Skip to content
Home » யானை டாக்டரின் கதை #5 – கல்லூரிக் காலம்

யானை டாக்டரின் கதை #5 – கல்லூரிக் காலம்

டாக்டர் கே இப்படியாகக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில், பெர்டி டிசூசா கல்வித் தலைவராகவும், மந்திரமூர்த்தி முதல்வராகவும் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் டாக்டர் கே-வை மிகவும் பிடித்துப்போனது. காரணம், அவர் குதிரைகளைக் கையாண்ட விதம். கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதல் பாடம் மிருகங்களை எவ்வாறு கையாள்வது என்பதுதான். குறிப்பாக, குதிரைகளை எப்படிக் கையாளச் சொல்லிக் கொடுப்பார்கள். குதிரைகளை நல்ல முறையில் கையாள அவர்கள் பரிந்துரைப்பதாவது:

1. எப்போதும் குதிரையின் பக்கவாட்டிலிருந்து தான் அணுக வேண்டும்.

2. கையாள்பவர் நிதானத்துடன், தன்னம்பிக்கையுடன் இருத்தல் வேண்டும்.

3. முதலில் குதிரையை நமது கையை முகர அனுமதிக்க வேண்டும். அதற்குக் கையை நீட்டி முகரச் செய்ய வேண்டும்.

4. குதிரைகளிடம் மென்மையான தொனியில் பேச வேண்டும்.

இப்படிப் பல வழிமுறைகள் சொல்லித் தரப்படும். டாக்டர் கே இந்த வகையில் அனாயாசமாகக் குதிரைகளைக் கையாளுவதைக் கண்டு மேற்கண்ட இருவரும் அவர் சிறந்த கால்நடை மருத்துவர் ஆவார் என்று உணர்ந்தனர். அதன் காரணமாக அவர் மேல் அதிகப் பிரியம் வைத்திருந்தனர். அங்கு இருந்த எல்லோருமே அவரை டார்ஜான் என்று செல்லப் பெயரால் அழைத்தார்கள்.

முன்பே சொன்னதுபோல அவரது சித்தப்பா ஹரிஹரன் வீட்டிலிருந்துதான் கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவர் இருந்தது புரசைவாக்கத்தில். ஹரிஹரன் பணி புரிந்தது எம்.சி.டி. முத்தையா பள்ளியில். அன்று அந்தப் பள்ளியில், சாம் என்ற ஆசிரியரும் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் குத்துச் சண்டையில் தேர்ந்தவர். இளைஞர்களுக்குக் குத்துச் சண்டைப் பயிற்சியும் கொடுத்துக் கொண்டு இருந்தார். அவர் தாக்கத்தால், டாக்டர் கே-வும் குத்துச் சண்டை பயின்றார். ஆனால், லைட் வெயிட் பிரிவில்.

பல கல்லூரிகளுக்கிடையிலான போட்டிகளில் டாக்டர் கே பதக்கங்கள் வாங்கி, கிட்டத்தட்ட சார்பட்டா ரேஞ்சுக்கு இருந்தார் என்றுகூடச் சொல்லலாம். அன்று புரசைவாக்கம் சென்னையின் குத்துச்சண்டை வீரர்களின் கோட்டையாக இருந்தது. முக்கியக் காரணம், ஆங்கில-இந்தியர்கள் அதிகம் வாழ்ந்த இடம் என்பதால் அதன் தாக்கம் கண்கூடாக இருந்தது. மகாகவி பாரதி, சுரேந்திர ஆர்யாவை புரசைவாக்கத்தில் சந்தித்ததை செல்லம்மா விவரித்திருப்பார்- எப்படி ஆரியாவின் வீட்டில் வெள்ளைக்காரத் தோரணையில் உணவு பரிமாறப்பட்டது, அவர் எப்படிக் கிறிஸ்தவர்களைப்போல மாறியிருந்தார் என. அப்படி, வெள்ளையர்களின் விளையாட்டுகளும், நடையுடை பாவனைகளும் மிகுந்திருந்த இடத்தில் கே-வும் இருந்ததனால், அவற்றில் சில அவரிடம் படிந்தன.

அடுத்து, வெள்ளையர்களின் விளையாட்டான கிரிக்கெட். டாக்டர் கே. அதிலும் சிறந்து விளங்கினார். சென்னை முதல் பிரிவு (பர்ஸ்ட் டிவிஷன்) அணியில் விளையாடினார். நல்ல தொடக்கப் பந்து வீச்சாளர். லெக் ஸ்பின்னர். இவருடன் அன்று விளையாடியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்– ஜெமினி கணேசன், ஆர்.டி. பார்த்தசாரதி, பாலு அழகண்ணன், சி.டி.கோபிநாத், கண்ணாயிரம் போன்றோர். சிலர் இவருக்கு எதிர் அணியில் இருந்தனர். சிலர் இவர் அணியில் இருந்தனர். கால்நடை மருத்துவக் கல்லூரியின் கிரிக்கெட் அணியின் தலைவராக டாக்டர் கே இரண்டு மூன்று வருடங்கள் இருந்தார்.

இவர் ஒரு சவுத் பா. அதாவது, இடது கை ஆட்டக்காரர். என்ன, தொடர்ச்சியாக விளையாடிப் பெயர் பெற முடியாமல், யானைகளின் பால் அவர் கவனம் திரும்பிவிட்டது. இது மட்டுமில்லாது, தடகளப் போட்டிகளிலும் சிறந்து விளங்கினார். தொலைத்தூரம் தாண்டுதல், தட்டு எறிதல், ஓட்டப்பந்தயம் என அவர் கால் படாத விளையாட்டே இல்லை எனலாம். படிப்புடன், இதுபோன்ற திறமைகளும் கொண்ட அவருக்கு நல்ல பெயர் இருந்ததில் வியப்பில்லை. குறிப்பாக மந்திரமூர்த்தி, இவரிடம் பெரும் அன்பு கொண்டிருந்தார். பின்னாட்களில், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநராக இருந்தபோதும் நல்ல அணுக்கத்துடன் பழகி வந்தார்.

விளையாட்டில் அவருக்கிருந்த ஈடுபாடு காரணமாக டாக்டர் கே-வின் தலைமைக் குணங்கள் நன்கு வளர்ந்ததோடு, பலதரப்பட்ட மனிதர்களுடன் இணைந்து பணி புரியும் பாங்கைக் கற்றுக் கொடுத்தது. உதாரணமாக, குத்துச்சண்டை தனி வீரர் விளையாட்டு என்றாலும், அதில் பங்கேற்கும் வீரர்களின் நடையுடை பாவனைகள் கிரிக்கெட் வீரர்களைப்போல இருக்காது. சற்று முரட்டுத்தனமாக இருக்கும். ஆனால், போட்டியிடும் தீவிரம் ஒரே போலத்தான் இருக்கும். ஆனால், இருவரிடம் பழகும் விதம் மாறுபடும். இது வாழ்க்கையில் பல வித மனிதர்களைக் கையாள பயன்பட்டது. யானைகளைப் பிடிப்பது, பழக்குவது போன்ற வேலைகள் குழு முயற்சி. அதற்குப் பணியில் இருந்த அனைவரும் தங்கள் பணியை நன்கு அறிந்திருப்பதொடு, மற்றவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். அதை டாக்டர் கேவால் எளிதில் செய்ய இயன்றதற்கு விளையாட்டில் அவருக்கு இருந்த திறமை பெரிதும் பயன்பட்டது.

இப்படி நான்கு வருடங்கள் கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் வாங்கிய பின், டாக்டர் கே. ஆந்திராவில் கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். அவரது முதல் பணி நியமனம் கதிரியில். அது அவர் தந்தை வைத்தியனாதன் பணிபுரிந்த இடத்திற்கு அருகில் அமைந்திருந்தது, ஒரு தற்செயலான நிகழ்வே! அந்த இடம் ஆந்திரா, கர்நாடகா எல்லையருகே அமைந்திருந்தது. எப்படி சித்தூர் இருக்கிறதோ அதுபோல. அவரின் பன்மொழிப் புலமை இந்த நியமனம் காரணமாக மேலும் மெருகேறியது.

எல்லா வைதீகக் குடும்பங்களில் உள்ள வழக்கத்தைப்போல, இவர் வீட்டிலும், உடனே (1953-ல்) திருமண ஏற்பாட்டைச் செய்தனர். பையனுக்கு வேலை கிடைத்துவிட்டது, அடுத்தது கல்யாணம்தான் என்ற பழங்கால மரபுப்படி டாக்டர் கேவுக்கு லக்னோவில் குடிபெயர்ந்த ஒரு தமிழ்க் குடும்பத்துப் பெண்ணை நிச்சயம் செய்தனர். அவர்கள் குடும்பம் அதற்கு முன் லஹோர், டெல்லி ஆகிய இடங்களில் இருந்தது. ஆக, டாக்டர் கேவின் மனைவியும் பல மொழிகள் தெரிந்தவர்தான். அவர் பெயர் சரஸ்வதி.

அதன்பின் மொழிவாரி மாநிலங்கள் காரணமாக, மதராஸ் ராஜதானி, நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, டாக்டர் கேவும் அவரது தந்தையாரும் மதராஸ் மாநிலத்தில் பணி நியமனம் பெற்றனர். டாக்டர் கே, மதுரை அருகே கம்பத்திற்கு 1953-ல் மாற்றப்பட்டார். கம்பத்திலும் தேனியிலும் அவர் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் பணிபுரிந்தார். அதே ஆண்டு திருமணமும் நடைபெற்றது. இந்த இளம் தம்பதியர் தங்கள் திருமண வாழ்க்கையை இனிதே கம்பத்தில் தொடங்கினர்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *