Skip to content
Home » மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #6 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 6

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #6 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 6

ஆதி மூல ஆரிய மொழியைத் தேடி…

வரலாற்றின் மிகப் பழமையான அத்தியாயம் மிக எளிதில் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. ஆரியக் குடும்பத்து மொழிகள் ஏழிலும் ஒரே வடிவில் ஒரே அர்த்தத்துடன் இருக்கும் சொற்களை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். ஹிந்துக்கள், பாரசீர்கர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், செல்டிக்கள், ட்யூடன்கள், ஸ்லாவ்கள் என பிரிவதற்கு முன்பாக இருந்த நம்முடைய உண்மையான மூதாதைகளின் சிந்தனை ஓட்டத்தின் மிகத் துல்லியமான, அழுத்தமான ஆவணமாக அந்தச் சொற்கள் திகழ்வதைப் பார்க்கமுடியும்.

இந்தப் பழம் பெரும் அத்தியாயத்தில் சில பக்கங்கள் இந்த ஆரியக் கிளை மொழிகள் ஏதேனும் ஒன்றில் அல்லது பலவற்றில் காணாமல் போயிருக்கலாம். அந்த வார்த்தைகள் அல்லது அத்தியாயங்கள் ஆறில் இருந்தாலோ ஐந்தில் அல்லது நான்கில் அல்லது மூன்றில் அல்லது இந்த கிளை மொழிகளில் இரண்டில் மட்டுமே இருந்தாலோ ஆரிய மொழிக் குடும்பப் பிரிவு நடப்பதற்கு முன்பான மூல மூதாதை மொழியில் அவை இருந்திருக்கவேண்டும் என்ற முடிவுக்கு நாம் எளிதில் வந்துவிட முடியும். ஒருவேளை இந்த மொழிக் கலப்பு பிற்காலத்தில் நடந்ததற்குத் தெளிவான வரலாற்றுச் சான்று கிடைத்திராத பட்சத்தில் மூல மொழியில் இருந்து கிளை பிரிந்ததாகவே ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும்.

சம்ஸ்கிருத மொழியில் நெருப்பைக் குறிக்கும் ‘அக்னி’ என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். லத்தீனில் இக்னிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்து நெருப்பு பற்றி, பிளவுபட்டிராத மூல ஆரியர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்ற முடிவுக்கும் நாம் நிச்சயம் வரலாம். வேறு எந்த இடத்திலுமே நெருப்பைக் குறிக்கும் இந்த வார்த்தை இடம்பெறாதிருந்தாலும் இந்த முடிவுக்கு நாம் வரமுடியும். ஏன், எப்படி என்கிறீர்களா? ஏனென்றால் பிற ஆரிய மொழிகளைவிடவும் லத்தீனே சமஸ்கிருதத்துடன் மிக அதிக காலம் தொடர்பில் இருந்திருக்கிறது. மேலும் சமஸ்கிருதமும் லத்தீனும் தனித்தனி மொழியாகப் பிரிந்த பின்னர் சமஸ்கிருதத்தில் இருந்து லத்தீன் இந்த வார்த்தையைக் கடனாகப் பெற்றிருக்கக்கூடும்.

லிதுவேனிய மொழியில் அக்னிஸ் என்றும் ஸ்காலாந்து மொழியில் அங்க்லே என்றும் இருப்பதிலிருந்து ஸ்லோவேனிய மற்றும் ட்யூடானிக் மொழிகள் கூட நெருப்பைக் குறிக்கும் ‘அக்னி’ என்ற வார்த்தையை அறிந்திருப்பார்கள் என்று சொல்ல இடம் இருக்கிறது. நெருப்பைக் குறிக்கும் வேறு சொற்கள் பின்னாளில் அந்த மொழிகளில் உருவான பின்னரும் இந்தத் தொடர்பு அக்னி என்ற சொல் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்பதையே உணர்த்துகிறது.

பிற விஷயங்களைப் போலவே சொற்களும் அழிவுபடும். ஒரு மொழியில் மட்டும் உயிர்ப்புடன் இருக்கும். இன்னொன்றில் சிதைந்தோ அழிந்தோ மாறியோ போகும். எதனால் இப்படி நடக்கிறது என்பதைச் சொல்வது எளிதல்ல. ரோமானிய மொழிகளில் இக்னிஸ் என்பது என்னவாக ஆகியிருக்கிறது? அது சிதைந்து அழிந்துபோய்விட்டது. ஒருவேளை உச்சரிக்கப்படாத (முக்கியத்துவம் இழந்த) கடைசி பதம் மறைந்ததைத் தொடர்ந்து அந்தச் சொல்லை உச்சரிப்பது நிரடலானதாக இருந்திருக்கலாம். அதனால் அந்த சொல் அழிந்திருக்கலாம். லத்தீன் மொழியில் அடுப்பு, பலிபீடம் என்ற அர்த்தத்தைத் தரும் லத்தீன் வார்த்தையான ஃபோகஸ் அந்த இடத்தைப் பெற்றிருக்கலாம்.

மூல ஆரியக் குடும்பம் கிளை பிரிவதற்கு முன்பாக இருந்த முதல் மூதாதைகளுக்கு எலி – மெளஸ் என்ற சொல் தெரியுமா என்று பார்ப்போம். மூல ஆரிய மொழி அகராதிகளில் ‘மூஷிக’ என்ற சமஸ்கிருதச் சொல் இருப்பதைப் பார்க்க முடியும். கிரேக்க மொழியில் ‘ம்யூஸ்’ என்றும் லத்தீனில் ‘முஸ்’ என்றும் பழைய ஸ்லோவேனிய மொழியில் ‘ம்யூஸே’ என்றும் பழைய ஜெர்மானிய மொழியில் ‘மூஸ்’ என்றும் அது அறியப்பட்டிருக்கிறது. இதனால் மிக மிகப் பழங்காலத்தில் பிற சிறிய விலங்குகளிடமிருந்து எலியைத் தனித்து அடையளம் காணவும் இந்தப் பெயரில் அழைக்கவும் தெரிந்திருக்கிறது என்ற முடிவுக்கு உறுதியாக வந்துவிடலாம். இந்தச் சொல் தொடர்பான இந்தியா காலக் கணக்கை நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் மிக மிகப் பழங்காலத்திலேயே நமக்கு அந்தப் பெயரில் அது தெரியவந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

எலியின் பகைவனான பூனையை எடுத்துக்கொள்வோம். இதே தொல் பழங்காலத்தில் பூனையைப் பற்றித் தெரிந்திருந்ததா… பூனையைக் குறிக்கும் சொல் என்ன… அதில் ஆரிய மொழிகளுக்கு இடையே ஏதேனும் ஒற்றுமை இருக்கிறதா என்று பார்த்தால் எதுவும் இல்லை. சமஸ்கிருதத்தில் பூனை மார்ஜாரா மற்றும் விதாலா என்று அழைக்கப்பட்டிருக்கிறது. யாஹேன், ஐயோபஸ், மஸ்டெல்லா, ஃபெலாஸ் என்று கிரேக்க, லத்தீன் மொழிகளில் வேறு வேறு பெயர்களில் அறியப்பட்டிருக்கிறது. ஆனால், இவையெல்லாம் வளர்ப்புப் பூனையை அல்ல; மரநாய் மற்றும் மலை வாழ் வெருகு பூனையைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கிரேக்க மொழியில் கார்ரா என்ற பெயரில் வளர்ப்பு பூனை அறியப்பட்டிருக்கிறது. லத்தீன் மொழியில் கேட்டஸ் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சொற்களே ட்யூடானிக், ஸ்லோவேனிக் மற்றும் செல்டிக் மொழிகளில் பூனையின் வேர்ச் சொல்லாக இருக்கின்றன. இன்று நாம் பூனை என்று அழைக்கும் விலங்கு எகிப்திலிருந்துதான் ஐரோப்பாவுக்கு வந்திருக்கிறது. எகிப்தில் அது வளர்ப்பு மிருகமாக்கப்பட்டு வழிபடப்பட்டும் வந்திருக்கிறது.

அநேகமாக, கி.பி. நான்காம் நூற்றாண்டு வாக்கில் ஐரோப்பாவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம். எனவே மூல ஆரிய இனம் பல கிளைகளாகப் பிரிவதற்கு முந்தைய காலகட்டத்தில் பூனைக்குப் பொதுவான சொல் எதுவும் இருந்திருக்கவில்லை என்பதை இதிலிருந்து நாம் நன்கு புரிந்துகொள்ளமுடியும்.

ஆரிய இனக்குழு கிளை பிரிவதற்கு முன்பாக உலக மனித இனம், நாகரிகம் என்னவாக இருந்தது என்பது தொடர்பாக இதிலிருந்து ஒரு முழுமையான சித்திரத்தை நாம் தெரிந்துகொள்ளமுடியும். பழங்காலக் கற்களை பூசி மொழுகி ஒரு பொதுவான கட்டுமானத்தை மீள் உருவாக்கம் செய்வதுபோல் ஒன்றை உருவாக்கிக்கொள்ளவும் முடியும். மனித குலத்தின் வரலாறைத் தெரிந்துகொள்ளும் நம் இந்த நீண்ட நெடிய பயணத்தில் பல்வேறு ஆரியக் கிளை மொழிகளின் ஒத்திசைவின் மூலம் தெரியவரும் காலகட்டத்தையும்விட பழமையான ஒன்றை நம்மால் கண்டடைய முடியாது என்றே தோன்றுகிறது.

இந்தியா, கிரேக்கம், இத்தாலி, ஜெர்மனி ஆகிய தேசங்களில் கிடைத்திருக்கும் சிதிலங்கள், பிற குறிப்புகள் ஆகியவற்றில் இருந்து நாம் மீளுருவாக்கம் செய்யும் மூல ஆரிய மொழி என்பது நீண்ட நெடிய தொல் பழங்காலச் சிந்தனைப்போக்கின் விளைவாக பல காலங்களுக்குப் பின் உருவானதுவே. அந்த ஆதி தொல் பழங்காலம் தொடர்பான நம்மால் எதையும் தெரிந்துகொள்ளவே முடியாது. சம்ஸ்கிருதம் செம்மைப்படுத்தப்பட்ட ஒரு செவ்வியல் மொழி என்பதும் கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதும் நமக்குத் தெரியவந்திருக்கிறது. அப்படியானால், இவற்றின் மூலாதார மொழி எது என்ற தேடலை நாம் மேற்கொள்ளும்போது சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகள் எப்போது முதலில் தொடர்பில் வந்தன என்ற கேள்வி எழுகிறது.

இந்த மூன்று தேசிய மொழிப் பிரவாகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில் வந்த காலகட்டத்தைச் சென்றடைந்தால்கூட அந்த மூல மொழி பிரவாகம்கூட கால காலமான சிந்தனைப் பிரவாகத்துக்குப் பின்னே அந்த மூல வடிவத்துக்கு வந்து சேர்ந்திருக்கும். ஒரு கல் நீரோட்டத்தின் தொடர் பிரவாகத்தால் கூழாங்கல்லாக ஆக்கப்படுவதுபோல் நீண்ட நெடிய கால சிந்தனைகளின் விளைவினாலே இந்த மொழியும் வார்த்தைகளும் உருவாகியிருக்கும்.

ஆதி மொழிகளில் மிகவும் சிக்கலான நுட்பமான பதங்கள் இருப்பதைப் பார்க்கமுடியும். உதாரணத்துக்கு சம்ஸ்கிருதத்தில் இருக்கும் அஸ்மி என்ற சொல்; கிரேக்கத்தில் இருக்கும் அஸ்யு போன்ற பதங்கள். பிற மொழிகளில் ஐ ஆம் (I am) என்ற இந்தப் பதத்துக்கு இணையாக என்ன இருக்கின்றன? நான் இருக்கிறேன்; நான் வளர்கிறேன்; நான் மாறுகிறேன் என்றெல்லாம் பல பதங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் ‘அஸ்மி’ என்பதன் நுட்பமான அர்த்தத்தைத் தரும் வார்த்தைகள் வெகு சொற்பமான மொழிகளில் மட்டுமே இருக்கின்றன.

ஐரோப்பியருக்கு ‘ஐ ஆம்’ என்ற துணை வினைச்சொல் மிகவும் எளியதொரு பத உருவாக்கமாகவே தோன்றுகிறது. ஆனால் இந்த ‘அஸ்மி’ என்ற மிகச் சிறிய பதமே மனித உருவாக்கத்தில் மிக அதிக உழைப்பைக் கோரிய ஆழமான சொல் என்பதே உண்மை. இந்த மேதமையானது ஆரிய ஆதி மூலப் பேச்சு வழக்கில் வேர்கொண்டிருக்கிறது. ‘அஸ்மி என்ற பதத்தின் நுட்பமான அர்த்தத்தைக் கொடுக்கும்படியாக பல்வேறு வழிகளில் முயற்சி செய்து பார்த்திருக்கிறோம். ஆனால் அது எதுவும் எந்த பலனையும் தரவில்லை என்று முயற்சிகளைக் கைவிட்டுவிட்டோம்.

ஆரிய மொழிக் குடும்பத்து கிளைகள் அனைத்திலும் இந்தப் பதம் பாதுகாக்கப்பட்டுவந்திருக்கிறது. அஸ்-மி என்ற சொல்லில் அஸ் என்பது வேர். அஸ் என்பதற்கு இருத்தல் – ‘இருப்பது’ (to be) என்று அர்த்தம். வேறு எந்த மொழியிலும் இப்படியான அர்த்தம் கொண்ட வேர்ச் சொல்லை உருவாக்கவே முடியவில்லை. இருத்தல் – சுவாசித்தல் என்ற அர்த்தம் தர ‘அஸு’ என்ற பதம் இருக்கிறது. உயிர்ப்பு, உயிர்மை, சுவாசிப்பு ஆகியவற்றைக் குறிக்க லத்தீனில் அஸ் ஓரிஸ் என்ற பதம் இருக்கிறது.

அஸ் என்ற வேர்ப்பதம் காலப்போக்கில் சிதைந்தும் மாறியும் தன்னுடைய அதி நுட்பமான, புதிரான மூல அர்த்தத்தில் இருந்து விலகிவிட்டது. அதற்கு முன்பான நிலையில், கணிதத்துக்கு பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தது எந்த அளவுக்கு மகத்தான மேதமையாக இருக்கிறதோ அதுபோலவே இந்த அஸ்மி என்ற பதம் இருக்கிறது. ‘அஸ்’ என்ற இருத்தல் என்ற அர்த்த நிலை எத்தனை கால உரசல்கள், மாற்றங்களுக்குப் பின்னர் உயிர் வாழ்தல், சுவாசித்தல் என்பதிலிருந்து மாறியது என்பது யாருக்குத் தெரியும். அஸ் என்பதற்கு சுவாசித்தல் என்ற அர்த்தம் இருப்பதுகூட செமிட்டிக் அல்லது துரானிய மரபின் உருவாக்கம் அல்ல; ஆரிய வேர்களே அதற்கும் இருக்கிறது.

அஸ்மி என்பது ஒரு வரலாற்றுத் தனித்தன்மை கொண்ட சொல் அது. நம் ஆதி முன்னோர்களின் உருவாக்கம். நமது சிந்தனை, சொற்கள் ஆகியவற்றை நம்முடைய ஆதி சிந்தனைகளுடன் இணைக்கும் சரடு. அந்த மூல மொழிச் சரடைக் கொண்டே மனித குலம் ஆதியில் சிந்தித்திருக்கிறது. பேசியிருக்கிறது. ஆயிரக்கணக்கான ஏன் நூற்றாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையதாக இருந்திருக்கக்கூடிய அந்த ஆதி மொழியின் கண்ணியிலேயே நாம் சிந்தித்திக்கிறோம். பேசுகிறோம்.

இப்படியானவற்றைத் தெரிந்துகொள்வதே உண்மையான வரலாறு. அதுவே நாம் தெரிந்துகொண்டாகவேண்டியது; அரசவைகளின் சதிகள், தேசங்களின் ரத்தக் களறிகள் என நம் வரலாற்று நூல்களின் பக்கங்களை நிரப்பியிருப்பவை அல்ல. இந்த உண்மையான வரலாற்றுத் தேடல் ஆய்வுகள் இப்போதுதான் ஆரம்பித்திருக்கின்றன. இந்தப் பயணத்தில் நாம் கண்டடையப் போகிறவை அபாரமாக, அமோகமாக இருக்கப் போகின்றன. இருந்தும் சமஸ்கிருதத்தைப் படிப்பதால் என்ன பலன் என்றே நம்மில் பலர் கேட்கிறார்கள்.

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures
பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *