம்.ஆர்.ராதாவின் ரத்தம், எம்.ஜி.ஆரின் சட்டையில் படிந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட எம்.ஜி.ஆரின் சட்டை துவைக்கப்பட்டு, அதிலிருந்த ரத்தக்கறை யாருடையது என்று கண்டுபிடிக்க முடியாமல் அழிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டபோது, எம்.ஜி.ஆருக்கு ரத்த வகைகளைப் பற்றித் தெரியுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அந்தக் கேள்விக்கு எம்.ஜி.ஆர் தெரியாது என்று பதிலளித்தார். உடனே வழக்கறிஞர் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்திருந்த ‘நாடோடி’ திரைப்படத்தின் ஒரு காட்சியில் ரத்த வகைகளைக் கொண்டு திரைக்கதையில் திருப்பம் கொண்டுவந்திருந்ததைச் சுட்டிக்காட்டினார்.

5. சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வாசுவிடம் இருந்தது. அதை அவர் வழக்கறிஞரின் ஆலோசனையைக் கேட்டுவிட்டுதான் காவல் துறையிடம் ஒப்படைத்திருக்கிறார். இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது.

6. எம்.ஆர்.ராதா பிரபல நாடக நடிகர். அவர் நாடகங்களில் நடிப்பதால் மாதந்தோறும் அவருக்கு 50,000 ரூபாய்வரை வருமானம் கிடைக்கிறது. அதனால் அவர் கடன்பட்டார் என்று அரசுத் தரப்பில் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

7. எம்.ஆர்.ராதா சம்பவத்துக்குப் பிறகு, காவல் துறைக்கு, தான் கைப்பட எழுதிக் கொடுத்தாகச் சொல்லப்படும் ‘எனது முடிவு’ என்ற தலைப்பு கொண்ட அறிக்கை உண்மையாக எம்.ஆர்.ராதாவால் எழுதப்படவில்லை (அந்த அறிக்கையில், கொள்கைக்காகவும், கட்சி நலனுக்காகவும் தற்கொலைத் தாக்குதல் நடத்தினாலும் தகும் என்று குறிப்பிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.) எம்.ஆர்.ராதா கையெழுத்து அடங்கிய வெற்றுக் காகிதத்தில், காவல் துறை தங்களுக்குத் தேவையான விவரங்களைப் பதிவு செய்து, அதை எம்.ஆர்.ராதா கொடுத்த வாக்குமூலமாக ஜோடித்திருக்கிறார்கள்.

எம்.ஆர்.ராதா வழக்கறிஞர்கள் முன் வைத்த வாதத்துக்கு, அரசுத் தரப்பில் மறுவாதம் வைக்கப்பட்டது.

1. ஒரு குற்றம் நடைபெறும்போது, அதைப் பார்த்த நேரடி சாட்சிகள் இல்லாத சமயத்தில், சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சிகளை வைத்துக் குற்றத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில்தான், குற்றமிழைத்தவருக்குக் குற்றம் புரிவதற்குத் தூண்டுதல்கள்/காரணங்கள் என்ன என்பதைப் பற்றி அலசி ஆராயவேண்டும். எம்.ஆர். ராதாதான் எம்.ஜி.ஆரைச் சுட்டிருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டதால், எம்.ஆர்.ராதா என்ன காரணத்துக்காக எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்பது அவசியமற்றதாகிவிடுகிறது.

2. துப்பாக்கி மற்றும் வெடிக்கும் போர்கருவிகளின் நிபுணர் (Fire-arms expert), தன்னுடைய சாட்சியத்தில், எம்.ஜி.ஆரின் தொண்டையில் பாய்ந்த குண்டு எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்தது என்று தெரிவித்திருக்கிறார். மேலும், மாநில தடயவியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநர் தன்னுடைய ஆய்வறிக்கையில், எம்.ஆர்.ராதாவின் தலையிலிருந்தும், கழுத்திலிருந்தும் எடுக்கப்பட்ட குண்டுகள் எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டவை என்று தெரிவித்திருக்கிறார். நீதிமன்றத்தில் சாட்சி கூறிய துப்பாக்கி மற்றும் வெடிக்கும் போர்க் கருவிகளின் நிபுணர், ‘சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வேஷ்டி கட்டிக்கொண்டு வரும் ஒருவரால் தன்னுடைய இடுப்பில் வைத்து மறைத்து எடுத்து வரமுடியும்’ என்று தெரிவித்தார்.

