ஓர் ஊரில் ஒரு ராஜாவும் ராணியும் இருந்தனர். வாழ்நாள் முழுதும் வசதியாக வாழ்வதற்குத் தேவையான அளவுக்கு அவர்களிடம் செல்வம் இருந்தது. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவந்து அவர்களுக்குச் சேவை செய்ய ஏராளமான சேவகர்கள் காத்திருந்தனர். அவர்களுடைய அரண்மனைக்குப் பின்னால் மாபெரும் தோட்டமொன்று இருந்தது. அங்கு ஏராளமான மரம், செடி, கொடிகள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. அவற்றுக்கு நடுவில் காகம், குருவி, கொக்கு, குயில் என ஏராளமான பறவைகள் பறந்து விளையாடின. தாமரைப்பூக்கள் பூத்திருக்கும் பெரிய குளமொன்றும் இருந்தது. எல்லாம் இருந்தும் அவர்களுக்கு ஒரே ஒரு குறை இருந்தது. பேர் சொல்லி அழைக்கவும் ஓடி விளையாடவும் ஒரு பிள்ளை இல்லை என்பதுதான் அந்தக் குறை.
அரண்மனைக்கு வந்துபோகும் துறவிகளும் குருசாமிகளும் சொன்ன ஆலோசனைகளுக்கு ஏற்ப ஏராளமான விரதங்களையும் அவர்கள் செய்து பார்த்துவிட்டார்கள். தான தருமங்களும் செய்து பார்த்தார்கள். எந்தப் பயனும் இல்லை.
திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அதற்குப் பிறகும் அவர்களுக்குப் பிள்ளைப்பேறு உண்டாகவில்லை.
பிள்ளை இல்லை என்னும் கவலை ராணியை வாட்டியெடுத்தது. நாள் முழுதும் ராணி கவலையில் மூழ்கியிருப்பதைக் கண்டு ராஜாவும் வருத்தத்தில் ஆழ்ந்தார். எங்கு சென்றாலும் அந்தக் கவலையிலிருந்து அவரால் தப்பிக்க இயலவில்லை. ஒருநாள் அதே கவலையுடன் அரண்மனைக்குளத்தில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் இறைவனிடம் தன் கோரிக்கையை முன்வைத்து கடுமையான வகையில் தவமியற்ற வேண்டும் என முடிவெடுத்தார்.
அக்கணமே குளத்தங்கரை ஓரமாக இருந்த ஒரு வட்டப்பாறையை எடுத்து தன் தலைமீது சுமந்தபடி இன்னொரு வட்டப்பாறை மீது ஏறி கைலாசம் இருக்கக்கூடிய வடக்குத்திசையைப் பார்த்து நின்றார். ஒவ்வொரு நாளும் தான் பக்தியுடன் வணங்கும் சிவபெருமான் எதிரில் தோன்றி தனக்கு பிள்ளைவரம் அளிக்கும் வரையில் அந்த இடத்தைவிட்டு நகரப்போவதில்லை என்றும் தலைமீது வைத்த சுமையை இறக்கப்போவதில்லை என்றும் மனத்தில் முடிவெடுத்துக்கொண்டார்.
ராஜாவின் செயலைப் பார்த்த வேலையாட்கள் அந்த முயற்சியைக் கைவிடும்படி பயபக்தியுடன் கேட்டுக்கொண்டனர். இறைவனின் வரம் கிட்டும்வரை தன் தவத்திலிருந்து பின்வாங்கமுடியாது என ராஜா அவர்களிடம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். உடனே வேலைக்காரர்கள் ஓடோடிச் சென்று ராணியிடம் அந்தத் தகவலைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்டு திகைத்த ராணி குளத்தங்கரைக்கு ஓடோடி வந்தாள். தலைமீது வட்டப்பாறையைச் சுமந்தபடி நின்றிருக்கும் ராஜாவின் கோலத்தைப் பார்த்து அச்சம் கொண்டாள்.
ராஜாவின் முன்னால் நின்று கைகுவித்து அவர் மேற்கொண்டிருக்கும் தவமுயற்சியைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டாள் ராணி. ராணியைத் தொடர்ந்து மூத்த அமைச்சரும் அரண்மனை குருவும் அடுத்தடுத்து வந்து அதே கோரிக்கையை ராஜாவின் முன் வைத்தார்கள். சிவபெருமான் நேரில் காட்சியளிக்கும் வரை தன் தவத்திலிருந்து பின்வாங்கமுடியாது என உறுதியாகத் தெரிவித்தார் ராஜா.
வேறு வழியில்லாமல் அனைவரும் ராஜாவைக் குளத்தங்கரையில் தனியாக விட்டுவிட்டு தத்தம் வேலைக்குத் திரும்பினர். ஒவ்வொரு கணமும் சிவபெருமானை மனமுருகும் வகையில் தன் கோரிக்கையை முன்வைத்து பிரார்த்தனையில் மூழ்கியிருந்தார் ராஜா. அவர் தலை மீதிருந்த பாறை பெருஞ்சுமையாக அவரை அழுத்தியது. பிள்ளை இல்லை என்னும் மனக்குறை அதைவிட பெருஞ்சுமையாக அவரை அழுத்தியது.
கைலாசத்தில் பார்வதிதேவியோடு அமர்ந்திருந்த சிவபெருமான் தன் ஞானக்கண் வழியாக வட்டப்பாறையைத் தலையில் சுமந்தபடி தவத்தில் மூழ்கியிருக்கும் ராஜாவின் கோலத்தைப் பார்த்தார். அதைப் பார்க்கப்பார்க்க அவருக்கும் மனச்சுமை பெருகியது. ஆனாலும் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்.
பார்வதி தேவியால் அப்படி இருக்கமுடியவில்லை. அடிக்கடி சிவபெருமானுக்கு அந்த ராஜாவைப்பற்றி நினைவூட்டிக்கொண்டே இருந்தாள். அந்த ராஜாவுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தூண்டிக்கொண்டே இருந்தாள். சிவபெருமானுக்கு அவன் வேண்டிய வரத்தைக் கொடுக்கலாமா, வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. அவரால் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரமுடியவில்லை. அதனால் ‘இது எல்லாமே ஆரம்ப வேகம்தான். கொஞ்சநாள் இப்படி இருந்து பார்த்துட்டு அப்புறம் தானாவே விட்டுடுவான்’ என்று பார்வதிதேவியிடம் சொல்லிவிட்டு அமைதி கொண்டார்.
ஆனால் சிவபெருமான் நினைத்ததுபோல ராஜா பின்வாங்கிச் செல்பவராகத் தெரியவில்லை. அவர் எதிர்பார்த்ததைவிட அதிக மன உறுதி கொண்டவனாக இருந்தார். ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டு காலம் அவர் தீராத மனச்சுமையோடும் தலைச்சுமையோடும் நின்றிருப்பதைப் பார்த்ததும் ஒருநாள் சிவபெருமானின் மனத்தில் கருணை பிறந்தது. உடனே தன் இருக்கையிலிருந்து எழுந்து பூமிக்குச் செல்வதற்காக புறப்பட்டார்.
அவருடைய திடீர் பயணத்தைப் பார்த்த பார்வதிதேவி ‘இவ்வளவு அவசரமா எங்க கிளம்பிட்டீங்க?’ என்று கேட்டாள்.
அதற்கு சிவபெருமான் ‘அந்த ராஜாவுடைய பக்தி என் தலைமேல ஒரு பெரிய பாரமாக உட்கார்ந்துட்டிருக்குது. பன்னிரண்டு ஆண்டு கால பக்தியின் எடையை என்னால தாங்கமுடியலை. பாவம், அவன் ஒரு சாதாரண மனிதன். அந்தப் பாறையுடைய எடையை அவன் எப்படித்தான் தாங்கிட்டிருக்கானோ தெரியலை. முதல் வேலையா, அவனுக்கு அவன் கேக்கற வரத்தைக் கொடுத்துட்டு வரேன். அதுக்கப்புறம்தான் நானும் நிம்மதியா இருக்கமுடியும்’ என்று சொன்னார். ‘போய் வாங்க. போய் வாங்க. நல்ல முடிவைத்தான் எடுத்திருக்கீங்க’ என்று சொல்லி சிவபெருமானை வாழ்த்தி கைலாசத்திலிருந்து வழியனுப்பி வைத்தாள் பார்வதிதேவி.
