Skip to content
Home » வரலாற்றின் கதை #2 – நினைவுகளும் வரலாறுகளும்

வரலாற்றின் கதை #2 – நினைவுகளும் வரலாறுகளும்

‘அழகு என்றால் என்ன’, எனும் கேள்விக்கு விடை சொல்லமுடியாதவர்களுக்கும் அச்சொல் எதை உணர்த்துகிறது என்பது தெரியும். வரலாறுக்கும் இது பொருந்தும் என்கிறார் ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க வரலாற்றாளர் ஜான் லூகாக்ஸ். வரலாற்றை எப்படி வரையறுப்பது என்பதை வரலாற்றாசிரியர்கள் விவாதித்துக்கொள்ளட்டும். எளிமையாகச் சொல்லவேண்டுமானால் வரலாறு என்பது மனிதகுலத்தின் நினைவுத் தொகுப்பு என்கிறார் லூகாக்ஸ்.

கடந்த காலம் என்பது அளவிட முடியாத அளவுக்குப் பெரியது. நம் வசதிக்கு மூன்று பிரிவுகளாகக் கடந்த காலத்தைப் பிரித்துக்கொள்ளலாம் என்கிறார் லூகாக்ஸ். முதலாவது, ஒட்டுமொத்தக் கடந்த காலம். இது நம்மால் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு மிகப் பெரியது. இரண்டாவது, நினைவுகளாக மட்டும் எஞ்சியிருக்கும் கடந்த காலம். இது ஒட்டுமொத்தத்தில் ஒரு சிறு பகுதி. அந்தச் சிறு பகுதியில் ஒரு சிறு துண்டுதான் எழுத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மூன்றாவது பிரிவு. பதிவு செய்யப்பட்ட நினைவுகள் என்று அந்தச் சிறு துண்டு பகுதியை அழைக்கலாம். வரலாறு என்பது சான்றுகளின் அடிப்படையில் எழுதப்படுவது என்பதால் எழுத்துப்பூர்வமான பதிவுகள் கொண்ட காலத்தை மட்டுமே வரலாற்றாளர்கள் தொடக்கத்தில் ஆராய்ந்து வந்தனர்.

அப்படியானால் எழுதப்படாத காலங்கள் எல்லாம் இருளில் மூழ்கிக்கிடக்க வேண்டியதுதானா? அவற்றை நாம் புறக்கணித்துவிடவேண்டுமா? வேறு வழியில்லை, அவ்வாறுதான் செய்தாகவேண்டும். அதிலும் எழுத்தில் உள்ள எல்லாமே அல்ல; முறையாக எழுதப்பட்ட பிரதிகளை மட்டுமே வரலாறாகக் கொள்ளமுடியும் என்று வரலாற்றாளர்கள் வாதிட்டனர். வரலாறு விரிவடைய, விரிவடைய இந்நிலை மாறத் தொடங்கியது.

நம் தனிப்பட்ட வரலாற்றை இதற்கு உதாரணமாக அளிக்கிறார் லூகாக்ஸ். நம் ஒவ்வொருவருக்கும் குழந்தைப் பருவம் என்றொன்று இருந்தது. பள்ளி, கல்லூரி என்று படிப்படியாக வளர்ந்து இன்றுள்ள நிலையை அடைந்திருப்போம். நம்முடைய குழந்தைப் பருவமும் பள்ளிக் காலமும் கல்லூரிக் காலமும் நம் வரலாற்றின் இன்றியமையாத பகுதிகள். ஆனால் அந்தக் காலகட்டங்கள் குறித்து நம்மிடம் எழுதப்பட்ட பதிவுகள் இருக்கின்றனவா? ஒன்றிரண்டு கடிதங்கள் கிடைக்கலாம். சில புகைப்படங்கள் இருக்கலாம். சில, பல பொருள்களும் சேகரிப்புகளும் அகப்படக்கூடும். எதுவுமே அகப்படாமலும் இருக்கலாம். நாம் குழந்தைப் பருவம் என்றொன்றைக் கடந்துதான் வந்துள்ளோம் என்பதற்குச் சான்றளிக்க நம்மிடம் என்ன இருக்கிறது? எதுவும் இல்லை என்றால் நாம் பிறந்திடவே இல்லை என்று கொள்ளமுடியுமா?

