Skip to content
Home » மார்க்கோ போலோ #3 – காஷ்மீர் பாதையில்

மார்க்கோ போலோ #3 – காஷ்மீர் பாதையில்

மார்க்கோ போலோ குழுவினர், குஹானன் நகரைத் தொடர்ந்து கடுமையான உடலை வருத்தும் பயணங்கள் மூலம் முலெவஹட், தலேகான், இஸ்காஷிம், படாசன் நகரங்களைக் கடந்தனர்.

படாசன் நகரத்தைக் கடக்கவே பதிமூன்று தினங்களை போலோ குழுவினர் செலவிட நேர்ந்தது. படாசன் நகரை ஆண்ட மன்னர் பரம்பரை, அலெக்சாண்டரில் இருந்து தொடங்குவதாக எண்ணி தங்கள் அரசை நடத்தி வருகின்றனர் என்றும், அந்தப் பகுதி அரசர்கள் சுல்கர்னைன் என்ற பட்டத்தைத் தங்கள் பெயருக்கு முன் சூடிக் கொள்கின்றனர் என்றும் போலோ அறிந்துகொண்டார்.

படாசன் என்ற நகரம் இயற்கையான கணவாய்களையும் கோட்டைகளையும் கொண்டு திகழ்வதால் இந்தப் பகுதியை மாற்று அரசுகள் படை எடுத்துத் தாக்குவது மிகவும் சிக்கலானது என்று நிகோலோ போலோ விளக்கினார்.

படாசன் நகரைக் கடக்கும்போது மார்க்கோ போலோ கடுமையான காய்ச்சலால் துன்புற நேர்ந்தது. ஏற்கெனவே இந்தப் பாதையில் நிகோலோ பயணித்திருந்ததால், அந்தப் பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்று தனது மகனின் காய்ச்சலுக்குத் தகுந்த மருத்துவ உதவியைப் பெற்றார்.

மார்க்கோ போலோவின் காய்ச்சல் குணமானவுடன் நிகோலோ குழுவினர் தங்களின் பயணத்தைத் தொடர்ந்தனர். கடுமையான நிலப்பகுதிகளைக் கடந்து அடுத்ததாக அவர்கள் சென்றடைந்த பகுதி, காஷ்மீர். காஷ்மீரில் சிலை வழிபாடு மிகவும் புகழ் பெற்றதாக இருந்தது. இந்தப் பகுதி மக்கள் தங்களின் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட எதையும் செய்வதில்லை என்று மார்க்கோ போலோ தெரிந்துகொண்டார்.

வெனிஸ் நகரத்தில் இருந்து பல பொருட்களை, பட்டுப்பாதை வழியாக வணிகர்கள் மூலம் காஷ்மீரத்து மக்கள் பெறுகின்றனர் என்ற செய்தியும் மார்க்கோ போலோவுக்கு வியப்பைத் தந்தது. காஷ்மீரிலிருந்து பயணித்ததால் சில நாட்களில் பெருங்கடலை அடையலாம் என்ற தகவலையும் மார்க்கோ போலோ தெரிந்துகொண்டார். இந்தப் பகுதியை ஆட்சி செய்யும் அரசர்கள் துறவிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதை மார்க்கோ போலோவின் உறவினர் மாப்பியோ விளக்கினார்.

காஷ்மீரில் வசிக்கும் மக்கள் விலங்குகளைக் கொல்வதில்லை. மாறாக விலங்குகளைத் தங்களின் வழிபாட்டு நிலையில் வைத்து வணங்குகின்றனர். கெஷ்மீர் என்றழைக்கப்படும் இப்பகுதியில் வாழும் மக்கள் அரிசி, பால் பொருட்களை மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பகுதி அதிகமான குளிரும் இல்லாமல், அதிகமான வெயிலும் இல்லாமல் இதமான தட்பவெப்பத்தைக் கொண்ட பகுதியாக இருக்கிறது எனப் பல விஷயங்களை மார்கோ போலோ தெரிந்துகொண்டார். வெனிஸிலிருந்து புறப்பட்டு சில ஆண்டுகள் பயணித்து, பல நகரங்களை மார்க்கோ போலோ குழுவினர் கடந்திருந்தனர்.

மார்க்கோ போலோவின் குறிப்புகளைக் கொண்டு காஷ்மீர் வரலாற்றை ஆராய்ந்த வரலாற்று ஆய்வாளர்கள், அவருடைய சில குறிப்புகள் காஷ்மீரின் பதின்மூன்றாம் நூற்றாண்டை ஓரளவு வெளிப்படுத்துகின்றன என்று குறிப்பிடுவது இங்கு பதியத்தக்கது.

இதற்கடுத்து காஷ்மீர் நகரிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்காமல், வடகிழக்குப் பாதையில் நிகோலோ போலோ குழுவினரின் பயணம் தொடங்கியது.

காஷ்மீரிலிருந்து பன்னிரண்டு நாட்கள் மலைகளுக்கு இடையே பயணித்து, படாசன் நகரை ஆட்சி செய்யும் அரசனின் சகோதரரால் ஆளப்படும் வகான் என்ற நகரை இக்குழுவினர் அடைந்தனர். அந்நகரில் மூன்று நாட்கள் பயணித்து, உயரமான மலைகள், பள்ளத்தாக்குகள், ஆறுகளைக் கடந்து, கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் பயணம் தொடர்ந்தது. போலோர் நகரைக் கடந்து காஷ்கர் என்னும் பகுதியை நிகோலோ குழுவினர் அடைந்தனர். இந்தப் பாதைகளில் சில நாட்கள் குதிரைகளுக்கு உணவுகூட இல்லாமல் பயணிக்க நேர்ந்தது.

காஷ்கர், சீன ஆட்சிக்குட்பட்ட மேற்குப் பகுதி. ஒரு காலத்தில் காஷ்கர் தனித்த ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது. அப்போது குப்ளாய்கானின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.

காஷ்கர் பகுதி மக்கள் பல வகையான வணிகத்தில் சிறந்து விளங்கினர் என்பதை வணிகரான போலோவின் தந்தை விளக்கினார். மேலும், காஷ்கர் பகுதியில் முகமது கடவுளை வழிபடும் மக்களும், கிறித்தவக் கடவுளை வழிபடும் மக்களும் வாழ்வதை அறிந்துகொண்டார். இப்படிப் பல அனுபவங்களையும், நிலவியலால் பல தடுமாற்றங்களையும் கடந்து சமர்கண்ட் என்ற பகுதியை அடைந்தபோது நிகோலோ குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தனர்.

சமர்கண்ட் பகுதியை ஆட்சி புரிந்த சகதை என்பவர், கிறிஸ்தவ சமயத்திற்கு மாறிய அரசராக ஆட்சி புரிந்தார். சமர்கண்ட் பகுதியின் காவலர்கள் நிகோலோ குழுவினரை சகதை முன் அழைத்துச் சென்றபோது அரசன் மிகவும் மகிழ்ந்துபோனார். கிறிஸ்தவம் செழிப்பாக இருக்கும் நிலப்பகுதியில் இருந்து வந்திருந்த நிகோலோ குழுவினர் மிக மரியாதையாக அங்கு நடத்தப்பட்டார்கள்.

உலகின் சக்தி வாய்ந்த அரசனைச் சந்திக்கப் போகும் கனவில் தனது தந்தையுடன் பயணத்தைத் தொடர்ந்த மார்க்கோ போலோ, வழியில் பல சிரமங்களைக் கடந்து உடல் நலிவுற்று ஒருவழியாக அங்கு வந்து சேர்ந்திருந்தார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *