பதினாறு வயதில் டார்வின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலச் சென்றார். அவரது தந்தை ஏற்கெனவே சில நாட்கள் தன்னுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பயிற்சிகள் எல்லாம் கொடுத்துதான் அனுப்பி வைத்தார். டார்வினும் தந்தைக்குச் செய்த சிறுசிறு உதவிகளை எல்லாம் எண்ணி பல்கலைக்கழகம் தனக்குப் பிடித்த இடமாக இருக்கும் என்று நம்பிச் சென்றார். ஆனால் அங்கே எல்லாம் இவர் நினைத்ததற்கும் தலைகீழாக இருந்தது.
எடின்பர்க் பல்கலைக்கழகம் முழுக்கவும் அதிகாரத்தின் கோரப்பிடியில் இருந்தது. அப்போதைய ஐக்கிய ராஜ்ஜியம் இரண்டு பெரும் கட்சிகளாகப் பிரிந்திருந்தது. ஒரு கட்சியினர் விக்குகள் (Whigs) என அறியப்பட்டனர். இன்னொரு பிரிவினர் டோரிக்கள் (Tories) என அழைக்கப்பட்டனர். இதில் டோரிக்கள் பாரம்பரிய, பழமைவாத நம்பிக்கை கொண்டவர்கள். திருச்சபை ஆதாரவாளர்கள். முடியாட்சி, சமூக ஏற்றத்தாழ்வு, அடிமைத்தனம் ஆகியவற்றை ஆதரிப்பவர்கள். அதிகாரத்தின் சலுகையை அனுபவித்து வந்தவர்கள். இவர்களுடைய எதிர்த்தரப்பினர், விக்குகள். இவர்களும் அரசரை ஏற்பவர்கள்தாம். ஆனால் அரசருக்கே சர்வ அதிகாரமும் என்று இல்லாமல், தனிநபர் சுதந்திரம், பாராளுமன்ற அரசியல், அனைவருக்கும் சம உரிமை ஆகியவற்றை வேண்டியவர்கள்.
இந்த இரு கும்பலும்தான் எலியும் பூனையும்போல அடித்துக்கொண்டன. இதில் டார்வினின் குடும்பம் விக்குகளை ஆதரித்தது. இதற்குக் காரணமும் இருந்தது. 50 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் டோரிக்கள் பல்கலைக்கழகத்தையே நாசமாக்கி வைத்திருந்தனர்.
குறிப்பாக எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நியமனங்களைப் பல்கலைக்கழக நிர்வாகம் இல்லாமல், உள்ளூர் டோரிக்களின் சபையே கட்டுப்படுத்தியது. பேராசிரியர்களில் மூன்றில் இரண்டு பகுதியினரை டோரிக்கள் சபைதான் தேர்ந்தெடுத்தது. அவர்களுக்குக் கல்வித் தகுதி இருக்கிறதா என்பதைவிட அரசியல் தகுதி இருக்கிறதா என்பதையே ஆராய்ந்தது.
திருச்சபை விசுவாசிகளே பணியிடங்களை நிரப்பினர். குடும்பச் செல்வாக்கைப் பயன்படுத்தி, தந்தை, மகன், பேரன் என வாரிசுகளே அங்கு பேராசிரியர்களாக இருந்தனர்.
இதுவே அவர்களிடம் ஒழுக்கச் சீர்கேடுகள் நிலவ காரணமாக இருந்தது. பேராசிரியர்கள் யாரும் மாணவர் நலனில் அக்கறையெடுத்துப் பாடம் நடத்துவதுபோல தெரியவில்லை. வகுப்பறையில் இருப்பதைவிட மதுவிடுதிகளில்தான் அதிகம் நேரம் செலவழித்தனர். அங்கிருந்தே பாடத்திற்கான குறிப்புகளைக் கொடுத்தனுப்பினர். மாற்றுக் கருத்துக்கள் கொண்ட மாணவர்களை வஞ்சிக்கவும் செய்தனர். பல்கலைக்கழகத்தின் பெருமை எல்லாம் வெளியிலிருந்து பார்ப்பதற்குத்தான் பளபளத்தது. உள்ளே நிர்வாகம் அழுகிக்கொண்டிருந்தது.
இதனாலேயே மாணவர்கள் பெரும்பாலும் பல்கலைக்கழகத்தைத் தாண்டிச் சுற்றியுள்ள கல்வி விடுதிகளில் பாடம் பயின்றனர். அப்போது எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சுற்றி ஏராளமான சிறிய தனியார் கல்வி நிறுவனங்கள் இருந்தன. நிறுவனங்கள் என்று சொல்வதைவிட விடுதிகள் என்றால் சரியாக இருக்கும்.
ஒரு சிறிய வகுப்பறை. ஒரு சோதனைக்கூடம். இதுதான் கட்டமைப்பு. அங்கு ஐரோப்பாவைச் சேர்ந்த சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் எனப் பலரும் கட்டணம் வாங்கிக்கொண்டு மாணவர்களுக்கு வகுப்பெடுத்தனர். இவர்களிடம் கற்பதைத்தான் மாணவர்களும் விரும்பினர். இந்தப் புதிய சிந்தனையாளர்கள் பேசிய அரசியல், மரபார்ந்த விழுமியங்களின் மீதான அவர்களது தாக்குதல் இளம் வயதினரை இயல்பாகவே ஈர்த்தது.
டார்வினுக்கோ வகுப்பில் இருக்கவும் பிடிக்கவில்லை. வெளியே படிக்கவும் விருப்பமில்லை. யார் வம்புக்கும் செல்லாமல், தனி அறையில் அமர்ந்து தனாகப் படித்துக்கொண்டிருப்பார். பல்கலைக்கழகம் சென்று நூலகத்திலிருந்து எல்லாப் புத்தகங்களையும் அள்ளிக்கொண்டு வந்துவிடுவார். இரவு பகலாக உட்கார்ந்து படிப்பார். அதன்பிறகுதான் தூக்கம், சாப்பாடு எல்லாமே.
ஆனாலும் டார்வினுக்கு மருத்துவப் படிப்பு உவக்கவில்லை. காரணம், பாடப்புத்தகத்தைத்தாண்டி அவர் செய்ய வேண்டி இருந்த உடற்கூராய்வு சோதனைகள்.
டார்வினுக்கு ரத்தத்தைப் பார்த்தாலே பயம். குறிப்பாக அறுவை சிகிச்சையை அவர் வெறுத்தார். அங்கிருக்கும் ஆசிரியர்களுக்கு என்று தனித்தனி அறுவை சிகிச்சைக் கூடங்கள் இருந்தன. அங்கே பிணங்கள் கொட்டிக் கிடந்தன. உடல் அறுபட்டு, கைகள் ஒருபக்கம், கால்கள் ஒருபக்கம் துண்டுத் துண்டாக விரவி கிடந்தன. பிணத்தின் வாடை குமட்டலை ஏற்படுத்தும். அந்த அறையில் இருப்பதே டார்வினுக்கு மூச்சு முட்டும்.
அறுவை சிகிச்சை செய்யும் முறையும் அப்போது குரூரமானதாக இருந்தது. மயக்க மருந்துகள் புழக்கத்தில் வராத காலகட்டம் அது. இதனால் உடல் பாகங்களை வெட்டி எடுக்கும்போது நோயாளிகள் வலி தாங்க முடியாமல் கத்துவர். கேட்கவே கோரமாக இருக்கும். அதேபோல உடல் பாகங்களை வெட்டுவதற்குப் பழைய அழுக்கடைந்த துருப்பிடித்த கத்திகள்தான் பயன்படுத்துவார்கள். கைகளைச் சுத்தம் செய்வதற்குக்கூட வழி கிடையாது. உடலை வெட்டி அதிலிருந்து பீறிட்டு வரும் ரத்தத்தை வாளியில் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கேட்கவே குரூரமாக இருக்கும் இத்தகைய காட்சிகளை டார்வினால் கல்வி நிலையங்களில் அனுபவிக்க முடியவில்லை. மாணவர்கள், அறுவை சிகிச்சை செய்வதைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருமுறை குழந்தை ஒன்றுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. குழந்தை கதறுவதைப் பார்க்கச் சகிக்காத, டார்வின் அறையை விட்டு ஓடிவிட்டார். இனிமேல் அறுவை சிகிச்சைக் கூடத்திற்கு வரவே மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அந்தக் காட்சியே வாழ்க்கை முழுவதும் அவரை அச்சுறுத்தியது. இதனாலேயே அவர் மருத்துவத்தை வெறுத்தார்.
இந்த அவலமான நாட்களில் டார்வினுக்கு இருந்த இரண்டே ஆறுதலான விஷயங்கள், வேதியியலும் கடற்கரையும். ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த பாடங்களில் வேதியியல் சோதனைகளை மட்டுமே டார்வின் ஆர்வமுடன் செய்தார். அதேபோல மாலை நேரங்களில் கடற்கரையில் அலைந்து திரிந்து கணவாய், நத்தை, கடல் எலி, கடல் அட்டை ஆகியவற்றைச் சேகரித்தார்.
பறவைகள் மீதும் டார்வினுக்கு ஆர்வம் வந்தது. பறவைகளை உற்று நோக்கக் காற்றுக்கொண்டார். அவற்றின் நடத்தைகளை, வாழ்விடங்களைப் புத்தகத்தில் குறித்து வைத்தார். வேட்டையாடிய பறவைகளைப் பாடம் செய்தார்.
பாடம் செய்யும் செயல்முறையை டார்வினுக்குக் கற்றுக்கொடுத்தது, சார்லஸ் வாட்டர்டன் எனும் முன்னாள் கறுப்பின அடிமை. அடிமையாக இருந்து தனியார் ஆசிரியராக மாறிய அவர், தான் சந்தித்த அனுபவங்களை, பயணித்த நிலங்களை விவரிப்பார். குறிப்பாகத் தென் அமெரிக்க மழைக்காடுகளில் சந்தித்த மிருகங்களை, அவற்றின் வாழ்வியலைச் சுவைபடக் கூறுவார். இந்தக் கதைகளைக் கேட்கவே டார்வினுக்குப் பிடிக்கும். இதற்காகவே தவறாமல் அவரது வகுப்பிற்குச் சென்றுவிடுவார். நேரம் போவது தெரியாமல் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருப்பார். இதன் காரணமாகவும் டார்வினுக்குப் பயணத்தின் மீதான ஆர்வம் துளிர்விட்டது.
பல்கலைக்கழகத்தில் அவர் கடைபிடித்துவந்த மற்றொரு பழக்கம், தவறாமல் தனது சகோதரிகளுக்குக் கடிதம் எழுதுவது. தினசரி அனுபவங்களை, கற்றறிந்த விவரங்களைச் சகோதரிகளுக்கு விளக்குவார். அதேபோல அனுபவிக்கும் இன்னல்களையும் விவரிப்பார். அவர்களோ டார்வினுக்கு ஆறுதல் சொல்லி, அவரை ஊக்கப்படுத்தி பதில் கடிதம் எழுதுவர்.
டார்வினின் சகோதரி சூசன், ‘உன் கஷ்டம் புரிகிறது சார்லஸ். ஆனால் வாழ்க்கை என்பதே கடினமானதுதான். அதில் நீ தேடி கண்டடையும் ஞானமே உனக்கு மகிழ்ச்சியைத் தரும்’ என்று எழுதுவார். இன்னொரு சகோதரி கரோலின், டார்வினுக்கு ஆன்மீக ஊக்கங்களை வழங்குவார். ‘நீ பயிலும் மருத்துவம் அருள் வாய்ந்தது. நீ இறந்தபின் சொர்க்கத்திற்குச் செல்லத் தேவையான அருளை உனக்குப் பெற்றுத்தர வல்லது’ என்பார். இப்படியாகச் சகோதரிகளின் அன்பான வார்த்தைகளே டார்வினை இயக்கின.
ஆனாலும் டார்வினால் மருத்துவப் படிப்பில் முழுதாக ஈடுபாடு காட்ட முடியவில்லை. வகுப்புகளில் கவனம் இல்லாமல் இருந்தார். இதை ஒரு பேராசிரியர் கவனித்துவிட்டு டார்வினின் தந்தைக்குத் தெரியப்படுத்தவே, அவர் கோபமாக ‘நீ படிப்பில் கவனம் செலுத்தாமல் சோம்பேறியாகச் சுற்றிக்கொண்டிருந்தால் ஒன்றுமில்லாமல் போவாய்’ என்று கடிதம் எழுதினார்.
டார்வினுக்கு அச்சம் பிறந்தது. பிடிக்காத பாடம். பிடிக்காத சூழல். எதிலுமே ஆர்வம் வரவில்லை. எதிர்காலம் என்னவாகப்போகிறது? தந்தை சொன்னதுபோல ஒன்றுமில்லாமல் முடிந்துவிடுவோமா?
ஆனால் அப்போதே மற்றொரு எண்ணமும் வந்தது. இல்லை, என் தந்தை ஏராளமான சொத்துக்களைச் சேர்த்து வைத்திருக்கிறார். அவர் இல்லாவிட்டாலும்கூட நிராதரவாக நிற்கும் நிலை ஏற்படாது. இதுபோதும். பார்த்துக்கொள்வோம்.
இந்த எண்ணமே அவருக்குத் துணிச்சலைக் கொடுத்தது. விரும்பியதுபோல வாழ முடிவெடுத்தார். வகுப்புகளுக்குச் செல்வதையே முற்றிலுமாக நிறுத்தினார்.
பொழுதுகளை வீணாகக் கழித்தார். அவர் எண்ணம் ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் அலைபாய்ந்தது. அப்போதுதான் அவருக்கு மாணவர் சங்கங்களுடனான தொடர்பும் ஏற்பட்டது. விளையாட்டாக அவர்களுடன் சேர்ந்து இயங்க ஆரம்பித்து, அங்கே கிடைத்த அனுபவங்கள்தான் டார்வினின் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது.
(தொடரும்)