3. குற்றம் விளைந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் துப்பாக்கியைப் பிடுங்குவதில் சண்டை ஏற்பட்டிருந்தால், அந்தத் துப்பாக்கியை எம்.ஆர்.ராதா பிடுங்கியவுடன் எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா அந்தத் துப்பாக்கியைப் பயன்படுத்தித் தன்னைச் சுடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார், குனிந்திருப்பார், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சித்திருப்பார் அல்லது துப்பாக்கி தன்மீது சுடாமல் இருக்கப் போராடியிருப்பார். இது இரண்டும் நடக்கவில்லை. மாறாக, எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட காயத்தை வைத்துப் பார்க்கும் பொழுது, துப்பாக்கி மிக அருகிலிருந்து எந்தப் போராட்டமும் நடைபெறாத சமயத்தில் நடந்திருக்கிறது.

4. எம்.ஆர்.ராதாவையும் வாசுவையும், எம்.ஜி.ஆர், தன் வீட்டுக்கு வந்தபோது இரு கைகளையும் கூப்பி வரவேற்றிருக்கிறார். அவர் பாலியஸ்டரால் ஆன உடையை உடுத்தியிருந்தார். எம்.ஆர்.ராதாவைப்போல் ஷால் எதும் அணியவில்லை. உடம்பில் துப்பாக்கியை ஒளித்து வைத்திருந்தால், பாலியஸ்டர் துணி மெலிதாக இருப்பதால் அதன் வழியாக அது தெரிந்துவிடும்.

5. எம்.ஆர்.ராதாவால், தான் எந்தத் துப்பாக்கியால் சுடப்பட்டோம் என்று சொல்லமுடியவில்லை. அதாவது எம்.ஜி.ஆர்தான், தன்னை முதலில் சுட்டார் என்று எம்.ஆர்.ராதா சொல்லியிருந்தார். ஆனால், எம்.ஜி.ஆர் வைத்திருந்ததாக சொல்லப்படும் துப்பாக்கியால் தன்னைச் சுட்டாரா அல்லது எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கியைப் பிடுங்கிச் சுட்டாரா என்று எம்.ஆர்.ராதாவால் சொல்லமுடியவில்லை.

6. எம்.ஜி.ஆரும், வாசுவும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் எம்.ஆர்.ராதா, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எம்.ஜி.ஆரைச் சுட்டிருக்கிறார்.

7. எம்.ஆர்.ராதாவுக்கு விளைவிக்கப்பட்ட காயம் மற்றவர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கமுடியாது. காயம் ஏற்பட்ட இடத்தைப் பார்க்கும்போது, எம்.ஆர்.ராதா தனக்குத்தானே அந்தக் காயத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும் என்று தெரிகிறது.

8. எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் சண்டை நடந்தது என்று நிரூபிக்கப்படாததால், எம்.ஆர்.ராதாவுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது என்று சொல்வதும், மேலும், அந்தக் காயத்தினால் ஏற்பட்ட ரத்தம் எம்.ஜி.ஆரின் சட்டையில் படிந்தது என்று சொல்வதும் வாதத்துக்கு ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்தச் சூழ்நிலையில், சட்டை துவைக்கப்பட்டது, அதனால் முக்கிய ஆதாரம் அழிந்துவிட்டது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.

9. வாசு முக்கிய சாட்சி. ஒரே சாட்சி. அவர்தான் குற்றம் நடந்த இடத்தில் இருந்திருக்கிறார். குற்றத்தைப் பார்த்திருக்கிறார். குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் அவர் கைக்குக் கிடைத்திருக்கிறது. எம்.ஜி.ஆர் மற்றும் எம்.ஆர்.ராதா இரண்டு பேரும் குண்டடிபட்டுக் காயத்துடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு என்னவாகும் என்று யாரும் சொல்ல முடியாத நிலை. இந்தச் சந்தர்ப்பத்தில், எங்கே போலீஸ் தன்னைக் குற்றவாளியாக கருதிவிடுமோ என்ற எண்ணம், எந்தச் சராசரி மனிதனுக்கும் ஏற்படுவது சகஜம்தான். தனக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாகத்தான், வாசு துப்பாக்கியைக் காவல் துறையினரிடம் ஒப்படைக்காமல், வழக்கறிஞரின் ஆலோசனையைக் கேட்டு நடக்க முடிவெடுத்திருக்கிறார். இதில் ஏதும் தவறில்லை.

10. எம்.ஆர்.ராதா நாடகத்தில் நடித்து மாதம் 50,000 ரூபாய் சம்பாதித்திருந்தால், அவருக்குச் சுமார் 7 லட்சம் ரூபாய்க்குக் கடன் எப்படி ஏற்பட்டிருக்கமுடியும்? கிடைத்த ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, எம்.ஆர்.ராதாவுக்குப் பணத்தட்டுப்பாடு இருந்தது என்பது உறுதியாகிறது.

11. எம்.ஆர். ராதாவுக்கு எம்.ஜி.ஆரின்மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி இருந்திருக்கிறது. அதனால் எம்.ஜி.ஆரைப்பற்றி ‘நாத்திகம்’ என்ற பத்திரிகையில் கடுமையாக விமரிசனம் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆர் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து, குண்டர்களை வைத்து காமராஜரைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக எம்.ஆர். ராதா தவறாக நினைத்திருக்கிறார். ஆனால், எம்.ஜி.ஆருக்கு அம்மாதிரி எண்ணங்களெல்லாம் இல்லை, இன்னும் சொல்லப்போனால் காமராஜரின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்ற எம்.ஜி.ஆர், காமராஜரைப் பாராட்டியிருக்கிறார். அதையறிந்த எம்.ஜி.ஆரின் கட்சிக்காரர்கள், எதிர்கட்சிப் பிரமுகரை எம்.ஜி.ஆர் பாராட்டியது தவறு என்றும் கூறியிருக்கிறார்கள்.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எம்.ஆர்.ராதாதான் குற்றவாளி என்று முடிவுசெய்து அவருக்குத் தண்டனை வழங்கினார். 262 பக்கங்கள் கொண்ட தன்னுடைய தீர்ப்பில், எம்.ஆர்.ராதாவுக்குப் பின்வருமாறு தண்டனைகளை வழங்கினார்.

1. எம்.ஜி.ஆரைக் கொலை செய்ய முயற்சித்ததற்காக ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை.

2. தற்கொலை முயற்சி செய்ததற்காக 6 மாத சிறைத் தண்டனை.

3. உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்ததால் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை. மற்றும்,

4. துப்பாக்கியை வைத்துச் சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டதால் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை.

அனைத்துத் தண்டனைகளையும் எம்.ஆர்.ராதா ஒரே சமயத்தில் அனுபவிக்கவேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. மேலும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில், எம்.ஆர்.ராதாவின் வயதைக் கருத்தில் கொண்டுதான் அவருக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். எம்.ஆர்.ராதாவுக்கு அப்போது வயது 56.

தீர்ப்பைக் கேட்க நீதிமன்றத்தில் பெரும் கூட்டம் கூடியிருந்தது. தீர்ப்பு வெளியிடப்பட்ட பிறகு, எம்.ஆர்.ராதாவைக் காவல் துறையினர் கைது செய்து கூட்டிச் சென்றனர். குற்றம் நடந்த தினத்திலிருந்து தீர்ப்பு வழங்கப்படும் தினம் வரை, எம்.ஆர்.ராதா ஜாமீனில் வெளிவரவில்லை.

செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, எம்.ஆர்.ராதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் வழக்கத்துக்கு மாறாக, முன் அறிவிப்பின்றி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து எம்.ஆர்.ராதா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனைக் காலத்தை, 7 ஆண்டுகளிலிருந்து 3½ ஆண்டுகளாக குறைத்தது.

இந்த வழக்கில் அனைவரும் வியந்த விஷயம் என்னவென்றால், எம்.ஆர்.ராதா தன்னுடைய துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை அருகிலிருந்து சுட்டிருக்கிறார், பின்னர் தன்னையும் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால், ஆச்சரியம்! இருவர் உயிருக்கும் ஒன்றும் ஆகவில்லை. இது எப்படி என்று எம்.ஜி.ஆர் உட்பட அனைவரும் வியந்தனர். காரணம் இதுதான். எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் தன்னுடைய வீரியத்தை (Muscle Velocity) இழந்திருந்தன. அதனால் அந்தக் குண்டுகளால், தன்னுடைய இலக்கை சீரிய வேகத்தில் போய் தாக்கமுடியவில்லை. அதன் பொருட்டு, சுடப்பட்ட குண்டுகளினால், சுடப்பட்டவர்களுக்கு உயிர்போகும் அளவுக்கு பெருத்தச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

எம்.ஆர்.ராதா குற்றத்துக்குப் பயன்படுத்திய துப்பாக்கியையும், தோட்டாக்களையும் 1950ம் ஆண்டு வாங்கியிருக்கிறார். குற்றம் நடந்த ஆண்டு 1967. இந்த இடைப்பட்ட 17 ஆண்டுகளில் எம்.ஆர்.ராதா தன்னுடைய துப்பாக்கியையும் தோட்டாக்களையும் தன்னுடைய மேஜையின் டிராவில் வைத்திருந்திருக்கிறார். எம்.ஆர்.ராதாவின் டிரா ஒவ்வொரு முறை திறக்கப்படும்போதும், தோட்டாக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றன. தோட்டாக்கள் தன்னுடைய வீரியத் தன்மையை இழந்திருக்கிறன என்று தடயவியல் நிபுணரான டாக்டர் சந்திரசேகர் ஒரு புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.

தண்டனைக் காலம் முடிந்த பிறகு, எம்.ஆர்.ராதா நிறைய நாடகங்களில் நடித்தார், சில திரைப்படங்களிலும் நடித்தார்.

எம்.ஜி.ஆரின் தொண்டையில் பாய்ந்த குண்டை மருத்துவர்கள் ஆரம்ப காலத்தில் அகற்ற விரும்பவில்லை. குண்டை தொண்டையிலிருந்து அகற்றுவதை விட, அகற்றாமல் விட்டுவிடுவதே சரியானது என்று மருத்துவர்கள் எண்ணினார்கள். (மாவீரன் நெப்போலியனுக்குப் போர்க்களத்தில் சண்டை இடும்போது குண்டடிபட்டு உடலில் குண்டு தைத்தது. அதை அவருடைய மருத்துவர்கள் அகற்றவில்லை. நாளடைவில் அந்தக் குண்டு நெப்போலியனின் உடலில் கரைந்து விட்டது). எம்.ஜி.ஆர் ஒருமுறை தும்மியபோது, கழுத்தில் நரம்புகளுக்கு இடையே பதுங்கியிருந்த குண்டு நகர்ந்து தொண்டைக்கு வந்துவிட்டது. பின்னர், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் எம்.ஜி.ஆரின் தொண்டையிலிருந்து குண்டை அகற்றினார்கள். இந்த அறுவை சிகிச்சையால் எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டது.

1973ம் ஆண்டு பெரியார் மறைந்த இறுதிச் சடங்கில் எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் கலந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசினர். நட்பு பாராட்டினர். எம்.ஆர்.ராதா, தான் செய்த குற்றத்துக்காக, எம்.ஜி.ஆரிடம் மன்னிப்புக் கேட்டதாக ஒரு செய்தியும் உண்டு. 1979ம் ஆண்டு எம்.ஆர்.ராதா மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய 72வது வயதில் மரணமடைந்தார்.

0

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *