மேரிலாண்ட் மாகாணத்தின் கிழக்குக் கரையில் வசித்த வெள்ளைக்காரர்களின் நிலவுடைமை, தொழில் தேர்வு, தங்கும் அமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து ஆப்பிரிக்கர்கள் இடமாறிக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயம். ஆனாலும் வெவ்வேறு பகுதியில் பிரிந்து வசிக்க நேர்ந்த தங்கள் குடும்பத்தினருடனும் சமூகத்தினருடனும் ஆப்பிரிக்கர்கள் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளத் தவறவில்லை.
மேற்கு மத்திய ஆப்பிரிக்காவிலிருந்தும் பயஃப்ரா வளைகுடா பகுதியிலிருந்தும் பெருமளவில் அமெரிக்கா வந்த ஆப்பிரிக்க இனத்தவர்களுக்கிடையேயான உறவுக்கண்ணி தொடர்ந்து வலுப்பெற்று நுட்பமான வலைப்பின்னலொன்று உருவானது. அவர்களின் குடும்ப, சமூக உறவுகளும் மொழியும் கலாசாரமும் அறுந்துவிடாமல் அடுத்தடுத்த தலைமுறைகளில் தொடர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து இடமாற வேண்டிய கட்டாயம் அந்த வலைப்பின்னல் உறுதியாக இருக்க உதவியது என்றுதான் சொல்லவேண்டும்.
பெரும்பாலான நேரங்களில், அடிமைக் குடும்பங்களின் உறுப்பினர்களில் சிலரை உரிமையாளர்கள் விற்றுவிடுவார்கள். வெள்ளைக்காரக் குடும்பங்கள் குத்தகைக்கோ விலைக்கோ வாங்கும் பண்ணை நிலங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று வெகுதொலைவில் பல மைல் தூரத்திலிருக்கும். இதனால் ஒரு பண்ணையில் வேலைசெய்பவர்களில் சிலரை வேறு இடத்துக்கு அழைத்துச்செல்வார்கள். வருடத்தின் சில மாதங்கள் ஒரு இடத்திலும் மற்ற நேரங்களில் வேறு இடத்திலும் தங்கியிருந்து வேலைசெய்வார்கள். புதிய நிலமாக இருந்தால் அதைச் சீர்ப்படுத்தி விவசாய நிலமாக மாற்றுவதற்குப் பல வருடங்கள் அங்கேயே வசிக்க நேரிடும். இப்படிப் பல காரணங்களால் அடிமைக் குடும்பங்கள் பிரிய நேரிட்டது. வெவ்வேறு இடங்களில் மாறிமாறி வேலை செய்ததால் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்பிலிருப்பது அவசியமானது. இதனால் சிக்கலான ஆனால் ரகசியமான, நம்பிக்கைக்குரிய தகவல்தொடர்பு, பயண வலையமைப்பொன்று உருவாகித் தொடர்ந்து செயலாற்றியது.
அடிமைகள், சுதந்திரமானவர்கள் என இரண்டு வகை ஆப்பிரிக்கர்களையும் கொண்ட இந்த வலையமைப்புதான் ஹாரியட்டின் துணிகரமான மீட்புப்பணிகளுக்கு உதவியாக இருந்தது. வெள்ளையர்களும் குவேக்கர் சமயத்தைச் சேர்ந்தவர்களும் உதவினாலும் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரம் வசித்த ஆப்பிரிக்கர்களின் துணிகரமான பங்களிப்பு அளப்பரியது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அச்சமிகுந்த இருண்ட நாட்களில் ஹாரியட்டுக்குத் தேவையான பாதுகாப்பையும் ஆதரவையும் உணவு, உறைவிடத்தையும் தகவல் தொடர்பையும் தடையின்றி வழங்கியது இந்த வலையமைப்புதான்.
0
ரிட், அதாவது ஹாரியட்டின் தாய், அட்ஹவ் பேட்டிசன் என்ற வெள்ளை நில உரிமையாளரின் உடைமையாக இருந்தார். ரிட்டும் அவருக்குப் பிறக்கும் குழந்தைகளும் 45 வயதாகும் வரையில் தன்னுடைய பேத்தி மேரி பேட்டிசனின் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று உயிலெழுதி வைத்தார் அட்ஹவ் பேட்டிசன். அதற்குப் பிறகு அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றுச் சுதந்திரமாக வாழலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
தொடக்க முதலே மேரிலாண்டில் வசித்த உரிமையாளர்கள் அடிமைகளை விடுவிக்கும் வழக்கம் நடைமுறையிலிருந்தது. அடிமைகளின் வாழ்வில் முக்கியம்வாய்ந்த இந்த நிகழ்வு ஒவ்வொரு கோட்டத்தின் நில ஆவணத்திலும் முறைப்படி பதிவுசெய்யப்பட்டது. அடிமைகளே பணத்தைச் சேமித்துத் தங்களின் விடுதலையை விலைகொடுத்து வாங்கும் வழக்கமும் இருந்தது. சில அடிமைகள் நீதிமன்றத்தில் தங்களின் அடிமைத்தளை செல்லாது என வழக்குத் தொடுத்து அதில் வெற்றியும் பெற்றார்கள். இப்படி அடிமைகளை விடுதலை செய்வதில் வெள்ளை உரிமையாளர்களின் சுயநலமும் அடங்கியிருந்தது.
இதைத் தடுப்பதற்காக 1752இல் மேரிலாண்ட் மாகாணம் முக்கியமான சட்டமொன்றை இயற்றியது. அதன்படி, உடலும் மனமும் நலமாக இருந்து பணிசெய்யும் திறனும்கொண்ட 50 வயதுக்கு மேற்படாத அடிமைகளை உரிமையாளர் விடுவிக்கமுடியாது. உடல்நலிவுற்ற ஓய்வுபெற்ற அடிமைகளைப் பராமரிக்கும் கடமையிலிருந்து உரிமையாளர்கள் தப்பிப்பதைத் தடுப்பதற்காக இயற்றப்பட்ட சட்டம். உரிமையாளரின் இறுதிக்காலத்தில் அடிமைகளை விடுவிப்பதற்காக எழுதப்படும் ஆவணம் சட்டத்துக்குப் புறம்பானது. அல்லது அடிமைகளை விடுவித்த காரணத்தால் கடனைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் போனாலும் அது செல்லாது. காலமுழுவதும் தங்களுக்காக உழைத்த அடிமைகளை உரிமையாளர்கள் பராமரிப்பதைக் கட்டாயமாக்க இந்தச் சட்டம் உதவும் என நம்பப்பட்டது.
ரிட்டின் பணிக்காலத்தைக் குறைத்தது பேட்டிசன் குடும்பத்துக்கு லாபகரமான செயலல்ல என்றாலும் அந்தக் காலகட்டத்தில் நிலவிய மனப்போக்கையொட்டியே அந்த முடிவை அட்ஹவ் எடுத்தார். 1790களில் வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் மட்டுமின்றி மற்ற பகுதிகளிலும் அடிமைத்தளை நியாயமான செயலல்ல, அடிமைகள் விடுதலைபெறவேண்டும் என்ற எண்ணம் மக்களின் மனதில் கிளர்ந்தது. குவேக்கர் போன்ற புதிய சமயங்களும் மெதாடிஸ்ட் போன்ற கிறிஸ்தவ சமயத்தின் பிரிவுகளும் அடிமைத்தளையை எதிர்த்தன. அடிமைத்தளையை ஒழிக்கவேண்டும் என்பதற்கு இறைநம்பிக்கை மட்டுமின்றிச் சமயச்சார்பற்ற சிந்தனை வலுப்பெற்றதும் காரணமாக இருந்தது. 18ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற அமெரிக்கப் புரட்சியின் தன்னுரிமை, விடுதலையுரிமை ஆகிய முழக்கங்களும் இன்னொரு காரணம். இங்கிலாந்தில் எழுந்த அடிமைத்தளையை ஒழிக்கவேண்டும் என்ற எதிர்ப்புக்குரல் அமெரிக்காவின் கிழக்குக் கரையில் எதிரொலித்தது. இதனால் 1790இல் மேரிலாண்ட் மாகாண பொதுச் சபையில் அடிமைகளை இறுதி உயிலின்படியும் விருப்ப ஆவணத்தின்படியும் விடுவிக்கலாம் என மாற்றியெழுதப்பட்ட சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் நில உரிமையாளர்களின் தொழில்முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. வருடமுழுவதும் உழைப்பைக் கோரிய புகையிலையைப் பயிர்செய்வதற்குப் பதிலாக கோதுமையையும் மற்ற தானியங்களையும் பயிரிட்டு ஏற்றுமதி செய்தனர். மரம்வெட்டும் தொழிலிலும் கவனத்தைச் செலுத்தினர். இந்தப் பணிகளுக்கு ஆண்களே அதிகம் தேவைப்பட்டனர். அடிமைகளை விலைகொடுத்து வாங்கி நிரந்தரமாகச் சொந்தமாக்கிக் கொள்வதைவிடவும் தேவைப்படும்போது கூலிக்கு வேலை வாங்குவது லாபகரமாக இருந்தது. இதனால் வெள்ளை நில உரிமையாளர்கள் தங்களிடம் இருந்த அடிமைகளில் பலரை விற்கும் நிலைமை நிலவியது.
அதே நேரம், மேரிலாண்ட் மாகாணத்தின் அடிமை உரிமையாளர்களில் பலர் அடிமைத்தளை ஒழிப்பைக் கடுமையாக எதிர்த்தனர். அடிமைகள் விடுதலை பெற்றால் பொருளாதார, அரசியல், சமூக இயக்கவியல் அதிகாரம் தங்களின் கைவிட்டுப்போய்விடும் என்ற அச்சத்தின் விளைவு. அடிமைகளின் விடுவிப்பை ஆதரித்தவர்களும் உடனடியாகச் செயல்படுத்தாமல் எதிர்காலத்தில் விடுவிக்கிறோம் என உயிலெழுதினர். அடிமைகளின் உழைப்புத் திறன் அதிகமாக இருக்கும் இளவயதில் முடிந்த அளவுக்குப் பயன்பெற்ற பிறகு உழைப்புத் திறன் குறைந்த நேரத்தில் விடுவித்தனர். சில உரிமையாளர்கள் அடிமைகளை விற்கும்போது குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு விடுவிக்கவேண்டும் என்று ஆவணத்தில் எழுதினர். இதனால் அடிமைகளுக்காகச் செலவிட்ட தொகை கைக்கு வந்துசேர்ந்ததோடு விடுவிப்பை ஆதரித்தது போலவும் ஆயிற்று. எதிர்காலத்தில் விடுவிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையினால் அடிமைகள் விசுவாசத்தோடு இருப்பார்கள் எனவும் உரிமையாளர்கள் நம்பினர்.
0
1790 மக்கள் கணக்கெடுப்பு பட்டியலில் அட்ஹவ் பேட்டிசனின் வீட்டில் மொத்தம் ஏழு அடிமைகள் இருந்தது பதிவாகியுள்ளது. அவர் பண்ணையின் ஆடு, மாடு, குதிரைகளைப்போல அவர்களும் உடைமைகள் என்பதால் பெயர்கள் எதுவும் பதிவாகவில்லை. 1791இல் அட்ஹவ் எழுதிய உயிலிலும் ரிட்டின் தாய் மாடஸ்டியின் பெயரைக் குறிப்பிடவில்லை. ரிட் 1780களின் பிற்பகுதியில் அட்ஹவ்வின் பண்ணையில் பிறந்தாரென்பதால் அவருடைய தாயும் நிச்சயம் அங்கேதான் இருந்திருக்கவேண்டும். சொல்லப்போனால் அட்ஹவ்வின் அடிமைகள் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கும் வாய்ப்பு அதிகம். உயிலில் தன்வசமிருந்த அடிமைகளைத் தன்னுடைய வருங்கால சந்ததியினருக்குப் பிரித்துக்கொடுத்தார் அட்ஹவ். கூடவே அவர்கள் விடுதலை பெறும் காலத்தையும் குறிப்பிட்டார்.
அட்ஹவ்வின் பேத்தி மேரி பேட்டிசன் 1800இல் மணந்துகொண்ட ஜோசப் ப்ராடஸ் ஓரிரு வருடங்களில் திடீரென இறந்துபோனார். வெள்ளையராகவும் நிலவுடைமையாளராகவும் இருந்தாலும் ஒரு பெண்ணால் தனியாக வாழமுடியாத சமூகச் சூழல். கைக்குழந்தையான மகனுடைய சொத்தையும் தாத்தாவின் சொத்திலிருந்து கிடைத்த வருவாயையும் பாதுகாக்கவேண்டிய கட்டாயம். அடுத்த வருடமே ஓரளவுக்கு நிலம் சொத்துடன் சமூகத்தில் நல்ல நிலையிலிருந்த ஆண்டனி தாம்சனை இரண்டாவதாக மணந்துகொண்டார் மேரி. ஆண்டனியின் முதல் மனைவியும் உயிரோடில்லை என்பதால் அவருக்கும் அது இரண்டாம் திருமணம். முதல் மனைவி மூலம் பிறந்த மகன்கள் மூவரும் பதின்பருவத்தினர். ஆண்டனியின் இல்லத்துக்கு இடம்பெயர்ந்த மேரி மகன் எட்வர்டோடு தன்னுடைய தனிப்பட்ட அடிமையான ரிட்டையும் இன்னும் நான்கு ஆண் அடிமைகளையும் கூடவே அழைத்துவந்தார்.
ஆண்டனியின் ஒன்பது அடிமைகளில் பென் ராஸும் ஒருவர். திறமையான பணியாளர். ஆண்டனியின் மரங்களடர்ந்த நிலத்தில் மரங்களை ஆய்வுசெய்யும் ஆய்வாளராகவும் மேற்பார்வையாளராகவும் வேலைசெய்தார். மேரி ஆண்டனியை மணமுடித்ததால் ரிட்டும் பென்னும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அடிமைகளாகினர். இருவரும் 1808இல் திருமணம் செய்துகொண்டனர். 1810இல் தாம்சன் பண்ணையில் இருந்த அடிமைகளின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்தது. மேரியோடு வந்த அடிமைகளோடு பென், ரிட் தம்பதியினருக்குப் பிறந்த குழந்தைகளும் சேர்ந்துகொண்டது காரணமாக இருக்கலாம்.
18ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மேரிலாண்ட் பகுதிக்கு சுமார் 18000 அடிமைகள் வந்துசேர்ந்தனர் என்பதை வரலாற்றுப் பதிவுகள் உறுதிசெய்கின்றன. ஹாரியட் டப்மனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் புத்தகமாக எழுதிய ஃபிராங்க்ளின் சான்பார்ன் ‘ஹாரியட்டின் உடலில் வெள்ளையர் ரத்தம் ஒரு சொட்டுக்கூட கலக்கவில்லை’ என்று உறுதிபடக் கூறினார். நாளிதழ் நிருபர் ஒருவர் எழுதிய கட்டுரையில் ‘நீ அஷாந்தி இனத்தைச் சேர்ந்தவள் என்பதில் சந்தேகமேயில்லை’, என்று மற்ற ஆப்பிரிக்கப் பெண்கள் கூறியதாக எழுதினார்.
பின்னொரு நாளில் இன்னொரு நிருபரிடம் ஹாரியட் தன்னுடைய பாட்டி ஆப்பிரிக்காவிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டதாகவும் தன்னுடைய தாய் ஒரு வெள்ளையரின் மகளென்றும் சொன்னதாகப் பதிவாகியுள்ளது. பென் எந்தக் கலப்படமுமற்ற முழுமையான ஆப்பிரிக்கர். அவருடைய உறவினர்கள் டார்செஸ்டர் கோட்டத்தில் வசித்தனர், ஆனால் அவருடைய பெற்றோர், உடன்பிறந்தவர்களின் பெயர் தெரியவில்லை. அவர்களில் பலர் அடிமைகள் என்றாலும் சிலர் சுதந்திரமானவர்களாக இருந்தனர்.
அஷாந்தி இனத்தவர்களை யாரும் அடிமைப்படுத்த முடியாது என்ற நம்பிக்கை நிலவியது. அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் உரிமையாளர்களுக்கு அடிபணிய மறுத்தனர், பெரிய இடைஞ்சலாக இருந்தனர். அஷாந்தி பேரரசு காலனியாதிக்கத்தை அண்டவிடாமல் போரிட்டு மற்ற ஆப்பிரிக்கப் பேரரசுகளைவிடவும் அதிக காலம் தாக்குப்பிடித்தது. அண்டை நாட்டினருடன் தொடர்ச்சியாக நடந்த கலகங்கள் பேரரசை நலிவடையச் செய்தன. அதனால் தனிநபர்களைச் சிறைப்பிடித்து அடிமைகளாக விற்பதைத் தடுக்கமுடியவில்லை.
அஷாந்தி இனத்தவர்களின் திடகாத்திரமான உடலமைப்பினாலும் வெவ்வேறு பணிகளைச் செய்யும் திறமையினாலும் வெள்ளை நில உரிமையாளர்கள் அவர்களைப் போட்டிபோட்டுக்கொண்டு விலைக்கு வாங்கினர். அஷாந்தி இனம் தங்க வர்த்தகத்தில் ஈடுபட்டாலும் பெருமளவில் விவசாய சமூகமாகவே இருந்தது. நிலத்தையும் நீரையும் புனிதமாகக் கருதினர். பெண் முன்னோர்களின் அளப்பரிய ஆற்றலை ஆதாரமாகக் கொண்டு இயங்கிய சமூகமும்கூட. பெண்களை ஆலோசகர்களாகவும் தலைவர்களாகவும் ஏற்றுக்கொண்ட சமூகம்.
காடுகளில் வாழ்ந்தவர்கள் நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்து கிராமங்களையும் சிற்றூர்களையும் அமைத்து அங்கே வசிக்கத் தொடங்கினர். இயற்கை வேளாண்மையின் பயிர்ச் சுழற்சி முறையைப் பின்பற்றி மண்வளத்தை மேம்படுத்துவது குறித்த அறிவைப் பெற்றவர்கள். மண் அரிப்பைத் தடுக்கும் முறைகளைப் பின்பற்றினர். சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சோளம், வாழை எனப் பலவகைப் பயிர்களை வளர்த்தனர் என்று ஐரோப்பிய பார்வையாளர்கள் எழுதிய குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தத் திறன்களால்தான் அஷாந்தி இனத்தவரையும் தற்போதைய கானா நாடு அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த மக்களையும் வேலைக்கு அமர்த்துவதில் வெள்ளை நில உரிமையாளர்கள் நாட்டம்கொண்டனர். செல்வத்தைத் திரட்டுவதற்கும் பெருக்குவதற்கும் முக்கியத்துவமளிக்கும் அஷாந்தி இனத்தவர்களின் சமூக, கலாசார செயல்முறைகளையும் வெள்ளை உரிமையாளர்கள் உணர்ந்திருக்கவேண்டும்.
இயற்கை உலகுக்கும் ஆன்மிக உலகுக்கும் பாலமாக இருக்கும் தெய்வங்கள் நீரிலும் நிலத்திலும் இருப்பதாக நம்பியது அஷாந்தி இனம். நிலம் இறந்துபோன முன்னோர்களுடன் தொடர்புகொள்ள உதவுவதாக எண்ணினர். இதனால் வாழும் நிலத்திலிருந்து இடம்பெயரும் கட்டாயத்துக்காளாகி முற்றிலும் புதிய இடத்தில் கரும்பு, புகையிலைத் தோட்டங்களில் வசிப்பது மிகுந்த மனவேதனை அளித்தது. புதிய உலகம் எனப்படும் அமெரிக்காவுக்கு வந்தபின்னரும் தங்களுடைய கலாசாரச் செயல்பாடுகளை இடைவெளியின்றித் தொடர முற்பட்டனர். இபோ, மிங்கோ, வின்னெபார், சிண்டா, சூக், பினா போன்ற ஆப்பிரிக்கப் பெயர்களைச் சூட்டிக்கொண்டனர் என்பது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பட்டியலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அங்க அடையாளங்களைக் குறிப்பிட காதில் வளையம் அணியும் துளை உள்ளது என்றும் தாடையில் பச்சை குத்தப்பட்டுள்ளது என்றும் எழுதியுள்ளனர்.
அமெரிக்காவுக்கு வந்துசேர்ந்த ஆப்பிரிக்கர்கள் வெவ்வேறு பகுதிகளையும் இனங்களையும் சேர்ந்தவர்களாக இருந்திருப்பார்கள். அதனால் கலாசார வழக்கங்களைத் தொடர்ந்திருக்க முடியாது என்று ஒரு காலத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் நினைத்தனர். ஆனால் தற்போது நடந்துவரும் ஆய்வு முடிவுகள் அந்த எண்ணம் தவறு என்பதை உறுதிசெய்துள்ளன. பெரும்பாலும் ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரை நாடுகளிலிருந்துதான் அடிமைகள் அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்டனர்.
அடிமை விற்பனையாளர்கள் அடிமைகளை வாணிகம் செய்ய வருகையில் செஸபீக் வளைகுடாவைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி அடிமைகளை வாங்குவது வழக்கம். பெரும்பாலும் ஒரே இன, கலாசாரப் பின்னணி கொண்டவர்களை மொத்தமாக விலைகொடுத்துப் பெற்றனர். இதனால், அடிமைகளுக்கிடையே ஒத்துணர்வு நிலவும் புதிய இடம் குறித்த அச்சம் விலகி வஞ்சிக்கப்பட்ட கோபம் குறையும் என நம்பினார்கள்.
1720 முதல் 1770 வரையிலான காலகட்டத்தில் சுமார் 5300 அடிமைகள் இந்தப் பகுதிக்கு வந்தனர் என்கிறது புள்ளிவிவரம். 1783ஆம் ஆண்டு முதல் அடிமைகளை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டது. மேரிலாண்டைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் அடிமைகளை கடத்திச் செல்வது, உள்நாட்டிலேயே விற்பது, அடிமைகளுக்குப் பிறந்த குழந்தைகளை அடிமைகளாக வைத்திருப்பது எனப் பல வழிகளில் அடிமைகளுக்கான தேவைகளை நிறைவுசெய்துகொண்டனர்.
1790இல் சுமார் 5300 ஆப்பிரிக்க அடிமைகளும் 500 அடிமைப்படாதவர்களும் மேரிலாண்டில் இருந்தனர். 1800இல் அடிமைப்படாதவர்களின் எண்ணிக்கை 2300ஆக உயர்ந்தது. அடிமைகளின் எண்ணிக்கை 2300ஆகக் குறைந்தது. வெள்ளையர்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. எண்ணிக்கை அதிகமானதால் ஆப்பிரிக்கர்களின் நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சொல்லப்போனால், அவர்களின் அரசியல் உரிமைகளையும் பொருளாதார, சமூகத் தேர்வுகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை இயற்றி ஒடுக்கினார்கள் வெள்ளையர்கள்.
(தொடரும்)