எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர் சங்கங்கள் இருந்தன. இந்தச் சங்கங்கள் அறிவியல், சமூகம் தொடர்பான பல காரசாரமான விவாதங்களை நடத்தி வந்தன. அந்த வகையில் இயங்கிய ஒரு முக்கியமான சங்கம், பிளினியன் சங்கம். 1823-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சங்கத்தில் 1826-ம் ஆண்டு டார்வின் இணைந்தார்.
பிளினியன் சங்கத்தில் ஏராளமான சுயேட்சை ஆய்வாளர்கள் இருந்தனர். பலர் தன்னிச்சையாக உயிரியல் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர், ராபர்ட் எட்மண்ட் கிரான்ட்.
கிரான்ட், டார்வினைவிடப் பதினாறு வயது மூத்தவர். பன்னிரண்டு ஆண்டுகள் மருத்துவராக இருந்துவிட்டு, கடல் உயிரிகளை ஆராய வேண்டும் என்பதற்காகப் பாதியில் வந்தவர். கிரான்டுக்கு அறிவியல், சமூகம் இரண்டிலும் ஆர்வம் இருந்தது. சமூகத்தின் பல சிக்கல்களுக்கு அறிவியல்தான் பதிலளிக்கும் என நம்பினார்.
இந்த கிரான்டைச் சந்தித்ததுதான் டார்வினின் வாழ்வில் பெரும் திருப்புமுனை. கிரான்ட்தான் முதன் முதலில் உயிரினங்களைப் பற்றியும் அவற்றின் தோற்றத்தைப் பற்றியும் பல கேள்விகளை டார்வினின் மனதிற்குள் விதைத்தார்.
0
கிரான்ட் ஒரு சுதந்திரச் சிந்தனையாளர். பரிணாமக் கொள்கையை முன்வைத்து ஏராளமான ஆய்வுகளைச் செய்துவந்தார்.
உண்மையில் உயிரினங்கள் எப்படித் தோன்றின என்கிற கேள்வி ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஒருபக்கம் கடவுள்தான் உயிர்களைப் படைத்தார் என்ற எளிமையான பதில் சொல்லப்பட்டு வந்தாலும், அனாக்ஸிமேண்டர், அரிஸ்டாட்டில் தொடங்கி பல சிந்தனையாளர்கள் உயிரினங்களின் தோற்றத்திற்குப் பின் இருக்கும் அறிவியலை ஆராய முற்பட்டனர். இவ்வளவு ஏன், டார்வினின் தாத்தா எராஸ்மஸ்கூட எல்லா உயிர்களும் ஒரே மூதாதையரிடம் இருந்துதான் தோன்றியிருக்க வேண்டும் என்கிற பார்வையைத் தனது நூலில் முன்வைத்திருக்கிறார். இப்படித் துண்டுத் துண்டாகப் பல விளக்கங்கள் இருந்தாலும், இவை எல்லாவற்றையும் இணைக்கும் விதமாக முழுமையான பரிணாமக் கொள்கையை முன்மொழிந்தவர் பிரெஞ்சு அறிவியலாளர் ஜீன்-பாப்டிஸ்ட் லாமார்க். இவரைத்தான் கிரான்ட் தன் ஆதர்ச நாயகனாகக் கருதினார்.
லமார்க்கின் புரட்சிகர சிந்தனை, பிரெஞ்சு உலகில் கொண்டாடப்பட்டது. ஆனால் இங்கிலாந்திலோ பெரும் எதிர்ப்பை சந்தித்தது. குறிப்பாக, திருச்சபை அதிகாரிகள் லமார்க்கின் பரிணாமக் கொள்கையை ஆபத்தானதாகக் கருதினர். அறத்திற்குப் புறம்பானதாக, சமூகத்தை அச்சுறுத்தும் கருத்தாகப் பார்த்தனர்.
பரிணாமக் கொள்கை, மனிதர்களும் விலங்குகள் வழி வந்தவர்கள் என்று சொல்லும் அதே நேரத்தில் கடவுள் மனிதனைத் தனது சாயலில் படைத்தார் என்கிற கிறிஸ்தவத்தின் அடிப்படையான கூற்றை மறுக்கிறது அல்லவா? இதுதான் பிரச்னை. அதேபோல கடவுள் மேலே, திருச்சபை ஊழியர்கள் நடுவே, சாமானியர்கள் கீழே என அதிகாரம் உருவாக்கி வைத்திருந்த சமூகப் படிநிலையையும் பரிணாமக் கொள்கை கேள்வி எழுப்பியது.
இதனாலேயே திருச்சபையின் கட்டுப்பாட்டில் இருந்த கல்விநிலையங்களில் பணியாற்றி வந்த பல அறிவியலாளர்கள், இயல்பாகவே பரிணாமக் கொள்கையை ஏற்காமல் அமைதி காத்தனர். கிரான்டைப் போன்ற சில தன்னார்வ இளைஞர்கள்தான் லமார்க்கின் சிந்தனையை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஆய்வுகளைத் தன்னிச்சையாக முன்னெடுத்தனர்.
கிரான்ட், ஐரோப்பா முழுவதும் பயணித்தார். பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்விட்சர்லாந்து ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பரிணாமக் கொள்கையை விவாதித்தார்.
இறுதியாக எடின்பர்க் திரும்பிய அவர், தாவரங்கள் – விலங்குகளுக்கு இடையேயான தொடர்பை ஆராய வேண்டி, கடற்பஞ்சுகள் (Sea Sponges) என அறியப்பட்ட உயிர்களை ஆராய்ந்தார். இந்த ஆய்வுக்கு அவர் தேர்ந்தெடுத்த உதவியாளர்தான் டார்வின். டார்வினுக்கும் கிரான்டின் கருத்துக்கள் மீது ஈர்ப்பு இருந்தது. அவருடன் சேர்ந்து பயணிப்பதை விரும்பினார்.
கிரான்ட், டார்வினை கடலுக்கு அழைத்துச் சென்றார். கடற்கரையில் ஆய்வுகள் குறித்து ஏராளமாக உரையாடினார். பல விஷயங்களை டார்வினுக்குப் போதித்தார். எப்படி ஆய்வைத் தொடங்க வேண்டும், எந்த மாதிரியான கேள்விகளை எழுப்ப வேண்டும், கண்டறிந்த விஷயங்களை எப்படி ஆதாரங்களுடன் முன்வைக்க வேண்டும் என ஆய்வின் அடிப்படைகள் அனைத்தும் டார்வினுக்கு கிரான்ட் வழங்கியதுதான்.
கிரான்ட், எடின்பர்க்கில் இருந்து சுமார் 10 மைல்கள் தொலைவில் ஒரு கடற்கரை வீட்டை வாடகைக்கு எடுத்தார். அங்கு ஓதநீர்க் குட்டைகளைக் கண்டறிந்து அதிலிருந்து கடற்பஞ்சுகளையும், கடலிறகுகளையும் (Sea-Pens), பவளப்புழு இனம் அமைக்கும் தட்டைப் பாறைகளையும் (Sea mat) சேகரித்தார். அந்த உயிரிகள் முட்டையில் இருந்து எப்படி வளர்கின்றன என்பதை நுண்ணோக்கிகளைக் கொண்டு ஆராய்ந்தார்.
தன் கண்டுபிடிப்புகளை எல்லாம் இருபது ஆய்வுக்கட்டுரைகளாக எடின்பர்க் ஆய்விதழில் வெளியிட்டார். இதுவே கிரான்டுக்கு ஐரோப்பா முழுவதும் பெரிய புகழைப் பெற்றுத்தந்தது.
கிரான்டின் வழிகாட்டலுடன் டார்வினும் கடல் உயிர்களை ஆராயத் தொடங்கினார். எடின்பர்க் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வெர்னியன் இயற்கை வரலாற்று சங்கம் என்ற அமைப்பு இயங்கி வந்தது. அங்கு சென்று உரைகள் ஆற்றுவது கிரான்டின் வழக்கம். இந்தக் கூட்டங்களுக்கு டார்வினையும் அழைத்துச் செல்லத் தொடங்கினார் கிரான்ட். சங்கக் கூட்டங்களில் பொதுவாக மாணவர்கள் உரையாற்ற அனுமதி கிடையாது. ஆனால் விருந்தினராகக் கலந்துகொள்ளலாம். இந்தச் சங்கத்தில் கடற்பஞ்சுகள் பற்றிய ஆய்வுக்கட்டுரையை வாசித்த கிரான்ட், தனது கண்டுபிடிப்புகளில் டார்வின் பங்களிப்பையும் குறிப்பிட்டுப் பேசினார்.
இதுதான் டார்வினுக்கு பொதுவில் கிடைத்த முதல் அங்கீகாரம். அங்கே எழுந்த கரகோஷம் அவருக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. உண்மையிலேயே பூரித்துப்போனார். அப்போது, என் தந்தை சொன்னதுபோல் நான் உபயோகமற்றவன் இல்லையா? என்னாலும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியுமா? டார்வினுக்கு நம்பிக்கை துளிர்விட்டது. மேலும் புதிய விஷயங்களைத் தேடினார். தனியாக ஓர் ஆய்வை நிகழ்த்தத் திட்டமிட்டார்.
ஆனால் எந்த ஓர் ஆய்வும் அதற்கு முந்தைய ஆய்வின் தொடர்ச்சியாகத்தான் இருக்க முடியும் இல்லையா? அதனால் கிரான்ட் முன்னெடுத்த ஆய்வுகளின் தொடர்ச்சியாக, கடற்பாசி வகையைச் சேர்ந்த Flustra எனும் உயிரியை டார்வின் ஆராயத் தொடங்கினர். அதன் உடலில் உள்ள முடிபோன்ற (Cilia) அமைப்பைக் கண்டறிந்தார். தன் கண்டுபிடிப்பை வெர்னியன் இயற்கை வரலாறு சங்கத்தில் சமர்ப்பித்தார். இதுதான் டார்வினின் முதல் கண்டுபிடிப்பு.
தனியாகப் பார்க்கும்போது இது ஒன்றும் அத்தனை பெரிய கண்டுபிடிப்பு இல்லை என்று தோன்றலாம். ஆனால் கிரான்ட் மேற்கொள்ளும் ஆய்வுகளின் தொடர்ச்சியாக இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
கிரான்ட் நிறுவ நினைத்தது இதுதான். தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் ஓர் இணைப்பு இருக்க வேண்டும். தாவரங்கள் பாசி வகையில் இருந்து வந்துள்ளன. பாலூட்டிகள் குழாயுடலி (polyps) எனப்படும் கடல் உயிர்களிலிருந்து தோன்றி இருக்கின்றன. இவை இரண்டின் முட்டைகளை ஆராய்ந்தால் ஒற்றுமை இருப்பது தெரியும். இவை இரண்டையும் இணைக்கும் பொது மூதாதையர் இருக்க வேண்டும். அந்த மூதாதையரைப் பின் தொடர்ந்து சென்றால் ஒருமைப் புள்ளி ஒன்று இருக்க வேண்டும். இந்த ஒருமைப்புள்ளிதான் உயிரற்ற பொருட்களையும் உயிர்களையும் இணைக்கும் புள்ளி. அதில் இருந்துதான் இன்றைய சிக்கலான உயிரினங்கள் பரிணமித்து வந்திருக்க வேண்டும். இதுதான் கிரான்ட் நிறுவ நினைத்தது. இந்தக் கருத்தை இப்போது டார்வினின் ஆய்வும் வலுப்படுத்தியது.
டார்வின் ஆராய்ச்சி செய்த ஃப்லஸ்ட்ரா எனும் உயிரி, பிரையோசோவா (bryozoa) என அறியப்பட்ட பாசி போன்ற உயிரினத்தின் பிரிவைச் சேர்ந்தது. அந்த உயிரினத்தை விஞ்ஞானிகள் தாவரம் என்றே கருதி வந்தனர். ஆனால் டார்வின் அதன் உடற்பாகங்களை ஆராய்ந்து சிலியா எனும் பாகத்தைக் கண்டறிந்தது மூலம் அது விலங்கினத்தைச் சார்ந்தது என நிரூபித்தார். காரணம், அந்தக் குறிப்பிட்ட பாகம் பொதுவாக விலங்குகளுக்கே உடையது.
இதையடுத்து ஒட்டுமொத்த பார்வையில் பார்க்கும்போது அந்தக் குறிப்பிட்ட உயிரினம், தாவரங்களையும் விலங்குகளையும் இணைக்கும் புள்ளியாக இருக்கலாம். இதுபோன்ற உயிரினங்களில் இருந்து பிரிந்துதான் தாவரங்கள் தனியாக, விலங்கினங்கள் தனியாக பரிணமித்திருக்க வேண்டும் என்ற கருத்தை அவரது ஆய்வு முன்வைத்தது.
டார்வினின் கண்டுபிடிப்பைக் கேட்டறிந்த கிரான்ட், அகம் மகிழ்ந்துபோனார். எழுந்துவந்து டார்வினைக் கட்டி அணைத்துக்கொண்டார். டார்வினின் கண்டுபிடிப்பு பரிணாம கொள்கை குறித்த ஆய்வுகளுக்கு எத்தகைய பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது என்று விளக்கினார்.
‘ஒவ்வொரு விலங்கும் தனித்தனியாக படைக்கப்பட்டுள்ளது என்பது தவறு. இதனை உயிரினங்களுக்கு இடையேயான உடல் அமைப்புகளில் உள்ள ஒற்றுமையைப் பார்த்தாலே அறிந்துகொள்ளலாம். மனிதர்களில் இருந்து சிறிய நுண்ணுயிர்கள் வரை ஒரே வகையான உறுப்புகள்தான் இருக்கின்றன. இதனால் நாம் அறிவது ஒன்றுதான். எல்லா விலங்குகளுக்கும் தொடர்புண்டு. எல்லாம் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன. நுண்ணியிர்களிடம் எளிமையான உறுப்பாக இருப்பது, மனிதர்களிடம் சிக்கலான வடிவில் இருக்கிறது. அவ்வளவுதான். இதனால் நாம் கண்டடையும் உண்மை ஒன்றுதான். எல்லாவற்றுக்கும் தொடர்ச்சி இருக்கிறது. லமார்க் சொல்வதுபோல் உயிர்கள் ஒவ்வொன்றும் முந்தைய உயிரில் இருந்து பரிணாமம் அடைந்துதான் வந்துள்ளன. இதுதான் உண்மை.’ என்று கூறினார்.
டார்வின் கிரான்டின் உரையைக் கேட்டு மெய்மறந்து நின்றார். அவரால் தன்னுடைய கண்டுபிடிப்புக்கு இத்தனை முக்கியத்துவம் இருக்கிறது என்று நம்பவே முடியவில்லை. அண்டம் விடுத்துள்ள மிகப் பெரிய மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்கப் பங்காற்றி இருக்கிறோம் என்ற எண்ணமே டார்வினைத் துள்ளிக் குதிக்கச் செய்தது. அவர் மனம் முழுவதும் உற்சாகம் நிரம்பி இருந்தது. உள்ளம் மகிழ்ச்சியில் குதூகலித்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி சில மணி நேரங்கள்கூட நீடிக்கவில்லை.
கிரான்ட் தன் உரையை முடித்தவுடன் பிளினியன் சங்கத்தில் உறுப்பினராக இருந்த பிரவுன் என்பவர் எழுந்து, ‘இந்தக் கண்டுபிடிப்பு கடவுள் உயிர்களை படைக்கவில்லை என்பதை நிறுவுகிறது’ என்று கூச்சலிட்டார். அவ்வளவுதான். கொஞ்ச நேரத்தில் அங்கு கலவரமே வெடித்துவிட்டது. கூட்டத்திற்கு வந்திருந்த திருச்சபை அமைச்சர்கள் பிரவுனின் மேல் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். பிரவுன் வெளியிட்டிருந்த ஆய்வுக் கட்டுரைகளைக் கிழிக்கவும் முற்பட்டனர். டார்வினின் கண்களுக்கு முன்னாலேயே பிரவுனின் கண்டுபிடிப்புகள் தணிக்கை செய்யப்பட்டன. இனிமேல் இப்படியான ஆய்வுகள் வெளிவந்தால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்றும் திருச்சபை ஊழியர்கள் கூச்சலிட்டனர்.
நடப்பதைக் கண்டு டார்வின் அதிர்ந்துபோய் நின்றார். டார்வினுக்கு ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. அண்டம் குறித்தான ஒவ்வொரு பதிலுக்கும் நேர்மறை விளைவுகள் மட்டுமல்ல, எதிர்மறை விளைவுகளும் உண்டு. அதையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் அது.
டார்வின் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து அமைதியாக வெளியேறினார்.
(தொடரும்)
______
படம்: ராபர்ட் எட்மண்ட் கிரான்ட்