ஆக, எழுத்து மட்டுமே ஒரே சான்று என்று கருதமுடியாது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைப் புரிந்துகொள்ள அப்போது வாழ்ந்தவர்கள் விட்டுச் சென்றுள்ள சின்னச் சின்ன பொருள்களையும் சின்னச் சின்ன நினைவுகளையும் சேகரிக்க முயற்சி செய்யவேண்டும். சேகரித்தவற்றைக் கவனத்தோடு ஆராய்ந்து அக்காலகட்டத்தின வரலாற்றைக் கட்டமைக்க வேண்டியிருக்கும். எழுத்துமுறை உருவாவதற்கு முந்தைய காலத்தை அறிந்துகொள்ள வேறு வகையான கருவிகளையும் வேறு வகையான அணுகுமுறைகளையும் வரலாற்றாளர்கள் கண்டறிந்து, கையாள ஆரம்பித்தனர். இந்த மாற்றத்தின் கதை என்பது வரலாற்றின் கதையும்தான்.

கடந்த காலத்தை நினைவுகளாகக் கொண்டு லூகாக்ஸ் மூன்றாகப் பிரித்ததைப்போல் வரலாற்றை மூன்று பெரிய பகுதிகளாக அத்துறை சார்ந்தவர்கள் பிரிக்கிறார்கள். (இந்தப் பிரிவுகளெல்லாம் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டவைதான். காலம் எந்தப் பிரிவுகளுக்கும் அடங்காதது). எழுத்து கண்டுபிடிக்கப்பட்டதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தைய காலம் என்று அழைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த கடந்த காலம் என்று லூகாக்ஸ் குறிப்பிட்டது இதைத்தான். எழுத்து உருவான பிறகான காலம் என்பது வரலாற்றுக் காலம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்டது வரலாற்றுத் தொடக்க காலம். அதாவது, எழுத்துகள் இல்லாத காலத்திலிருந்து எழுத்துகள் உருவாகத் தொடங்கிய காலம். இந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் பற்றிய நினைவுகளை வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்தவர்கள் அங்குமிங்குமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். மற்றபடி, இவர்கள் குறித்து நமக்கு அதிகம் தெரியாது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பழைய கற்காலம், இடைக்காலக் கற்காலம், புதிய கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக்காலம் என்றெல்லாம் பிரிக்கிறார்கள். இந்தக் காலங்களைக் கண்டறிவதற்குத் தொல்லியல் நமக்கு பெரும் உதவி செய்கிறது.

தொல்லியல்போல் சமயம், சமூகவியல், பொருளாதாரம், அரசியல், இலக்கியம், தத்துவம் என்று தொடங்கி மரபியல்வரை பல துறைகளோடு வரலாறு உரையாடுகிறது. வரலாறு ஒரு சமூக அறிவியல் துறையாகச் செழிப்படைந்ததற்கு இந்த உரையாடல் ஒரு முக்கியக் காரணம். வரலாறு எனும் துறையின் வளர்ச்சிக்கும் அதன்மூலம் கடந்த காலம் குறித்த நம் பார்வையின் வளர்ச்சிக்கும் இந்த உரையாடல் எவ்வாறு உதவியது என்பதைப் பார்க்கப்போகிறோம்.

0

மனிதனின் வரலாற்றுத் தேடல் எப்போது, எங்கே தொடங்கியது என்பதைக் கண்டறிவது கடினம். கடந்த காலத்தை எழுத்தில் பதிவு செய்யும் வழக்கம் எப்போது தொடங்கியது என்பதை வேண்டுமானால் நமக்குக் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் விவரிக்கலாம். எகிப்திலும் மெசபடோமியாவிலும் காணப்படும் 5000 ஆண்டு பழமை வாய்ந்த சித்திர எழுத்துகளை ஆராய்ந்தபோது கடந்த காலம் குறித்த சில குறிப்புகளைக் கண்டடைந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தங்களை ஆண்டு வந்த வெவ்வேறு மன்னர்களின் பெயர்களை அவர்கள் பட்டியல்போல் தயாரித்து வைத்திருந்தார்கள்.

உலகின் பழமையான வரலாற்று மரபுகளில் ஒன்று சீனர்களுடையது. கடவுளோடு உரையாடும் திறன் பெற்ற ஆன்மிகத் தலைவர்களைச் (ஷாமன்கள்) சந்தித்து கடவுள் அருளிய செய்திகளை, தகவல்களை, கதைகளைக் கேட்டு வாங்கி எழுத்தில் பதிவு செய்பவர் ‘ஷி’ என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் கடவுளின் இடத்தை மன்னர் பிடித்துக்கொள்ள அவர் கூற்றுகளைப் பதிவு செய்ய ஆரம்பித்தார். நாளடைவில் ‘ஷி’ எனும் சொல் வரலாற்றாசிரியரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இறுதியாக, வரலாறு எனும் துறையைக் குறிக்கும் சொல்லாக மாற்றம் கண்டது. கடந்த காலத்தின் பதிவுகள் என்பது சீனர்கள் இச்சொல்லுக்கு அன்று அளித்த பொருள். கடந்த காலத்தைச் சேர்ந்த எல்லா நிகழ்வுகளையும் அல்ல, எகிப்து, மெசபடோமியப் பதிவுகள்போலவே அரண்மனைப் பதிவுகளாகவே சீனர்களின் வரலாறு திகழ்ந்தது.

இந்தியாவில் ‘இதிஹாசா’ என்னும் சமஸ்கிருதச் சொல் வரலாற்றைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இச்சொல்லின் பொருள், ‘இதுதான் நடந்தது’. குறிப்பிட்ட ஓரிடத்தில், குறிப்பிட்ட காலத்தில் என்ன நடந்தது என்பதை நேரடியாகக் கண்டவரின் வாக்குமூலமாக இதிகாசம் கருதப்பட்டது. ராமாயணமும் மகாபாரதமும் இதிகாசம் என்று அழைக்கப்பட்டாலும் அவை நேரடியாகக் கண்டு எழுதப்பட்ட நிகழ்வுகள் அல்ல என்பது வெளிப்படை.

கடந்தகாலம் குறித்த பதிவுகள் அரபு மொழியில் ‘கபர்’ என்று அழைக்கப்பட்டன. தகவல் அல்லது செய்தி என்பது இதன் பொருள். பின்னர் ‘தாரிக்’ எனும் சொல்லும் புழக்கத்துக்கு வந்தது. இச்சொல் வம்சாவளியைக் குறிக்கிறது. தாரிக் முதலில் பயன்படுத்தப்பட்டது பொஆ 644இல்.

கடந்த காலம் குறித்த பலவிதமான பதிவுகளில் எது சரியென்பதைத் தேர்ந்தெடுக்கும் திறன் பெற்றவரை ‘ஹிஸ்டர்’ என்று கிரேக்கர்கள் அழைத்தனர். நபரைக் குறிக்கும் இச்சொல் அந்நபரின் திறனைக் குறிக்கும் சொல்லாக மாறியது. ஹிஸ்டரில் இருந்து பிறந்த சொல், ‘ஹிஸ்டோரியா.’ இதன் பொருள் அறிந்துகொள்ளுதல், அறிவை நாடிச் செல்லுதல், அவ்வாறு நாடிச்செல்லும்போது கிடைக்கும் அறிவு ஆகிய மூன்றையும் குறிக்கும். இதிலிருந்துதான் வரலாறு என்பதற்கு நாம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொல் உருவானது. கிரேக்கத்திலிருந்து லத்தீன், பிரெஞ்சு ஆகிய மொழிகளுக்குச் சென்று பின்னர் ஆங்கிலத்துக்கும் வந்து சேர்ந்தது.

எகிப்தியர்கள், சீனர்கள், அரேபியர்கள், இந்தியர்கள், கிரேக்கர்கள் உள்ளிட்டோர் கடந்த காலத்தின்மீது கொண்டிருந்த ஆர்வம்தான் நவீன வரலாறாக இன்று செழித்து வளர்ந்திருக்கிறது. சமகாலம்போல் கடந்தகாலமும் முக்கியம் என்று அவர்கள் கருதியிருக்கிறார்கள். தேடலைத் தொடங்கியிருக்கிறார்கள். கிடைத்ததை எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். இன்றைய வரலாற்றாளர்கள் செய்வதும் இதையேதான். ஆனால் கடவுள், மன்னர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மனிதர்கள், சாமானியர்கள் எனும் பாகுபாட்டை வரலாறு கைவிட்டுவிட்டது. பெயர் தெரியாத ஒரு பழங்கால மனிதரைக் குறித்து கிடைக்கும் ஒரு சிறு தடயமும்கூட முக்கியமானதே. மண் பானை, கல்வெட்டு, கிழிந்த ஆடையின் ஒரு பகுதி, நாணயம், சத்திரம், கோவில் எல்லாமே ஒரு வரலாற்றாளருக்கு முக்கியமான சான்றுகள். முறையான பிரதிகளும் மனதை மயக்கும் அழகிய ஓவியங்களும் மட்டுமல்ல, பாறைக் கிறுக்கல்களும் குகை ஓவியங்களும்கூடக் கடந்த காலத்தின் சான்றுகள்தாம். இந்தப் பெரும் பாய்ச்சல் எவ்வாறு நிகழ்ந்தது என்னும் கேள்வி எழும்போது நாம் வரலாற்றின் வரலாறு எனும் புதிய துறைக்கு வந்து சேர்கிறோம்.

இலக்கியம், தத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் என்று தொடங்கி ஒவ்வொரு துறைக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. நிலங்களுக்கும் மக்களுக்கும் எப்படி வரலாறு இருக்கிறதோ அப்படியே வரலாற்றுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. வரலாற்றெழுதியல் (Historiography) என்று அத்துறை அழைக்கப்படுகிறது. இது வரலாறு எழுதப்படும் முறையை ஆராய்கிறது. வரலாற்றாளர்களையும் அவர்கள் படைப்புகளையும் ஆராய்கிறது. பண்டைய காலம் முதல் இன்றுவரையிலான வரலாற்றின் வளர்ச்சியை ஆராய்கிறது. வரலாற்றாளர்கள் கடந்த காலத்தை இதுவரை எவ்வாறு அணுகியிருக்கிறார்கள், அவர்களுடைய அணுகுமுறைகள் ஏன் வேறுபடுகின்றன, அந்த வேறுபாடுகளை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது போன்ற கேள்விகளை வரலாற்றெழுதியல் எழுப்புகிறது. வரலாறு என்பது கடந்த காலத்தின் கதை என்றால் அக்கதை எழுதப்பட்ட கதையை விவரிப்பது வரலாற்றெழுதியல்.

ஒரு வரலாற்றுப் பிரதியின் பின்னணி, அதை எழுதியவரின் பின்னணி, அந்தப் பிரதியின் நோக்கம், அதன் பங்களிப்பு, குறைபாடு ஆகியவற்றை வரலாற்றெழுதியல் ஆராய்கிறது. ஒரு வரலாற்றாளர் எத்தகைய தரவுகளைச் சேகரித்திருக்கிறார் என்பதையும் அவர் அத்தரவுகளை எவ்வாறு கையாண்டு எத்தகைய முடிவுகளுக்கு வந்து சேர்கிறார் என்பதையும் வரலாற்றெழுதியல் கவனத்தில் கொள்கிறது. ஏன் சில தரவுகள் புறக்கணிக்கப்படுகின்றன, ஏன் சிலவற்றுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது? ஒரு பிரதி யாருக்காக எழுதப்படுகிறது? அது எவ்வாறு பார்க்கப்படுகிறது? அதில் பிரச்சினைக்குரிய அம்சங்கள் இருக்கின்றனவா? ஆம் எனில் எத்தகைய பிரச்சினைகள்? இந்தப் பிரதி இதே பொருளில் வெளிவந்த முந்தைய பிரதிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது, எத்தகைய புதிய பார்வைகளை அளிக்கிறது அல்லது அளிக்கவில்லை? இதுபோல் நூறு கேள்விகளை வரலாற்றெழுதியல் அனுமதிக்கிறது. வரலாறு எப்படிக் கேள்விகளால் கட்டமைக்கப்பட்ட ஒரு துறையோ அதுபோலவே வரலாற்றின் வரலாறும் கேள்விகளையே மையப்படுத்தி இயங்கும் துறை.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *