இந்தியாவின் பெரும்பகுதியை ஆட்சி செய்த குப்தப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு சிறிய அரசுகள் தோன்றி, நாட்டின் பல பகுதிகளில் ஆட்சி செய்தன. பொயு ஏழாம் நூற்றாண்டில் மூன்று பெரும் வீரர்கள் தோன்றி நாட்டின் மூன்று பெரிய பகுதிகளில் ஆட்சி செய்தார்கள். அவர்களில் முதலாமானவரான ஹர்ஷவர்த்தனரைப் பற்றிப் பார்ப்போம்.
வர்த்தனர்கள்
குப்தர்களுக்குப் பிறகு வட பாரதத்தில் தோன்றிய சிறிய அரசுகளில் தானேஸ்வரத்தைத் தலைநகராகக் கொண்டு (தற்போது ஹரியானாவில் உள்ள தானேஸர்) பிரபாகரவர்த்தனர் என்பவர் ஆட்சி செய்த அரசும் இருந்தது. அவர் புஷ்யபூதி / வர்த்தன வம்சத்தைச் சேர்ந்தவர். அவருக்கு அரசியான யசோவதியின் மூலம் ராஜ்யவர்த்தனர், ஹர்ஷவர்த்தனர் என்ற மகன்களும் ராஜ்யஶ்ரீ என்ற மகளும் இருந்தனர். தனது மகளான ராஜ்யஶ்ரீயை கன்யாகுப்ஜத்தின் (கன்னோஜி) அரசனான கிருகவர்மன் என்பவருக்கு மணம் செய்து கொடுத்தார் பிரபாகரவர்த்தனர். அவருடைய காலத்திற்குப் பிறகு மூத்த மகனான ராஜ்யவர்த்தனர் அரியணை ஏறினார்.
தானேஸ்வரத்திற்கும் கன்னோஜிக்கும் ஏற்பட்ட மண உறவால் அந்த அரசுகள் வலிமையடைந்ததைக் கண்ட கௌடதேசத்து அரசனும் குப்தர்களின் சிற்றரசனாக இருந்தவனுமான சசாங்கன் கவலை அடைந்தான். மாளவ அரசனான தேவகுப்தனுடன் ஒரு கூட்டணி அமைத்துக்கொண்டு கன்னோஜியைத் தாக்கினான். இந்தப் போரில் கிருகவர்மன் கொல்லப்பட்டான். கன்னோஜியின் அரசியான ராஜ்யஶ்ரீ சிறைப்பிடிக்கப்பட்டார்.
தங்கைக்கு நேர்ந்த கதியைக் கண்ட ராஜ்யவர்த்தனர், பத்தாயிரம் பேர் கொண்ட குதிரைப்படையோடும் பல ஆயிரக்கணக்கானோர் கொண்ட காலாட்படையினரோடும் கன்னோஜி நோக்கி விரைந்தார். அந்தப் படையினருக்கும் மாளவப் படைக்கும் இடையே நடந்த போரில் ராஜ்யவர்த்தனர் வெற்றிபெற்றார். தேவகுப்தன் கொல்லப்பட்டார். ஆனாலும் ராஜ்யஶ்ரீயை தந்திரமாக சசாங்கன் சிறைப்பிடித்துகொண்டு சென்றுவிட்டான். அவனைத் துரத்திச் சென்றார் ராஜ்யவர்த்தனர்.
ஒரு கட்டத்தில் ராஜ்யவர்த்தனரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த சசாங்கன் அவரை கொலைசெய்துவிட்டான். கன்னோஜியையும் கைப்பற்றிக்கொண்டான். அண்ணனின் கொலைச்செய்தியும் தங்கை சிறைப்பட்ட செய்தியும் ஹர்ஷரை எட்டியபோது அவர் வயது பதினாறு. அந்தச் சிறிய வயதில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஹர்ஷர், தனது அண்ணனின் கொலைக்கு பழி வாங்க நினைத்து தானும் ஒரு பெரும் படையோடு கன்னோஜியை நோக்கிச் சென்றார். கௌடதேசத்துப் படையோடு நடந்த போரில் ஹர்ஷர் பெருவெற்றி பெற்றார். ராஜ்யஶ்ரீயை சிறையிலிருந்து மீட்டார். ஆனால் சசாங்கன் தப்பி ஓடிவிட்டான். அவனை ஹர்ஷர் துரத்திச் சென்றாலும், அவருக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. சசாங்கன் கௌடதேசத்தை மட்டும் மேலும் சிறிது காலம் ஆட்சி செய்ததாக வரலாறு கூறுகிறது.
