சார்லஸ் டார்வினுக்கு ஐந்து வயதில் வீட்டில் கல்வி தொடங்கியது. டார்வினின் அக்கா கரோலின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். டார்வினுக்கு அடிப்படை ஆங்கில எழுத்துகளைப் பயிற்றுவித்தார். பாடல்கள் பாடிக் காட்டினார். சொற்களுக்குப் பொருள்களை விளக்கினார். டார்வினுக்கோ சகோதரி பயில்விக்கும் பாடங்களில் ஆர்வம் கிடையாது. படு சுட்டியாக இருப்பார். வம்பு தும்புகளில் ஈடுபடுவார். கண்ணாடிகளை உடைப்பார். பொருட்களைத் திருடிச் சென்று வழியில் காணும் சிறுவர்களுக்குத் தானம் செய்வார்.
டார்வினுடைய தந்தை ராபர்ட் பெரிய நூலகம் வைத்திருந்தார். அதில் சென்று வரைபடங்களையும் கலைக்களஞ்சியங்களையும் புரட்டிப் பார்ப்பார். வீட்டைச் சுற்றியுள்ள தோட்டமே டார்வினின் பிரதான வசிப்பிடம். அவரது தாய் வளர்த்து வந்த புறாக்களுடன் விளையாடுவார். மரங்களில் ஏறி பழங்களைப் பறித்து உண்பார். அருகே ஓடும் ஆற்றில் மணிக்கணக்கில் அமர்ந்து மீன் பிடிப்பார்.
டார்வினுக்கு அப்போதே சிற்றுயிர்களைச் சேகரிப்பதில் ஆர்வம் இருந்தது. நத்தை, சிப்பி ஆகியவற்றின் ஓடுகள், பறவை முட்டை என ஒவ்வொன்றையும் எடுத்துவந்து வீட்டில் குடுவையில் அடைத்து வைப்பார். பூக்களைப் பறித்துவந்து நோட்டுப் புத்தகங்களுக்குள் பதுக்குவார். அவற்றின் பெயர்களைத் தாயிடம் கேட்டு எழுதிக்கொள்வார்.
டார்வினின் எட்டாவது வயதில் வீட்டின் அருகேயுள்ள பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அங்கேயும் அவருக்கு வகுப்பறை உவக்கவில்லை. பள்ளிக்கு வெளியேயுள்ள மரங்களில் அமர்ந்திருக்கும் பறவைகளை வேடிக்கை பார்ப்பது, பூச்சிகளைப் பிடித்து விளையாடுவது என நேரம் கழிப்பார். விலங்குகளையும் தாவரங்களையும் சேகரிப்பதுடன், அவற்றைப் பற்றி நண்பர்களிடம் விவரிப்பது டார்வினுக்கு இன்னமும் பிடிக்கும். குறிப்பிட்ட விலங்கையோ, தாவரத்தையோ எங்கே பார்த்தேன், அவற்றின் தோற்றம் எப்படி இருந்தது, அவற்றை எப்படிப் பிடித்தேன் என உண்மையுடன் கொஞ்சம் புனைவையும் கலந்து அடித்துவிடுவார். நண்பர்களும் அவர் சொல்லும் கதைகளை வாய்பிளந்து கேட்பர். இப்படியாக டார்வினுக்கு அறிவியலை எப்படிச் சலிப்பில்லாமல் சொல்ல வேண்டும் என்ற கலை அப்போதே கைகூடி இருந்தது.
0
சிறார் பருவம் இப்படியாக நகர, திடீரென்று ஒருநாள் டார்வினின் தாய் சூசானா காலமானார். வயிற்றுக் கட்டியால் படுக்கையில் இருந்தவர் மறைந்துபோனார். தாயின் மரணம் டார்வினை உலுக்கியது. நீண்ட நாட்கள் தனிமையிலேயே இருந்தார். சூசானாவின் மரணத்திற்குப் பிறகு டார்வினின் சகோதரிகள் வீட்டுப் பொறுப்பை எடுத்துக்கொண்டனர். டார்வினின் தந்தை ராபர்ட்டோ குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்ளத் தொடங்கினார். வெளியில் அன்பான மனிதராக இருந்தாலும் வீட்டில் சிடுசிடுவென இருப்பார். தான் சொன்ன வேலைகளை உடனே செய்து முடிக்க வேண்டும் எனக் கெடு விதிப்பார். எல்லாமும் சரியாக இருக்க வேண்டும். ஒழுங்கில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
பதிமூன்று வயதில் டார்வினை ஷ்ரூஸ்பரி அரசுப் பள்ளியில் சேர்ந்தார் ராபர்ட். அந்தப் பள்ளியும் டார்வினுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் வீட்டின் கடுமையான சூழலுக்கு பள்ளியையே தாங்கிக்கொள்ளலாம் என்றிருந்தார்.
டார்வினுடைய அண்ணன் எராஸ்மஸும் அதே பள்ளியில்தான் படித்தார். டார்வினுக்கு எராஸ்மஸ்தான் எல்லாம். இருவரும் சகோதரர்கள் என்பதைவிட நல்ல நண்பர்கள். எந்நேரமும் சேர்ந்தே பொழுதைக் கழிப்பர். இருவரும் சேர்ந்து புத்தகங்களை வாசிப்பர். கதைகளைப் பகிர்ந்துகொள்வர்.
டார்வினுக்குச் சாகசக் கதைகள் பிடிக்கும். அவற்றில் வரும் வினோத மிருகங்கள் பிடிக்கும். நிறையக் கதைகளைப் படித்ததில் அந்த வயதிலேயே உலகம் முழுக்கம் சுற்ற வேண்டும் என்ற விருப்பம் டார்வினுக்கு வந்தது. தீவுகளிலும், தென் அமெரிக்கக் காடுகளிலும் சாகசப் பயணம் மேற்கொள்வதுபோல் பகல் கனவு காண்பார். அதேபோல் கடல்கள் என்றாலும் டார்வினுக்கு அலாதி பிரியம். கடற்கரைகளுக்குச் சென்றால் நீண்ட நேரம் அலைகளை வெறித்துப் பார்த்துக்கொண்டு நிற்பார். அங்கே காணும் தாவரங்களை, கரை ஒதுங்கும் உயிரினங்களை வீட்டிற்கு எடுத்து வருவார். அது என்ன என்று கேட்டறிந்து வகைப்படுத்தி எழுதி வைப்பார். இப்படி எழுதி வைப்பது அவருடைய தாய் சொல்லிக்கொடுத்த பழக்கம். உயிரினங்களைச் சேகரிப்பதையும் வகைப்படுத்துவதையும் இப்படித்தான் கற்றுக்கொண்டார்.
உயிரினங்களைப் போல வேதியியலிலும் டார்வினுக்கு ஆர்வம் இருந்தது. இதற்குக் காரணமும் சகோதரன் எராஸ்மஸ்தான். இருவரும் சேர்ந்து தோட்டத்தில் சோதனைக்கூடம் ஒன்றை உருவாக்கி, தன் தந்தையின் மருந்துகளை எடுத்து வந்து பல்வேறு சோதனைகள் செய்வர். குறிப்பாக அந்தக் காலகட்டம் தொழிற்சாலைகளை மையப்படுத்தி இருந்ததால் வளர் பருவத்தினருக்குப் பெற்றோர்களே வேதியியல் பரிசோதனைகளை ஊக்குவித்தனர். டார்வினும் எராஸ்மஸும் தந்தையின் சட்டைப் பையிலிருந்து காசுகளைத் திருடிச் சென்று கண்ணாடிக் குடுவை, சிறிய அடுப்பு, ரசான கரைசல்கள் என என்னென்னவோ வாங்கி வருவர்.
ஆனால் இவை அனைத்தும் எராஸ்மஸ் பதினேழு வயதை எட்டியவுடன் முடிவுக்கு வந்தது. பள்ளிப் படிப்பை முடித்த எராஸ்மஸ், மருத்துவம் பயில்வதற்காக கேம்பிரிட்ஜ் கிறிஸ்து கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். டார்வினின் கூட்டுச் சாகசங்கள் முடிவுக்கு வந்தன. சகோதரன் இல்லாத வீடு, சகோதரிகளின் கட்டுப்பாடுகளாலும் தந்தையின் கடுமையாலும் வாழ வழியற்ற இடமாகத் தெரிந்தது.
வீட்டில் இருப்பதையே வெறுத்தார். அப்போது டார்வின் பதினைந்து வயதை எட்டியிருந்தார். வேட்டையாடுவதில் ஆர்வமும் ஏற்பட்டிருந்தது. பள்ளிக்குச் செல்லாமல் தந்தையின் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்து காடுகளிலும் ஏரிகளிலும் சிறிய விலங்குகளையும் பறவைகளையும் தேடித் திரியத் தொடங்கினார்.
ஆனால், துப்பாகி வேட்டைக்கு அரசின் அனுமதி வேண்டும். இருப்பினும் டார்வினுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டில்லை. தன் தந்தை உள்ளூரில் பிரபல மருத்துவர் என்பதால், உள்ளூர் பிரமுகர்களிடம் தந்தையின் பெயரைச் சொல்லிவிட்டு வேட்டையாடக் கிளம்பிவிடுவார். நேரம் காலம் தெரியாமல் வேட்டையாடுவது, ஊர் சுற்றுவது என நாட்கள் கழிந்தன. திடீரென ஒருநாள் டார்வினின் தந்தைக்கு உண்மை தெரியவந்தது. ராபர்ட் கடும் கோபத்தில் கொந்தளித்தார். வீட்டிற்குத் திரும்பிய டார்வினை இடைமறித்து, ‘நீ நாய் சுடுவதற்கும், எலி பிடிப்பதற்கும் தவிர எதற்கும் லாயக்கில்லாதவன். நீ, நம் குடும்பத்திற்கே அவமானம்’ எனக் கத்திவிட்டார்.
தந்தை கண்டிப்புடன் நடப்பார் என்பது டார்வினுக்குத் தெரியும். ஆனால் தன்னைப் பற்றி இப்படி ஓர் எண்ணத்தை வைத்திருப்பார் என்பதை டார்வினால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அழுதேவிட்டார். டார்வினை ஒழுக்கமற்ற நிலையிலிருந்து வெளிகொண்டு வருவதற்கு ஒரு வழிதான் ராபர்ட்டுக்கு இருந்தது. இன்னும் இரண்டு ஆண்டுகள் மிச்சம் இருக்கும் நிலையிலும், அவரது பள்ளிப் படிப்பை நிறுத்துவிட்டு, கல்லூரிக்கு அனுப்புவது. அவருக்கான வாழ்க்கைப் பாதையைக் காட்டுவது. மருத்துவம் பயிலவைப்பது. இவை எல்லாம் டார்வினை நல்வழிப்படுத்தும் என்று நம்பினார். இதற்காக இரண்டு தேர்வுகளை டார்வினுக்கு முன்னால் வைத்தார்.
ஒன்று, ஸ்காட்லாந்துக்குச் சென்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில வேண்டும். பிறகு லண்டனில் தனக்குத் தெரிந்த மருத்துவமனையில் உதவியாளராகச் சேர்ந்து மருத்துவராக உயர வேண்டும்.
இல்லை என்றால், இங்கிலாந்து சென்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலோ கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலோ சேர்ந்து கிறிஸ்தவ நெறியியலைக் கற்க வேண்டும். ராபர்ட் இவ்வாறு கருதியதற்குக் காரணம் இருந்தது. அந்தப் பல்கலைக்கழகங்கள் திருச்சபையுடன் இணைப்பில் இருந்தன. திருச்சபை வலியுறுத்தும் ஒழுக்க நெறிகளை மாணவர்களுக்குப் போதிப்பதே அவற்றின் தலையாயக் கடைமையாக இருந்தது. அங்கே பயில்வது அறிவை இல்லாவிட்டாலும் சமூக அந்தஸ்தை உயர்த்தும் என ராபர்ட் கருதினார். சொல்லப்போனால் ஆக்ஸ்போர்டும் கேம்ப்ரிட்ஜும் வகுப்புவாதத்தைச் சமூகத்தில் நிலைக்க வைத்திருக்கும் கல்விக்கூடங்களாகவே இருந்தன. ஒருவேளை டார்வினுக்கு ஆர்வம் இருந்தால் அங்கேயே மருத்துவமும் பயின்று ‘உயர்குடி’ நோயாளிகளைக் கவனிக்கும் மருத்துவராக உயரலாம் என்பதற்காகவும் இந்த ஏற்பாடு.
டார்வினுக்கு இரண்டிலும் விருப்பம் இல்லை. ஆனால் வேறு வழி தெரியவில்லை. சலிப்பூட்டும் சமயக் கொள்கைகளைப் பயில்வதற்கு மருத்துவராகிவிடலாம் என முடிவு செய்து எடின்பர்க் பல்கலைக்கழகம் செல்ல முடிவெடுத்தார்.
(தொடரும்)