இந்தக் காலம்போல நாகரிகம் அதிகம் வளராத காலம் அது. நடைமுறை வாழ்வில் மனிதனை விஞ்சும் அளவிற்கு இயந்திரங்கள், கருவிகள் இல்லாத காலம். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலகட்டத்தில் நாம் இப்போது பயணிக்கிறோம். திரு.வைத்தியநாதன், டாக்டர் கேயின் தந்தை. ஒரு மாவட்ட விவசாய அதிகாரி. அந்தக் காலத்தில் மொழிவாரி மாநிலங்கள் கிடையாது. காரணம், பிரிட்டிஷ் ஆட்சியில், நான்கு ராஜதானிகள் மாத்திரமே உண்டு. கிழக்கு (கொல்கத்தா); வடக்கு (டெல்லி); மேற்கு (மும்பை); மற்றும் தெற்கு (மதராஸ்) என மொத்த இந்தியாவும் அடக்கப்பட்டுவிட்ட காலம். இதன் காரணமாக இந்த நான்கு பெரிய நகரங்களும் உயரிய இடத்தைப் பெற்றிருந்ததோடு, கல்வியிலும் சிறந்து விளங்கின.
திரு. வைத்தியநாதன், மதராஸ் ராஜதானியின் கீழ் அனந்தப்பூர், பெல்லாரி, பெனுகொண்டா, காதிரி, ஊட்டி, குன்னூர், கோவை, ஆடுதுறை, சாத்தூர் என மூன்று மாநிலங்களில் (தற்போதைய வரையறைப்படி) உள்ள ஊர்களில் பணி புரிந்தார். எனவே, டாக்டர் கேயின் பள்ளிப் படிப்பு பல இடங்களில் இருந்தது. ஓர் இடத்தில்கூட வெகு காலம் நிலைத்திருந்ததில்லை. காரணம், அவர் தந்தைக்கு அடுத்த மாற்றல் தயாராகிவிடும். அப்படி மாற்றல் நேரவில்லை என்றால், குடும்பச் சூழல் காரணமாக அல்லது மாற்றல் ஆன இடங்களில் பள்ளிகள் சரியான நிலையில் இல்லாததால், டாக்டர் கே, தன் மாமன், சித்தப்பா உள்ளிட்ட மற்ற உறவினருடன் தங்கிப் படிக்க நேரிட்டது.
மற்றொரு முக்கியக் காரணம், அன்று கூட்டுக் குடும்பங்கள் அதிகமாக நடைமுறையில் இருந்தன. இப்போதுபோல, தனிக்குடித்தனங்கள் கிடையாது. ஏனெனில், ஒவ்வொரு வீட்டிலும் சாதாரணமாகக் குறைந்தது நான்கிலிருந்து எட்டுக் குழந்தைகள் இருப்பர். அன்றைய நிலை அறிந்தவர்களுக்கு இது தெரியும். எனவே, அவர்களைப் பொறுப்புடன் பார்த்துக்கொள்ளப் பெரியவர்கள் தேவை. அதற்குச் செலவில்லாத வழிமுறை, கூட்டுக் குடும்பம்தான். எப்போது நாம் இறப்பை மருத்துவ வசதி கொண்டு தள்ளிப்போடத் தொடங்கினோமோ, அப்போதிருந்து மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இறப்பும் பிறப்பும், சம நிலையில் இருக்கும்வரை மக்கள் தொகைப் பெருக்கம் எல்லை மீறாமல் இருந்தது. சரி, அது வேறு கதை. இப்போது டாக்டர் கேயின் கதைக்கு வருவோம். அவரது வீட்டிலும் இதே நிலைதான். அவருடன் பிறந்தவர்கள் எட்டுப் பேர். இவர்தான் முதல் குழந்தை. இவர் பிறந்த நாள் ஜூன் 6, 1929. எப்போதும் வீட்டில் திருவிழாபோலக் கூட்டம்தான். இதுவும் ஒரு காரணம், அவர் பிறர் வீட்டில் இருந்து படிக்க நேர்ந்ததற்கு. வீட்டுச் சூழ்நிலை சற்று முன்பின் இருக்கும்போது படிப்பைப் பாதிக்கக் கூடாது என்று அவரைப் பல இடங்களில் தள்ளியது.
இதனால் நேர்ந்த நல்ல விஷயம், டாக்டர் கேவுக்கு எல்லாத் தென்னிந்திய மொழிகளிலும் சிறந்த பாண்டித்யம் கிடைத்தது. அவருடன் பழகிய பலரும் இந்த உண்மையை மிகவும் சிலாகித்துச் சொல்வார்கள். ஓரளவு ஹிந்தியும் தெரிந்ததால், அவருக்கு எந்த வனத்துறை அதிகாரியிடமோ அல்லது வேறிடங்களிலோ, மொழியின் காரணமாகத் தடை இருந்ததில்லை. கிட்டத்தட்ட எல்லோரிடமும் அவரவர் தாய்மொழியில் பேசும் திறன் கொண்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும். அதனால் ஓர் உடனடி அணுக்கம் அவருக்குக் கிடைத்ததில் ஆச்சரியமில்லை. ஆந்திராவில் குப்பம் என்ற இடத்தில் பயிர்ச் சேதம் செய்த யானைகளைப் பிடிக்கச் சென்றபோது மொழிப் பிரச்னை இங்கிருந்து (தமிழகத்திலிருந்து) சென்ற யாருக்கும் வரவில்லை. காரணம், டாக்டர் கேயின் சரளமான தெலுங்கு மொழிப் புலமைதான். பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பேசி, குறைகளைக் கேட்டறிந்து, அதை அதிகாரிகளிடம் சொல்லி இழப்பீட்டுக்குச் சிபாரிசு செய்தார். அதேபோல உடற்கூறு ஆய்வுக்கு வரும் ஹனுமந்துவிடம், எந்த உடலுறுப்பை எடுக்க வேண்டும், எப்படி எடுக்க வேண்டும் என்று கன்னடத்தில் பேசிக் காரியத்தை முடிப்பார். காரணம், ஹனுமந்துவின் தாய் மொழி கன்னடம்.
அதேபோலக் கூட்டுக் குடும்பக் காலத்தில், இவரது குடும்பம், மாறுதல்கள் காரணமாக ஒரு தனிக் குடித்தனமாகவே இருந்தது. ஏனெனில், பெரியவர்கள் வந்து தங்கும் அளவிற்கு ஓர் இடத்தில் தொடர்ச்சியாக இருந்ததில்லை. இதனால், இவர் தன் தாயின் பிரசவக் காலங்களில்கூட உடன் இருக்கும் சந்தர்ப்பங்களும் வாய்த்தன. பெரியவர்கள் வந்து உதவ இயலாத அல்லது தாயார் ஊருக்குப் போக இயலாத சமயங்களில், மூத்த மகனாக இவருக்குக் குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பு இருந்தது. அதனால் சமையல் போன்றவற்றை எடுத்துச் செய்யவும் நேர்ந்தது.
கிட்டத்தட்ட ஒரு second in charge போல! இதன் விளைவு, சமையலிலும் இவர் கை தேர்ந்து விளங்கினார். அவருடன் பணி புரிந்தவர்கள், டாக்டர் கேயின் நளபாகத்தைப் பற்றிப் பேசாமல் இருந்ததில்லை. முனைவர் ஏஜேடி ஜான் சிங் பல முறை என்னிடம் டாக்டர் கேயின் சமையல் கலை தேர்ச்சியைப் பற்றிக் கூறி இருக்கிறார். பல ஆராய்ச்சியாளர்கள் அவரது சமையலின் நேர்த்தியை வியந்து பாராட்டி இருக்கின்றனர். இப்படி ஒரு பின்னடைவை, சோர்வடையச் செய்யும் வேலையைக் கலையாக மாற்றும் திறன் டாக்டர் கேவுக்கு இருந்தது. ‘அவர் வைக்கும் சாம்பார் நம்மை அடிமை ஆக்கி விடும்’ என்று அஜய் தேசாய் அடிக்கடி சிலாகிப்பார்.
ஐந்தாம் வகுப்பு வரை பெற்றோர்களிடம் இருந்து படித்த அவர், அடுத்த மூன்று வருடங்கள் சென்னையில் சித்தப்பாவின் வீட்டிலும், அடுத்த இரண்டு வருடங்கள் திருச்சியில் உள்ள பாட்டி வீட்டிலும், அடுத்த இரண்டு வருடங்கள் குன்னூரிலும், இன்டர்மீடியட் மீண்டும் பாட்டி வீட்டிலும் இருந்து பள்ளிப் படிப்பை முடித்தார். இப்படிப் பல இடங்களில் மாறி மாறிப் படித்தும் அவர் படிப்பில் சோடைபோக வில்லை என்பதுதான் வியப்பு. மீளுந்தன்மை என்பதன் நிதரிசன உதாரணம் டாக்டர் கே.
இவர் மிகச் சிறிய வயதில், ஒரு பூனைக் குட்டியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது, அதைக் குளிப்பாட்டலாம் என்று முடிவு செய்து, தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கி விட்டார். அந்தப் பூனைக்குட்டி மூச்சுத்திணறி இறந்து விட்டது. அதைக்கண்ட அவரது தாயார் டாக்டர் கேவைக் கடுமையாகத் தண்டித்தார். அவரது தந்தை அது அளவு கடந்த அன்பால் விளைந்த செயல் என்று உணர்ந்து, ‘நீ கால்நடை மருத்துவர் வேலைக்குத்தான் லாயக்கு’, என்று திட்டினார். பின்னாட்களில் அவர் இதை அடிக்கடி நினைவுகூர்வதுண்டு. ‘எந்த நேரத்தில் சொன்னாரோ அதே போல ஆகி விட்டது’, என்று.
இன்னொரு வியக்கத்தக்கக் குணம், இசையில் அவருக்கிருந்த ஈடுபாடு. இசை விற்பன்னர்கள்போல் பிரமாதமான ஞானம் என்று கூற இயலாவிட்டாலும், ராகங்களைக் கண்டறியும் திறன் அவரிடம் இருந்தது. பல கீர்த்தனைகளைப் பாடும் திறனும் புரிந்துகொள்ளும் திறனும் அவரிடம் இருந்தது. அதேபோல், ஹிந்துஸ்தானி மற்றும் மேற்கத்திய இசையிலும் அவருக்கு நல்ல அறிவு இருந்தது. இதற்கு அவரது தாய் வழி முக்கியக் காரணம் என்று தோன்றுகிறது. தாய் நல்ல பாடகி; தாத்தா சங்கர நாராயணன் சிறந்த வயலின் வித்வான். பல நண்பர்கள் திரு.கேயின் ராகங்களைக் கண்டறியும் திறன்பற்றி கூறக் கேட்டிருக்கிறேன். மற்றொரு விஷயம், பாரம்பரியமாக வாழும் பிராமணக் குடும்பங்களில் இசை என்பது அவர்கள் உணர்வோடு பின்னிப் பிணைந்த ஒன்று. அடிப்படையான சில திறமைகளைக் கொண்டிருப்பார்கள். அதனால், இவர் இசை ஞானம் உடையவராக இருந்ததில் வியப்பில்லை. அதேபோல இறை நம்பிக்கை அவர் தாயாரிடம் இருந்து வந்தது. அவர் சொல்வார், ‘என் தாய் எனக்குக் கடவுள் நம்பிக்கையைக் கற்றுக் கொடுத்தார். என் தாய்க்குத் திருமணம் ஆகும்போது 14 வயது. நான் பிறக்கும்போது அவளுக்கு வயது 15. அவளுக்கு நான் ஓர் இளவரசன். ஐந்தாவது வரை மட்டுமே படித்த அவளுக்கு 3 மொழிகளில் சரளமாகப் பேச எழுத வரும்’ என்று.
மற்றொரு போற்றத்தக்க அம்சம், அவரது பரந்துபட்ட விஷய ஞானம்! அவரது தொழிலைச் சார்ந்து மட்டுமல்லாது, பலதரப்பட்ட துறைகளைப் பற்றி அறிந்து வைத்திருப்பார். ஆங்கில, தமிழ் இலக்கியங்களில் அவரது அறிவு வியக்கத்தக்கது. எப்போதும் எதையாவது படித்துக்கொண்டே இருப்பார். இதன் விளைவாக, அவரது எழுத்தாற்றல் ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்றாக இருந்ததுடன், சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாகவும், அழகாகவும் சொல்ல இயன்றது. முனைவர் பட்டம் படிக்கும் பல மாணவர்களிடம், எழுத்தாற்றல் குறித்து அவர் எடுத்துரைப்பார்.
டாக்டர் கேவின் மற்றொரு சிறந்த பண்பாக எல்லோரும் சொல்வது, அவரது பழகும் விதமும் தன்மையும். நிர்வாக நோக்கில் கடைநிலை ஊழியரிடம் இருந்து முதன்மை வனப் பாதுகாவலர் வரை ஒரே மாதிரி அன்புடன் பழகும் குணம்தான் இன்றும் அவரை ஓர் ஆதர்ச மனிதனாக, தலைவனாக, யானைப் பாகன்களுக்கு மத்தியிலும், யானை ஆய்வாளர்கள் மத்தியிலும், அதிகாரிகள் மத்தியிலும் நிலை நிறுத்தி இருக்கிறது. கால்நடை ஆய்வாளர் மணி, வெளிநாட்டுக் கால்நடை மருத்துவர் கிரிஸ் வெம்மர் சொல்வதுபோல் பாகன்கள், காவடிகளிடம் அவர் எப்படித் தோளில் கை வைத்துப் பேசுவார் என்று கூறுவதைப் பார்க்கும்போது இது விளங்கும். இதற்கான பயிற்சியும் மனமும், அவரது குடும்பத்தில் கிடைத்தது. ஏனெனில், அத்தனை சகோதரச் சகோதரிகளுடன் வாழும்போது, விட்டுக் கொடுப்பதும், பொறுப்புடன் உதவுவதும், பொறுப்பை எடுத்துக் கொள்வதும், தன்னைப்போல வந்து விடும். எல்லோரையும் சமமாகப் பாவிக்கும் தன்மை இயல்பாக வந்துவிடும். நாங்கள் டாப்ஸ்லிப் சென்றபோது அங்கிருந்த பாகன்கள் கண்கள் பனிக்க டாக்டர் கேவைப் பற்றி இன்றும் நினைப்பதில் (25 ஆண்டுகளுக்குப் பின்!) வியப்பில்லை. அவரிடத்தை நிரப்ப வேறொருவர் இல்லை என்பதை அவ்வளவு எளிதில் மறுக்க முடியவில்லை. மிதுனபூரில், மொழி அறியாத இடத்தில் பல மாதங்கள் தங்கி, பணியில் ஈடுபட்ட பாகன்கள் எப்படி டாக்டர் கே அவர்களின் தேவைகளை உணர்ந்து உதவினார் என்பதை இன்றும் சொல்லி மகிழ்ந்தனர். Elephant Men என்ற ஆவணப்படம் அந்த வாழ்வை நன்கு எடுத்துரைக்கும்.
இப்படிப் பல கஷ்டங்களுக்கு இடையில் பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரிப் படிப்பை நோக்கி அடி எடுத்து வைத்தார். அன்று சென்னையில் மட்டும்தான் பொறியியல் கல்லூரி, அதுவும் மிகக் குறைந்த எண்ணிக்கையில். எனவே, இவரது மதிப்பெண்களுக்கு, (நல்ல விதம் என்றாலும் போட்டியில் வெல்லத் தக்கவை இல்லாததால்) பொறியியல் கிடைப்பது கடினமானது. ஆகவே சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் வேதியியல் பிரிவில் வேண்டா வெறுப்பாகச் சேர்ந்தார். அதற்குள் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. வேதியியலுக்கு இது மேல் என்று உடனே சேர்ந்துவிட்டார். அது பின்னாட்களில் அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போடப் போகிறது என்று அவருக்கும் தெரியாது; யானைகளுக்கும் தெரியாது.
இந்தப் படிப்பையும் அவர் புரசைவாக்கத்தில் இருந்த தனது மற்றொரு சித்தப்பாவின் வீட்டில் இருந்துதான் படித்து முடித்தார். All those who wander are not lost என்ற ஆங்கிலப் பழமொழிக்கேற்ப, அவர் இத்தனை அலைச்சல்களுக்கிடையிலும், தனது குறிக்கோளான படிப்பை விடவில்லை; வாழ்விலும் தொலையவில்லை. மாறாக, வனக் கால்நடை மருத்துவர்களுக்கிடையே ஒரு ஜாம்பவான் என்று போற்றப்படும் அளவிற்கு உயர்ந்தார். யானை டாக்டர் என்ற அடைமொழியுடன் யானைகளைப் பற்றிய ஓர் ஆளுமையாகத் திகழ்ந்தார். அதற்கான உரிய அங்கீகாரம் கிடைத்ததா என்பது விவாதிக்கத்தக்கது, ஆனால் இங்கு அதற்கு இடமில்லை.
(தொடரும்)