Skip to content
Home » டார்வின் #2 – அறிவற்றவர்களின் சமூகம்

டார்வின் #2 – அறிவற்றவர்களின் சமூகம்

மதச் சீர்திருத்தம், அரசியல் எழுச்சி, அறிவியல் புரட்சி. இவை மூன்றும் ஐரோப்பாவில் அறிவொளி யுகத்தைத் தொடங்கிவைத்தன. இதன் விளைவாக 18ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து தொழில் வளர்ச்சியில் புதிய உச்சத்தை அடைந்திருந்தது. இங்கிலாந்து, பழைய நிலவுடைமைச் சமூகத்திலிருந்து தொழிற்சமூகமாக மாறிக்கொண்டிருந்தது. பிர்மிங்ஹாம் இந்தப் புதிய தொழில் உலகின் மையமாகத் திகழ்ந்தது. நீராவி இயந்திரங்களின் கூச்சல்களும் தொழிற்சாலைகளின் இரைச்சல்களுமே நகர வீதிகளை ஆக்கிரமித்திருந்தன.

புதிய செல்வந்தர்கள் வர்க்கம் உருவாகி வந்தது. அறிவையும் தொழில்நுட்பங்களையும் லாபத்தையுமே கருத்தில் கொண்டு எதிர்காலத்தை உருவாக்கும் முனைந்த வர்க்கம். இதில் பெரும்பாலானவர்கள் வணிகர்கள். பாரம்பரிய, நிலவுடைமைச் சமூகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் புதிதாய் முளைத்து, சுயமாய் செல்வத்தைத் தேட முனைந்தவர்கள்.

இதில் ஒருவராக ஜோஷியா வெட்ஜ்வுட் இருந்தார். மண்பாண்டங்கள் செய்யும் தொழிற்சாலை வைத்திருந்தார். பிர்மிங்ஹம் வட்டாரத்தில் முக்கியப் புள்ளி. வெட்ஜ்வுட்டுக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவருடைய பெயர் எராஸ்மஸ். மருத்துவர், கவிஞர், கண்டுபிடிப்பாளர் எனப் பல்துறை வித்தகர். இவரும் வெட்ஜ்வுட்டும் எலியும் பூனையும்போல.

எராஸ்மஸ் எல்லோரையும் கிண்டலடிப்பார். எல்லாவற்றையும் கிண்டலடிப்பார். குறிப்பாக மத நம்பிக்கைகளை, கிறிஸ்தவ நம்பிக்கைகளை. கிறிஸ்தவ மதம் அழிந்துகொண்டிருக்கிறது. மக்களுக்கு அறிவு வந்துவிட்டது. கிறிஸ்தவத்தைக் கேள்வி எழுப்புகிறார்கள். இதிலிருந்து தப்பிக்க கிறிஸ்தவம் தன்னைச் சீர்திருத்திக்கொள்கிறது என்பார். ஜோஷியா வெட்ஜ்வுட்டோ கிறிஸ்தவர். ஆனால் பழைமைவாத, சடங்கு சம்பிரதாயங்களில் ஊறிப்போன கிறிஸ்தவர் கிடையாது. இவருடையது சீர்திருத்தக் கிறிஸ்தவம். இந்தக் கிறிஸ்தவம் பிதா, குமாரன், தூய ஆவி என்கிற பழைய திரித்துவ நம்பிக்கையை நிராகரித்தது. இறைவன் ஒருவனே என்கிற இறை ஒருமைவாதத்தை முன்வைத்தது.

இதைத்தான் கிறிஸ்தவம் பகுத்தறிவின் தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ள சீர்திருத்தத்தில் ஒளிந்துகொள்கிறது என்றார் எராஸ்மஸ். அவர் அறிவை நம்பினார். அறிவியலை நம்பினார். அறிவியலே எல்லாவற்றுக்குமான பதிலை வைத்திருக்கும்போது எதற்காக மதத்தின் பக்கம் ஒளிய வேண்டும்? பகுத்தறிவைக் கொண்டே வளமையான எதிர்காலத்தைக் கட்டமைப்போம் என்பதுதான் எராஸ்மஸின் வாதம். இதுதான் இருவருக்கும் அடிக்கடி மோதல் வருவதற்குக் காரணம்.

இருவரும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தாலும் 18ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்தை உளமாற நேசித்தார்கள். கண்டுபிடிப்பாளர்களைக் கொண்டாடினார்கள். இந்தக் கண்டுபிடிப்பாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் எல்லாம் சேர்ந்து லூனார் சமூகம் என்ற சங்கத்தை நிறுவினர். ஜேம்ஸ் வாட், மேத்யூ போல்டன், பெஞ்சமின் பிராங்ளின், ஜோசப் பிரிஸ்ட்லி போன்ற பெரும் அறிவியலாளர்கள் இந்தச் சங்கத்தில் இருந்தார்கள். அறிவியல், தத்துவம், சமூகம், தொழில், கல்வி, மருத்துவம் எனப் பலவற்றை விவாதித்தார்கள். இந்தச் சமூகம் பௌர்ணமி இரவு அன்றைக்கு மட்டுமே கூடும். அதனால் லூனார் சமூகம் என அழைக்கப்பட்டது. லூனார் என்றால் நிலவு என அர்த்தம். ஆனால் அரசு இவர்களை லூனாட்டிக் சமூகம் என்றது. லூனாட்டிக் என்றால் அறிவற்றவர்கள் என அர்த்தம்.

இந்த லூனார் சமூகம், பழமைவாத கருத்துகளை மறுத்தது. பழைய சமூக விழுமியங்களைப் புறக்கணித்து, புதிய விழுமியங்கள் தோன்றுவதற்கு வித்திட்டது. இதனால் அரசு இவர்களைக் கலகக்காரர்களாகப் பார்த்தது. அன்றைக்கு இங்கிலாந்து அரசியலில் பழைமைவாதத்தைப் போற்றும் ஆங்கிலிகன் திருச்சபை ஆட்களே இருந்தனர். இவர்கள்தான் கல்வி அமைப்புகளிலும் ஆதிக்கம் செலுத்தினர். அதிகார மட்டம் அனைத்திலும் இவர்களுக்கு மட்டுமே இடம் இருந்தது. இவர்களது அதிகாரத்தை லூனார் சமூக ஆட்கள் அச்சுறுத்தியதால் அரசு பயந்தது.

லூனார் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் ஜோசப் பிரிஸ்ட்லி. வேதியியலாளர். ஆக்சிஜன் வாயுவைக் கண்டறிந்ததில் முக்கியமானவர். இவருடைய ஆய்வுகளால் ஈர்க்கப்பட்ட எராஸ்மஸ், நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட தனது நோயாளிகளுக்கு ஆக்சிஜனைப் பரிந்துரைத்த முதல் மருத்துவர் எனக்கூடச் சொல்லலாம். வெட்ஜ்வுட்டும் பிரிஸ்ட்லியைக் கொண்டாடினார். அவரது பரிசோதனைகளுக்கு வேண்டிய நிதியையும் கருவிகளையும் தாராளமாக வழங்கினார்.

பிரிஸ்ட்லி அறிவியலில் மட்டுமல்லாமல் இறையியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். கிறிஸ்தவத்தை எல்லோருக்குமான மதமாக மாற்ற முனைந்தார். அது என்ன அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் இறைவன் அருள் பாலிப்பார்? இயேசுவின் அருள் சாமானியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என வாதிட்டார். அதற்கேற்ற கொள்கைகளை வகுக்கத் தொடங்கினார்.

இதுதான் திருச்சபை அதிகாரத்தை அச்சுறுத்தியது. அது எப்படி பிரிஸ்ட்லி கடவுளை எல்லா வர்க்கத்தினருக்கும் சமம் என்று சொல்லலாம்? சடங்குகளை நிராகரிக்கலாம்? புனித ஆவியையும், மந்திர தந்திரங்களையும் மறுக்கலாம்? பிரிஸ்ட்லி மனிதர்களுக்கு மறு அவதாரம் கிடையாது என்கிறார். இயேசு உயிர்த்தெழுந்ததிற்குப் பின்னால் நாம் கண்டறியாத இயற்பியல் விதிகள் இருக்கலாம் என்கிறார். இது இப்படியே சென்றால் நமது எதிர்காலத்தைப் பாதித்துவிடும். மக்களிடம் இத்தகைய கருத்துக்கள் எழுச்சியை ஏற்படுத்துவதற்கு முன் இந்தக் கும்பலுக்கு மொத்தமாக முடிவுரை எழுத வேண்டும் என அரசு முடிவு செய்தது. அதற்கான சந்தர்ப்பம் அமைய காத்திருந்தபோதுதான் வந்தது, பிரெஞ்சுப் புரட்சி.

0

பிரெஞ்சுப் புரட்சியில் பழைய மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு புதிய மக்கள் அரசாங்கம் உருவானது. இதனை எராஸ்மஸ் கொண்டாடினார். மூளையற்ற முட்டாள் மன்னர்கள் வீழ்ந்து, மக்கள் அரசாளட்டும் என ஆராதித்தார்.

இங்கிலாந்து அரசு ஏற்கெனவே பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம் இங்கிலாந்திலும் எதிரொலித்துவிடுமோ என அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் எராஸ்மஸ் போன்ற அறிஞர்கள் இப்படிப் பேச, லூனார் சமூக ஆட்கள் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் எனச் சொல்லி அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது.

சமத்துவம் பேசிய லூனார் சமூகத்தின் ஆட்கள் சல்லடைப்போட்டு தேடப்பட்டனர். நாத்திகம் பேசியவர்கள் நசுக்கப்பட்டனர். ஜோசப் பிரிஸ்ட்லியின் வீடும், பிரார்த்தனைக் கூடமும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அறிவாளிகளுக்கு இனி வேலை இல்லை. அரசரும் திருச்சபையுமே போற்றப்பட வேண்டியவர்கள் என்றது அரசாங்கம். லூனார் சமூகம் சிதைந்துபோனது. பிரிஸ்ட்லி அமெரிக்கா தப்பிச் சென்றார்.

