மனிதனின் பழங்கால ஆசைகளில் ஒன்று பறவைகள் போல வானில் பறக்க வேண்டும் என்பது.
இந்திய புராணங்களில் பெரும்பாலான கடவுள்களால் பறக்க முடியும். புஷ்பக விமானம் என்கிற ஒரு புராண பறக்கும் இயந்திரம் – செயற்கையாகப் பறக்கும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் நிபுணத்துவம் என அடிக்கடி முன் வைக்கப்படுகிறது. ஆனால், பறக்கும் தொழில்நுட்பம் அமெரிக்காவில் தேர்ச்சி பெற்றபோது மெட்ராஸ் பின்தங்கியிருக்கவில்லை. ரைட் சகோதரர்கள் தங்கள் விமானத்தைப் பறக்கவிட்டு 6 ஆண்டுகளுக்குப் பிறகு, மெட்ராஸ் அதன் வானத்தில் ஒரு விமானத்தைக் கண்டது.
நகரத்தின் விமானப் போக்குவரத்து வரலாறு 1910இல் தொடங்கியது. நகரத்தைச் சேர்ந்த கோர்சிகா தீவைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஜியாகோமோ டி ஏஞ்சலிஸ் ஒரு விமானத்தை உருவாக்கினார். ஜூலை 1909இல் ஆங்கிலக் கால்வாயை முதன்முதலில் பறந்து கடந்த பிரெஞ்சுக்காரரால் ஈர்க்கப்பட்ட டி’ஏஞ்சலிஸ், நகரத்தின் முன்னணித் தொழிலதிபரான சிம்ப்ஸனுடன் இணைந்து விமானத்தை உருவாக்கினார். இந்த விமானம் முழுக்க முழுக்க டி’ஏஞ்சலிஸின் சொந்த வடிவமைப்பு.
ஒரு சிறிய சக்தி எஞ்சின் பொருத்தப்பட்ட விமானத்தை 10 மார்ச் 1910 அன்று, டி’ஏஞ்சலிஸ் பல்லாவரம் புறநகரில் சோதனை செய்தார். இது ஆசியாவிலேயே முதல் விமானமாக அமைந்தது. .விமானம் சிறப்பாக செயல்பட்டதால் அவர் விமானம் பறக்கும் கண்காட்சியைத் தீவுத்திடல் மைதானத்தில் பறக்க ஏற்பாடு செய்து டிக்கெட்டுகளுக்குப் பணம் வசூலித்தார்.
விமானங்கள் போக்குவரத்தைவிட ஒரு பொழுதுபோக்காகப் பார்க்கப்பட்ட காலமது. எனவே நகரத்தின் பணக்காரர்களிடையே பறக்கும் ஆர்வத்தை உருவாக்க 1911ஆம் ஆண்டு ஐரோப்பிய விமான விற்பனையாளர்களின் குழு மெட்ராஸ் வந்தது. ஒரு விமானத்தை வாங்கும் அளவுக்குப் பணக்காரர்களாக இருந்தவரைக் கவர, அவர்கள் பறந்து காட்டினார்கள். அதுவும் பல்லாவரத்தில்தான். மலைகளால் சூழப்பட்டிருந்தாலும், புனித தாமஸ் குன்றுக்கும் பல்லாவரத்துக்கும் இடையே இருந்த பரந்த இடம் விமான ஆர்வலர்களையும் ஈர்த்தது.
விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, மெட்ராஸ் ஃப்ளையிங் கிளப் என்று அக்டோபர் 1929இல் சென்னையில் ஒரு தனியார் சங்கம் நிறுவப்பட்டது.
ஹாக்கர் என்ற ஆசிரியருடன், முதல் கற்பித்தல் விமானம் 1930இல் வானில் பறந்தது. அன்றிலிருந்து 90 ஆண்டுகளில், மெட்ராஸ் ஃப்ளையிங் கிளப் 1,500க்கும் மேற்பட்ட விமானிகளை உருவாக்கியுள்ளது.
மற்றொரு பறக்கும் பயிற்சியாளர் 1935இல் சென்னையிலிருந்து கொழும்புக்கு முதல் சர்வதேச விமானத்தை இயக்கினார்.
1914ஆம் ஆண்டு, நீர்நிலைப் பொறியாளரான மேட்லி, (இன்றும் மேட்லி சுரங்கப்பாதைக்கு அவரது பெயர் உள்ளது) தான் தயாரித்த விமானத்தை ரெட் ஹில்ஸ் நீர்த்தேக்கத்தின் மீது ஓட்டி விமானத்தில் இருந்து மெட்ராஸின் முதல் வான்வழி புகைப்படங்களைப் படம்பிடித்தார்
அக்காலகட்டத்தில் செட்டியார்கள் பர்மாவிலும் கிழக்கு ஆசியாவிலும் பெரும் செல்வத்தை ஈட்டியதால், அவர்களின் வாழ்க்கை முறை அரசர்களுக்குச் சமமாக இருந்தது. அவர்களின் பொழுதுபோக்கில் ஒன்று வானத்தில் பறப்பது என்பதில் ஆச்சரியமில்லை.
மெட்ராஸ் ஃப்ளையிங் கிளப் முதல் உறுப்பினர்கள் ஆவடையப்பன், எஸ்.ஏ.ஏ. அண்ணாமலை மற்றும் சோலையப்பன் ஆகிய மூன்று நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். மூவரும் விமானங்களைச் சொந்தமாக வைத்திருந்ததால், சென்னைக்குத் தெற்கே 250 மைல் தொலைவில் உள்ள செட்டிநாடு கிராமத்தில் மற்றொரு பறக்கும் கிளப்பைத் தொடங்கினர். 1931ஆம் ஆண்டில், தனியார் விமானி உரிமம் பெற்ற முதல் தென் இந்தியர் ஆவடையப்ப செட்டியார்.
1932ஆம் ஆண்டில், ஜே.ஆர்.டி. டாடா, கராச்சி ஏரோட்ரோமில் இருந்து பம்பாய்க்கு அஞ்சல் கடிதங்களை ஏற்றிச் செல்லும் ஒற்றை எஞ்சின் கொண்ட டி ஹேவிலாண்ட் விமானத்தை ஓட்டினார். விமானி நெவில் வின்ட்சென்ட் என்பவரால் பம்பாயிலிருந்து பெல்லாரி வழியாக மெட்ராஸ் வரை அந்த விமானம் தொடர்ந்தது.
இரண்டாம் உலகப் போரின் போது, குறிப்பாகச் சிங்கப்பூரின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்த விமான ஓடுபாதையை மேம்படுத்துவதற்கான வேலை நடந்தது. மெட்ராஸை வைத்து உலகப்போரை வென்றுவிடலாம் என்று மிகவும் ஆர்வமாக இருந்த ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF), ரெட் ஹில்ஸ் நீர்த்தேக்கத்தில் கூடக் கடல் விமானங்களைத் தரையிறக்கியது. தென்னிந்தியாவில் பதின்மூன்று ஏரோட்ரோம்கள் இயக்கப்பட்டன. ஏற்கெனவே உள்ள விமான நிலையங்கள் RAF ஆல் கையகப்படுத்தப்பட்டன. பல்லாவரம் விமான ஓடுதளத்தின் பயன்பாடு இரண்டாம் உலகப் போரின் போது ராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. விமான நிலையம் செயின்ட் தாமஸ் மவுண்ட் பேஸ் என்று அழைக்கப்பட்டது
போர் முடிந்தவுடன், அழகப்ப செட்டியார் போர் உபரி விமானங்களை ஏலத்தில் வாங்கி, இந்த விமான நிலையத்தை மையமாக வைத்து தனது ஜூபிடர் ஏர்வேஸ் தொடங்கினார்.
1954இல் ஒரு நாகரீகமான விமான நிலையம் உருவாக்கப்பட்டது. ஆர்ட் டெகோ என்ற அப்போதைய பிரபலமான கட்டடக்கலை வடிவமைப்பு கட்டடத்திற்கு மென்மையான வளைவுகளை வழங்கப் பயன்படுத்தப்பட்டது. விமான நிலைய நுழைவாயில் மீனம்பாக்கம் கிராமத்தில் இருந்ததால், மீனம்பாக்கம் ஏர்போர்ட் என்று அப்பெயரில் அழைக்கப்பட்டது.
1980 களில் விமான நிலையக் கட்டடங்கள் சோழர்களின் பழமையான கோயிலைக் கொண்ட திருசூலம் என்ற அடுத்த கிராமத்திற்கு மாற்றப்பட்டன. தேசிய மற்றும் சர்வதேச விமான நிலையங்களுக்குத் தமிழகத்தின் இரண்டு முன்னாள் முதல்வர்களான காமராஜ் மற்றும் அண்ணாதுரை பெயர் சூட்டப்பட்டது. மீனம்பாக்கத்தில் உள்ள பழைய விமான நிலையம் சரக்குகளைக் கையாளும் விமான நிலையமாக மாறியது.
மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் ஆகஸ்ட் 2, 1984 அன்று ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மொத்தம் 33 பேர் கொல்லப்பட்டனர் .மற்றும் 27 பேர் காயமடைந்தனர். தமிழீழ ராணுவம் (TEA) இலங்கை விமானத்தில் வெடிகுண்டை அனுப்ப முயன்றதாகத் தெரிய வந்தது. ஆனால் பெட்டி ஏற்றப்படவில்லை. விமான நிலையத்தில் வெடித்தது.
இன்று இந்தியாவில் நன்கு பயன்படுத்தப்படும் விமான நிலையங்களில் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு 5வது இடம். ஒரு வருடத்தில் இந்த விமான நிலையத்தை 1.8 கோடி பயணிகள் பயன்படுத்துகின்றனர். சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் ஒன்றையொன்று ஒட்டி அமைந்துள்ள இந்தியாவின் முதல் விமான நிலையமும் இதுவாகும்.
அடையாறு ஆறு, விமான நிலையத்தின் எல்லையை ஒட்டி ஓடுகிறது. சென்னை விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகள் உள்ளன – ஒன்று 3.5 கிமீ நீளமும் மற்றொன்று 3 கிமீ நீளமும் கொண்டது. இரண்டாவது ஓடுபாதையின் தேவையால் ஆற்றின் மேல் பாலம் அமைக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு அதிக மழை பெய்து ஏரிகள் திறக்கப்பட்டபோது, பாலத்தின் அடியில் இருந்த சிறிய இடைவெளியால் அடையாறு தண்ணீர் வரத்து தடைப்பட்டது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து விமான நிலையத்திலும் நகரத்திலும் பெரும் அழிவை ஏற்படுத்தியது.
மெட்ராஸில் பறக்கும் நடவடிக்கையின் ஆரம்பமான – மெட்ராஸ் ஃப்ளையிங் கிளப், போயிங் மற்றும் ஏர்பஸ் விமானங்களுடன் போட்டியிட முடியாமல், அதன் மூட்டையைக் கட்டிக்கொண்டு திருச்சிக்குப் புறப்பட்டது.
0
You have ever wondered why the aerodrome is situated here?????