1827-ம் ஆண்டு இங்கிலாந்தின் அறிவியல் வளர்ச்சி அரசியலிலும் எதிரொலித்தது. இயற்கை என்பது உயிரினங்களுக்கு இடையேயான போட்டியே என்ற பார்வை வளர்ந்தது. சில அறிவியலாளர்கள் இதே பார்வையை மனித சமூகத்திற்கும் பொருத்திப் பார்த்தனர். ஒரு தேசத்தை வம்சவாளியாக ஒரு மன்னர் குடும்பமே ஆட்சி செய்வது இயற்கை வளர்ச்சிக்கு எதிரானது. மாற்றமடையாத சமூகம் வீழ்ந்துவிடும். மன்னராட்சி நீடித்தால் பிரிட்டிஷ் சமூகம் பலவீனமடைந்து வரலாற்றில் மறைந்துபோகும். வெளிப்படையான போட்டியே சமூகத்தில் தகுதியான தலைமையை உருவாக்கும் என்கிற கருத்துகள் உருவாகின. முதலாளித்துவம், கட்டுபாடுகளற்ற சுதந்திரச் சந்தை பற்றிய கருத்தாக்கங்கள் வளரத் தொடங்கின.
இந்த எண்ணங்கள் பல்கலைக்கழகங்களிலும் எதிரொலித்தன. பெரும்பாலான மாணவர்கள் புவியியல் சார்ந்த பாட திட்டங்களில் இணைய விரும்பினர். இதற்குக் காரணமும் இருந்தது. அப்போது இங்கிலாந்தில் கிழக்கிந்திய கம்பெனியின் செல்வாக்கு கொடிகட்டிப் பறந்தது. இங்கிலாந்து இளைஞர்களின் கனவே அந்த கம்பெனியில் பணி செய்வதுதான். கிழக்கிந்திய கம்பெனியும், தனது வணிகத்தையும் அதிகாரத்தையும் பற்பல தேசங்களுக்கு விரிவாக்கம் செய்வதற்கு, புவியியலில் பரிச்சயம் உள்ள இளைஞர்களைத் தேடியது.
மருத்துவராக இருக்கட்டும், பொறியாளராக இருக்கட்டும் உனக்குப் புவியியலில் பரிச்சயம் இருந்தால் உடனே பணி. இதுதான் கம்பெனியின் கொள்கை. இதற்குக் காரணம், காலனியை விரிவாக்கம் செய்ய ஒவ்வொரு ஊழியருக்கும் பூமியின் நிலவியல் அமைப்பு தெரிந்திருக்க வேண்டும் என்று கம்பெனி எண்ணியது. புதிதாக ஒரு தேசத்திற்கு செல்லும் ஊழியர்கள் அத்தேசத்தின் நிலவியல் அமைப்பு, அங்கு வாழும் தாவரங்கள், விலங்குகள் என எல்லா வளங்களையும் அறிந்திருக்க வேண்டும் அல்லவா? அதுதான் கம்பெனிக்குத் தேவை. பிரிட்டன் பேரரசுக்கும் தேவை. இதற்காகவே பல்கலைக்கழகங்கள் கனிமவியல், வானிலை அறிவியல், புவியியல், இயற்கை வரலாறு ஆகிய துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தன.
பல நாடுகளை ஆக்கிரமித்த பிரிட்டிஷ் அதிகாரிகளுமே அங்கு காணும் விநோதமான விலங்குகளை, தாவரங்களை உடனே இங்கிலாந்துக்கு அனுப்பிவிடுவர். இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் அவற்றை ஆராய்ந்து அவற்றின் மதிப்பை அறிவித்தன. டார்வினும் புவியியலில் ஆர்வம் கொண்டிருந்தார். குறிப்பாக பாறைகள் மேல், பாறைகளில் படிந்திருக்கும் விலங்குகள் மேல் அவருக்கு ஆர்வம் துளிர்விட்டிருந்தது.
பல்கலைக்கழகத்தின் அருங்காட்சியத்தில் அமர்ந்து பிரிட்டிஷ் அதிகாரிகள் அனுப்பும் விலங்குகளைப் பாடம் செய்வார். குறிப்புகள் எடுப்பார். அறிக்கைகளாகத் தயாரிப்பார். இங்கிருந்துதான் டார்வினுக்குப் புதைப் படிமங்களை ஆராயும் ஆர்வமும் தொடங்கியது. ஆனால் இவை எல்லாமே இரண்டாம் ஆண்டு பல்கலைக்கழக நாட்களுடன் முடிவுக்கு வந்தன.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் டார்வின் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்த வேளையில், அவருடைய நண்பர்கள் பலரும் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு வெவ்வேறு இடங்களுக்கு நகர்ந்திருந்தனர். டார்வினுக்கு உயிரியல் ஆய்வுகளில் ஆர்வம் ஏற்படுத்திய கிரான்டும் லண்டன் பல்கலைக்கழகத்தில் பணி பெற்று சென்றுவிட்டார். பிளினியன் சமூகமும் திருச்சபையின் கண்காணிப்பால் முன்புபோல இயங்க முடியாமல் இருந்தது. இவை எல்லாம் சேர்ந்து பல்கலைக்கழக வாழ்க்கைமீது டார்வினுக்கு வெறுமையை ஏற்படுத்தியது. மீண்டும் வீட்டு ஞாபகம் வாட்டியது.
0
அப்போது டார்வின் பதினெட்டு வயதை எட்டியிருந்தார். கோடை விடுமுறை. வீட்டுக்கு செல்ல மனம் ஏங்கியது. ஆனால் வீட்டில் தந்தை இருப்பார். எந்நேரமும் எரிந்து விழுவார். வேறு எங்கு செல்லலாம் என யோசித்தார். அப்போதுதான் அவருக்குத் தன் தாய்வழி சொந்தமான வெட்ஜ்வுட் உறவினர்களின் வீடு நினைவுக்கு வந்தது. வெட்ஜ்வுட் குடும்பத்தினர் லண்டனில் இருந்தனர். அவர்களைப் பார்ப்பதற்காக டார்வினின் சகோதரி கரோலின் விடுமுறைக்குச் சென்றிருந்தார். அங்கேயே தானும் செல்லலாம் என டார்வின் தீர்மானித்தார்.
அதற்கு வேறொரு காரணமும் இருந்தது. வெட்ஜ்வுட் மாமாவிற்கு ஐந்து மகள்களும் இருந்தனர். இது போதாது? உடனே கிளம்பிச் சென்றுவிட்டார். வெட்ஜ்வுட் சகோதரிகளுக்கும் ராபர்டின் மகன்கள் மீது ஈர்ப்பு இருந்தது. குறிப்பாக சகோதரிகளில் ஒருவரான ஃபேனி வெட்ஜ்வுட், சார்லஸ் டார்வின் வருகிறார் என்றவுடனேயே வானத்தில் பறக்கத் தொடங்கிவிட்டார். டார்வினுக்கும் ஃபேனியைப் பிடித்திருந்தது.
ஃபேனி, வேட்டையாடுவதற்காக டார்வினைக் காடுகளுக்கு அழைத்துச் செல்வார். டார்வின் அவருக்குத் துப்பாக்கி சுடுவதற்குப் பயிற்றுவிப்பார். இப்படியே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்தப் புதிய அனுபவம் டார்வினுக்குப் பிடித்திருந்தது. ஃபேனியையே திருமணம் செய்யவும் எண்ணினார். ஆனால் உடனே செய்துவிட முடியுமா என்ன? பெண் கேட்பதற்கு முதலில் வாழ்க்கையில் ஏதாவது சாதித்திருக்க வேண்டும் இல்லையா? அதுவரை இப்படிக் காதலில் திளைப்போம் எனத் தீர்மானித்தார்.
அடிக்கடி வெட்ஜ்வுட் வீட்டிற்கு சென்றார். அங்கேயே நாள் பொழுது பார்க்காமல் செலவழித்தார். விடுமுறை முடிந்து பல்கலைக்கழகம் திறந்தவுடனும்கூட வெட்ஜ்வுட் வீடே கதியாகக் கிடந்தார். இது தந்தை ராபர்டுக்குத் தெரிய வந்தது. அவர் கொந்தளித்தார். மகனை அழைத்து, என்ன செய்யப்போகிறாய் எனக் கேட்டார். டார்வினிடம் பதில் இல்லை. உண்மையிலேயே அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று டார்வினுக்குத் தெரியவில்லை. அமைதியாக இருந்தார்.
ராபர்ட் சீறி எழுந்தார். ‘இன்னும் எத்தனை நாட்கள் இப்படிப் பொறுப்பில்லாமல் சுத்தப் போகிறாய்? வாழ்க்கையைப் பற்றிய கவலையே கிடையாதா? எதிர்காலம் என்னாவது? உனக்கு மருத்துவத்திலும் ஆர்வம் இல்லை. என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை. இனிமேலும் உனக்காக நேரத்தையும் பணத்தையும் நான் செலவிடப்போவதில்லை. நீ என்னுடைய பணத்தில் உன் வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்று எண்ணுகிறாய். அது தவறு. ஏதாவது ஒரு துறையில் உன்னை நிரூபித்தால் மட்டுமே எனது ஆதரவும் பணமும் உனக்கு கிடைக்கும். என் சொத்தில் இனி எந்த உரிமையும் உனக்கு கிடையாது’ என ஒரு குண்டைப் போட்டார்.
டார்வினுக்கு இடிவிழுந்தாற்போல் இருந்தது. இனி என்ன செய்வது? தந்தையிடம் சென்றார். ‘எனக்கு மருத்துவத்தில் விருப்பமில்லை அப்பா. எனக்கு வரலாறு பிடித்திருக்கிறது. தத்துவம் பிடித்திருக்கிறது. அரசியல்கூட பிடித்திருக்கிறது. ஆனால் மருத்துவம் மட்டும் வேண்டாம். நீங்கள் வேறு என்ன சொன்னாலும் செய்கிறேன். தயவு செய்து என்னை மருத்துவராக்க விரும்பாதீர்கள்’ என வெளிப்படையாக சொல்லிவிட்டார்.
ராபர்டுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மகனுக்கு மருத்துவம் பிடிக்கவில்லை. புரிகிறது. ஆனால் மருத்துவத்தை விட்டால் வேறு என்ன வழி? ராபர்டுக்கு சம்பாத்தியம்கூட இரண்டாம்பட்சம்தான். குடும்ப கெளரவமும் அந்தஸ்தும் முக்கியம். அதனை டார்வின் எப்படிப் பெறப்போகிறான்? டார்வினை வழக்கறிஞருக்குப் படிக்க வைக்கலாமா? ராணுவ அதிகாரியாக ஆக்கிவிடலாமா? இந்த எண்ணங்களும் ராபர்ட்டுக்கு இருந்தன. ஆனால் டார்வின் அந்த வேலைகளுக்கும் சரிப்பட்டு வரமாட்டார் என ராபர்ட் எண்ணினார். அதற்கான மனக்கட்டுப்பாடோ பேச்சாற்றலோ டார்வினுக்கு சுத்தமாக கிடையாது. அப்படியென்றால் வேறு என்ன வழி? எதுவுமே கிடையாதா? ஒரே ஒரு வழி இருந்தது. அதுதான் சரியான வழி என்றும் ராபர்ட்டுக்குத் தோன்றியது. வாழ்க்கையை வீணடித்துச் சுற்றித் திரியும் தனது மகனைத் திருச்சபையில் பாதிரியாராக்குவதே அந்த வழி.
0
ராபர்ட் மட்டுமல்ல, அன்றைக்குச் செல்வந்தர்களின் பாழாய்போன மகன்கள் எல்லோருக்கும் கடைசிப் புகலிடம் திருச்சபைதான்.
ராபர்டுக்கு உண்மையில் மதங்களில் நம்பிக்கை கிடையாது. அவர் யதார்த்தமான மனிதர். ஆனால் தன்னைப் பார்க்க வரும் திருச்சபை ஊழியர்களை அவர் அறிவார். மக்கள் அவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை, மெத்த படித்த தனக்குக்கூட கிடைக்காது என்பதைப் பார்த்திருக்கிறார். அதனால் வாழ்க்கையைப் பற்றிய சரியான லட்சியம் இல்லாத டார்வினை, பாதிரியாராக்கிவிடலாம் என்று நினைத்தார்.
ஆங்கிலிகன் திருச்சபை அப்போது செல்வத்தில் புரண்டது. ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் பலரும் சோம்பேறிகளாகவும் ஊழல்வாதிகளாகவும் இருந்தனர். திருச்சபையின் பதவிகளுக்கு மறைமுக ஏலங்கள் விடப்பட்டன. அதிகம் பணம் தரும் நபருக்குப் பதவிகள் நிச்சயம். பாதிரியார் ஆகிவிட்டால்போதும். பெரிய வீடு, குத்தகை விடுவதற்கு நிலங்கள், உள்ளூரில் வரி வசூலிக்கும் உரிமை எனச் சகல வசதிகளுடனும் வாழலாம். இத்துடன் சமூகத்தின் உயர்வகுப்பினருடன் பழகும் வாய்பும் ஏற்படும். பெரிய அந்தஸ்து கிடைக்கும். காலையில் ஜெபித்துவிட்டு, மக்களுக்கு மத உபதேசங்கள் செய்துவிட்டு தான் நினைத்ததுபோல வேட்டையாடலாம். ஊர் சுற்றலாம். டார்வினுக்கு ஏற்ற வேலையாகத் திருச்சபை பணி இருக்கும் என்று ராபர்ட் நினைத்தார். திருச்சபையில் முதலீடு செய்வதே நல்லது என நம்பினார்.
ஆனால் அதற்காக போய் கேட்டவுடனே பாதிரியார் பணியைத் தூக்கித் கொடுத்துவிடுவார்களா என்ன? இதற்கும் படிக்க வேண்டும். திருச்சபையின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடிக்க வேண்டும். பிறகு சிறப்பு திருச்சபை வகுப்புகளில் பங்கேற்று தேர்ச்சி அடைய வேண்டும். இவை எல்லாம் சரியாக முடிந்தால் வேலை நிச்சயம். இதன்பின் இளைய பாதிரியாராக நமது ஊரிலோ, வேறு ஏதாவது ஒரு கிராமத்திலோ தேவாலயத்தில் பணிக்குச் சேர்ந்துவிடலாம். உனக்குப் பிடித்த பெண்ணைத் திருமணமும் செய்துகொண்டு வாழலாம். உனக்குச் சம்மதமா சார்லஸ்? எனக் கேட்டார்.
டார்வினுக்கு வாழ்க்கையில் நிலைகொள்வதற்கு இதைவிட வேறு நல்ல வாய்ப்பு தெரியவில்லை. பாதிரியாரானால் நினைத்தபடி ஊர் சுற்றலாம். வேட்டையாடலாம். ஆனால் அதைவிடத் தனது அறிவியல் ஆய்வுகளைச் சுதந்திரமாக முன்னெடுக்கலாம் என நம்பினார். கிரான்ட் சொல்வதுபோல் கிராமங்களை ஒட்டிய கடற்கரைகளில்தான் பல சிறிய உயிரிகள் வாழ்கின்றன. அவற்றை ஆராயலாம் என நினைத்தார்.
ஆனால் திருச்சபை படிப்பில் தேர்வதற்கு முதலில் கிறிஸ்தவத்தில் நம்பிக்கை வர வேண்டுமே? பள்ளி முடித்துவிட்டு சொல்லியிருந்தால் யோசிக்காமல் சென்றிருப்பார். ஆனால் எடின்பர்க் வாழ்க்கை அவருக்கு பல வித்தியாசமான கருத்தாக்கங்களை அறிமுகம் செய்திருந்தது. மதத்தைப் பற்றிய விமர்சன பார்வையை விதைத்திருந்தது. அந்தஸ்தும் செல்வமும் கிடைக்கிறதே என்பதற்காக மனசாட்சியை ஏமாற்றிக்கொண்டு ஊழியம் செய்ய இயலாது என நினைத்தார்.
தயங்கி நின்றார். ஆனால் வேறு வழியில்லை. இதைவிட்டால் வாழ்வதற்கு வேறு வாழ்க்கை இல்லை. தனக்குள் முதலில் நம்பிக்கை துளிர்விட வேண்டும். அதற்கான தயாரிப்புகளில் இறங்குவோம் என இறங்கினார். ஏராளமான கிறிஸ்தவ நூல்களை வாசித்தார். கிறிஸ்தவ நம்பிக்கையின் உண்மைத் தன்மைக்கு அறிஞர்கள் கூறிய ஆதாரங்களை ஆராய்ந்தார். இறுதியில், மனிதர்களின் இருண்ட வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்தும் ஒரே வழி கிறிஸ்தவமே எனத் தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டார். தந்தையின் விருப்பத்திற்கு சம்மதித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்து கல்லூரியில் முழு நேர மாணவராக இணைந்தார்.
(தொடரும்)