எராஸ்மஸ் தன் உழைப்பை எல்லாம் செலுத்தி ‘ஸூனோமியா’ (Zoonomia) எனும் புரட்சிகர மருத்துவ நூல் ஒன்றை எழுதி இருந்தார். ஆனால் அதைக் கிழித்தெறிய வேண்டும் என்றது அரசாங்கம். அவருடைய மற்ற படைப்புகளும் ஆபாசம் எனத் தூற்றப்பட்டன. எராஸ்மஸ் பேசும் நாத்திகம்தான் பிரெஞ்சுப் புரட்சி போன்ற சமூகச் சீர்கேடுகளுக்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. இறுதியில் லூனார் சமூகம் இழுத்து மூடப்பட்டது. அப்போது நிலவி வந்த சுதந்திரச் சிந்தனை எல்லாவற்றையும் தீக்கு இரையாக்கிவிட்டு, புதிய இங்கிலாந்தை மீண்டும் பழைமைவாதம் நோக்கிய, திருச்சபை விழுமியங்களைப் பாதுகாக்கும் தேசமாக மாற்றியது அரசு.

அறிவுஜீவிகள் தங்கள் நடமாட்டங்களைக் குறைத்துக்கொண்டனர். வெட்ஜ்வுட் உடல்நலம் பாதிக்கப்பட்டார். தனது மகன்களுக்குச் சொத்துகளைப் பிரித்துக்கொடுத்துவிட்டு, மகள்களுக்குத் திருமணங்கள் செய்துவைத்தார். தனது மகள் சூசானாவை தனது நண்பர் எராஸ்மஸின் மகனான ராபர்ட்டுக்குத் திருமணம் செய்துவைக்க முன்வந்தார்.

எராஸ்மஸுக்கு 14 வாரிசுகள். மூத்தமகன் சார்லஸ். அவரும் மிகச் சிறந்த மருத்துவர். ஆனால் நோயாளி ஒருவரைக் குணப்படுத்த முயற்சி செய்து, அதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகி இறந்துபோனார். இரண்டாவது மகன்தான் ராபர்ட். எராஸ்மஸ், ராபர்ட்டையும் மருத்துவராக்க விரும்பினார்.

ராபர்ட் எடின்பர்க் பல்கலைக்கழகம் சென்றார். லெய்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். சொந்த ஊருக்குத் திரும்பி, மருத்துவர் பணியைத் தொடங்கினார். ராபர்ட்டுக்கு தனது தந்தையைப்போலவே மருத்துவ ஞானம் இருந்தது. அனைவரையும் அரவணைக்கும் நேசம் இருந்தது. இதனால் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்றார். ஆனால் தன் தந்தையைப்போலப் புரட்சிகர, நாத்திகவாதக் கருத்துக்களைப் பேசாமல், இங்கிலாந்து அரசுக்கு அடிபணிந்து ஷ்ரூஸ்பரி நகருக்கு வெளியே ஒரு பெரிய வீட்டைக் கட்டிக்கொண்டு குடிபுகுந்தார்.

இவருக்குத்தான் வெட்ஜ்வுட் தன் மகள் சூசானாவைத் திருமணம் செய்ய முன்வந்தார். ராபர்ட்டுக்கும் சூசானாவுக்கும் 1796-ல் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் அடுத்தடுத்து ஆறு குழந்தைகள் பிறந்தன. முதல் மூன்றும் மகள்கள். நான்காவது மகன். அவனுக்கு எராஸ்மஸ் எனத் தந்தையின் பெயரையே வைத்தார் ராபர்ட். இதன் பிறகு ஐந்தாண்டுகள் கழித்து பிப்ரவரி 12, 1809 அன்று இன்னொரு மகன் பிறந்தான். அவனுக்கு ராபர்ட், தன் குடும்பத்தின் மருத்துவப் பாரம்பரியத்தை நினைவூட்டும் வண்ணம், சார்லஸ் ராபர்ட் டார்வின் எனப் பெயரிட்டனர்.

சார்லஸ், ராபர்ட்டின் சகோதரர் பெயர். நோயாளியைக் குணப்படுத்தப்போய் இறந்தவர் எனப் பார்த்தோம் இல்லையா? அவரது பெயர். டார்வின் என்பது தனது தந்தை ‘எராஸ்மஸ் டார்வினின்’ வம்சாவளியை நினைவுபடுத்தும் குடும்பப் பெயர். இப்படியாக மருத்துவர்கள் வழிவந்த மகன் என்பதால் சார்லஸ் டார்வினும் சிறந்த மருத்துவராக வருவான் என ராபர்ட் எதிர்பார்த்தார். ஆனால் மகனுக்கோ மருத்துவத்தில் துளியும் ஆர்வமில்லாமல் இருந்தது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *