Skip to content
Home » கறுப்பு மோசஸ் #10 – மிண்டியின் இளமைப் பருவம்

கறுப்பு மோசஸ் #10 – மிண்டியின் இளமைப் பருவம்

பண்ணையில் வேலையில்லாத சமயத்தில் அடிமைகள் பொருளீட்டுவதற்கு உதவாமல் வெட்டியாக இருந்தது உரிமையாளருக்கு நட்டத்தை ஏற்படுத்தியது. அடிமைகளை வாங்க அவர்கள் போட்ட முதலுக்கு ஏதேனும் பலனிருக்க வேண்டுமே. அதனால் அக்கம்பக்கத்துப் பண்ணைகளுக்கு அவர்களை வேலைக்கு அனுப்பி அதற்கான விலையைப் பெற்றுக்கொண்டனர். இளவயது ஆண் அடிமைக்கு வருடம் 120 டாலர் வரையில் பணம் கிடைத்தது. இது அடிமையை விலைக்கு விற்பதைவிடவும் லாபகரமாக இருந்தது. பெண்களையும் குழந்தைகளையும்கூட இப்படி அனுப்பிவைத்தார்கள்.

வேறொருவரின் வீட்டுக்கு அனுப்பப்படும் அடிமைக் குழந்தைகள் பெற்றோர் நினைவினால் ஏங்கினார்கள், உளச்சோர்வு கொண்டார்கள். அடிமைகளைக்குத் தேவையான உணவு, உடை, பாதுகாப்பான தங்குமிடம் ஆகியவற்றைத் தரவேண்டுமென ஒப்பந்தத்தில் குறிப்பிட்டாலும் பெரும்பாலான முதலாளிகள் அதைச் செய்யமாட்டார்கள். நிலத்தடி இருப்புப்பாதையை இயக்குபவர்களில் ஒருவரான ஃபிலடெல்பியா மாகாணத்தைச் சேர்ந்த வில்லியம் ஸ்டில் தப்பியோடும் அடிமைகளைப் பேட்டி கண்டபோது கொடூரமாகத் தாக்குவது, போதிய உணவு தராமல் வேலைவாங்குவது போன்ற கொடுமைகளை அனுபவித்ததாகச் சொன்னார்கள். கூடவே அவர்களின் முதன்மை உரிமையாளர்கள் இவையெதையும் கண்டுகொள்ளாமல் இருந்ததும் வேதனையளித்தது.

பெற்றோரையும் உடன்பிறந்தவர்களையும் குழந்தைகளையும் பிரித்து ஆளுக்கொரு பக்கமாக அனுப்பிவைத்த கொடுமைகளைக் கண்ட சிறுமி மிண்டி இவற்றுக்கெல்லாம் ஒரு முடிவு வராதா என நினைத்தாள். அடிமைகளின் குடியிருப்புப் பகுதியில் சாட்டையால் அடிக்கும் ஓசையும் அதைத் தொடர்ந்து கேட்கும் அலறல் ஓசையையும் இறைவனை இறைஞ்சும் குரல்களையும் கேட்டு வளர்ந்தாள். ஏன் இப்படி நடக்கிறது, என் மக்களுக்கு இதிலிருந்து மீட்பும் விடுவிப்பும் கிடையாதா என்றெல்லாம் பலவாறு யோசித்தாள்.

0

சிறுமி மிண்டியை முதலில் ஜேம்ஸ் குக் என்ற சிறிய பண்ணையின் உரிமையாளரின் வீட்டுக்கு அனுப்பிவைத்தான் எட்வர்ட். அங்கே வேலைசெய்வதோடு நெசவுசெய்யவும் மிண்டி கற்றுக்கொள்ளவேண்டும் என்பது திட்டம். மிண்டிக்கு அப்போது ஆறேழு வயதுக்குள் இருக்கும். வெளியே போகும்போது அணிந்துகொள்வதற்கான உடை எதுவுமில்லாததால் எட்வர்டின் மனைவி எலீஸா அவளுக்குப் புதிய ஆடையொன்றைத் தைத்தாள். அதுவரையில் தன்னுடைய பண்ணையைவிட்டு வேறெங்கும் சென்றதில்லை என்பதால் எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள் மிண்டி. அவளை அழைத்துப்போக குதிரையில் வந்தான் ஜேம்ஸ் குக்.

புதிய உரிமையாளரின் வீட்டுக்கு வந்துசேர்ந்தாள் மிண்டி. மாலை நேரமானதால் அந்தக் குடும்பத்தினர் உணவருந்திக்கொண்டிருந்தனர். அதுவரையில் வெள்ளையர்களின் வீட்டில் அமர்ந்து உணவருந்திப் பழக்கமில்லாததால் சாப்பிடுவதற்குத் தயக்கம். புதிய உரிமையாளரின் மனைவி கொஞ்சம் பாலாவது குடிக்குமாறு சொன்னாள். பதற்றமாக இருந்ததால் அதையும் மறுத்தாள் மிண்டி.

ஹாரியட்: ‘எந்தக் குழந்தையையும்போல எனக்கும் பால் பிடிக்கும். ஆனால் ஜேம்ஸ் குக்கின் வீட்டிலிருந்த வரையில் நான் பாலே குடிக்கவில்லை.’

மிண்டிக்குத் தரப்பட்ட முதல் வேலை சதுப்பு நிலத்தில் பொறிவைத்து மஸ்க் ராட் எனப்படும் கத்தூரி எலிகளைப் பிடிப்பது. குளிர்கால ஆடைகளைத் தயாரிக்க அவற்றின் ரோமத்தைப் பயன்படுத்தினார்கள். குளிர்ந்த நீரில் இறங்கி நின்று பொறிகளை வைப்பதும் பிடிப்பதும் ஏழு வயது குழந்தை செய்யும் வேலையல்ல. அந்தச் சமயத்தில் மிண்டிக்கு அம்மை போட்டது. நோயுற்றபோதும் குளிர்ந்த நீரில் இறங்கி வேலைசெய்யவேண்டிய கட்டாயம். மிண்டியின் உடல்நிலை மோசமானது. அதைக் கேள்விப்பட்ட ரிட் மகளை வீட்டுக்கு அழைத்து வரச் சொல்லி எட்வர்டிடம் மன்றாடினார்.

மிண்டியை வீட்டுக்கு அழைத்து வந்தான் எட்வர்ட். ரிட் தன்னாலான வைத்தியத்தைச் செய்து மகளைக் கவனித்துக்கொண்டார். ஆனால் உடல்நிலை சரியானதும் அவளை மீண்டும் வேலைக்கு அனுப்பினான் எட்வர்ட். ஜேம்ஸ் குக்கின் வீட்டில் நெசவு கற்றுக்கொள்ள அவளுக்கு விருப்பமில்லை. ஒவ்வொரு இரவும் தாயிடம் போகவேண்டும் என்று அழுதபடியே உறங்கிப்போவாள் மிண்டி.

அடுத்ததாக, சூசன் என்ற பெண்ணின் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாள் மிண்டி. தேவையான அளவு உணவும் உடையும் தந்தாலும் பணியாளர்களை அடித்து வேலைவாங்கவேண்டும் என்ற நம்பிக்கைகொண்டவள் சூசன். வீட்டைக்கூட்டி புழுதியைத் துடைக்குமாறு மிண்டியிடம் சொன்னாள். மிண்டியும் சொன்ன வேலையைச் செய்து முடித்தாள். ஆனால், சூசன் திரும்பிவந்தபோது புழுதி அப்படியே இருந்தது. சொன்ன வேலையைச் செய்யாமல் ஏய்க்கிறாள் என்று நினைத்துச் சாட்டையினால் மிண்டியை விளாசித் தள்ளினாள் சூசன். சிறுமி மிண்டி வலியில் துடிதுடித்து அலறினாள்.

சிறுமியின் ஓலத்தைக் கேட்ட சூசனின் சகோதரி எமிலி அங்கே வந்தாள். இப்படியா மனசாட்சியில்லாமல் கொடூரமாக நடந்துகொள்வாய் என்று சூசனைக் கடிந்துகொண்டாள். தூசிதட்டும் பணியை எப்படிச் செய்வது என்று மிண்டிக்குத் தெரியவில்லை என்பதைப் புரிந்துகொண்டு பொறுமையாகக் கற்றுக்கொடுத்தாள். பகலில் வீட்டுவேலைகளை முடித்த பிறகு இரவில் சூசனின் கைக்குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலையையும் மிண்டிதான் செய்தாள். தூங்கும் நேரமும் தாயிடம் பாலருந்தும் நேரமும் தவிர மற்றெல்லா நேரமும் குழந்தை மிண்டியின் மடியில்தான் கிடக்கும்.

நோயுற்றதால் இரவு முழுவதும் அழும் குழந்தையைத் தாலாட்டித் தூங்கவைக்கவேண்டும். தலையணைக்கடியில் சாட்டையை வைத்துக்கொண்டு கட்டிலில் உறங்குவாள் சூசன். மிண்டி தொட்டிலை ஆட்டுவதை நிறுத்தினால் குழந்தை வீறிட்டு அழும். உடனே சவுக்கினால் மிண்டியை விளாசுவாள். இந்தச் சம்பவம் நடந்து பல வருடங்கள் கழித்துத் தன் ஆடையை விலக்கி கழுத்திலும் தோள்பட்டையிலும் படிந்த சாட்டைத் தழும்புகளைக் காண்பிப்பார் ஹாரியட்.

இன்னொரு நாள் உணவுமேசையில் கிண்ணத்திலிருந்த சர்க்கரைக் கட்டியொன்றை எடுத்து மிண்டி வாயில் போடுவதைப் பார்த்துவிட்டாள் சூசன். அவள் சாட்டையை எடுப்பதற்குள் வீதிக்குள் எட்டித் தாவினாள் மிண்டி. நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தாள். இறுதியில் பக்கத்துப் பண்ணையின் பன்றிப்பட்டிக்குள் ஒளிந்துகொண்டாள். கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் அங்கேயே இருந்தாள். பன்றிக்குப் போட்ட உணவுத் துண்டங்களை எடுத்துத் தின்றாள். பிறகு என்றைக்கிருந்தாலும் சூசனின் வீட்டுக்குத்தான் போயாகவேண்டுமெனப் புரிந்தது. போய்ச் சேர்ந்தவுடன் மீண்டும் சாட்டையடி விழுந்தது.

வேறொரு முதலாளியின் வீட்டில் வேலைசெய்தபோது ஏதோ சிறிய தவறுக்காக முனையில் முடிச்சு போடப்பட்ட கயிற்றினால் அடித்தான். இன்னுமொரு முறை குனிந்து வேலைசெய்யும்போது பின்பக்கத்திலிருந்து அடித்ததில் விலா எலும்புகள் நொறுங்கி உள்ளுறுப்புகளைக் கிழித்தன. நகரக்கூட முடியாத நிலையில் எட்வர்ட் ப்ராடஸின் வீட்டுக்கு வந்துசேர்ந்தாள் மிண்டி. இந்த நிகழ்வுகளால் உடம்பில் மட்டுமின்றி உள்ளத்திலும் மாறாத வடு ஏற்பட்டது. இந்தப் பாதிப்புகள் பல ஆண்டுகளுக்குப் பிறகும் ஹாரியட்டை அலைக்கழித்தன.

அடுத்த சில ஆண்டுகளில் மிண்டியின் தாய் ரிட்டையும் தமக்கை லீனாவையும் வேறொரு வீட்டுக்குப் பணிசெய்ய அனுப்பிவைத்தான் எட்வர்ட். சிறுமி மிண்டி தனியாக வசிக்கவேண்டியிருந்தது. ஒவ்வொரு மாலையும் அம்மாவைப் பார்ப்பதற்காக அந்தப் பண்ணைக்குச் சென்றுவிடுவாள். யார் கண்ணிலாவது பட்டுவிட்டால், தண்டனை கிடைக்கும் என்பது தெரிந்தாலும் அவளால் அம்மாவைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை.

அறுவடைக் காலம் வந்தது. எல்லாப் பண்ணைகளிலும் நிற்காமல் வேலை நடந்தது. பதின்பருவத்தை அடைந்த மிண்டி இன்னொரு உரிமையாளரின் வயலில் ப்ளாக்ஸ் பயிரை அறுவடை செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டாள்.

ஹாரியட்: ‘தலைமுடியை வாரக்கூட நேரமில்லை. கவிழ்த்துவைத்த கூடையைப்போலக் குவிந்திருந்தது. சாப்பிட்ட பிறகு கையில் ஒட்டியிருந்த எண்ணெய்ப் பிசுக்கைத் தலையில் தேய்த்துக்கொள்வேன், அவ்வளவுதான்.’

இரவு நேரத்தில் மிண்டியும் அவள் தங்கியிருந்த பண்ணை உரிமையாளரின் சமையல்காரப் பெண்மணியும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காகப் பக்கத்திலிருந்த பலசரக்குக் கடைக்குப் போனார்கள். அந்தப் பகுதியில் வேலைசெய்த அடிமையொருவன் தன்னுடைய உரிமையாளரிடம் சொல்லிக்கொள்ளாமல் நின்றுவிட்டான். அவனை அந்தக் கடையில் பார்த்த அவனுடைய மேற்பார்வையாளர் அவனைப் பிடிக்க முற்பட்டார். அருகில் நின்றுகொண்டிருந்த மிண்டியிடம் அவன் கைகளைக் கட்ட உதவுமாறு கேட்டுக்கொண்டார். மிண்டி மறுத்ததால் அடிமை தப்பித்து ஓடப் பார்த்தான். அருகிலிருந்த 2 பவுண்ட் (சுமார் 1 கிலோ) எடைக்கல்லைத் தூக்கி அவன்மீது எறிந்தபோது குறி தவறி மிண்டியின் மண்டையைப் பதம் பார்த்தது.

கனமான பொருளொன்று எதிர்பாராதவிதமாகத் தாக்கியதில் அதிர்ச்சியுற்றாள் மிண்டி. அதிகமான அளவில் இரத்தம் ஒழுகியதில் மயக்கம்போட்டாள். அவளைத் தூக்கிக்கொண்டு குடியிருப்புக்குப் போனார்கள். அங்கே அவளைப் படுக்கவைக்கக் கட்டில் இல்லை, தரையில் கிடத்துவதற்கும் இடமில்லை என்பதால் நெசவுத்தறியின் இருக்கையில் உட்காரவைத்தார்கள். அப்படியே இரண்டு நாட்கள் உட்கார்ந்திருந்தாள் மிண்டி. மருத்துவரிடம் கூட்டிப்போகவில்லை, எந்தவிதமான மருத்துவ உதவியும் செய்யப்படவில்லை.

இரத்தம் கசிவது நின்றதும் மீண்டும் வயலில் வேலைசெய்யப் போனாள். வியர்வையும் இரத்தமும் ஒன்றுகலந்து முகத்திலொழுகி கண்ணை மறைக்கும் வரையில் வேலைசெய்தாள். காயத்துக்கு சிகிச்சையின்றி ஓய்வுமின்றி உழைத்ததில் மிண்டியின் உடல்நலம் குன்றியது. எட்வர்ட் ப்ராடஸின் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டாள். அவளை யாருக்காவது வந்த விலைக்கு விற்றுவிடலாம் என்று எட்வர்ட் முடிவுசெய்தான். ஆனால் எவரும் வாங்கத் தயாராக இல்லை.

ஹாரியட்: ‘ஆறு பென்சுக்குக்கூட (சுமார் ஐந்து காசு) என்னை வாங்க யாரும் முன்வரவில்லை.’

மிண்டியின் உடல்நிலை தேறுவதற்கு பல நாட்களானது. தலையில் அடிபட்ட தழும்பு அவர் வளர்ந்த பிறகும்கூட மறையவில்லை. இந்த நிகழ்வுக்குப் பிறகு மிண்டியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. ஒருவித மந்தநிலையோடு செயல்பட்டாள் மிண்டி. சில சமயங்களில் எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் அப்படியே ஆழ்நிலைத் தூக்கத்துக்குச் சென்றுவிடுவாள். ஒரு சிறிய அசைவுகூட இருக்காது. பேசிக்கொண்டிருந்தாலும் அப்படித்தான். அப்படி உறங்கினால், அந்தத் தூக்கத்திலிருந்து யாரும் அவளை எழுப்பமுடியாது. தானே கண்விழித்ததும் எதுவுமே நடக்காததுபோல விட்ட இடத்திலிருந்து பேச்சையோ வேலையையோ தொடர்வாள். அப்படித் தூங்கி எழுந்தால் புத்துணர்ச்சியோடு இருப்பதற்குப் பதிலாக உடல் கனமாகி அயர்ச்சி அழுத்தும்.

1890களில் வில்பர் ஸ்மித் என்பவர் ஹாரியட்டைப் பேட்டி கண்டார். ”30 நிமிடங்களுக்குள் 3 அல்லது 4 முறை இப்படித் தூக்கத்தில் ஆழ்ந்து தன்னிலை மறந்து காணப்படுவேன். ஆனால், நீங்கள் பயந்துவிடவேண்டாம். விழிப்பு ஏற்பட்டதும் விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடர்வேன்,” என்று ஹாரியட் சொன்னதாகப் பதிவுசெய்திருக்கிறார்.

தலையில் அடிபட்ட பிறகு கிறிஸ்தவ சமயத்தின்மீது மட்டற்ற ஆர்வம்கொண்டவராக மாறினார் ஹாரியட். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைத் தெரிவிக்கும் தெளிவான கனவுகளையும் காட்சிகளையும் காணமுடிவதாகச் சொன்னார். இந்தக் கனவுகளும் காட்சிகளும் அவரை வழிநடத்த ஆரம்பித்தன. அவரைச் சார்ந்தவர்களும் மற்றவர்களும் அவரை முழுமையாக நம்பி அவர் சொன்னபடி நடந்துகொண்டார்கள்.

மருத்துவம் இது குறித்து என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். தலையில் அடிபட்டதால் ஹாரியட் டெம்பொரல் லோப் எபிலெப்சி எனப்படும் மூளை பக்க மடல் வலிப்புநோயால் பாதிக்கப்பட்டார். இதன் விளைவாக திடீரென மயக்கமும் தூக்கமும் ஏற்படும், கனவுகளும் காட்சிகளும் தோன்றும். பளீரென்ற ஒளி, வண்ணமயமான ஒளிவட்டங்கள், தனித்துக் கேட்கும் ஒலிகள், அளவுக்கதிகமான பதற்றமும் அச்சமும் மாறிமாறித் தோன்றும் நிலை, அந்த நிலையில் பரபரப்புடன் செயலாற்றுவது, விழிப்புடன் இருப்பதுபோலத் தோன்றினாலும் நினைவிழந்து கனவுலகிலிருப்பது, அளவுக்கதிகமான சோர்வு என ஹாரியட்டுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாமே வலிப்பு நோயின் அறிகுறிகள்.

எந்த வேலைசெய்துகொண்டிருந்தாலும் இசையொலி, ஆர்ப்பரித்து ஓடும் நீரின் ஒலி, அலறல் போன்ற ஒலிகள் கேட்கும். கனவு, மனக்காட்சி, மாயத்தோற்றம் ஆகியவை தோன்றும். இவற்றோடு அளவுக்கதிகமான சமயப்பற்றும் சேர்ந்துகொள்ளும். இதைத்தான் வாழ்நாள் முழுவதும் அனுபவித்தார் ஹாரியட். மூளை பக்க மடல் ஐம்புலன்களின் உணர்ச்சி, நினைவாற்றல், உணர்வெழுச்சி ஆகியவற்றோடு தொடர்புடையது. அதனால் இந்த வகை வலிப்பு நோயில் உடல் நடுக்கம் ஏற்படுவதில்லை. குழந்தைப்பருவமுதலே மெதாடிஸ்ட் பிரிவின் சமயப் பழக்கவழக்கங்களில் கொண்டிருந்த பற்றும் இவற்றோடு சேர்ந்துகொண்டது. இதன் விளைவாக எல்லாம் வல்ல இறையாற்றல் தன்னை வழிப்படுத்திக் காப்பதோடு தெய்வீகக் கட்டளைகளை வழங்குவதாகவும் நம்பினார். ஹாரியட் மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு வந்துசேர்ந்த ஆப்பிரிக்கர்களும் அவர்களின் சந்ததியினரும், அடிமைகளும் அடிமையல்லாதவர்களும் என அனைவருமே கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்தனர்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *