இந்தியாவை நோக்கிப் புறப்படுங்கள் இன்றைய இளம் அலெக்சாண்டர்களே…
நமக்கு எல்லாமே பழகிப் போய்விட்டது. நம் முன்னோர்களை, அவர்களுடைய கற்பிதங்களையும் நம்பிக்கைகளையும் திடீர் பூகம்பத்தைப்போல் நிலைகுலையச் செய்த விஷயங்கள் எல்லாம் நம்மை இன்று ஒன்றுமே செய்வதில்லை. ஆங்கிலம் ஒரு ஆரிய மொழி; அல்லது இந்தோ ஐரோப்பிய மொழி; ட்யூடானிக் கிளை மொழி. அதேபோன்ற இத்தாலி, கிரேக்கம், செல்டிக், ஸ்லோவேனிய, இரானிய மற்றும் இந்திய கிளை மொழிகள் எல்லாம் மகத்தான ஆரிய அல்லது இந்தோ ஐரோப்பிய ஒரே மூல மூதாதை மொழியில் இருந்து கிளை பிரிந்தவையே என்று நம் குழந்தைகள் சர்வ சாதாரணமாகப் படிக்கின்றன.
இன்று நம் ஆரம்பப் பள்ளிகளில் கற்றுத்தரப்படும் இந்த சாதாரண விஷயமானது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக உலக அறிவுப் புலத்தில் புதியதொரு விடியலாக இருந்திருக்கிறது. நாம் அந்நியர்களாக உணரப்பட்ட பகுதிகளுடன் சகோதரத்துவ உனர்வைப் பெறும் அளவுக்கு நெருக்கத்தைத் தந்திருந்தது. அங்கு வசித்த, காட்டுமிராண்டிகள் என்று நாம் கருதியவர்களையெல்லாம் நம் ரத்த உறவுகளாகப் பந்த பாசம் கொள்ள வைத்தது. ஒரு தாயின் பால் அருந்தியவர்கள் என்பதைவிட ஒரு மொழியைப் பேசுபவர்கள் என்ற உணர்வு கூடுதல் நெருக்கத்தைக் கொண்டுவரும்.
இந்தியாவின் பழம் பெரும் மொழியான சம்ஸ்கிருதம் கிரேக்கம், லத்தீன், ஆங்கிலோ சாக்ஸன் போலவே நமது மொழியேதான். இந்திய மொழிகளையும் இந்திய இலக்கியங்களையும் படிக்காமல் நாம் இந்த உணர்வை, பந்தத்தைப் பெறவே முடியாது. இந்தியா நமக்கு எதையுமே கற்றுக் கொடுக்கவில்லை என்று ஒருவர் சொன்னாலும் பிற எந்த மொழியைவிடவும் நமக்கு மிக அதிகம் கற்றுத் தந்திருக்கிறது என்பதைமட்டும் மறுக்கவே முடியாது.
இந்தப் புதிய ஞான ஒளி பாய்ந்தபோது உலகின் மாபெரும் அறிஞர்களும் தத்துவவாதிகளும் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார்கள் என்பது அறிவார்ந்தவையாக இருக்கும் அதேநேரம் ஒருவகையில் வேடிக்கையாகவும் இருக்கின்றன. இந்திய நிகர்கள் (நீக்ரோக்கள்) என்று அழைக்கப்பட்ட இந்தியர்களுக்கும் ஏதென்ஸ், ரோமானிய மக்களுக்கும் இடையில் மூல மூதாதைத் தொடர்பு இருக்கும் என்பதை அவர்களால் புரிந்துகொள்ளவோ ஏற்கவோ முதலில் முடியவே இல்லை. நவீன கால ஆய்வாளர்கள் முதலில் இந்த புரிதலை (கோட்பாடை) முன்வைத்தனர். அவர்கள் சம்ஸ்கிருதம் மீது என்னவிதமான தவறான (இழிவான) அபிப்ராயம் கொண்டிருந்தார்களோ அதே விதமாகவே காட்ஃப்ரைட் ஹெர்மன், ஹெளபட், வெஸ்டர்மன், ஸ்டால்பம் போன்ற என் ஆசிரியர்களும் எனக்கு நான் லேப்ஸிக்கில் பள்ளி மாணவனாக இருந்தபோது கற்பித்தார்கள்.
சமஸ்கிருதம், அவெஸ்தா, கிரேக்கம், லத்தீன், கோதிக் மொழிகளின் ஒப்பீட்டிலக்கணம் என்ற நூல் எழுதிய பேராசிரியர் பாப் அளவுக்கு கேலி செய்யப்பட்டவர் வேறு யாரும் இருக்கமுடியாது. ஒட்டு மொத்த அறிவுலகமும் அவரை எதிர்த்தது. கிரேக்க லத்தீன் பதங்களை சமஸ்கிருதம், கோதிக், செல்டிக், ஸ்லோவேனிக், பாரசீக மொழிப் பதங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதில் ஒரு சிறிய தவறு செய்தாலும் கிரேக்கம், லத்தீன் தவிர வேறு எந்த மொழியும் தெரிந்திருக்காதவர்கள், அதிலும் கிரேக்க லத்தீனிய அகராதிகளை எடுத்துப் பார்த்துத்தான் தமது உச்சரிப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தவர்கள்கூட மிக மிக கடுமையாக எதிர்க்கத் தொடங்கினர்.
ஹிந்துக்களுக்கும் ஸ்காட்லாந்தியர்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை ஒப்புக்கொள்வதைவிட, டுகால்ட் ஸ்டூவர்ட் போன்றவர்கள், ஒட்டு மொத்த சமஸ்கிருத மொழியும் அதன் இலக்கியமும் தீய புத்தி கொண்ட பிராமணர்களின் பித்தலாட்ட புனைந்துருவாக்கம் மட்டுமே என்று நம்பத் தயாராக இருந்தார்கள். இத்தனைக்கும் சமஸ்கிருத இலக்கியம் என்பது கிரேக்க அல்லது ரோமானிய பழம்பெரும் இலக்கியத்தைவிட பிரமாண்டமானது. மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்தது. அப்படி இருந்தும் அவற்றை பிராமணர்களின் கட்டுக்கதை என்றே கருதினார்கள்.
லெய்ப்ஸிகில் நாம் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு விஷயம் எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. நோபி, ஃபார்பிகர், ஃபக்னெல், பாம் போன்ற மேதைகள் ஆசிரியர்களாக இருந்த பள்ளி. பழம் பெரும் பாரம்பரியம் மிகுந்த பள்ளியும் கூட. வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது. உருப்படியாக எதையும் செய்யத்தோன்றாத தருணம்… பள்ளியில் ஒரு நாள் அந்த மதிய வகுப்பில் டாக்டர் க்லீ சொன்னார்: கிரேக்கம், லத்தீன் போலவே அல்லது ஜெர்மனிய ரஷ்ய மொழி போலவே இந்தியாவில் ஒரு மொழி பேசப்படுகிறது.
முதலில் இதைக் கேட்டதும் ஏதோ வேடிக்கையாகச் சொல்கிறார் என்றுதான் நினைத்தோம். ஆனால் சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் மொழிகளின் எண்கள், வினைச் சொற்கள், பிரதி பெயர்ச்சொற்கள் ஆகியவற்றின் பட்டியலை கரும்பலகையில் அவர் எழுதியபோது அந்த ஒப்புமையைத் தலைவணங்கி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. ஆதாம் ஏவாள் கதைகள், விண்ணுலக சொர்க்கம், பேபிள் கோபுரம், ஷேம், ஹம், ஜாபெட் மற்றும் ஹோமெர், ஏய்னியஸ், விர்ஜில் என அனைத்தும் புயல் காற்றில் சிக்கிய காகிதம் போல் நிலை தடுமாறிச் சுழல ஆரம்பித்தன. சிந்தனையில் எழுந்த அந்தப் புயலுக்குப் பின், உடைந்து நொறுங்கி விழுந்தவற்றையெல்லாம் ஒன்று கூட்டி, புதிய உலகம் ஒன்றை சிருஷ்டித்து புதிய வரலாற்றுப் புரிதலுடன் வாழத் தொடங்கினோம்.
இந்தியா பற்றி குறைந்தபட்ச அறிவு நம்முடைய தாராளமய வரலாற்றுக் கல்வியில் இருப்பது மிக மிக அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டவே இதை நான் சொல்லியிருக்கிறேன். இந்தியாவுடனான பரிச்சயத்துக்குப் பின் ஐரோப்பிய மனிதர் என்ற கருத்தாக்கம் முற்றிலும் மாறிவிட்டது. மிகப் பரந்த அளவில் விரிவடைந்துவிட்டது. நாம் யார் என்று நினைத்துக் கொண்டிருந்தோமோ அதிலிருந்து நாம் உண்மையில் முற்றிலும் வேறானவர்கள் என்பது நமக்கு இப்போது தெரியவந்திருக்கிறது.
ஒருவேளை ஏதோவொரு விபரீத நிகழ்வினால் அமெரிக்கர்களுக்கு தம்முடைய ஆங்கிலேயே வேர்கள் மறந்துவிட்டதென்று வைத்துக்கொள்வோம். 2000 – 3000 ஆண்டுகள் கழித்து ஆங்கிலம் பற்றித் தெரியவருவதாக வைத்துக்கொள்வோம். வானத்தில் இருந்து திடீரென்று பொத்துக்கொண்டு விழுந்ததுபோல் ஆங்கில இலக்கியங்களும் மொழியும் இலக்கணமும் திடீரென்று அவர்களுக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்? எங்கிருந்து வந்தன… எப்படியெல்லாம் பரிணமித்து வளர்ந்தன என்பதெல்லாம் தெரியாமல் 18-ம் நூற்றாண்டில் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவையெல்லாம் திடீரென்று 2000-3000 ஆண்டுகள் கழித்து அவர்களுக்குத் தெரியவந்தால் எப்படி இருக்கும்? புரியாத புதிராக இருந்த அனைத்துக்கும் தீர்வுகளைத் தரும்வகையில் அந்த மொழி அவர்கள் கைக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்?
சம்ஸ்கிருத மொழியின் கண்டுபிடிப்பும் நமக்கு அப்படியானதொரு மகத்தான விஷயத்தையே செய்திருக்கிறது. நமது வரலாற்று அறிவில் புதியதொரு காலகட்டத்தை அது கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. என்றென்றைக்கும் மறைந்துவிட்டதாக நாம் நம்பிய நமது பால்யத்தின் நினைவுகளைக் கிளறிவிட்டிருக்கிறது.
எது எப்படியானாலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, ஆங்கிலேயர்களாக, சாக்ஸனியர்களாக, கிரேக்கர்களாக, ஏன் ஹிந்துக்களாக நாம் ஆவதற்கு முன்பாகவே இந்த அனைத்தின் விதையம்சங்களைக் கொண்டதொரு மூதாதை இனமாக இருந்திருக்கிறோம். அந்த மூதாதை மிகவும் விசித்திரமானவராக இருக்கக்கூடும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அப்படியான மூல மூதாதை இருந்தது நிஜம். நம் நவீன முன்னோர்களான நார்மனியர்கள், சாக்ஸன்கள், செல்டிக்குகளையும்விடத் தொன்மையான அந்த மூதாதையிடமிருந்து வந்தர்கள் என்பதில் நாம் நிச்சயம் பெருமிதம் கொள்ளவேண்டும்.
சமஸ்கிருதப் படிப்பும் பிற ஆரிய மொழிகளின் படிப்பும் நமக்கு வேறு பல விஷயங்களையும் புரியவைத்துள்ளன. மனித குலம் தொடர்பான நம் பார்வையை விரிவடையச் செய்திருக்கின்றன. கோடிக்கணக்கான அந்நியர்களை, பழங்குடிகளை நமது குடும்பத்தின் உறவினர்களாக சொந்தம் கொண்டாடி அரவணைக்கக் கற்றுத் தந்திருக்கிறது. மனித குலத்துக்கு இதற்கு முன்புவரை இருந்திராத ஒரு தொல் பழங்கால வரலாற்றை கைமாற்றிக் கொடுத்திருக்கிறது.
நாம் பழம் பெருமைகள் பற்றி ஏராளம் பேசுகிறோம்; எழுதுகிறோம். ஏதேனும் கிரேக்க சிலை அல்லது எகிப்திய ஸ்பின்க்ஸ் அல்லது பாபிலோனிய காளைச் சிலையைத் தொடும்போது நம் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. இதயம் களி நடனம் புரிகிறது. எந்தவொரு அரசரின் அரண்மனைகளையும்விட பிரமாண்ட அருங்காட்சியகங்களைக் கட்டிக் கடந்த காலத்தின் பொக்கிஷங்களை அவற்றில் காட்சிக்கு வைத்து அழகுபார்க்கிறோம். இது மிகவும் சரியான செயல்தான். ஆனால், ஒவ்வொரு ஐரோப்பியரிடமும் உலகின் மகத்தான பொக்கிஷங்களைப் பொதிந்துவைத்திருக்கும் அருங்காட்சியம் ஒன்று இருக்கிறது… ஸ்பின்க்ஸ் சிலைகளைவிட காளைச் சிலைகளைவிட தொன்மைவாய்ந்த பொக்கிஷங்கள் நம்மிடம் இருப்பது என்பது நமக்குத் தெரியுமா? அவற்றை எங்கே காட்சிப்படுத்துகிறோம் என்பது தெரியுமா..? நம் மொழியில்தான்.
அப்பா, அம்மா, இதயம், கண்ணீர், ஒன்று, இரண்டு, மூன்று, இங்கு, அங்கு என பயன்படுத்தும் சொற்கள் எல்லாம் ஒற்றை கிரேக்க சிலையும் பாபிலோனிய காளைச் சிலையும் எகிப்திய ஸ்பின்க்ஸ் சிலையும் செதுக்கப்படுவதற்கு முன்பே உருவானவை. ஆம்… நாம் அனைவருமே மகத்தான தொன்மையும் பெருமையும் வாய்ந்த கலைப்பொருட்களை தாங்கி நிற்கும் அருங்காட்சியகங்களே. இந்தக் கலைப் பொக்கிஷங்களை எப்படிப் பயன்படுத்துவதென்று ஒருவருக்குத் தெரிந்திருந்தால் இந்த பொக்கிஷங்களை எப்படித் துடைத்துப் பளபளபாக்குவது… எப்படி அலங்கரிப்பது… எப்படி அழகுற அடுக்கிவைப்பது… எப்படி வாசித்துப் புரிந்துகொள்வது என்பதையெல்லாம் தெரிந்துகொண்டுவிட்டால் உலகின் மாபெரும் களிமண் சித்திர எழுத்துகளும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் அனைத்தையும் ஒன்றுகூட்டினால் கிடைப்பதைவிட ஆயிரம் விஷயங்களை இந்த மொழி நமக்குக் கற்றுத் தரும்.
அவை கற்றுத் தந்தவையெல்லாம் இன்று பழங்கதைகளாகிவருகின்றன. உங்களில் பலர் அதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அவற்றின் மகத்துவங்களை கை நழுவவிட்டுவிடாதீர்கள். அனுதினம் நடக்கும் விஷயங்களாகிவிட்டதால் அவை அவற்றின் அதிசயத்தன்மையை இழந்துவிட்டன. அவற்றில் இருந்து கற்றுக்கொள்ள எதுவும் புதிதாக இல்லை என்று நினைக்காதீர்கள். மொழியியலை எடுத்துக்கொண்டு பார்த்தால் அவற்றில் இருந்து நாம் கற்றுக் கொண்டிருக்கும் அற்புதங்களைவிட இன்னும் அதிக அற்புதங்களைக் கற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது.
எவ்வளவு சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தும் வார்த்தையாக இருந்தாலும் அதன் ஒவ்வொரு அசைகளையும் பதங்களையும் பிரித்தறிய உங்களுக்குத் தெரிந்திருந்தால் அந்த வார்த்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக மகத்தான மனித மனதால் எப்படி கலையம்சத்துடன் செதுக்கப்பட்டிருக்கிறது… எப்படி இலக்கிய நயத்துடன் கோர்க்கப்பட்டிருக்கிறது… எப்படி வார்க்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளமுடியும். அரேபிய இரவுகள் நாவலின் எந்தவொரு அத்தியாயத்தைவிடவும் அது உங்களைக் கூர்ந்து கவனிக்க வைக்கும். அதி ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
எடுத்துக்கொண்ட தலைப்பிலிருந்து நான் விலகிச் சென்றுவிடக்கூடாது. விஷயத்துக்கு வருகிறேன். மொழியியல் அறிவு என்பது தொடர்பான இந்த முன்னுரையில் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், சமஸ்கிருதம் பற்றிய புரிதல் இல்லாமல் இந்த மொழியியல் ஞானத்தை நம்மால் நிச்சயம் பெற்றிருக்கவே முடியாது. தாராளமயமான வரலாற்று கல்வியை நம்மால் வடிவமைக்கவே முடியாது. ஃப்ரெஞ்சு மொழியில் சொல்வார்களே ‘ஸோ ஓரியன்டர்’ அதாவது ஒரு நபர் தன்னுடைய இடம் எது என்பதைப் புரிந்துகொள்வதுபோல் உலக வரலாற்றில் மனிதன் தன் இடத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள இந்த சமஸ்கிருதப் படிப்பு பெரிதும் உதவும். மனித இனப் படகு எந்த இடத்திலிருந்து தன் பயணத்தை ஆரம்பித்தது; எந்தத் துறைமுகங்கள் வழியாகப் பயணம் செய்துவந்திருக்கிறது. எந்தத் துறைமுகம் நோக்கி இனி பயணம் செய்யவேண்டும் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள அது மிகவும் அவசியம்.
நாம் அனைவரும் கிழக்கிலிருந்து வந்தவர்கள். நாம் மதிக்கும் பெரும்பாலானவை கிழக்கில் இருந்து வந்தவையே. கீழைத்தேயவியலில் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமல்ல; தாராளமய வரலாற்றுக் கல்வியைப் பெற்று கிழக்கு நோக்கிச் செல்பவர் அனைவருமே தமது ‘பழைய பூமி’க்குச் செல்கிறோம் என்ற உணர்வைப் பெறவேண்டும். சரியாகப் புரிந்துகொண்டிருந்தாரென்றால் பழைய வீட்டின் நினைவுகளால் அவர் ததும்பிக் கொண்டிருப்பார். மேலோட்டமான மனது சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்காமல் ஆழ் மனதுக்குள் பாய்ந்து செல்லுங்கள்; அடுத்தமுறை இந்தியாவுக்குச் செல்லும்போது 100 ஆண்டுகளுக்கு முன்பாக சர் வில்லியம் ஜோன்ஸ் எப்படி இங்கிலாந்தில் இருந்து நீண்ட நெடிய பயணம் செய்து இந்தியக் கரையை முதன் முதலாகப் பார்த்தபோது என்ன உணர்வெழுச்சியால் ததும்பிக் கொண்டிருந்தாரோ அதுபோல் நீங்களும் உணரவேண்டும். அன்றெல்லாம் இந்தியா எனும் அதிசய தேசத்துக்குச் சென்றவர்கள் பெரும் கனவுகள் கொண்டவர்களாக மாபெரும் லட்சியங்கள் கொண்டவர்களாக அதைப் பற்றி எந்த வெட்கமும் அடையாதவர்களாக இருந்தனர். அன்று வெறும் திரு ஜோன்ஸாக இருந்த சர் வில்லியம் ஜோன்ஸ் தான் கண்ட கனவு பற்றிச் சொல்லியிருப்பதைப் பாருங்கள்:
‘கடந்த ஆகஸ்டில் (1783 ஆகஸ்டில்) நான் இந்தியா நோக்கிய கடல் பயணத்தில் இருந்தபோது, இந்தியாவைப் பார்ப்பது தொடர்பாக மிகப் பெரிய ஏக்கத்துடன் இருந்தேன். ஒரு நாள் எங்கள் கப்பல் இருக்கும் இடத்தை ஆராய்ந்தபோது இந்தியா எங்களுக்கு முன்பாக வரவிருந்தது. இடதுபக்கம் பாரசீகம் இருந்தது. அரேபியக் காற்று எங்கள் கப்பலை வருடிச் சென்றவண்ணம் இருந்தது. அந்தத் தருணம் மிகவும் இதமானதாக இருந்தது. என் மனதில் ஏராளமான எண்ணங்கள் அலைமோதின. கீழைத்தேய உலகம் தொடர்பான பேருவகை தரும் சாகசக் கதைகள், ஏற்க முடிந்த கற்பனைக் கதைகள் எல்லாம் ஏற்கெனவே எனக்கு விளங்க ஆரம்பித்திருந்தன.
ஆசியாவின் மகத்தான பிரமாண்ட பகுதிகளால் சூழப்பட்டிருந்தேன். பல்வேறு அறிவுத் துறைகளின் தொட்டில்; கேளிக்கையும் பயன்பாடும் நிறைந்த கலைகளின் பிறப்பிடம்… மகத்தான சாகசச் செயல்களின் விளைநிலம்… மாபெரும் மேதைகளை உருவாக்கிய பூமி, எண்ணற்ற சட்டதிட்டங்கள், சடங்கு சம்பிரதாயங்கள், மொழிகள், மதங்கள், அரசுகள் நிறைந்த பூமி. அதுமட்டுமா பல்வேறு நிறமும் உடலமைப்பும் கொண்ட மனிதர்கள் நிரம்பியிருக்கும் பகுதி. உலகின் இந்தப் பகுதி இதுவரையும் யாராலும் ஆய்ந்தறிப்படாததாக இருக்கிறது… எண்ணற்ற சாதக அம்சங்கள் இன்னும் மேம்படுத்தப்படாத நிலையில் இருக்கின்றன’.
கப்பலின் விளிம்பில் நின்றுகொண்டு கதிரவன் கடலுக்குள் அஸ்தமிப்பதைப் பார்த்தபடி, இங்கிலாந்து நினைவுகள் பின்னால் இருந்து உந்தித் தள்ள இந்தியா தொடர்பான நினைவுகள் முன்னால் இருந்து இழுத்துச் செல்ல… பாரசீக பழம்பெரும் சாம்ராஜ்ஜியங்களின் அதிர்வுகளை உணர்ந்தபடி… அரேபியத் தென்றலையும் அதன் ஒளிரும் கவிதைகளையும் சுவாசித்தபடி நின்றுகொண்டிருக்கும் அந்த இளம் ஜோன்ஸ் போன்ற எண்ணற்ற லட்சிய இளைஞர்கள் இந்தியாவுக்கு இன்னும் இன்னும் அதிகம் செல்ல வேண்டும். இவர்களுக்கே தமது லட்சியக் கனவுகளை எப்படி நனவாக்கிக் கொள்ளவேண்டும் என்பது தெரியும். தமது தீர்க்க தரிசனங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது தெரியும்.
100 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அதுவே இன்றும் இருக்கிறது. அல்லது இப்போது அப்படி ஆக்கிக்கொள்ளப்படலாம். இந்தியா தொடர்பாக ஏராளமான ஒளிமயமான கனவுகள் காணப்படவேண்டியிருக்கின்றன. ஒளிமயமான பல செயல்கள் செய்யப்படவேண்டியிருக்கின்றன. நீங்கள் நினைத்தாலே அவையெல்லாம் நடந்தேறும். சர் வில்லியம் ஜோன்ஸ் கல்கத்தாவில் கால் வைத்த தருணம் தொடங்கி கீழைத்தேய உலகின் வரலாற்றிலும் இலக்கியங்களிலும் மகத்தான பல விஷயங்கள், வெற்றிகள் சாதிக்கப்பட்டுள்ளன. வெற்றிபெற சிந்து கங்கை நதிகளின் தொல் பெரும் தீரங்களில் இனி எந்தவொரு சாம்ராஜ்ஜியமும் விட்டுவைக்கப்படவில்லையே என்று எந்தவொரு இன்றைய இளம் அலெக்சாண்டரும் கவலைப்படத் தேவையில்லை.
இந்தியா உங்களை வரவேற்கிறது.
(தொடரும்)