Skip to content
Home » இலக்கியம் தரும் பாடம் #4 – நிதானத்தின் நேர்த்தியான வடிவம்

இலக்கியம் தரும் பாடம் #4 – நிதானத்தின் நேர்த்தியான வடிவம்

இந்தக் காலத்தில் ‘ரிலாக்ஸ்ட்’ ஆக இருப்பதன் அவசியம் பற்றி நிறைய பேசப்படுகிறது. நான்கூட அதுபற்றி கொஞ்சம் ‘டென்ஷனுடன்’ பேசியிருக்கிறேன். மூச்சு அமைதியாக, ஆழமாக இழுத்துவிட்டால் உடல் நிதானம் அடையும். உடல் நிதானம் அடையும் அளவுக்கு மனமும் நிதானம் அடையும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன்.

அது எப்படி அடையும்? எனக்கு அடையவில்லையே என்று என்னிடம் கேள்விகள் கேட்டு பலர் என்னை ‘டென்ஷன்’ நிலைக்கு மீண்டும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

சரி நான் சொல்லவருவது என்ன? ரிலாக்ஸ்டாக இருப்பது ரொம்ப அவசியம். ஆனால் பிரச்னை ஏதும் இல்லாதபோது நாம் நிதானமாக, மனத்தளர்ச்சியுடன்தான் இருப்போம். அது இயல்பாகவே நடக்கும் விஷயமாக இருக்கும். ஆனால் ஒரு சொல், ஒரு நடவடிக்கை, ஒரு பார்வை போதும் நம்மை டென்ஷனாக்க.

நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய் என்று அபூ ஜஹல் என்ற பரம எதிரி, நபிகள் நாயகத்தைப் பார்த்து ஒருமுறை சொன்னான். நபிகள் நாயகம் எல்லா வகையிலும் அழகானவர்கள். அது அவர்களோடு பழகிய, அவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித் தோழர்களுக்கு மட்டுமல்ல, எதிரிகளுக்கும் தெரியும்.

அபூ ஜஹல் பரம எதிரியாக இருந்தவன். அவனுக்கும் நபிகளாரின் அழகு பற்றித் தெரியும்தான். ஆனால் அவன் நபிகள் நாயகத்தைக் கடுப்பேற்ற முயற்சி செய்தான். அதற்காகத்தான் அப்படிச் சொன்னான்.

அப்ப என்னாச்சு? நபிகளார் கோபமடைந்தார்களா? அதுதான் இல்லை. எந்த ஞானியையாவது யாராவது கோபப்படுத்திவிட முடியுமா என்ன? ஒருமுறை புத்தரைக்கூட அவர் முன்னேயே ஒரு ஊர் மக்கள் வேண்டுமென்றே அசிங்கமாகப் பேசினார்களாம். அதையெல்லாம் கேட்ட புத்தர், ‘மன்னிக்க வேண்டும். நான் அவசரமாக அடுத்த ஊருக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்ன வார்த்தைகளையெல்லாம் உங்களிடமே திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். நான் அடுத்த முறை இந்தப் பக்கமாக வரும்போது நீங்கள் அவற்றை மீண்டும் பயன்படுத்தலாம்’ என்று சொல்லிச் சென்றாராம்.

கோபமடையாமல் நபிகளார் அபூ ஜஹலுக்கு ஒரு பதிலைச் சொன்னார்கள். அழகான பதில். அது பதில் என்பதைவிட பதிலடி என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஓங்கி அறைவது போன்ற பதிலடி அல்ல. லேசாக கன்னத்தில் தட்டுவது போன்ற பதிலடி அது.

நபிகளார் சொன்னார்கள்: ‘நான் கண்ணாடியாக இருக்கிறேன்’.

அடடா, என்ன அழகான பதில். உன் அசிங்கத்தைத்தான் நீ என்னிடத்தில் பார்க்கிறாய் என்பதைவிட மிகச் சரியான பதிலடி வேறென்ன இருக்க முடியும்?

அப்படியொரு நிதானத்தின் உருவமாக இலக்கியத்தில், காவியத்தில் இருப்பவர் நம் ராமன். ஆமாம். கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. அதைப்பற்றித்தான் சொல்ல வருகிறேன்.

‘நாளைக்கே நீ நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொள்வாய்’ என்று அப்பா சொல்லிவிட்டு அதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு, ‘இல்லையில்லை, உன் தம்பிதான் பிரதமர். அதுமட்டுமல்ல, நீ பதினான்கு ஆண்டுகளுக்கு காட்டில் போய் வசிக்க வேண்டும்’ என்று சித்தி சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்?

அந்தப் பாத்திரம் நாமாக இருந்தால் வன்முறை நிச்சயம் வெடித்திருக்கும். எனக்குத்தான் உரிமை உள்ளது; அவனெல்லாம் பிரதமரா?’ என்று உரிமைக்குரல் எழும்பியிருக்கும்.

அப்படித்தான் ராமாயண காவியத்திலும் ஒரு காட்சி நடந்தது. முதல் மனைவி கௌசல்யாவின் மகனான ராமருக்கு நாளைக்கு முடிசூட்டு விழா என்று தசரதர் அறிவித்துவிட்டார். நாடு முழுவதும் மக்கள் களிப்புடன் கொண்டாட்டத்தில் இருந்தனர். ஏனெனில் ராமரின் அற்புத குணாம்சங்களைப்பற்றி மக்களுக்கு நன்றாகத்தெரியும்.

ஆனால், மந்தரையின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட்ட கைகேயி, தசரதரிடம் எதிர்வரம் கேட்டார். ராமருக்கு பதிலாகத் தன் மகன் பரதர் அரசாள வேண்டும் என்றார். அதோடு விட்டாரா? ராமர் பதிநான்கு ஆண்டுகள் காட்டில் வசிக்க வேண்டும் என்றும் சேர்த்துக்கேட்டார்.

அவர் ஏற்கெனவே ஒரு யுத்தத்தில் செய்த உதவிக்கு பதிலாக வரம் கொடுப்பதாக தசரததர்தான் கடந்தகாலத்தில் சொல்லியிருந்தார். அவரது தேர்க்கால் உடைந்தபோது தன் விரலைக்கொடுத்து தேரை இயக்க உதவியவர் கைகேயி. அப்போது தசரதர் கொடுத்த வரத்தைத்தான் இப்போது கேட்டார் கைகேயி.

வேறு வழியின்றி வரத்தைக் கொடுத்த தசரதர் மயங்கி விழுந்தார். அவர் மயக்கத்திலிருந்து எழுவதற்குள் கம்பர் பல வேலைகளைக் காவியத்தில் செய்துவிட்டார்.

ராமரை அழைத்த கைகேயி, நாளை நீ அரசாட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டாய், உன் தம்பி பரதனே நாட்டை ஆள்வான். நீ காட்டுக்குச் சென்று பதினான்கு ஆண்டுகள் வாழவேண்டும் என்றெல்லாம் ஏற்கெனவே போட்டு வைத்திருந்த திட்டத்தின்படி பேசினார்.

நாமாக இருந்தால் என்ன சொல்லியிருப்போம்? ‘நீ எங்கள் அப்பாவுக்கு இண்டாம் தாரம் தானே? முதல் மனைவியின் மகனான எனக்குத்தான் எல்லா உரிமையும் உண்டு. நான் உன்னை எதிர்த்து நீதிமன்றம் போவேன்’ என்றல்லவா சொல்லியிருப்போம்? ஆனால் ராமர் என்ன சொன்னார்?

ராமரின் முகமானது, ‘அவ்வாசகம் உணரக்கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா’ என்கிறார் கம்பர். அதாவது, கைகேயி சொன்ன அராஜகமான, அநியாயமான வார்த்தைகளைக் கேட்ட ராமரது முகம் அன்று மலர்ந்த செந்தாமரையினைவிட அழகாக ஆனதாம்.

தந்தையின் கட்டளையாக இல்லாதிருந்து, நீங்களாகவே இட்ட கட்டளையாக இருந்தாலும் நான் மறுக்க மாட்டேன் என்று வேறு ராமர் சொன்னார்.

பிரச்னை ஏதும் இல்லாதபோது அமைதியாக நேராக அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு ஆழமாக மூச்சு இழுத்து விடுவதல்ல உண்மையான ரிலாக்சேஷன். கடுமையான பிரச்னைக்கு மத்தியில், தனக்கு துரோகம் இழைக்கப்படும்போது அமைதியாக இருப்பதுதான் உண்மையான ரிலாக்சேஷன். அதுதான் கம்பராமாயணம் காட்டும் ரிலாக்சேஷன். இறைவன்மீது உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் செய்த ரிலாக்சேஷன்.

உண்மையான நிதானத்துக்கு மனித வடிவம் கொடுக்க முடியுமென்றால் அதற்கான ஒரு அழகான உதாரணம் ராமாயண காவியத்தின் நாயகர் ஸ்ரீ ராமர்.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *