ஆரம்பக் கல்வி கற்றபோது ஹெலன் தனியாகப் படித்தார். மற்றவர்களைப்போல் தான் படிக்கவில்லை, தனக்கான கல்விமுறை தனித்துவமானது என்பதை உணர்ந்திருந்தார். சிறிய பூக்களைப்போல் பாடம் படிக்கும்போது மலர்வார். தான் மட்டும் தனி என்பதை உணர்ந்தால் அப்போதே மடியும் மலர்போல் வாடிவிடுவார்.
அதனால் ஸல்லிவன் ஹெலனின் கைகளில் எழுதிக்காட்டிப் பேசக்கூடிய பலரைச் சந்திக்க வைத்தார். எதிர்பார்த்ததைப்போல் ஹெலனுக்குள் மாற்றங்கள் ஏற்பட்டன. ஹெலனுக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள தூரம் வறண்ட பிரதேசமாக இருந்தது. சந்திப்பிற்குப் பிறகு ரோஜா பூக்களால் பூத்துக் குலுங்கின. ஹெலனின் மனம் நிரந்தரப் பூந்தோட்டமாக மாறியது. தனக்கும் மற்றவர்களுக்குமான இடைவெளியைத் தானாக முன்வந்து குறைத்துக்கொண்டார்.
அந்த ஆண்டின் கோடை விடுமுறை வந்தது. டஸ்கம்பியாவிலிருந்து 14 கி.மீ. தொலைவில் மலை மீது ஒரு சுற்றுலாத்தலம் இருந்தது. அங்கு இவர்களுக்கென ஒரு கோடை குடியிருப்பும் இருந்தது. அவ்விடத்தை ஃபெர்ன் குவாரி என்பார்கள். முன்பு ஒரு சுண்ணாம்பு குவாரி இருந்து மூடப்பட்டதால் அவ்விடத்திற்கு அப்பெயர் ஏற்பட்டது.
கோடை விடுமுறைக்குப் புறப்பட்டார்கள். அது மலை வாசஸ்தலம் என்பதால் இயற்கை எழிலுக்குப் பஞ்சமில்லை. பாறைகளில் பீறிடும் நீர், சிறிய ஓடையாகி ஓடிக்கொண்டிருக்கும். தாவியும், குதித்தும் கட்டுக்கடங்காமல் ஓடும் நீரின் பாதையில் பாறைகள் குறுக்கிட்டால் அருவியாக மாறி தன் பயணத்தைத் தொடரும். நீரோடைகளில் கொடிகள் படர்ந்திருந்தால் அவற்றை முழுமையாக மூடிக்கொண்டு ஓடும்.
நீர் ஓடும் அழகு ஒருபுறம் என்றால், விதவிதமான மரங்கள் மறுபுறம். அதன் உயரமான வளர்ச்சி கண்களுக்குத் தீனியிடும். உயரமாக வளர்ந்த மரங்கள் அனைத்தும் ஓக் மரங்கள். பார்க்கும் திசையெங்கும் தூண்களைப்போல் அவை நின்றிருந்தன. அதன் கிளைகளில் பூங்கொடிகள் படர்ந்து ஊஞ்சலாடிக்கொண்டிருந்தன. பெர்சிமன் மரத்தின் நறுமணம் நம்மூர் சந்தன மரத்தைப் போன்றது. காட்டின் மூலைமுடுக்கெல்லாம் மணத்தை வாரி வீசின. அந்த மணம் நாசிக்குள் புகும்போது இதய நாளங்கள் இசையை மீட்டின.
சில இடங்களில் காட்டுத் திராட்சைக் கொடிகள் மரத்திற்கு மரம் படர்ந்து பந்தல் போட்டுக்கொண்டிருந்தன. செடி கொடிகள், மரங்கள், மணம், அருவி இவற்றுக்கிடையில் வண்ணத்துப் பூச்சிகளும், வண்டுகளும் தங்கள் இசையை மீட்டிக்கொண்டு பறந்தன. இவ்வளவு எழில் கொஞ்சும் மலையில் ஹெலன் குடும்பம் குதூகலமாக இருந்தது.
இயற்கை தந்த சந்தோஷங்கள் அனைத்தும் அந்திவேளை வந்தால் முடிவிற்கு வந்துவிடும். மேடு பள்ளங்களை மறந்து சுற்றிக்கொண்டிருந்த ஹெலனும் ஸல்லிவனும் தங்கள் கூடாரத்திற்குத் திரும்பினர்.
ஓக் பைன் மரங்களுக்கிடையே அழகாக அமைக்கப்பட்ட கூடாரம் அது. கூடாரத்தின் இருபுறமும் சிறிய அறைகள். அதைச் சுற்றிலும் தாழ்வாரம் அமைக்கப்பட்டிருந்தது. மலைக்காற்று காட்டின் சுகந்தத்தை அள்ளிக்கொண்டுவந்து கொட்டியது. பெரும்பாலான நேரத்தை அந்தத் தாழ்வாரத்திலேயே கழித்தனர். ஏனெனில் மொத்த மலை வளத்தையும் அங்கிருந்தே பார்க்க முடியும். சமையல் வேலைக்கு உதவி செய்வது, சாப்பிடுவது, விளையாடுவது என எல்லாவற்றையும் அங்கேயே நிகழ்த்தினார் ஹெலன்.
கூடாரத்தின் பின்புறத்தில் ஒரு பெரிய பாதாம் மரம் இருந்தது. அதில் ஏற வசதியாக மரத்தைச் சுற்றி படிக்கட்டுகளும் இருந்தன. இம்முறை மரத்தில் ஏறவில்லை. மரத்திற்கு அருகில் சென்று தொட்டுப்பார்த்தார். காற்றில் கிளைகள் அசைவதை உணர்ந்தார். அது இலை உதிர் காலம். இலைகளின் உதிர்வைக்கூட ஹெலனால் உணர முடிந்தது.
ஃபெர்ன் குவாரிக்கு இன்னும் பலரும் கோடை விடுமுறையைக் கழிக்க வந்திருந்தனர். அவர்களோடு ஹெலன் குடும்பமும் ஒன்றாகச் சேர்ந்து பொழுதைக் கழித்தனர். மாலை நேரத்தில் கூடாரத்திற்கு வெளியே கதகதப்பிற்காக நெருப்பு மூட்டுவர். சுற்றிலும் அமர்ந்து கொண்டு சிறுவர்கள் விளையாடுவார்கள். பெரியவர்கள் சந்தோஷமாகப் பேசி உறவாடுவார்கள். நள்ளிரவு வரை பேச்சு தொடரும். பலரும் தங்கள் வீர தீர சாகசக் கதைகளைச் சொல்வார்கள்.
புலி சிங்கம் போன்றவற்றை வேட்டையாடிய சாகசம் அல்ல. வான் கோழிகளையும், காட்டு வாத்துகளையும் சுட்டுப்பிடித்த கதைகள் அவை. மீன் பிடித்த கதை, தந்திர நரியிடமே தங்கள் புத்திசாலித்தைப் பயன்படுத்திய கதைகள் என யாவும் ஓடும்.
சிங்கம், புலி, கரடி போன்ற கொடிய காட்டுவிலங்குகள்கூட இவர்கள் முன் வர அஞ்சும். அந்த அளவிற்கு வாய் வீரம் பேசினார்கள். மறுநாள் வேட்டைக்குப் புறப்படலாம் என்ற கடைசி உரையாடலோடு எழுந்தார்கள். இரவு வணக்கத்திற்குப் பிறகு ஒருசிலர் அவரவர் கூடாரத்திற்கு உறங்கச் சென்றுவிட்டனர். மற்றவர்கள் ஹெலன் வீட்டிற்கு அருகிலேயே படுத்துவிட்டனர்.
கையில் கிடைத்ததைக் கொண்டு தயாரிக்கப்பட்ட எந்தப் படுக்கையும் அவர்களுக்குப் பூம்பஞ்சு மெத்தையே. சுற்றி உறங்குபவர்களின் மூச்சுக் காற்றிற்கும் நாயின் மூச்சுக்காற்றிற்கும் வித்தியாசம் உணர முடியும் ஹெலனால்.
சொல்லியதுபோலவே உறங்கி எழுந்து அதிகாலை வேட்டைக்குப் புறப்பட்டார்கள். துப்பாக்கியின் சத்தமும், காபியின் மணமும் ஹெலனைத் தூக்கத்திலிருந்து எழுப்பியது. பலமான வேட்டை காத்திருப்பதைப்போல் பலத்த காலடி ஓசையோடு அவர்கள் உற்சாகமாகப் புறப்பட்டதை ஹெலனால் உணர முடிந்தது.
நகரத்தில் இருந்து பயணம் செய்து வந்த குதிரைகள், இரவு முழுவதும் மரத்தடியில் கட்டப்பட்டு ஓய்வெடுத்தன. நிலத்தைக் கீறி, உரக்கக் கனைத்து, தங்கள் எஜமானர்களை வேட்டைக்கு ஏற்றிச்சென்றன. கிண்கிணி மணி ஒலிக்க வேட்டைநாய்கள் பாய்ந்தோடும் சத்தம், வேட்டைக்காரர்கள் கூச்சலோடு பாய்ந்து பறந்தது என அத்தனை சத்தத்தையும் ஹெலன் அறிந்துகொண்டார்.
பெண்கள் சேர்ந்து கூடாரம் அருகே உணவு சமைக்க ஆரம்பித்தனர். முதலில் குழி வெட்டி விறகு அடுப்பு கட்டினர். இறைச்சியைக் காரம், மசாலா சேர்த்து அடுப்பிற்கிடையே வைத்துச் சுட்டனர். திறந்தவெளி சமையல். அதுவும் இறைச்சி என்றால் ஈ மொய்க்காமலா? மரக்கிளையை ஒடித்து அதன் மூலம் ஈக்களை விரட்டினர். கூரான கம்பிகளால் கறியைத் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுத்தனர். சுற்றிலும் இருந்த இயற்கை மணம், கூடவே வந்த இறைச்சியின் வெந்த மணம் ஹெலனுக்குச் சாப்பிடும் ஆர்வத்தைத் தூண்டியது. அமர்ந்து சாப்பிடும் இடத்தைத் தயார் செய்தனர்.
சமையல் இறுதிக்கட்டத்தை எட்டியபோது வேட்டைக்குச் சென்றவர்கள் திரும்பி வந்தார்கள். உற்சாகத்தோடு சென்றவர்கள் களைத்துத் திரும்பினர். குதிரைகள் தங்கள் குதிரைத்திறனை இழந்து வாயில் நுரைதள்ளிக்கொண்டிருந்தன. ஒரு வேட்டையும் இன்றி வெறுங்கையுடன் திரும்பியதால் உற்சாமின்றி அவ்வளவு சோர்வு காணப்பட்டது அனைவரிடமும்.
கொசுவை அடித்துக்கொண்டு வந்தாலும் வீர சாகசம் பேசியிருப்பார்கள். வேட்டையாடாமல் வந்ததற்கும் கதை சொல்ல ஆரம்பித்தனர். மானுக்கு அருகில் சென்றதாகவும், அதற்குக் குறிவைத்ததும் குறியை ஏமாற்றிவிட்டு அது ஓடிவிட்டதாகவும், பின்னால் எவ்வளவு தூரம் ஓடியும் அதை வேட்டையாட முடியவில்லை என்று தங்கள் வீரத்தோடு மானின் வேகத்தையும் அளந்துகொண்டிருந்தனர். தங்கள் காலடித்தடத்தை முயலின் கால்தடம் எனச் சொல்லிக்கொள்ளும் அறியாச் சிறுவர்களைப்போல் அவர்கள் வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டிருந்தனர். காரணம் கையில் ஒன்றும் கொண்டுவரவில்லை.
அவர்களின் ஏமாற்றத்தை மறக்கடித்தது பசி. சமைத்து வைத்த உணவு வாய்ப்பேச்சிற்குப் பூட்டுப் போட்டது. கன்றின் கறியும், பன்றி இறைச்சியும் பரிமாறப்பட்டன.
உண்டு முடித்ததும் ஹெலன் களைத்து வந்த குதிரைகளை நினைத்தார். இதற்கு முன்பான ஒரு கோடையில் இதே ஃபெர்ன் குவாரியில் ஹெலனுக்கும் குதிரை இருந்தது. அதற்கு பிளாக் பியூட்டி என்று பெயர் வைத்தார். ஏனெனில் அந்தக் கோடையில்தான் பிளாக் பியூட்டி என்ற புத்தகத்தைப் படித்து முடித்தார். அதனால் அந்தக் குதிரைக்கு எல்லா விதத்திலும் அப்பெயர் பொருந்தும் எனச் சூட்டினார்.
உடல் முழுவதும் கறுப்பு. நெற்றியில் மட்டும் பொட்டு வைத்ததைப்போல் வெள்ளை நிறத் திட்டு. கறுப்பழகனுக்கு அழகிற்கு மேல் அழகு சேர்த்தது அந்த வெள்ளைப்பொட்டு. அவன் மீது ஏறி மலையை வலம் வந்திருக்கிறார் ஹெலன். ஆபத்தில்லை என ஸல்லிவன் நினைத்தால் ஹெலனைச் சிறிது நேரம் தனியாகக் குதிரைச் சவாரிக்கு அனுமதிப்பார். ஏனைய நேரம் குதிரையில் செல்லும்போது ஸல்லிவனின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும்.
குதிரையில் சவாரி செய்ய விருப்பம் இல்லை என்றாலும், காலை உணவிற்குப் பிறகு வேலை இல்லை. ஆசிரியரும் மாணவியும் ஊர்வலம் புறப்பட்டுவிடுவார்கள் கறுப்பழகனோடு. மாடுகளும் குதிரைகளும் செல்லும் வழித்தடத்தைத் தவிர வேறு வழித்தடம் இல்லை. அவ்வழி அலுத்துப்போனது இருவருக்கும். புதியதைக் காண, பரவசமடைய, வேண்டுமென்றே காட்டில் தொலைந்துபோவார்கள். மேற்கொண்டு செல்ல முடியாத அளவிற்குக் கொடிகளும் செடிகளும் அடர்ந்திருந்தால் வந்த வழியே திரும்பிவிடுவர். எப்போது வீடு திரும்பினாலும் கை நிறைய வண்ணப் பூக்களையும், அரிய வாசனை உள்ள பூக்களையும் கொண்டுவருவார்கள்.
இந்த முறை குதிரை இல்லாததால் தன் ஒத்த சிறுவர்களோடு காட்டிற்குள் சென்றார்கள் ஹெலனும் அவருடைய தங்கையும். தக்காளியைப் போன்ற பெர்சிமஸ் பழங்களைத் தேடினார்கள். அந்தப் பழத்தை ஹெலன் சாப்பிட மாட்டார். ஆனால் அதன் மணம் பிடிக்கும். அதற்காக அதைத் தேடிச்செல்லும் கூட்டத்தில் ஹெலனும் இருந்தார். புற்களுக்கும் இலைகளுக்கும் இடையில் மறைந்திருக்கும் அந்தப் பழங்களைப் பறிப்பதில் ஹெலனுக்கு ஆர்வம் அதிகம். அதன் மேலோடுகளை அகற்றி கொட்டைகளை உடைத்தெடுக்க உதவுவார்.
சுற்றுலாவிற்கு வரும் அத்தனை பேருக்கும் குதிரை இருக்காது அல்லவா? எனவே மேலே வரும் பயணிகளுக்காக மலையில் ரயில் பாதை இருக்கும். ரயில் கூஊஊஊஊ என்ற சத்தத்தோடு பறக்கும்போது, ஹெலனை ஒத்தக் குழந்தைகள் கைதட்டி பதில் கூக்குரலிடுவார்கள். இந்த வேடிக்கை அங்குள்ள சிறியவர்களுக்கு மற்றுமொரு பொழுதுபோக்கு. பெரியவர்களின் வீர தீர வேட்டை இந்த ரயில் விளையாட்டின் முன் நிற்காது. வீட்டிற்குள் இருக்க நினைத்தாலும் ரயிலின் ஒலி இருக்கவிடாது. குதிரைகளும் மாடுகளும் பாதையில் நிற்பதால்தான் அதை விரட்ட ரயில் இப்படி ஊளையிடுகிறது என்று ஹெலனின் தோழி அவருக்கு விளக்கினார்.
இவர்கள் குடிலிலிருந்து ஒரு மைல் தூரத்தில் ஒரு மரப்பாலம் இருந்தது. அதிலுள்ள சட்டங்கள் அதிக இடைவெளியுடன் இருக்கும். அதன் மீது நடப்பது கத்தி மேல் நடப்பது போன்றது. உள்ளே விழுந்தால் கதை கதம். ஒருநாளும் ஹெலன் அதன் மீது நடந்ததில்லை.
ஒருநாள் ஹெலன் ஆசிரியருடனும், மில்ட்ரெட்டுடனும் காட்டைச் சுற்றியபோது வழி தவறிவிட்டனர். பல மணி நேரம் காட்டிற்குள் சுற்றியும் வெளியே வர வழி தெரியவில்லை. ஒரு வழியாக இந்த மரப்பால வழியைக் கண்டுபிடித்தனர். அதோ மரப்பாலம் என்று உற்சாகம் பொங்க கத்தினார் மில்ட்ரெட்.
உண்மையில் வேறு வழி கண்டுபிடித்துச் சென்றிருக்க வேண்டும். ஏற்கெனவே காட்டிற்குள் சுற்றிய அலுப்பு. இரவாகி இருள்வேறு மிரட்டிக் கொண்டிருந்தது. தெரிந்த வழியை விட்டு மீண்டும் புதிய வழியைத்தேட மனமில்லை. மரப்பாலத்தின் மீது ஏறி வருவதென முடிவெடுத்தனர்.
ஹெலன் கடலைப்போல் தண்டவாளத்தையும் தன் கால்களால் தொட்டு உணர நினைத்தார். பயமின்றித் தண்டவாளத்தின்மீது நடந்து வந்தார்கள்.
அப்போது திடீரென ரயில் வருகிறது என்று மில்ட்ரெட் கத்தினார். ரயில் வரும் சத்தத்தின் அதிர்வை உணர்ந்ததும் ஹெலன் பயந்துபோனார். அதிக இடைவெளி உள்ள குறுக்குக் கட்டை வழியாக உடனே கீழே தொங்கினர். தக்காளி சட்னி ஆகாமல் ரயிலிடமிருந்து தப்பித்தனர்.
தலைக்கு மேல் ரயில் நீண்ட நேரம் சென்றது. ரயில் சென்று முடித்தும் மரப்பாலம் அதிர்ந்துகொண்டிருந்தது. ரயில் ஓடும்போது பாலம் ஆடிய ஆட்டத்திற்குக் கீழே இருந்த பெரிய பள்ளத்தில் விழுந்துவிடுவோம் என்று பயந்தனர். உயிரைக் கையில்பிடித்துக்கொண்டு நேரத்தைக் கடத்தினர். என்ஜின் கக்கிய அனலை முதன் முதலாக அதன் அருகிலிருந்து உணர்ந்தனர். புகை மூச்சுமுட்ட வைத்தது. கரியின் சாம்பல் கண்களை நிறைத்தன. இதயத்தில் அதன் தடதடப்பு அடங்க நீண்ட நேரமெடுத்தது. இனி பிரச்சினை இல்லை என்று உணர்ந்தபோது புத்துயிர் எடுத்தனர் மூவரும். படாதபாடுபட்டு உயிர்பிழைத்து வீட்டிற்குச் சென்றால் குடிலில் யாரும் இல்லை. மற்றவர்கள் இவர்களைத் தேடி காட்டிற்குள் சென்றிருந்தனர்.
(தொடரும்)