Skip to content
Home » மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #12 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 5

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #12 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 5

மூவகை சாட்சிகள்

ஒரு பிரிட்டிஷ் ஆங்கிலேய அதிகாரிக்கும் இந்திய நீதிமன்ற அதிகாரிக்கும் இடையிலான உரையாடலாக கர்னல் ஸ்லீமென் குறிப்பிட்டிருப்பதை இங்கு மேற்கோள்காட்டுகிறேன்.

‘நீதி மன்றத்தில் சாட்சி சொல்பவர்கள் கங்கை நீர் அல்லது குர்ரான் மீது சத்தியப் பிரமாணம் எடுத்துவிட்டுப் பேசுவதுபோல் இருக்கும் தற்போதைய நடவடிக்கையை ரத்துசெய்துவிட்டு அதற்குப் பதிலாக, பொதுவாகக் கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நடைமுறை கொண்டுவரப்பட்டால் என்னவாகும்? இப்போது இருக்கும் மற்ற சட்ட திட்டங்களில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படாமல் இந்த மாற்றம் மட்டும் செய்தால் என்ன விளைவு ஏற்படும்’ என்று பிரிட்டிஷ் அதிகாரி கேட்டார்.

‘நான் நீதிமன்றங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறேன். சாட்சி சொல்பவர்கள் மூன்று வகைக்குள் அடங்குவார்கள். இரண்டு வகையினரின் சாட்சி மொழி இந்தப் புதிய நடைமுறையினால் எந்தவகையிலும் பாதிக்கப்படாததாகவே இருக்கும். ஒரு வகையினரின் சாட்சி மொழி மட்டும் தார்மிகக் கட்டுப்பாட்டில் இருந்து அவர்களை விலகிச் செல்லவைப்பதாக இருக்கும்’ என்றார் இந்தியர்.

‘ஓ… சாட்சி சொல்பவர்களை எந்த அடிப்படையில் இப்படி மூன்று வகையாகப் பிரித்துச் சொல்கிறீர்கள்?’

‘சார்… முதலாவது வகையினர் எல்லா நேரங்களிலும் தமக்குத் தெரிந்த உண்மையையே எதன் மீது சத்தியம் செய்ய வேண்டியிருந்தாலும் சாட்சியாகச் சொல்வார்கள்’.

‘இந்த வகையினர் அதிகமாக இருக்கிறார்களா?’

‘ஆமாம் என்றுதான் நினைக்கிறேன். இந்த உலகில் எதன் மூலமாகவும் அவர்களைப் பொய் சாட்சி சொல்லவைக்கவே முடியாது என்பதை என் அனுபவத்திலிருந்து தெரிந்துகொண்டிருக்கிறேன். என்னவேண்டுமானாலும் செய்தாலும் எப்படி வேண்டுமானாலும் அச்சுறுத்தினாலும் அவர்கள் பொய் சாட்சி சொல்லவே மாட்டார்கள்’.

‘அப்படியா..?’

‘ஆமாம். இரண்டாவது வகையினர் தமக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்கும் என்றோ உள் நோக்கம் ஏதேனும் இருக்கும்நிலையில் தைரியமாகப் பொய் சாட்சி சொல்வார்கள். சத்தியப் பிரமாணம் எடுக்கும்போது கடவுள் கோபித்துக்கொள்வார் என்ற பயம் அல்லது பொய் சாட்சி சொன்னால் தமது குலத்தினர் வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள் என்ற பயம் ஆகிய இரண்டினால் மட்டுமே இவர்களை உண்மையைச் சொல்லும்படிக் கட்டாயப்படுத்த முடியும்’.

‘ஓ….’

‘மூன்று நாட்களுக்கு முன்பாகக் கூட மேட்டுக்குடி பெண் இஸ்லாமியப் பெண் சார்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கில் ஆஜராகியிருந்தேன். அவளுடைய சகோதரன் அந்த வாக்குமூலத்தை வழங்கியிருந்தார். அவளுடைய வாக்குமூலம்தான் என்று இரண்டு பேர் சாட்சிசொன்னார்கள். ‘நீதிபதி, இந்த வாக்குமூலம் அந்த இஸ்லாமியப் பெண் தந்ததுதானா என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்’ என்று சாட்சிகளிடம் கேட்டேன். எந்தவிதத் தயக்கமும் இன்றி ‘ஆமாம்’ என்று சொல்வோம் என்றனர். அந்த வாக்குமூலம் எழுதப்பட்ட காகிதத்தை அந்தப் பெண் தன் கைப்பட கொடுத்ததை இவர்கள் பார்த்திருக்கமாட்டார்கள். ஏனென்றால் அந்தப் பெண் திரை மறைவில் இருந்திருப்பார். அப்படியிருந்தும் அந்தப் பெண்ணுடைய வாக்குமூலம் தானென்று சொல்வேன் என்றார்கள். ஆனால் நீதிபதி, குர்ரானைக் கையில் கொடுத்து அதன் மீது ஆணையிட்டுச் சொல்லச் சொன்னால் ‘அந்த வாக்குமூலம் அந்தப் பெண்ணுடையதா என்பது தெரியாது’ என்று சொல்லிவிடுவோம். ஏனென்றால் நாங்கள் கண்ணால் பார்க்காத ஒன்றைச் சாட்சியாகச் சொன்னால் புனித நூல் மீது பொய் சத்தியம் செய்ததாக எதிர்த்தரப்பினர் ஊர் முழுக்கச் சென்று சொல்லிவிடுவார்கள்; ஊரே எங்களைப் பொய் சாட்சி சொன்னவர்களாகப் பழிக்கும்’ என்றார்கள். இந்த வகையான சாட்சிகள் மீது சத்தியப் பிரமாணம் மிகப் பெரிய அளவில் தாக்கத்தைச் செலுத்தும்’.

‘மூன்றாவது வகையினர் யார்?’

‘மூன்றாவது வகை சாட்சிகள் கையில் குர்ரான் இருந்தாலும் கங்கை நீர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமக்கு உள் நோக்கம் இருந்தால் தைரியமாகப் பொய் சாட்சி சொல்வார்கள். எதுவும் அவர்களை அதிலிருந்து தடுக்கவே முடியாது. எனவே எந்த புதிய சத்தியப் பிரமாண வழியை நீங்கள் முன்வைத்தால் அவை முந்தைய வழிமுறையைப் போலவேதான் இவர்களுக்கு இருக்கும்’.

‘இந்த மூன்று வகையினரில் யார் அதிகமாக இருப்பதாக நினைக்கிறீர்கள்?’

‘இரண்டாம் வகையினரே அதிகம் இருப்பதாக நம்புகிறேன். அவர்களுக்காக அந்த சத்தியப் பிரமாணம் தொடர்ந்து இருந்தாகவேண்டும் என்றும் விரும்புகிறேன்’.

‘ஆக, நீங்கள் விசாரித்த வழக்குகளின் அடிப்படையில் பார்த்தால், வலுவான காரணங்கள் இருந்தால் கையில் கங்கை நீரோ குர்ரானோ இல்லையென்றால் சிலர் பொய் சொல்வார்கள் என்று சொல்லவருகிறீர்கள் அல்லவா?’

‘ஆமாம்…’

‘இந்த இரண்டாவது வகையினர் பெரிதும் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் அதாவது விவசாயக் குடிகள் அப்படித்தானே?’

‘ஆமாம்’.

‘கையில் குர்ரானோ கங்கை நீரோ இல்லாவிட்டால் உள் நோக்கம் வலுவாக இருக்கும்போது பொய் சொல்வார்கள் என்று நீங்கள் சொல்லும் இந்த வகையினர் கூட தமது கிராமங்களில் தமது குலத்தினர் மத்தியில் விசாரித்தால் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?’

‘ஆமாம். தமது குலத்தினர் முன்னால் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள். நீதி மன்றங்களில் பொய் சாட்சி சொல்பவர்களில் முக்கால்பங்கினர் தமது கிராமத்து அண்டை அயலார் முன்னால், கிராம மூப்பர்கள் முன்னால் பொய் சொல்ல மாட்டார்கள்’.

‘நகர்ப்புறங்களில் வசிப்பவர்களைவிடக் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பொய் சாட்சி சொல்ல மிகவும் அஞ்சுவார்கள் என்று நினைக்கிறீர்களா?’

‘ஆமாம். மிக மிக வருத்தப்படுவார்கள். இரு தரப்பினரையும் ஒப்பிடவே முடியாது’.

‘இந்தியாவில் நகர்ப்புறங்கள் மற்றும் பேரூர்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கை கிராமங்களில் வசிப்பவர்களோடு ஒப்பிட்டால் மிகவும் குறைவுதான் இல்லையா?’

ஆமாம். மிகச் சொற்பமானவர்கள்தான் நகரம் மற்றும் பேரூர்களில் வசிக்கிறார்கள்’.

‘அப்படியானால் இந்திய மக்கள் தொகையில் நமது நீதிமன்றங்களுக்கு வெளியே, முதல் வகையினர் அதாவது, கையில் கங்கை நீரோ குர்ரானோ இருந்தாலும் இல்லாவிட்டாலும் உண்மையைச் சொல்பவர்களே மற்ற இரண்டு வகையினரைவிட அதிகமாக இருப்பார்கள் அல்லவா?’

‘ஆமாம்.. சொந்தக் குலத்தினர் முன்பாக, கிராம மூப்பர்கள் முன்பாக இவர்களை விசாரிக்கவேண்டும். தாம் சொல்லும் சாட்சி தன் குலத்தினர், மூப்பர்களுக்குத் தெரியவரும் என்று அவர்களுக்கு அப்போதுதான் உரைக்கும்’.

*

இந்தியர்களை அவரகள் போக்கில்விட்டால் (விசாரித்தால்) எப்படி நடந்துகொள்வார்கள்; அவர்களுடைய இயல்பான, உள்ளார்ந்த குணம் என்ன என்பது தொடர்பாக உங்களுக்குப் புரியவைக்கவே கர்னல் ஸ்லீமெனின் இந்த மேற்கோளை இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். கிறிஸ்து பிறந்து ஆயிரம் ஆண்டுகள் கழித்த பின்னரான காலகட்டத்திய இந்தியர்கள் தம் போக்கில் செயல்பட அனுமதிக்கப்பட்டால் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை உங்களுக்குப் புரியவைப்பதே என் நோக்கம்.

இந்தியாவில் தொடர்ச்சியாக அவ்வப்போது முஹம்மதிய ஆக்கிரமிப்பாளர்கள் அக்கிரமங்களை முன்னெடுக்கத் தொடங்கிய காலத்திலிருந்து ஆங்கிலேயர் கால் பதிக்கத் தொடங்கிய காலம் வரையில் நடந்தவற்றை விமர்சகர்கள் எப்படி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லக்கூடும். இப்படியான ஒரு மாபெரும் அழித்தொழிப்பை நரக வேதனையை இந்தியா எப்படித்தான் சமாளித்து எழுந்திருக்கிறது. அந்த ஆக்கிரமிப்பாளர்களைப் போல் தாமும் அரக்க குணம் கொண்டவர்களாக ஆகிவிடாமல் எப்படித்தான் தன்னைத் தற்காத்துக் கொண்டிருக்கிறது என்று நான் பெரிதும் வியந்து நிற்கிறேன்.

முஹம்மது கஜினி இந்தியா மீது படையெடுத்ததற்கு முன்பான சுமார் 2000 ஆண்டுகாலத்துக்கு இந்தியாவில் அந்நியப் படையெடுப்பு என்பது மிக மிகக் குறைவுதான். அந்நியர்களின் நகரப்பகுதிகள் என்பது மிகவும் குறைவுதான். கிரேக்கரோ சீனரோ பாரசீகரோ அரேபியரோ இந்தியாவைப் பற்றி எழுதியிருப்பவற்றில் இந்தியர்களின் தேசியக் குணமாக அவர்கள் சொல்லியிருப்பதெல்லாம் இந்தியர்கள் சத்தியத்துக்கும் நீதிக்கும் கொடுக்கும் மிகுந்த முக்கியத்துவமே முதலிடத்தைப் பிடிப்பதாக இருப்பதையே நாம் பார்க்கமுடிகிறது.

இந்தியர்களின் குண நலன் பற்றி முதன் முதலில் குறிப்பிட்டிருக்கும் கிரேக்க படைப்பாளி : அர்ட்டாசெரெக்ஸ் நிமோனைச் சேர்ந்த கிரேக்க மருத்துவர் க்டேசியஸ் (கி.மு.404-ல் நடைபெற்ற கனாக்ஸா போர் நடந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்). பாரசீக அரசவையில் இந்தியரைப் பற்றித் தனக்குத் தெரிந்தவற்றை விவரித்திருக்கிறார். தனது நூலில் இந்தியர்களின் நீதி என்று ஓர் அத்தியாயமே எழுதியிருக்கிறார் (க்டேசியே ஃப்ராக்மெண்டா, பக் 81).

பாலிபோத்ரா (பழங்காலத்தில் பாடலிபுத்ரம், இன்று பாட்னா) அரசவையில் செல்லூகஸ் நிகேடாரின் தூதராக இருந்த மெகஸ்தனிஸ் ‘இந்தியர்கள் சத்தியத்தையும் நேர்மையையும் பெரிதும் மதித்துப் போற்றினர். இந்தியாவில் திருட்டுகள் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றன’ என்று குறிப்பிட்டிருக்கிறார் (மெகஸ்தனிஸ் ஃப்ராக்மெண்டா தொகுதி 2; பக் 426).

‘கிராமப்புறங்கள் மற்றும் பேரூர் பகுதிகளில் நடப்பவை அனைத்தையும் மன்னர் இருக்கும் பிராந்தியங்களில் மன்னருக்குத் தெரிவிக்கிறார்கள். மற்ற சுய ஆட்சி உரிமை பெற்ற பகுதிகளில் பஞ்சாயத்துத் தலைவரிடம் தெரிவிக்கிறார்கள். பொய் அறிக்கைகள் தருவது இங்கு நடைமுறையில் இல்லை. எந்தவொரு இந்தியரும் பொய் சொன்னதாகக் குற்றம் சுமத்தப்பட்டதே இல்லை’ என்று இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த எபிக்டெடஸின் மாணவர் ஏரியன் குறிப்பிட்டிருக்கிறார் (மெக்ரிண்டில் தொகுத்த இந்தியன் ஆண்டிக்யரி, 1876, பக் 92).

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures
பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *