வனத்துறையில் கால்நடை வைத்தியர் வேலைக்கு டாக்டர் கே விண்ணப்பிக்கலாம் என்று முடிவு செய்ததற்கு முக்கியக் காரணம், அவரது மேலதிகாரிதான் என்று நாம் பார்த்தோம். இந்தச் சூழ்நிலையில், நாம் கம்பத்தில் நடந்த சில நிகழ்வுகளைச் சொல்லாமல் விட்டால் இந்தப் பகுதி நிறைவடையாது. ஏனென்றால், போன வருடம் பாந்தவ்கரில் நிகழ்ந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன் கம்பத்தில் நடந்த நிகழ்வுகளின் நிழல்போலவே இருந்தது.
சில வருடங்களுக்கு முன் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து மத்திய பிரதேசத்தில் உள்ள பாந்தவ்கருக்கு ஒரு யானைக் கூட்டம் இடம்பெயர்ந்தது. அதுவரை மத்திய பிரதேசத்தில் யானைகள் கிடையாது. அதுதான் முதல் நிகழ்வு. அந்த யானைக் கூட்டத்தால் ஆரம்பத்தில் பெரிய பிரச்னைகள் ஏதும் வரவில்லை. ஓரிரு இடங்களில் விவசாய நிலத்தில் சேதங்கள் ஏற்பட்டதைத் தவிர. மக்களுக்கும் அவற்றால் பெரிய தொல்லை இல்லை.
நான் 2024-ம் ஆண்டு மே மாதத்தில் பாந்தவ்கர் போயிருந்தபோது ஒரு கொம்பனையும் சில பெண் யானைகளையும் புலிகள் சரணாலயத்தை அடுத்து பார்த்தேன். அன்று இதுபோல ஒரு சம்பவம் நிகழும் என்று நானும் எண்ணவில்லை. 2024 அக்டோபர் மாத இறுதியில், கிட்டத்தட்ட 15 யானைகள் அறுவடை செய்த வரகு போன்ற சிறுதானியத்தைத் தின்ற பின் நினைவிழந்து விழுந்து இறந்துபோயின. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. காரணம், தானியத்தைத் தின்று ஒரு தாவர உண்ணி இறக்குமா என்ற கேள்விதான். யாருக்கும் ஒன்றும் விளங்கவில்லை.
அப்போது, பல ஆண்டுகளுக்கு முன் கம்பத்தில் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது என்றும், அதுகுறித்து டாக்டர் கே எழுதி உள்ளார் என்றும் தெரியவந்தது. உடனே அதுபற்றி அறிய, சில வனத்துறை அதிகாரிகள் ஸ்ரீதரைத் தொடர்புகொண்டனர். ஸ்ரீதர், டாக்டர் கேயின் மகன். அவரிடம் டாக்டர் கேயின் பழைய ஆவணங்கள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் தொடர்பு கொண்டனர். அப்போதுஅவர்களுக்கு டாக்டர் கேயின் பழைய விஞ்ஞானக் கட்டுரை ஒன்று கிடைத்தது. கஜா (Gajah) என்ற விஞ்ஞான சஞ்சிகையிலும், மதராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டியின் பிளாக் பக் (Black Buck) சஞ்சிகையிலும் அந்தக் கட்டுரை இடம்பெற்றிருந்தது.
யானைகளுக்கு வரும் துதிக்கை வாதம் (trunk paralysis) எனும் தாற்காலிக நிலைக்கு இதுபோன்ற தாவரங்களை உண்பதும் ஒரு காரணம் என்று டாக்டர் கே அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இங்கு நாம் அறிய வேண்டியது என்னவென்றால், இந்தத் துதிக்கை வாதம் ஒரு அறிகுறி தானே தவிர, இறப்புக்கு காரணம் அதுவல்ல. பின் இறப்புக்குக் காரணம்தான் என்ன? வரகு (சிறுதானிய) கட்டுகள் மழையில் நனைந்து பூஞ்சணம் பிடித்துப்போனதே.
அந்தப் பூஞ்சணம் யானைகளின் வயிற்றுக்குள் சென்று பல வேதிப்பொருட்களாகி அவை இறக்க வழி செய்துவிட்டன. பூஞ்சணம், மணமில்லாமல் போனதும் ஒரு காரணம். சற்றே வாடை இருந்திருந்தால் யானைகள் அவற்றைத் தின்றிருக்காது.
1933-ம் வருடம் டிசம்பரில், கம்பம்- குமுளி வழியில் அமைந்திருக்கும் காட்டில், வண்ணாத்திப் பாறை என்ற இடத்தில் 14 யானைகள் இதேபோல வரகு பயிரைத் தின்று இறந்ததாக சி. மோரிஸ் என்ற காப்பித் தோட்ட முதலாளி, பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்க குறிப்பேடுகளில் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக உள்ளூர் மக்கள் இந்தப் பயிரை ‘கிறுக்கு வரகு’ என்று கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
1933-ம் ஆண்டு நிகழ்ந்த அந்த நிகழ்வு அத்துடன் நின்றுவிடவில்லை. 1970-ம் ஆண்டும் இதேபோல 17 யானைகள் கண்டமனூர் பள்ளத்தாக்கில் (கம்பத்தின் ஒரு பகுதி) மர்மமாக இறந்ததும், வழக்கம்போல டாக்டர் கே அது குறித்து ஆராய்ந்து அறிக்கை தர அனுப்பப்பட்டார். அப்போதுதான் அவர் மேற்சொன்ன கட்டுரையை எழுதினார்.
டாக்டர் கே எழுதிய அந்தக் கட்டுரையில், ‘1970-ம் ஆண்டில், கண்டமனூர் பள்ளத்தாக்கில் ஒரு குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான யானைகளின் இறப்பு குறித்து மதுரை மாவட்ட வன அலுவலரிடமிருந்து ஒரு அறிக்கை வந்தது. பல்வேறு வயதையும் பாலினத்தையும் சேர்ந்த 17 யானைகள் இறந்ததற்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தினை பயிர்களை உட்கொண்டதால் பாஸ்பால்வ்ன் ஸ்க்ரோபிகுலாட்ரான் என்ற எர்கோட் (Ergot) இன்ஃபெக்ஷன் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டது.
பெரும்பாலான விலங்குகள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நினைவின்றி இருந்த பிறகு இறந்தன. இந்த யானைகள் பலவற்றில், (தும்பிக்கை முடக்கம்) துதிக்கை வாதம் காணப்பட்டது. 1952-ம் ஆண்டில் மதுரை மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள சுருளிப்பட்டி கிராமத்திற்கு அருகில் 6 யானைகள் கொண்ட ஒரு கூட்டம், ‘வரகு’ என்று உள்ளூரில் அழைக்கப்படும் ஒரு வகையான தினை, ஆனால் எர்காட் பாதிக்கப்பட்ட தாவரத்தை உட்கொண்டதன் விளைவாக இறந்தன. இந்தப் புல்லை மொத்தமாக உட்கொள்ளும் விலங்குகள் (தண்டு முடக்கம் உட்பட) நோயுற்ற அறிகுறிகளைக் காட்டுவதால், இந்த தாவரம் உள்ளூரில் ‘கிறுக்கு வரகு’ (பைத்தியக்காரத்தனத்தை ஏற்படுத்தும் தினை) என்று அழைக்கப்படுகிறது. தடயவியல் ஆய்வக கண்டுபிடிப்புகள் இந்த விலங்குகளின் நோய்க்கான காரணத்தை எர்காட் விஷம் (கிளாவிசெப்ஸ் பர்பூரியா) காரணமானது என்று உறுதிப்படுத்துகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படிப் பல கள ஆய்வுகளில் டாக்டர் கே முன்னோடியாகத் திகழ்ந்தார். என்ன, அவரது 1970-ம் ஆண்டு உடற்கூராய்வு அறிக்கை கிடைத்திருந்தால் இன்னும் பல தகவல்கள் கிடைத்திருக்கலாம். மிகப் பழைய காலத்தது என்பதால் அது கிடைக்கவில்லை. இந்தக் காலத்தில் இதுபோன்ற ஆய்வுகளை எளிதில் செய்ய இயலும். அந்த அளவு உபகரணங்களும் பரிசோதனை வசதிகளும் பெருகி விட்டன; முன்னேறி விட்டன. 1970-ல் திசு பரிசோதனைக்குக் கூட சென்னை வர நேரிடும். பரிசோதனைக் கூடங்கள் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே இருக்கும். திசு மாதிரிகளை அவ்வளவு எளிதில் அனுப்ப முடியாது. இப்படிப் பல நடைமுறைச் சிக்கல்களுக்கு இடையில் நேர்த்தியான பணியைச் செய்தார் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். உள்ளார்ந்த ஈடுபாடும், செய்யும் தொழிலே தெய்வம் என்ற மனோபாவமும்.
இதுபோன்ற பயிரை மேயும் விலங்குகளால் மோதல்கள் ஏற்படுவது நமது நாட்டுக்கோ அல்லது மாநிலத்திற்கோ புதிது அல்ல. மலை படு கடாம் காட்டும் வாழ்க்கையைக் கண்டால், அன்றும் இன்றும் ஒன்றுதான் என்று நினைப்போம். உதாரணமாக,
புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர்
உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ
அகல் மலை இறும்பில் துவன்றிய யானை . . . .[205]
உரை: விளைநிலங்களில் குறவர்கள் பரண் மீது ஏறி விளைச்சலைத் தின்ன வரும் யானைகளை ஓட்டக் கவணால் கல் வீசுவர்.
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசை பணவை கானவர்
புலம் புக்கு உண்ணும் புரி வளை பூசல்
சேய் அளை பள்ளி எஃகு உறு முள்ளின் . . . .[300]
உரை: யானை ஒலி – தன் கூட்டத்தில் இருந்து பிரிந்த யானை, கானவனின் விளைவயலில் புகுந்து உண்ணும்போது பரண்மீது இருந்துகொண்டு கானவன் ஓட்டுவதைப் பொருட்படுத்தாது தன் இனத்தை அழைக்க எழுப்பும் ஒலி சங்கூதுவது போன்றது.
இந்த மலை படு கடாம், சங்க கால நூலான பத்துப் பாட்டில் ஒன்று. அன்றே யானைகள் விளை நிலங்களில் புகுந்து தொல்லை தந்தன என்றால், இன்று அவை அவ்வாறே செய்வதில் வியப்பென்ன? காலம் காலமாக மனிதனும் விலங்கும் இயைந்து வாழ்பவை என்பதைப் புரிந்து கொண்டால், அது தொல்லையாகத் தெரியாது. எப்படித் தடுக்கலாம்? எப்படிச் சேதத்தைக் குறைக்கலாம் என்று புரியும். எனவே, யானைகள் தினையை உண்ண வந்ததில் எந்த வியப்பும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, பூஞ்சண நச்சால் இறந்ததுதான் சோகம். இன்றும், டாக்டர் கேயின் குறிப்புகள் வழிகாட்டியாக உள்ளன என்பது மேலும் ஒரு சிறப்பு.
இதேபோல, ஹெய்தி என்கிற மேல் நாட்டு கால்நடை வைத்தியருக்கு டாக்டர் கே உதவியது, அவரது ஆளுமையைப் பறைசாற்றும் மற்றொரு நிகழ்வு. திருமதி ஹெய்தி ரிடில், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் ஆசிய யானைகள் குழுவின் உதவித் தலைமைப் பொறுப்பாளர். அவர் தனது கடிதத்தில், ‘நன்றி ஐயா. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நான் ஏற்கெனவே பதிலளித்து விட்டேன் என்று நினைத்தேன். இந்த ஆய்வுக் கட்டுரை என் நினைவை மீண்டும் கிளறுகிறது. ஆசிய யானைகளில் முடங்கிய (முழு அல்லது பகுதி) தும்பிக்கைகள் தொடர்பான அவரது அனுபவத்தைப் பற்றி பேராசிரியர் சுகுமார் மூலம் உங்கள் தந்தையிடம் கேட்டிருந்தேன். 1994-ம் ஆண்டு பகுதியளவு முடங்கிய தும்பிக்கையுடன் (துதிக்கை வாதம் அல்லது முடக்கம்) ஒரு யானை எங்களுக்குக் கிடைத்தது. அப்போது அவளுக்கு (அந்த யானைக்கு) 40 வயது இருக்கும். சர்க்கஸில் இருந்த யானை. அவள் முதலில் இந்தியாவிலிருந்து வந்த யானை. இந்த முடக்கம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு படிப்படியாக வளர்ந்தது. ஏன் என்று யாருக்கும் தெரியவில்லை. அவள் 2020-ல் 63 வயதில் காலமானாள். மற்றபடி அவள் வாழ்நாள் முழுவதும் மிகவும் ஆரோக்கியமாக இருந்தாள்.
வட அமெரிக்காவில் பகுதியளவு அல்லது கிட்டத்தட்ட முழு தும்பிக்கை முடக்கம் கொண்ட பிற யானைகள் இருந்தன. நாங்கள் கவனித்தது என்னவென்றால், அவை அனைத்தும் பெண் ஆசிய யானைகள். அவற்றில் பெரும்பாலானவை சர்க்கஸில் வரலாற்றைக் கொண்டு இருந்தன. பாலினம், இனங்கள் ஏற்றத்தாழ்வுக்கான காரணத்தை விளக்க எந்த உறுதியான தொடர்பும் அடையாளம் காணப்படவில்லை. உங்கள் தந்தையின் தகவல் (இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி) மிகவும் சுவாரஸ்யமானது. வடக்கு அமெரிக்கச் சூழலில், அதற்கான காரணம் என்ன/எது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தும்பிக்கை முடக்கம். ஒருவேளை ஏதோ ஒரு வகையான காயங்கள் காரணமாக இருக்கலாம். ஆனால், அது ஒரு மலைப்பாங்கான நாட்டில் உள்ள யானைகளில், வளர்ப்பு, காட்டு யானைகள் இரண்டிலும் காணப்பட்டது என்பதையும், உங்கள் தந்தை அதற்குப் பல விளக்கங்கள் வைத்திருந்தார் என்பதையும் அறிந்து கொண்டது மிகவும் உதவியாக இருந்தது. யானைகளின் உடல்நலப் பிரச்னைகள் குறித்த தகவல்களின் அற்புதமான ஆதாரமாக அவர் இருந்தார்!’ என்று எழுதுகிறார்.
இந்தச் சம்பவம் நடந்தது பெங்களூருவில் இருந்த இந்திய அறிவியல் கழக வளாகத்தில். முனைவர் சுகுமாரின் அழைப்பின் பேரில் டாக்டர் கே சென்றிருந்தார். அப்போது திருமதி ஹெய்தி, சுகுமாரிடம் இந்தத் துதிக்கை வாதம் குறித்துக் கேட்கும்போது, அவர், ‘டாக்டர் கேவும் இங்குதான் இருக்கிறார். அவரிடம் கேளுங்கள்’ என்று தொலைபேசியை டாக்டர் கேயிடம் கொடுத்துள்ளார். டாக்டர் கே, உடனே துதிக்கை வாதம் குறித்து அவரது அனுபவங்களை விவரமாக எடுத்துரைத்துள்ளார். இதில் நாம் பாராட்ட வேண்டிய விஷயம், எந்தக் குறிப்பும் இல்லாமல், நினைவில் இருந்து பழைய சம்பவங்களையும், இந்த நோயின் தன்மையையும் மருத்துவ ஆலோசனையையும் தனிச்சையாக கூறினார் என்றால், எந்த அளவிற்கு டாக்டர் கேவுக்குத் தன் தொழிலின் மேல் ஈடுபாடு இருந்தது என்று அறியலாம். மூச்சே யானைகளின் நலம்தானோ என்று வியக்கும் அளவிற்கு அவர் எல்லா விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார் என்றே தோன்றுகிறது. இந்த ஈடுபாடுதான் அவரைக் கம்பம் பகுதியில் இத்தனை எளிதாகப் பணி செய்ய வைத்தது என்று நினைக்கிறேன்.
கேரளத்தின் புகழ் பெற்ற கால்நடை மருத்துவர் சீரன்,’ எனக்கு டாக்டர் கேவை அறிமுகப்படுத்தியது ஈஆர்சி தாவிதர். அப்போது தாவிதர் சொன்னது எனக்கு இப்போதும் நினைவில் உள்ளது. யானைகளைப் பற்றி முழுவதும் அறிந்தவர் டாக்டர் கே. யானைகளைப் பற்றி அவர் அறியாத தகவல்கள் உண்டெங்கில், அவை அறிய லாயக்கற்றவை என்று புரிந்துகொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். இதைவிடச் சிறந்த ஒரு சான்றித்ழை யாராவது தர இயலுமா? அப்படி அவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் (1953 -2002) யானைகள் பராமரிப்பில் தலை சிறந்து விளங்கினார். அந்த ஈடுபாட்டில் ஒரு 20 சதவிகிதமேனும் இன்றுள்ளவர்களுக்கு இருந்தால் நிலைமை இப்படி இருக்காது. இதேபோல தகுந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்ட குறிப்புகளின் முக்கியத்துவம் எவ்வளவு உபயோகமானவை என்பதும் புரியும். கூகுள் இல்லாத காலத்திலும், அறிவியல் சஞ்சிகைகள் இவற்றை வெளியிட்டதால் இன்று நம்மால் அவற்றை மேற்கொள் காட்ட இயலுகிறது. இல்லை என்றால் டாக்டர் கேயின் பல அற்புதமான செயல்கள் மறக்கப்பட்டு இருக்கும்.
(தொடரும்)