ஹர்ஷரின் வாழ்க்கையில் நடந்த மேற்குறிப்பிட்ட சம்பவங்கள், ஹர்ஷரின் நெருங்கிய நண்பரும் அவருடைய அரசவைப் புலவருமான பாணபட்டர் என்பவரால் எழுதப்பட்ட ஹர்ஷசரிதம் என்ற சமஸ்கிருதக் காவியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
ஹர்ஷரின் ஆட்சி
சசாங்கனை வெற்றி கொண்ட பிறகு ஹர்ஷவர்த்தனர் கன்னோஜியைத் தனது தலைநகராக ஆக்கிக்கொண்டார். அவரது ஆட்சிக் காலம் பொதுவாக பொயு 606 முதல் 647 வரை எனக் கருதப்படுகிறது. அதன் பின் வலபியை ஆட்சி செய்த இரண்டாம் துருவசேனனின் மீது போர் செய்து அந்தப் பகுதியையும் கன்னோஜி அரசுடன் இணைத்தார். அதன் பிறகு சிந்து ராஜ்யமும் வடக்கில் இருந்த சிறு அரசுகள் பலவும் ஹர்ஷவர்த்தனரின் படைவலிமையால் வீழ்ந்தன. நேபாள அரசும் கஷ்மீர அரசும் ஹர்ஷரின் தலைமையை ஏற்றுக்கொண்டு அவருக்குக் கப்பம் கட்ட ஆரம்பித்தன. அஸாம் அரசரோடு ஹர்ஷர் நட்புறவு கொண்டிருந்தார்.
சாளுக்கியர்களுடன் போர்
இப்படி வடபாரதம் முழுவதையும் தனது வாளின் வலிமையால் ஒன்றிணைத்து ஒரே குடையின்கீழ் கொண்டு வந்த ஹர்ஷவர்த்தனர் அடுத்ததாக தென்னகத்தை நோக்கித் தன் கவனத்தைச் செலுத்தினார். தக்காணத்தில் அப்போது சாளுக்கிய அரசரான இரண்டாம் புலகேசி ஆட்சி செய்துகொண்டிருந்தார். நர்மதை ஆற்றங்கரையில் இரண்டு படைகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. அந்தப் போரில் புலகேசி வெற்றி பெற்றார். போரில் தோற்ற அரசர் புலகேசியோடு சமாதான உடன்படிக்கை செய்துகொண்டார். அதன் படி நர்மதை ஆற்றங்கரை இரண்டு அரசுகளுக்கும் எல்லையாக இருக்கும் என்று முடிவுசெய்யப்பட்டது.
தென் திசைப் படையெடுப்பில் தோல்வி கண்டாலும் ஹர்ஷருடைய அதிகாரத்திற்குக் கீழே ராஜஸ்தான், குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், கஷ்மீர், பஞ்சாப், அஸாம் என்று வடஇந்தியாவின் பெரும்பகுதி இருந்தது. ஹர்ஷருடைய ஆட்சிக்காலத்தில் சீன யாத்திரிகரான சுவான்சாங் இந்தியாவில் பயனம் செய்திருக்கிறார். ஹர்ஷருடைய ஆட்சி சிறப்பானதாக இருந்தது என்று அவரது குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஹர்ஷரது அரசவையை அறிஞர்கள், கவிஞர்கள், பௌத்த துறவிகள், யாத்திரிகர்கள் ஆகியோர் அலங்கரித்தனர். அவரது ஆட்சித்திறன் கல்வெட்டுகள், நாணயங்கள் வழியே மட்டுமல்லாமல், அவரது அரசவைக் கவிஞரான பாணர் எழுதிய ஹர்ஷசரிதம் மற்றும் சீன பௌத்த யாத்திரிகரான சுவான்சாங் எழுதிய பயணக் குறிப்புகள் வழியாகவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சுவான்சாங்கின் குறிப்புகளே ஹர்ஷரின் ஆட்சி இவ்வளவு நன்றாக ஆவணப்படுத்தப்பட்ட காரணங்களில் ஒன்றாகும். சுவான்சாங் பௌத்த நூல்களைப் படிக்கவும், புனித இடங்களை தரிசிக்கவும், இந்திய ஆசிரியர்களிடமிருந்து கற்கவும் இந்தியா வந்தார். அவர் பல ஆண்டுகள் இந்தியாவில் தங்கி, ஹர்ஷரின் அரசவையையும் பார்வையிட்டார். அவரது குறிப்புகள் அந்தக் காலத்தின் அரசியல், சமூக, சமய நிலைகளை அறிய மிக மதிப்புமிக்க ஆதாரங்களாக உள்ளன. அவர் ஹர்ஷரை தாராளமும் சுறுசுறுப்பும் கொண்ட மன்னராகவும், சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராகவும் வர்ணிக்கிறார்.
நிர்வாகம்
அவரது பேரரசு இன்றைய பொருளில் மிக மையப்படுத்தப்பட்ட அரசாக இருந்ததில்லை. பண்டைய மற்றும் ஆரம்பகால இடைக்கால இந்திய அரசுகள் போலவே, இதில் நேரடியாக ஆளப்பட்ட பகுதிகள், சிற்றரசர்கள், கீழ்ப்படிந்த மன்னர்கள், கூட்டணி பிராந்தியங்கள் ஆகியவை அடங்கியிருந்தன. அவரது ஆட்சி, குப்தர்களுக்குப் பிறகு பிளவுபட்டிருந்த வட இந்தியாவுக்கு நிலைத்தன்மையை அளித்தது.
ஹர்ஷரின் நிர்வாகம் இந்திய அரசாட்சியின் பழைய முறைமைகளையே பெருமளவில் பின்பற்றியதாகத் தெரிகிறது. அரசர் அதிகாரத்தின் மையமாக இருந்தாலும், அமைச்சர்கள், அதிகாரிகள், மாகாண ஆளுநர்கள், உள்ளூர் நிர்வாக அமைப்புகள் ஆகியோர் அவருக்கு துணையாக இருந்தனர். கிட்டத்தட்ட குப்தர்களின் ஆட்சிமுறையையே அவரும் பின்பற்றினார். அரசு புக்தி என்ற பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. வெளியுறவு, ராணுவ அமைச்சராக அவந்தி என்பவரும், சிம்மாநந்தா தளபதியாகவும், குந்தளன் என்பவர் குதிரைப் படைத் தலைவராகவும் ஸ்கந்தகுப்தர் யானைப்படைத் தலைவராகவும் மஹாப்ரதிகரா அரண்மனைத் தலைமைக் காவலராகவும் இருந்தனர் என்பது அவரது சாசனங்களால் தெரியவருகிறது.
நிலவரி முறை அரசின் பொருளாதார அடித்தளமாக இருந்தது. வேளாண்மை செல்வத்தின் முக்கிய ஆதாரமாக இருந்தது. கிராமங்கள் பொருளாதார வாழ்வின் அடிப்படை அலகுகளாக இருந்தன. வரி வசூல், இராணுவப் பணிகள், நீதி, பொது ஒழுங்கு ஆகியவற்றிற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். சுவான்சாங் தனது குறிப்புகளில் ஹர்ஷரை நிர்வாகத்தில் நேரடியாக ஈடுபட்ட மன்னராகச் சித்தரிக்கிறார். ஹர்ஷர் தன் நேரத்தை அரசுப் பணிகள், சமயக் கடமைகள், தான தர்மங்கள் ஆகியவற்றிற்கிடையே பகிர்ந்துகொண்டதாக அவர் கூறுகிறார். இந்த விவரிப்புகளில் பாராட்டின் சாயல் இருந்தாலும், ஹர்ஷர் நீதியுள்ள, சுறுசுறுப்பான, மக்களுக்கு அணுகத்தக்க ஓர் இலட்சிய மன்னராகத் தன்னை நிலைநிறுத்த முயன்றார் என்பதை அவை காட்டுகின்றன.
நீதியும் மக்கள் நலனும் ஹர்ஷரின் ஆட்சியதிகாரத்தின் முக்கிய அம்சங்களாக இருந்தன. சுவான்சாங், அவரது தாராள மனப்பான்மையையும், குடிமக்கள் மீதான அக்கறையையும் பாராட்டுகிறார். மன்னர் தன் நாட்டின் பல பகுதிகளுக்கும் அடிக்கடி பயணம் செய்து, நிலைமைகளைப் பார்வையிட்டு, மக்களுக்கு நேரடியாக தரிசனம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய அரசுப் பயணங்கள் பண்டைய இந்திய அரசியலில் முக்கியமானவை. அவை பிராந்திய அதிகாரிகளுடனும் குடிமக்களுடனும் மன்னர் தனிப்பட்ட தொடர்பை வைத்திருக்க உதவின. அவை அரச அதிகாரத்தையும் தாராள மனப்பான்மையையும் வெளிப்படுத்தும் நிகழ்வுகளாகவும் இருந்தன. ஹர்ஷரின் ஆட்சி வர்த்தகம், சமய யாத்திரை, அறிஞர்களின் பயணம் ஆகியவற்றை ஊக்குவித்ததாகத் தெரிகிறது. அவரது ஆட்சியின் ஒப்பீட்டளவிலான அமைதி, மடங்கள், கோயில்கள், கல்வி மையங்கள் போன்ற நிறுவனங்கள் வளர உதவியது.
பொருளாதார ரீதியாக ஹர்ஷரின் காலம் பெரும்பாலும் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆனால் வர்த்தகம் பெரும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. வளமான நிலங்களும் பழமையான நகர மையங்களும் கொண்ட கங்கைச் சமவெளி, அவரது அரசுக்கு வலுவான அடிப்படையாக இருந்தது. ஹர்ஷரின் கீழ் கன்னோஜியின் எழுச்சி மிகவும் முக்கியமானது. அவருக்குப் பிந்தைய நூற்றாண்டுகளில், கூர்ஜரப்-பிரதிஹாரர்கள், பாலர்கள், ராஷ்டிரகூடர்கள் போன்ற பல வலிமையான வம்சங்கள் கன்னோஜிக்காகப் போட்டியிட்டன.
சமயம்
ஹர்ஷரது சமயத்தைப் பொருத்தவரை அக்கால மன்னர்கள் போலவே வேதமதத்தைப் பின்பற்றியவராகவே அவர் விளங்கினார். அவரது முத்திரையில் சூரியனுடைய உருவம் காணப்படுகிறது. தனிப்பட்ட முறையில் ஹர்ஷர் சைவ சமயப் பற்றுள்ளவராக இருந்தார். அவரது கல்வெட்டுகள் ‘பரம மாகேஸ்வரர்’ என்றே அவரை வர்ணிக்கின்றன. இருந்தாலும் மற்ற சமயங்களையும் அவர் அன்போடு நடத்தினார். பௌத்தமத ஆலயங்களுக்குப் பல நிவந்தங்களை வழங்கி அவர் போஷித்தார். பல பௌத்த மடாலயங்களையும் உயரமான ஸ்தூபிகளையும் ஹர்ஷர் நிறுவினார். இதனால் சுவான்சாங் அவரை பௌத்தர் என்றே கருதிவிட்டார். அது தவறான கருத்து என்பதை எஸ்.ஆர்.கோயல் போன்ற வரலாற்றாசிரியர்கள் நிறுவியிருக்கிறார்கள்.
சுவான்சாங் வழியாகவே ஹர்ஷர் நடத்திய மாபெரும் சமயக் கூட்டங்களையும் நாம் அறிகிறோம். கன்னோஜியில் நடைபெற்ற மாபெரும் சபை மிகப் பிரசித்தமானது. பௌத்த சமயத் துறவிகளுக்காக அங்கே ஹர்ஷர் ஒரு பெரிய கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அதில் துறவிகள், அறிஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சுவான்சாங் அந்தச் சபையில் மரியாதைக்குரிய இடம் பெற்றார். ஹர்ஷர் பிரயாக்ராஜில் மற்றொரு பெரிய கூட்டத்தையும் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் பல தானங்களை வழங்கினார். அங்கே பௌத்த துறவிகள், பிராமணர்கள், துறவறவாசிகள், ஏழைகள், தேவையுள்ளவர்கள் ஆகியோருக்கு ஹர்ஷர் செல்வத்தை வழங்கினார் என்று சுவான்சாங் கூறுகிறார். இந்தத் தானங்கள் வெறும் தனிப்பட்ட பக்தியின் வெளிப்பாடாக மட்டுமல்ல. அவை அரசரின் அறம் மிகுந்த ஆட்சியின் வெளிப்பாடுகளாகவும் இருந்தன. தனக்கு மட்டும் செல்வத்தைச் சேர்த்துக்கொள்ளாமல் அற நிறுவனங்களுக்கும் தேவையுள்ள தனிப்பட்ட மனிதர்களுக்கும் வழங்கி ஹர்ஷர் தன்னை ஒரு வள்ளலாக நிலைநிறுத்திக்கொண்டார்.
இலக்கியம்
கலைக்கும் இலக்கியத்திற்கும் ஹர்ஷர் பெரும் ஆதரவு அளித்தார். அவரது அரசவைக் கவிஞரான பாணபட்டர், சமஸ்கிருத இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். பாணரின் ஹர்ஷசரிதம், ஹர்ஷரின் வாழ்க்கை வரலாறும் அரசவைக் காவிய இலக்கியமும் கலந்த ஒரு சிறப்பு நூலாகும். அதில் கவிதைநயம் மிக்க வர்ணனைகள், நாடகமயமான காட்சிகள், அலங்கார மொழி ஆகியவை நிறைந்துள்ளன. பாணர் புகழ்பெற்ற உரைநடை நூலான காதம்பரியையும் எழுதியுள்ளார். அது ஹர்ஷரின் காலத்தில் சமஸ்கிருத இலக்கிய கலாசாரம் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தது என்பதைக் காட்டுகிறது.
இவற்றைத் தவிர ஹர்ஷரே மூன்று சமஸ்கிருத நாடகங்களை எழுதியிருக்கிறார். அவை ரத்னாவளி, பிரியதர்ஷிகா, நாகானந்தா ஆகியவை ஆகும். இந்தப் படைப்புகள் அவரது புலமையையும் இலக்கியச் செறிவையும் காட்டுகின்றன. இதில் நாகானந்தா மிகவும் பிரசித்தமானது. போதிசத்வரான ஜிமுதவாகனனின் கதையை அது கூறுகிறது. அது நாடகக் கலையையும் பௌத்த ஒழுக்கக் கருத்துகளையும் எடுத்துரைக்கிறது.
ஹர்ஷரின் காலத்தில் நாலந்தா பல்கலைக் கழகம் சிறந்து விளங்கியது. ஏற்கெனவே இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் ஆசிய நாடுகளிலிருந்தும் மாணவர்களை ஈர்த்த பௌத்த கல்வியின் மாபெரும் மையமாக இருந்த நாலந்தா, ஹர்ஷரின் ஆதரவின் மூலம் பெரும் சிறப்புப் பெற்றது. சுவான்சாங் நாலந்தாவில் கல்வி கற்று, அதனுடைய சிறப்புகளைப் பற்றிப் பட்டியலிட்டுச் சென்றிருக்கிறார். நாலந்தா வெறும் மடமாக மட்டும் இல்லாமல் அங்கே தத்துவம், தர்க்கம், இலக்கணம், மருத்துவம், பௌத்த சாஸ்திரங்கள் ஆகியவை கற்பிக்கப்பட்ட மாபெரும் கல்வி நிறுவனம் இருந்தது என்று கூறுகிறார் அவர். இத்தகைய நிறுவனங்களுக்கு ஹர்ஷர் அளித்த ஆதரவு, ஆசியாவில் இந்தியா கல்வியின் மையமாக இருந்த புகழை மேலும் வலுப்படுத்தியது.
வெளிநாட்டு உறவுகளிலும் ஹர்ஷரின் ஆட்சி இந்திய எல்லைகளைத் தாண்டிய முக்கியத்துவம் பெற்றது. ஹர்ஷரின் அரசுக்கும் சீனாவின் தாங் அரசுக்கும் இடையே தூதரகப் பரிமாற்றங்கள் நடந்தன. இத்தொடர்புகள், ஏழாம் நூற்றாண்டு இந்தியா சமயம், பயணம், கல்வி, தூதரகம் ஆகியவற்றில் ஆசியாவின் மையமாக இருந்ததைக் காட்டுகின்றன. பௌத்த யாத்திரிகர்கள், வணிகர்கள், தூதர்கள் பல நாடுகளைக் கடந்து பயணம் செய்து, நூல்கள், சிந்தனைகள், மன்னர்கள் மற்றும் அரசுகள் பற்றிய கருத்துகளை எடுத்துச் சென்றனர். எனவே ஹர்ஷரின் புகழ் அவரது பேரரசின் எல்லைகளைக் கடந்து பரவியது.
(தொடரும்)

