Skip to content
Home » கறுப்பு மோசஸ் #9 – அடிமை வாணிக ஒழிப்புக்கான முன்னெடுப்புகள்

கறுப்பு மோசஸ் #9 – அடிமை வாணிக ஒழிப்புக்கான முன்னெடுப்புகள்

அடிமைத்தளை மனித இனத்துக்கு எதிரானது, அதை ஒழிக்கவேண்டும் என்ற சிந்தனை முதலில் ஆங்கிலேயர்களுக்குத்தான் தோன்றியது என வரலாறு தெரிவிக்கிறது. 1772இல் இங்கிலாந்தில் நடைபெற்ற வழக்கொன்றில் அந்த மண்ணில் வசிக்கும் அடிமையின் உரிமைகள் குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பு முக்கியமானது. 1778இல் ஸ்காட்லந்தில் நடைபெற்ற மற்றொரு வழக்கில் 1772ஆம் ஆண்டின் வழக்குத் தீர்ப்பை முன்னோடியாகக் கொண்டு வேறொரு ஆப்பிரிக்க அடிமைக்கு விடுதலை வழங்கப்பட்டது.

1787ஆம் ஆண்டு மே 22ஆம் நாளில் அடிமை வாணிக ஒழிப்புச் சங்கம் இங்கிலாந்தில் நிறுவப்பட்டது. இந்தச் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் குவேக்கர்கள் என அழைக்கப்பட்ட சமூகத்தின் நண்பர்கள் என்ற கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவர்கள். அமைதியான முறையில் எந்த வன்முறையுமின்றிப் பணியாற்றிய இந்தச் சங்கம் பின்னாளில் தோன்றிய மற்ற இயக்கங்களுக்கு முன்னோடியாக விளங்கியது. அடிமை வாணிகத்தின் தீமைகள் குறித்தும் ஆப்பிரிக்க மக்களின் துயர நிலை குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துச் சொன்னது. சங்கத்தின் கோரிக்கையை ஏற்ற பிரிட்டிஷ் பாராளுமன்றம் அடிமை வாணிகத்தைத் தடைசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

1806ஆம் ஆண்டில் பிரிட்டிஷ், அமெரிக்க அரசாங்கங்கள் அடிமைகளுக்கு மறுவாழ்வளிக்கவேண்டும் என்று எண்ணம்கொண்டன. அடிமை வர்த்தகத்தோடு தங்கள் நாடுகளுக்கு எந்தத் தொடர்புமில்லை என்று அறிக்கை வெளியிட்டன. அதையொட்டி பிரிட்டிஷ் பாராளுமன்றம் அடிமை வாணிகச் சட்டத்தை 1807ஆம் ஆண்டு இயற்றியது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகக் கண்காணிப்புப் படைகளையும் அமைத்தது. ஆங்கிலேயப் பேரரசு தன்னுடைய காலனி நாடுகளில் அடிமைகளை விற்பதும் வாங்குவதும் சட்டத்துக்குப் புறம்பான செயல் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் அடிமைத்தளையை மட்டுப்படுத்தவும் காலப்போக்கில் ஒழிக்கவும் 1823இல் சங்கமொன்று அமைக்கப்பட்டது. இந்தியாவைத் தவிர மற்ற பகுதிகளில் அடிமைத்தளையை ஒழிக்கும் சட்டத்தை 1833இல் இயற்றியது. இந்தியாவில் அடிமைப்படுத்தல் தொன்றுதொட்ட வழக்கமாக நிலவியதால் 1838ஆம் ஆண்டில்தான் அடிமைத்தளையை ஒழிக்கும் பணியை நிறைவேற்ற முடிந்தது. இந்திய அடிமைச் சட்டத்தை 1843இல் நிறைவேற்றியது.

உலகளவில் நடைபெற்ற அடிமை வாணிகத்தில் ஆங்கிலேயர்களின் பங்கு 41% வரை இருந்ததால் அடிமைத்தளை ஒழிப்பு நடவடிக்கைகளினால் அடிமை வாணிகம் பெரும்பின்னடைவைச் சந்தித்தது. காலனி நாடுகளுடன் தான் கொண்டிருந்த அரசியல் உறவின்மூலம் அடிமை வாணிகத்தை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்தது இங்கிலாந்து. ஒப்பந்தத்தை மீறும் கப்பல்களைத் தடைசெய்யும் உரிமையையும் பெற்றது.

0

அடிமைத்தளை ஒழிப்பில் முக்கியப் பங்கு வகித்த எளிமை, சமத்துவம், அமைதி, சமூக நீதியைக் கடைபிடிப்பதில் உறுதியாகச் செயல்பட்டனர். பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அடிமை ஒழிப்புச் சட்டம் இயற்றுவதற்கான தூண்டுகோலாகச் செயல்பட்டனர். இதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே 1670களில் அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள பார்படோஸ் தீவில் அடிமைகளை நல்லவிதமாக நடத்தவேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். 1688இல் அமெரிக்காவில் அமைக்கப்பட்ட புதிய பிரிட்டிஷ் காலனியான பென்சில்வேனியாவில் நிலவிய அடிமைத்தளையை வெளிப்படையாக எதிர்த்தனர். ஜெர்மன்டவுன் என்ற ஊரில் நடைபெற்ற கூட்டத்தில் அடிமைத்தளைக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

அடிமைத்தளையை மறுத்து அமெரிக்காவில் பொதுவெளியில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கை இதுதான். உலகளவில் மனித உரிமையை வரையறுத்த முதல் ஆவணமும்கூட. அந்தக் காலகட்டத்தில் இந்தச் செயல்பாடு பரவலாகக் கவனிக்கப்படவில்லை என்றாலும் அடிமைத்தளை அறத்தின்பால் சார்ந்ததா என்ற கேள்வியை பென்சில்வேனியாவைச் சேர்ந்த குவேக்கர்களிடையே எழுப்பியது. அடிமை ஒழிப்பு குறித்த எழுத்துக்களும் செயல்பாடுகளும் தீவிரமடைந்தன.

1740ஆம் ஆண்டு முதல் புதிய தலைமுறையைச் சேர்ந்த குவேக்கர்கள் அடிமை வாணிகத்துடனான தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினர். 1775இல் பென்சில்வேனியா அடிமை ஒழிப்புச் சங்கம் உருவானது. அடிமை வாணிகத்தில் ஈடுபடுவது ஒழுக்கக்கேடான செயல் என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்தினர். வட கரோலினா மாகாணத்தில் அடிமைகளை விடுவிப்பது தடை செய்யப்பட்டிருந்ததால் அங்கே வசித்த குவேக்கர்கள் வேறு மாகாணங்களுக்குச் சென்று அடிமைகளை விடுவித்தனர்.

அடிமைகள் தப்பிச் சென்று விடுதலைபெற உதவும் ’நிலத்தடி இருப்புப்பாதை’யை அமைத்து அதை வழிநடத்துவதில் குவேக்கர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். வட கரோலினாவில் வசித்த லீவை காஃபின் இளம்பருவ முதலே தப்பியோடும் அடிமைகளுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தார், பின்னாளில் ஒஹையோ-இண்டியானா மாகாணங்களின் நிலத்தடி இருப்புப்பாதையின் தலைவராக விளங்கினார். ஹாரியட் டப்மனும் இந்த நிலத்தடி இருப்புப்பாதையைப் பயன்படுத்திப் பல அடிமைகள் தப்பிச்செல்ல உதவினார்.

ஈலையஸ் ஹிக்ஸ் என்ற குவேக்கர் ஆப்பிரிக்க அடிமைகளின் உழைப்பினால் உருவான பொருள்களைப் பற்றிய நூலொன்றை 1811இல் எழுதினார். அப்படித் தயாரிக்கப்பட்ட பொருட்களை விலைகொடுத்து வாங்குவது தவறு என்று வலியுறுத்தினார். இவர்களைப்போல பல குவேக்கர்கள் அடிமைகளின் மேன்மைக்காகத் தன்னலமின்றி உழைத்தனர். இதனால் கோபமடைந்த அடிமை உரிமையாளர்கள் குவேக்கர்களைக் கொல்லவும் தயங்கவில்லை. குவேக்கர்கள் உயிருக்குப் பயந்து அமெரிக்காவின் மேற்குப் பகுதிக்குக் குடிபெயரவேண்டியிருந்தது.

0

என்லைட்டன்மெண்ட் எனப்படும் அறிவொளிக் காலம் தொடங்கி அடிமைத்தளையை ஒழிக்கவேண்டும் என்ற சிந்தனை அமெரிக்கர்களிடையே மேலோங்கியது. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மஸசூஸெட்ஸ் மாகாணம் அடிமை வாணிகம் சட்டத்துக்குப் புறம்பானது என 1772இல் அறிவித்தது. 1764 முதல் 1774 வரையில் மஸசூஸெட்ஸ் மாகாண நீதிமன்றத்தில் சுமார் 17 அடிமைகள் தங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்கள்.

இதற்கிடையில் 1775இல் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலிருந்த 13 அமெரிக்க மாகாணங்கள் தங்களின் விடுதலைக்காகப் போராடின. அமெரிக்கப் புரட்சிப் போர் தொடங்கியது. 1783 வரையில் நடைபெற்ற இந்தப் போரின் முடிவில் பிரிட்டிஷ் பேரரசிடமிருந்து 13 மாகாணங்களும் விடுதலை பெற்றன. எல்லா மாகாணங்களும் ஒன்றிணைக்கப்பட்டு அமெரிக்க ஐக்கிய நாடுகள் உருவானது. அதன் முதல் அதிபராகப் பதவியேற்றார் ஜார்ஜ் வாஷிங்டன்.

1794இல் அமெரிக்கக் கப்பல்களை அடிமை வாணிகத்துக்குப் பயன்படுத்துவதும் அமெரிக்காவிலிருந்து மற்ற நாடுகளுக்கு அடிமைகளைக் கொண்டுசெல்வதும் தடை செய்யப்பட்டன. ஆனால் இதை நடைமுறைப்படுத்த எந்த முன்னெடுப்பும் இல்லை என்பதால் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளைக் கொண்டுவருவது தொடர்ந்து நடைபெற்றது. அடிமை ஒழிப்புக் குழுவினரின் இடைவிடாத முயற்சியினால் 1804இல் அமெரிக்காவின் வடக்கு மாகாணங்கள் அனைத்திலும் அடிமை வாணிகத்துக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டது. குறிப்பிட்ட வயதையடைந்ததும் அடிமைகள் ஒப்பந்தக்கூலிகளாக மாறிவிடுவர்.

1808இல் அமெரிக்கப் பாராளுமன்றம் அடிமைகள் இறக்குமதி தடைச் சட்டத்தை இயற்றியது. ஆனால் உள்நாட்டில் அடிமைகள் விற்பனை செய்யப்படுவது குறித்து அதில் எதுவும் சொல்லப்படவில்லை. அமெரிக்காவில் அடிமைத்தளை தொடர்ந்து நடைமுறையிலிருந்ததால் அடிமைகளில் பலர் கனடாவுக்குத் தப்பிச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே 1812இல் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே மீண்டும் போர் வெடித்தது. இரு தரப்புக்கும் வெற்றி கிட்டவில்லையென்றாலும் அமெரிக்கர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தித் தேசப்பற்றை விதைத்தது.

1793, 1850ஆம் ஆண்டுகளில் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட தப்பியோடும் அடிமைகள் சட்டம் அடிமைத்தளையிலிருந்து தப்பிக்க முயலும் அடிமைகளைச் சிறைப்பிடித்து மீண்டும் உரிமையாளர்களிடமே சேர்ப்பிக்கவேண்டும் என்றது. இதை அமெரிக்காவின் வடக்கு மாகாணங்கள் கடுமையாக எதிர்த்தன. தெற்கு மாகாணங்களைச் சேர்ந்த அடிமைகள் வடக்கு மாகாணங்களுக்கும் அங்கிருந்து கனடாவுக்கும் தப்பிச்செல்ல முயன்றனர்.

அமெரிக்காவிலிருந்த அடிமைகளின் மொத்த எண்ணிக்கை 40 லட்சம். அவர்களில் 95 சதவீதத்தினர் தெற்கு மாகாணங்களில் வசித்தனர். அடிமைத்தளையை ஆதரிக்கும் சட்டங்களையும் செயல்களையும் தெற்கு மாகாணங்கள் பின்பற்றின. அடிமை ஒழிப்பு இயக்கத்தினால் தங்களின் விவசாயத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்று நம்பின. அடிமை ஒழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்த 11 தெற்கு மாகாணங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து தாங்கள் பிரிந்துசெல்வதாக அறிவித்தன. ஆபிரகாம் லிங்கன் தலைமையிலான அமெரிக்க ஐக்கிய நாடுகள் இதை ஏற்கவில்லை. அந்தப் பிரிவை எதிர்த்து அமெரிக்க உள்நாட்டுப் போர் 1861 முதல் 1865ஆம் ஆண்டு வரையில் நடந்தது. தெற்கு மாகாணங்கள் தோல்வியடைந்து மீண்டும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் இணைக்கப்பட்டன. அடிமைத்தளையை ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.

0

அமெரிக்காவின் விளைநிலங்களும் பண்ணைகளும் அடிமைகளின் உழைப்பை நம்பியிருந்ததால் அடிமைத்தளை ஒழிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு எழுந்தது. கிழக்குக் கடற்கரையில் வசித்த ஆப்பிரிக்க அடிமைகள் பால்டிமோர், நியூ ஆர்லியன்ஸ் போன்ற மேரிலாண்டின் மற்ற பகுதிகளுக்கும் லூசியானா, கெண்டகி, மிஸ்ஸிசிப்பி போன்ற தெற்கு மாகாணங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டனர். அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பெரும் விற்பனையாளர்களும் இடைத்தரகர்களும் ரொக்கமாகப் பணம்கொடுத்து அடிமைகளை வாங்கிச் சென்றனர். அடிமைகள் தேவை என்று நாளிதழ்களில் விளம்பரம் செய்தனர்.

‘10 முதல் 25 வயது வரையிலான ஆண், பெண் அடிமைகள் 50 முதல் 100 பேர் வரை தேவை. சந்தை விலைக்கும் அதிகமாக உடனடி ரொக்கம் கொடுக்கப்படும்.’

லூசியானாவைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவர் 12 முதல் 25 வயது வரையிலான அடிமைகளுக்கு நல்ல விலை தருவதாக விளம்பரம் செய்தார். கெண்டகியைச் சேர்ந்த ஜேம்ஸ் காக்ஸ் 6 மாதம் முதல் 31 வயது வரையிலான 38 குழந்தைகள், பெண்கள், ஆண்களை ஜான் ஹேன்ஸிடமிருந்து 6610 அமெரிக்க டாலருக்கு வாங்கினார். குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து விற்கும் அவலமும் நிகழ்ந்தது. இதுதவிர சிறிய நில உரிமையாளர்களும் நேரடியாகத் தாங்களே வந்து அடிமைகளை விலைக்கு வாங்கிச் சென்றனர். நேரடியாக வாங்கினால் 400 டாலர் என்றால் தரகர்மூலமாக விற்பனைக்கு வரும் அடிமைகளுக்கு 800 டாலர்வரை விலைகொடுக்க நேரிடும்.

அடிமை உரிமையாளர்களில் சிலர் தங்களின் கோட்டத்தைத் தாண்டியோ மாகாணத்தைத் தாண்டியோ விற்பதற்குத் தயங்கினர். தங்களின் அடிமைகளுக்குத் தாங்கள்தான் பாதுகாவலர்கள் என்ற எண்ணமும் இரக்க குணமும் காரணம். மேலும் உறவுகளைப் பிரிந்து தூரமான இடங்களுக்குச் செல்லும் அடிமைகள் துயரத்துக்கு ஆளாவர்கள், அவர்களின் உழைப்புத்திறன் குறையும் என்று நினைத்ததும் காரணம்.

அடிமைகளை விற்பது தெரிந்தால் ஊருக்குள் தங்கள் பெயர் கெட்டுப் போய்விடுமென நினைத்து அடிமைகள் ஓடிப்போய்விட்டார்கள் என்ற பொய்யைக் கசியவிட்டார்கள் சிலர். ஆனால் சத்தமில்லாமல் அடிமைகளையும் கூடவே அடிமையல்லாதவர்களையும் சேர்த்தே வேறு இடங்களில் விற்றார்கள்.

எட்வர்ட் ப்ராடஸுக்கு குழந்தைகள் பிறந்து குடும்பம் பெரிதானது. பென் ராஸ் குடும்பத்தினரும் அவர்களின் உறவினர்களில் பலரும் ஏலத்தில் விடப்பட்டனர் அல்லது மற்ற வியாபாரிகளுக்கு விற்கப்பட்டனர். செலவுகளைச் சமாளிப்பதற்காக ஹாரியட்டின் மூத்த சகோதரியான மரியா ரிட்டியும் சகோதரன் ஜேம்ஸும் வேறொருவருக்கு விற்கப்பட்டனர். ஏற்கெனவே தந்தை பென் ராஸிடமிருந்து பிரிந்து வாழ்ந்த குழந்தைகள் இப்போது தாயிடமிருந்தும் உடன்பிறந்தவர்களிடமிருந்தும் பிரிக்கப்பட்டனர்.

அடுத்து லீனா, சோஃப் என்ற ஹாரியட்டின் இன்னும் இரண்டு சகோதரிகளை வேறு மாகாணத்துக்கு விற்றார் எட்வர்ட். வீட்டைத் திரும்பிப்பார்த்து அழுது அரற்றியபடி அவர்களிருவரும் அழைத்துச்செல்லப்பட்ட காட்சி சிறுமி மிண்டியின் மனதில் பதிந்துபோனது. பொதுவாக அடிமைகளை விற்கும்போது நீதிமன்றத்தில் புதிய உரிமையாளரின் பெயருக்கு அவர்களைப் பதிவுசெய்வது நடைமுறை. ஆனால் எட்வர்ட் வரி கட்டாமல் இருப்பதற்காக அதைச் செய்யவில்லை.

மிண்டியின் இன்னொரு சகோதரிக்குத் திருமணம் முடிந்து இரண்டு மாதக் கைக்குழந்தையோடு இருந்தாள். அவளையும் ஜியார்ஜியா மாகாணத்துக்கு விற்க ஏற்பாடு செய்தான் எட்வர்ட் ப்ராடஸ். அந்தச் சகோதரியின் கணவன் தனக்குத் தெரிந்த பெரிய மனிதர் ஒருவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னார். அந்த மனிதரும் உன் மனைவியை என் வீட்டுக்கு அனுப்பி வை, பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதியளித்தார். ஆனால் சகோதரி வந்துசேர்ந்ததும் அந்தப் பெரிய மனிதர் எட்வர்டுக்குத் தகவல் சொல்லிவிட்டார். எட்வர்டும் தாயை மாத்திரம் பிரித்து ஜியார்ஜியா மாகாணத்துக்கு அனுப்பிவிட்டான்.

ரிட் ராஸுக்கு தன் குடும்பத்தினரைப் பிரித்த எட்வர்டின் மேல் கோபமிருந்தாலும் அப்போதைக்கு எதுவும் செய்யமுடியவில்லை. சில ஆண்டுகள் கழித்துத் தன்னுடைய இளைய மகன் மோசஸை விற்பனைசெய்தபோது அதைத் தடுக்க முயற்சி செய்தார். மோசஸை வாங்கியவர் ஜியார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர். அவனை அழைத்துச் செல்வதற்காக எட்வர்டின் பண்ணைக்கு குதிரை வண்டியில் வந்தார். வயலில் வேலைசெய்துகொண்டிருந்த மோசஸை குதிரையைப் பிடித்துக்கொள்ள கூப்பிட்டான் எட்வர்ட். ஆனால் மோசஸை விற்கப் போகிறார்கள் என்பதை எப்படியோ தெரிந்துகொண்டு மகனுக்குப் பதிலாக ரிட் வந்தார்.

உரிமையாளர் பணத்தை எண்ணுவதைப் பார்த்த ரிட் பையனை எதற்காக அழைத்தீர்கள் என்று கேட்டார். எட்வர்ட் பதிலேதும் சொல்லாமல் குடிக்கத் தண்ணீர் எடுத்துவரச் சொன்னான். ரிட் போனதும் மீண்டும் மோசஸை உரத்த குரலில் கூப்பிட்டுக் குதிரையை வண்டியில் பூட்டுமாறு சொன்னான். மறுபடியும் மகனுக்குப் பதில் ரிட் வந்து என்ன வேண்டுமெனக் கேட்டார். உன்னைக் கூப்பிடவில்லை மோசஸைத்தான் கூப்பிட்டேன் என்று சொன்னான் எட்வர்ட். மூன்றாவது முறை மோசஸைத் தேடி தானே விவசாய நிலத்துக்கு வந்தான் எட்வர்ட். ஆனால் ரிட் தன்னுடைய உறவினர்களின் உதவியுடன் அவனை யாருக்கும் தெரியாத இடத்தில் சுமார் ஒரு மாத காலத்துக்கு ஒளிந்துகொள்ளச் செய்தார்.

அடிமைகளை வாங்கவரும் வாணிகர்கள் அந்த ஊரிலேயே ஓரிரு மாதங்கள் தங்கியிருந்து மொத்தமாகப் பல அடிமைகளை வாங்கிய பிறகு எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஊருக்குக் கிளம்புவது வழக்கம். அதற்குள் எப்படியும் மோசஸைக் கண்டுபிடித்து ஜியார்ஜியாவுக்கு அனுப்பிவிடலாம் என்று முடிவுசெய்து வாங்கிய பணத்தைத் திருப்பிக்கொடுக்காமல் இருந்தான் எட்வர்ட். ஆனால் ரிட்டும் அவருடைய சமூக வலைப்பின்னலைச் சேர்ந்தவர்களும் மோசஸை இப்படி ஒளித்துவைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

எட்வர்டிடம் விசுவாசமாக இருக்கும் இன்னொரு வேலையாள் மரங்களடர்ந்த காட்டுப் பகுதியில் மோசஸ் ஒளிந்திருப்பதாகத் தகவல் சொன்னான். மோசஸைப் பிடிப்பதற்காக அங்கே சென்றபோது சிறுவன் தப்பிச்சென்றுவிட்டான். மீண்டும் இன்னொரு வெள்ளைக்காரரை ரிட்டின் குடியிருப்புக்கு அனுப்பிவைத்தான் எட்வர்ட். வாசலில் நின்றபடி சுருட்டைப் பற்றவைக்க நெருப்பு கேட்ட அந்த வெள்ளைக்காரரைப் பார்த்ததும் எதற்காக வந்திருக்கிறார் என்பது ரிட்டுக்குத் தெரிந்துவிட்டது. என் மகனைப் பிடிப்பதற்கு யாராவது வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்தால் மண்டையைப் பிளந்துவிடுவேன் என்று மிரட்டினார். அவர்களும் பயந்து ஓடிப்போயினர். இப்படியே பல உத்திகளைச்செய்து அந்த ஜியார்ஜியா வாணிகர் ஊர்திரும்பும் வரையில் மோசஸைப் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

தன்னுடைய உரிமையாளரையும் அந்தப் பகுதியின் பெரிய மனிதர்களில் ஒருவரையும் துணிச்சலுடன் எதிர்த்து நின்றார் ரிட். தனது குழந்தைகளை ஒவ்வொருவராக இழந்த துயரத்தில் உயிரையும் பணயம் வைத்துத்தான் இதைச் செய்தார். இருந்தாலும் தானும் தன் குடும்பத்தினரும் எட்வர்டின் சொத்துகள் என்பதும் தங்களை எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும் என்பதும் தெரிந்திருந்தது.

சிறுமி மிண்டியையும் மற்ற குழந்தைகளையும் அவ்வப்போது வேறு உரிமையாளர்களின் வீட்டில் பணிசெய்ய அனுப்பிவைத்து அதற்கான விலையைப் பெற்றுக்கொள்வான் எட்வர்ட். தன்னருகில் இருக்கும் வரையில்தான் ரிட்டினால் மிண்டியைப் பாதுகாக்க முடிந்தது. பணியாற்றி இடத்தில் மிண்டியைச் சிலர் சாட்டையால் அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர். அவளது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊறுவிளைவிக்கும் விதமாகக் கொடூரமாக நடந்துகொண்டனர்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *