நமக்குப் பிடிக்காத ஒருவரை நாம் திமிர் பிடித்தவன், கொழுப்பெடுத்தவன் அகராதி பிடித்தவன் என்றெல்லாம் சொல்லுவோம் அல்லவா? அவையெல்லாம் கொஞ்சம் மென்மையான வசவுகள்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அகராதி பிடித்தவன் என்ற சொல்லுக்கு நல்ல அர்த்தம் ஏதாவது உண்டா என்றால் உண்டு என்றுதான் வரலாறு கூறுகிறது. அதுவும் ஆங்கில இலக்கியத்தின் வரலாறு.
ஆமாம். மொழியை நேசிப்பவர்களுக்கெல்லாம் அந்த மொழியில் உள்ள அகராதியும் பிடிக்கும்தானே. ஆனால் ஒரு மனிதன் திமிர் பிடித்தவனாகவும் அதே சமயம் பெரிய படிப்பாளியாகவும் இருந்தால்?
அப்படி ஒருவர்தான் ஆங்கில இலக்கிய வரலாறு கொண்டாடும் மேதை டாக்டர் ஜான்சன். அவர்தான் முதன் முதலில் ஆங்கில அகராதியை உருவாக்கியவர். அவர் அகராதி பிடித்தவரும் அகராதியை வடித்தவரும் ஆவார்.
அவர் கவிதை, கட்டுரை, நாடகம் எல்லாம் எழுதினார். அவற்றை ஆங்கில இலக்கிய உலகம் ஊறுகாய் மாதிரிகூடத் தொட்டுக்கொள்ளவில்லை. ஆனால் அவர் செய்த இன்னொரு காரியத்துக்காக அவர் இன்றுவரை கொண்டாடப்படுகிறார். என்றும் கொண்டாடப்படுவார். அது என்ன காரியம்? அதுதான் மேலே சொன்ன அகராதி காரியம்.
1740-ம் ஆண்டு சில லண்டன் புத்தக வியாபாரிகள் ஜான்சனிடம் வந்து ஒரு ஆங்கில அகராதி தயாரித்துக்கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். அதற்காக அவர்கள் 1500 கினீ என்னும் பணம் தருவதாக உடன்படிக்கை செய்துகொண்டார்கள். அது கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் லட்ச ரூபாய்க்குக் கொஞ்சம் அதிகம். இன்றைய மதிப்பு மூன்று கோடிக்கும் மேல்.
மூன்று ஆண்டுகளில் அதை முடித்துவிடலாமென்றுதான் ஜான்சன் நினைத்தார். ஆனால் அதை எழுதி முடிக்க ஜான்சனுக்கு அதிக ஆண்டுகள் ஆகின. அது உலக வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட ஒரு தனிமனித சாதனை. ஏப்ரல் 15, 1755-ம் ஆண்டு பணி நிறைவுற்றது. 1752-ல் அவர் மனைவி இறந்து போனார். ஆனாலும் அகராதியை எழுதி முடிக்கும் பணியை அவர் விடவில்லை.
கிட்டத்தட்ட 173 ஆண்டுகளுக்கு, அதாவது இரண்டு நூற்றாண்டுகளாக, அவரது அகராதியே பயன்பாட்டில் இருந்தது. அவருக்கு முன்னரும் சில அகராதிகள் இருக்கத்தான் செய்தன. ஆனால் அவை ஆங்கில மொழியிலிருந்த பயன்பாட்டுச் சொற்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆக்ஸ்ஃபோர்ட் இங்க்லீஷ் டிக்ஷ்னரி 1884-ல்தான் பயன்பாட்டுக்கு வந்தது.
அவரது அகராதியில் மொத்தம் 42,773 சொற்கள் இருந்தன. ஆனால் சொற்களின் அர்த்தங்களை விளக்க அவர் இலக்கியத்திலிருந்து 1,14,000 விளக்கங்கள் கொடுத்திருந்தார்.
இந்த உலகிலுள்ள எந்த ஆங்கில அகராதியிலும் அல்லது எந்த அகராதியிலும் இல்லாத ஒரு விஷயம் ஜான்சனின் ஆங்கில அகராதியில் இருந்தது. ஒரு சொல்லை விளக்க அவர் இலக்கியத்திலிருந்து உதாரணங்கள் கொடுத்தார். அதுமட்டுமல்ல. சில சொற்களை விளக்கும்போது அவருக்கே உரிய நகைச்சுவை மற்றும் விமர்சனத்துடன் அந்தச் சொல்லை விளக்கினார்.
உதாரணமாக ஓட்ஸ் (Oats) என்பதை அவர் இப்படி விளக்கினார்: ‘இது இங்கிலாந்தில் குதிரைகளுக்குக் கொடுக்கப்படும் தானியமாகும். ஆனால் ஸ்காட்லாந்தில் இது மனிதர்களுக்கு உணவாக உள்ளது’.
‘Take’ என்ற சொல்லுக்கு அவர் 134 விளக்கங்கள் கொடுத்திருந்தார்.
‘Pension’ என்பதை ‘நாட்டுக்கு செய்யப்படும் துரோகத்துக்காகக் கொடுக்கப்படும் பணம்’ என்று விளக்கினார். நல்லவேளை நம் ஆட்சியாளர்களுக்கு இது தெரியவில்லை.
‘Politician’ என்ற சொல்லுக்கு, ‘சூழ்ச்சி செய்பவர்’ என்று விளக்கம் தந்தார். அந்தக் காலத்திலேயே மிகச் சரியான விளக்கத்தை அரசியல்வாதிக்குக் கொடுத்துள்ளார்.
‘Monsieur’ என்ற சொல்லுக்கு ‘திரு’ என்றுதான் அர்த்தம். ஆனால் ஜான்சன் தனது அகராதியில் அதற்கு, ‘ஃப்ரெஞ்சுக்காரரைத் திட்டும் சொல்’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
ஜான்சனுடைய காலத்தில் I, J ஆகிய ஆங்கில எழுத்துகள் ஒரே எழுத்தின் வெவ்வேறு வடிவங்களாகப் பார்க்கப்பட்டன. எனவே அவரது அகராதியில் jargon என்ற சொல் idle என்ற சொல்லுக்கு முன் வரும்.
‘X’ என்ற சொல் அவரது அகராதியில் இல்லை! இந்த எழுத்தில் எந்த ஆங்கிலச்சொல்லும் தொடங்கவில்லை என்று எழுதினார். ஃப்ரெஞ்சு அகராதியை 40 பேர் சேர்ந்து தயாரித்தார்கள். ஆனால் ஆங்கில் அகராதியை ஜான்சன் ஒருவரே முடித்தார். அதனால், ஒரு ஆங்கிலேயன் நாற்பது ஃப்ரெஞ்சுக்காரர்களுக்குச் சமம் என்றார்.
சட்டென்று அதிர்ச்சி தரும் பதில்களைச் சொல்வதில் ஜான்சன் விற்பன்னராக இருந்தார். அவரைச் சந்திக்க வந்த ஒருவர், ‘ரொம்ப நேரம் உங்களை நான் காத்திருக்க வைக்கவில்லை என்று நினைக்கிறேன்’ என்றார்.
அதற்கு ஜான்சன், ‘இல்லை ஐயா, நீங்களல்ல, நட்சத்திரங்கள்தான் என்ன வெகு நேரம் காக்க வைத்துவிட்டன’ என்றார்.
‘தனக்கு எந்த நல்லதும் செய்யாத மனிதனை அந்த இன்னொரு மனிதன் எப்படி நடத்துகிறான் என்பதை வைத்தே அவனது மதிப்பு கணக்கிடப்படும்’ என்றார்.
இன்று நாம் லண்டன் போனாலும் அங்கே உள்ள கோ ஸ்கொயர் (Gough Square) என்ற இடத்தைப் பார்க்கலாம். அங்கேதான் ஜான்சன் தன் அகராதியைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டிருந்தார்.
லண்டன் ஒருவருக்குக் களைப்பூட்டும்போது வாழ்க்கையே களைப்பூட்டிவிடும் என்று ஒருமுறை சொன்னார். தாய்நாட்டின்மீது அவ்வளவு பாசம் அவருக்கு.
1763-ம் ஆண்டு ஜேம்ஸ் பாஸ்வெல், ஜான்சனை சந்தித்து அவருடனே இருந்தார். ஜான்சனின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும் அவரே. 1784-ல் ஜான்சன் இறந்தார். ஆனால் 1791-ல் பாஸ்வெல்லால் எழுதப்பட்ட Life of Johnson என்ற அவரது வாழ்க்கை வரலாறு இறவாப் புகழ்பெற்றது. ஆங்கில மொழியில் எழுதப்பட்ட ஆகச் சிறந்த வாழ்க்கை வரலாற்று நூல் என்று அது அறியப்படுகிறது.
0