கைலாசத்திலிருந்து நேராக அரண்மனைக் குளத்தங்கரைக்கு வந்து ராஜாவின் முன் காட்சியளித்தார் சிவபெருமான். ஒளிவேறுபாட்டின் காரணமாக சிவபெருமானின் இருப்பை உணர்ந்துகொண்ட ராஜா தன் கண்களைத் திறந்து சிவபெருமானைப் பார்த்தார். அவர் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது.
‘முதல்ல பாறையிலிருந்து நீ இறங்கி வா. தலைமேல வச்சிட்டிருக்கிற சுமையை கீழ எறக்கு’ என்று சொன்னார் சிவபெருமான்.
ராஜா தன் கோரிக்கையில் உறுதியாக இருந்தார். ‘ஐயா சிவபெருமானே, முதல்ல எனக்கு வரம் கொடுங்க. அதுக்கப்புறம் நான் இந்தப் பாறையிலிருந்து இறங்கி வரேன்’ என்று தெரிவித்தான்.
சிவபெருமான் இரண்டுமூன்று முறை சொல்லிப் பார்த்தார். ஆனால் ராஜா அதைக் கேட்கவில்லை. தன் கோரிக்கையில் உறுதியாக இருந்தார். ‘முதல்ல வரம். அதுக்கப்புறம்தான் இறங்குவேன்’ என்றார்.
அவருடைய உறுதியைக் கண்டு சிவபெருமான் மனம் நெகிழ்ந்துபோனார். ‘ராஜா. என் சொல்லை நம்பு. நீ கேட்கிற வரத்தை நான் கண்டிப்பா கொடுப்பேன். ஆனால் இங்கு இல்லை. நாளைக்கு காலையில உன் அரண்மனைக்கே நேரா வந்து ராணியையும் சந்திச்சிட்டு வரம் கொடுப்பேன்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சிவபெருமான்.
ஒரு கணம் ராஜா அமைதியாக சிவபெருமான் முகத்தைப் பார்த்தார். அவர் சொல்மீது அவருக்கு நம்பிக்கை பிறந்தது. ‘சரி சிவபெருமானே. உன் கருணைக்கு நன்றி. நீ சொன்னபடி செய்றேன்’ என்று சொல்லிக்கொண்டே தன் தலைமீது வைத்திருந்த பாறையை கீழே இறக்கிவைத்தார். பிறகு நின்றுகொண்டிருந்த பாறையிலிருந்து கீழே இறங்கி சிவபெருமானை நோக்கி நடந்துவந்தார். அவர் முன்னால் நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து அவருடைய பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு எழுந்து நின்றார். ராஜாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்தபடி இருந்தது.
‘இப்போ நிம்மதியா அரண்மனைக்குப் போ. நாளைக்குக் காலையில நான் அங்க வரேன். அப்போ விரிவா பேசிக்கலாம்’ என்று அவரை வழியனுப்பிவைத்தார் சிவபெருமான். ராஜாவும் மற்றொரு முறை அவரைக் குனிந்து வணங்கிவிட்டு அரண்மனையை நோக்கி நடந்து சென்றார்.
சிவபெருமானின் தரிசனம் கிடைத்த செய்தியை உடனடியாத் தன் ராணியிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவர் மனம் துடித்தது. அவர் அரண்மனைக்குள் செல்லும்வரை பார்த்தபடி நின்றிருந்த சிவபெருமான் தனக்குள் புன்னகைத்தபடி அங்கிருந்து மறைந்தார்.
அரண்மனைக்குள் வரும் ராஜாவை முதலில் வேலையாட்கள்தான் பார்த்தார்கள். முதலில் ஒருகணம் அவர்களுக்கு எதுவுமே புரியவில்லை. அஞ்சி ஒதுங்கினார்கள். பிறகு ராஜா அனைவரையும் பார்த்து ‘என்னப்பா, எல்லாரும் நல்லா இருக்கீங்களா? ஏன் என்னைப் பார்த்து எல்லாரும் மெரள்றீங்க?’ என்று கேட்டபடியே நடப்பதைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் திளைத்தார்கள். ஓடோடிச் சென்று அரண்மனை முழுவதும் அச்செய்தியைப் பரப்பினர். ஒருவன் வேகமாக அந்தப்புரத்துக்குச் செய்தி அனுப்பிவைத்தான். செய்தி கிடைத்ததும் ராஜாவை வரவேற்க ராணியே நேராக வாசலுக்கு வந்து நின்றாள். அதே சமயத்தில் ராஜா படியேறி உள்ளே வந்தார். அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று அரண்மனைக்குள் அழைத்துச் சென்றாள் அவள்.
‘ராணி, எனக்கு சிவபெருமானின் தரிசனம் கிடைச்சிட்டுது. அவர் கருணையும் கிடைச்சிட்டுது’ என்றார்.
‘என்ன ராஜா? என்ன சொல்றீங்க? விளக்கமாச் சொல்லுங்க’ என்று கேட்டாள் அவள்.
‘ஆமாம். நான் சிவபெருமானை நேருக்கு நேர் பார்த்தேன். அவர் என் கண் முன்னால காட்சியளித்தார்.’
‘உண்மையாகவா?’
‘ஆமாம். நமக்கு பிள்ளைவரம் கொடுக்க சிவபெருமான் ஒத்துகிட்டாரு.’
‘அப்படியா? இந்த மகிழ்ச்சியை என்னால தாங்கவே முடியலை.’
‘நாளைக்கு காலை வேளையில நம் அரண்மனைக்கே நேருல வரேன்னு சிவபெருமான் சொல்லியிருக்காரு. அந்த சமயத்துல அந்த வரத்தை கொடுக்கறதா எனக்கு வாக்களிச்சிருக்காரு.’
ராஜாவை உச்சியிலிருந்து பாதம் வரை ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டு உடல்சிலிர்த்தாள் ராணி. ராஜாவை ஒருமுறை தழுவிக்கொண்டாள்.
‘நம்முடைய நீண்டகால ஏக்கம் நாளைக்கு காலையில நிறைவேறப்போவுது. சிவபெருமான் நம் அரண்மனைக்குள்ள வர சமயத்துல நீ நல்ல உடைகளை உடுத்திகிட்டு வரவேற்பு கொடுக்க தயாரா இருக்கணும். அதுக்கு முன்னால் இன்னைக்கே நம்ம வேலையாட்களை வச்சிகிட்டு அரண்மனையை முழுசா கழுவி துடைச்சி கோலம் போட்டு பளிச்சினு வச்சிருக்கணும். ஒருவேளை நம் அரண்மனையிலேயே அவர் காலை உணவைச் சாப்பிடக்கூடும். அவருக்குப் பேரீச்சம்பழங்கள்தான் ரொம்பவும் பிடிக்கும். நல்ல பழங்களை விதையை எடுத்துட்டு ஒரு தட்டில தயாரா வச்சிருக்கணும். அது போதும்.’
ராணிக்கு ராஜாவின் சொற்களை நம்புவதா, கூடாதா என குழப்பமாக இருந்தது. அவள் குழப்பத்தைப் புரிந்துகொண்டதும் ராஜா அவள் தோளைத் தொட்டு அசைத்து ‘பயப்படாதே ராணி. சிவபெருமான் எனக்கு வாக்களிச்சிருக்காரு. நிச்சயமாக அவரு நம்மைப் பார்ப்பதற்கு வருவாரு’ என்று ஆறுதலாகச் சொன்னார்.
அடுத்த காலை விடிந்தது. சிவபெருமான் கைலாசத்திலிருந்து ஆகாயமார்க்கமாக ஒரு சாமியாரின் தோற்றத்தோடு அந்த ஊரின் எல்லைக்கு வந்து சேர்ந்தார். அவர் தோளில் ஒரு பை தொங்கியது. ஒரு கையில் பிச்சைத்தட்டும் இன்னொரு கையில் ஓர் ஊன்றுகோலும் இருந்தன. ஊர் நெருங்கியதும், கண்ணுக்குத் தென்பட்ட முதல் வீட்டின் வாசலில் நின்று பிச்சை கேட்டார். அந்த வீட்டில் வசித்துவந்த ஒரு கிழவி முறத்தில் அரிசி எடுத்துவந்து நீட்டினாள். அவர் அதை தன் தோள்பையில் வாங்கிக்கொண்டு ஆசி வழங்கிவிட்டு அடுத்த வீட்டை நோக்கி நடந்தார். அந்த வரிசையில் இருந்த எல்லா வீட்டு வாசல்களிலும் நின்று பிச்சை வாங்கியபடி நடந்தார்.
தெருக்கள் கூடும் இடங்களில் நின்று எல்லோரும் பார்க்கும் வகையில் நடனமாடி குதித்தார். ஓங்கிய குரலில் ராகம் போட்டு பாடினார். சிறு பிள்ளைகளும் பெரியவர்களும் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். சிவபெருமான் அவர்கள் அனைவருக்கும் பையிலிருந்து பழங்களை எடுத்துக் கொடுத்தார். இப்படி பிச்சை வாங்கியபடியே கடைசியாக அரண்மனையை அடைந்தார்.
ராஜாவும் ராணியும் அரண்மனை வாசலிலேயே சிவபெருமானுக்காகக் காத்திருந்தனர். வாசலில் வந்து நின்ற சாமியாரைப் பார்த்ததும் சிவபெருமான்தான் சாமியார் வேடத்தில் வந்திருக்கிறார் என்பதை ராஜா புரிந்துகொண்டான். ராணியின் பக்கமாகத் திரும்பி கண்ணசைவில் அந்த உண்மையை அவளுக்கு உணர்த்தினான். உடனே ராணி வாசலிலேயே மஞ்சள் கரைத்த நீரை நிறைத்துவைத்திருந்த குடத்தை எடுத்துவந்து சாமியாரின் பாதங்களில் ஊற்றி தூய்மை செய்துவிட்டு விழுந்து வணங்கினாள். ராஜாவும் ராணியோடு சேர்ந்து காலில் விழுந்து வணங்கினான். ‘சீரும் சிறப்போடும் சந்ததியோடும் நீடூழி வாழ்க’ என இருவரையும் வாழ்த்தினார் சாமியார்.
பிறகு பையிலிருந்து இரு மாம்பழங்களை எடுத்து ராணியிடம் கொடுத்தார். ‘இவற்றை சாப்பிடு மகளே. நீ நீண்ட காலமா பிள்ளை இல்லாத மனக்குறையோடு இருக்கறேன்னு எனக்குத் தெரியும். உன் குறையைத் தீர்க்கறதுக்காக பன்னிரண்டு ஆண்டு காலம் கடுமையா தவம் செய்த உன் கணவன் மிகவும் அன்பானவன். உங்க ரெண்டு பேருக்கும் நான் உதவி செய்யணும். உன் கணவன் கேட்ட வரத்தை அளிக்கறதுக்கு முன்னால உன்னிடமிருந்து ஒரு கேள்விக்கு பதில் எதிர்பார்க்கிறேன்’ என்று சொன்னார்.
‘என்ன கேள்வி ஐயா?’ என்று பணிவோடு கேட்டாள் ராணி.
‘உனக்கு பதினாறு ஆண்டுகள் மட்டுமே ஆயுள் உள்ள புத்திசாலிக்குழந்தை வேணுமா? நூறு ஆண்டுகள் வரை கெட்டியான ஆயுள் உடைய முட்டாள் குழந்தை வேணுமா? இந்தக் கேள்விக்கு நீ பதில் சொல்லிட்டால், என் வேலை எளிதாக முடிஞ்சிடும்’ என்றார் சிவபெருமான்.
‘ஐயோ, இது என்ன குழப்பம்?’ என்று தலையைப் பிடித்தபடி உட்கார்ந்துவிட்டாள் ராணி. ‘நான் என்ன பதில் சொல்வேன்? எனக்கு ஒன்னுமே புரியலையே’ என்று புலம்பியபடி அருகில் நின்றிருந்த ராஜாவின் பக்கம் திரும்பினாள். ராஜாவும் ஏதோ பதில் சொல்ல முற்பட்டான். உடனே கையை உயர்த்தி அவனைத் தடுத்த சிவபெருமான் ‘ராணியிடம் கேட்ட கேள்விக்கு ராணிதான் பதில் சொல்லவேண்டும்’ என்று உறுதியான குரலில் தெரிவித்தார். அதைக் கேட்டதும் ராஜா அமைதியடைந்தான்.
ராணி தன் கைகளை உயர்த்தி தன் தலைமீது பட்பட்டென்று அடித்துக்கொண்டாள். ‘ஐயோ, நான் என்ன செய்வேன்? இது என்ன சோதனை? நான் என்ன கேட்பேன்? எனக்கு ஒன்னுமே புரியலையே. இப்படி ஒரு இக்கட்டில சிக்கிகிட்டேனே’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டாள். அவள் விழிகள் சிறிது நேரம் வாசலருகில் புத்தம்புது பூக்களுடன் காற்றில் மெல்ல அசைந்தபடி நின்றிருந்த ஒரு செடியின் மீது பதிந்தன.
பிறகு எழுந்து நின்று சிவபெருமானைப் பார்த்து கைகுவித்து வணங்கியபடி, ‘ஐயா, ஒரு முட்டாளைப் பெத்து நூறு ஆண்டுகள்வரைக்கும் வச்சிருக்கிறதால என்ன பயன் இருக்கப் போவுது. ராஜ்ஜியத்தையும் ஆட்சி செய்ய முடியாம, வீட்டையும் கவனிச்சிக்க முடியாம இருக்கற ஒரு முட்டாள் இருப்பதும் ஒன்றுதான், இல்லாததும் ஒன்றுதான் அல்லவா?’ என்று சொல்லிவிட்டு ஒரு பெருமூச்சு விட்டாள். சிவபெருமான் அவளை அமைதியோடு பார்த்தபடி நின்றிருந்தார்.
‘வீட்டைக் கவனிச்சிக்கிறதைவிட நாட்டைக் கவனிச்சிக்கிறதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். எனவே, பதினாறு ஆண்டுகள் வாழக்கூடிய புத்திசாலிக் குழந்தையே போதும்’ என்று சொன்னாள் ராணி.
‘முடிவாகத்தான் சொல்றியா?’ என்று கேட்டார் சிவபெருமான்.
‘ஆம் ஐயா’ என்று சுருக்கமாகப் பதிலளித்துவிட்டு தலையைக் குனிந்துகொண்டாள் ராணி.
‘அவசரப்பட வேணாம். நல்லா யோசிச்சி உன் முடிவைச் சொல். வரத்தைக் கொடுத்த பிறகு எக்காரணத்தைக் கொண்டும் என்னால மாத்தமுடியாது.’
‘எல்லாக் கோணங்களிலும் ஆராய்ச்சி பண்ணிட்டுதான் என் பதிலைச் சொல்றேன் ஐயா. எனக்கு பதினாறு ஆண்டு காலம் மட்டுமே வாழுறா புத்திசாலிக்குழந்தையே போதும்.’
சிவபெருமான் ஒருகணம் ராணியையும் ராஜாவையும் மாறிமாறிப் பார்த்தார். பிறகு இருவருடைய தலைமீதும் கை வைத்து கண்களை மூடி முணுமுணுத்தார். பிறகு ‘நீங்கள் கேட்ட வரத்தைக் கொடுத்துவிட்டேன். நீங்க நினைச்சபடியே ஆகட்டும். வாழ்வாங்கு வாழ்க’ என்று கூறிவிட்டு அரண்மனையைவிட்டு வெளியேறினார்.
அடுத்து சில நாட்களிலேயே ராணி கருவுற்றாள். அரண்மனை வைத்தியர் அவளுடைய கர்ப்பத்தை உறுதி செய்ததும், ராஜா ஊரில் உள்ள அனைவரும் வந்து உண்டுவிட்டுச் செல்லும் வண்ணம் அரண்மனை வாசலிலேயே பெரியதொரு பந்தல் போட்டு, ஓர் அறுசுவை விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அனைவரும் விருந்துண்டு ராணியை வாழ்த்திவிட்டுச் சென்றனர்.
பத்து மாதங்கள் நிறைவுற்ற தருணத்தில் ராணி அழகான ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். வம்சம் விளங்கப் பிறந்த குழந்தையைப் பார்த்து ராஜா பூரித்தார். அன்று மாலையே ராஜா ஊரிலிருந்த சிவாலயத்துக்குச் சென்று வழிபட்டு தெய்வத்துக்கு நன்றி சொன்னார். ஊரில் இருக்கும் எல்லா ஆலயங்களிலும் குழந்தையின் பெயரில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. குழந்தைக்கு சென்னா என்று பெயரிட்டனர்.
சென்னா நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவந்தான். அனைவருடைய முன்னிலையிலும் வெளித்தோற்றத்துக்கு மகிழ்ச்சியாக இருப்பதுபோலக் காட்டிக்கொண்டாலும் ராணி ஒவ்வொரு கணமும் உள்ளூர நடுங்கிக்கொண்டிருந்தாள். சிவன் குறிப்பிட்டதுபோல தன் மகன் பதினாறு வயதுவரை மட்டும்தான் உயிர்வாழ்வானோ என நினைத்து துயரத்தில் மூழ்கியிருந்தாள்.
யாருக்கும் தெரியாமல் ஒரு ஜோதிடரை அரண்மனைக்கு வரவழைத்தாள் ராணி. குழந்தை பிறந்த நேரத்தையும் வரம் கொடுத்தபோது சாமியார் சொன்ன தகவலையும் சேர்த்துச் சொல்லி, குழந்தையின் எதிர்காலத்தைக் கணித்துக் கூறுமாறு கேட்டுக்கொண்டாள். ஜோதிடர் அங்கேயே உட்கார்ந்து கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு ராணியின் முகத்தைப் பார்த்தார்.
‘அம்மா, அந்தச் சாமியார் சொன்னது எல்லாமே உண்மை. இந்தக் குழந்தை நல்ல ஞானமுள்ளவன். வீரமும் நேர்மையுணர்ச்சியும் உள்ளவன். ஆனா பதினாறு வயசு நடக்கற சமயத்துல அவனுக்கு மிகப்பெரிய ஆபத்து ஒன்னு காத்திட்டிருக்குது. அது எப்படி முடியும்னு யாராலயும் சொல்லமுடியாது.’
ஜோதிடருக்கு தக்க தட்சணையைக் கொடுத்து அனுப்பிவைத்த ராணி, தன் சென்னாவை கண்ணை இமை காப்பதுபோல காத்துவந்தாள். சென்னா மெல்ல மெல்ல வளர்ந்து பாலகனான். அரண்மனையில் இருந்த அனைவருக்கும் அவன் செல்லப்பிள்ளை ஆனான். அவனும் எல்லோரோடும் அன்பாகப் பழகி, எல்லோருடைய மனத்திலும் இடம் பிடித்தான். சென்னா எங்கு சென்றாலும் அவனோடு ஒரு சிறுவர் கூட்டமும் பின்தொடர்ந்தது.
விளையாட்டுபோல பதினாறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அப்போதும் சென்னா பிற சிறுவர்களோடு சேர்ந்து ஏரிக்கரையிலும் குளக்கரையிலும் பந்து விளையாடி பொழுதுபோக்கினான்.
ஒருநாள் ஒரு சிறுவன் ‘நீ ராஜாவுடைய பிள்ளை. நீ ஏன் எங்களை மாதிரியான ஆளுங்களோடு சேர்ந்து இங்க வந்து பந்து விளையாடுற? காட்டுக்குப் போய் மான்வேட்டை ஆடறதும் புலிவேட்டை ஆடறதும்தான் உன்னைமாதிரியான இளவரசர்களுக்கு அழகு’ என்று குறிப்பிட்டான்.
‘மானையோ, புலியையோ வேட்டையாடிக் கொல்றதில என்ன அழகு இருக்கப்போவுது? நமக்குத் துன்பம் தராத உயிருக்கு நாம ஏன் துன்பம் தரணும்?’ என்று கேட்டான் இளவரசன் சென்னா.
‘கொல்வதில் அழகு எதுவும் இல்லைதான். ஆனால் கொல்வதுதான் வீரம். அப்படித்தான் நம் சாஸ்திரம் சொல்லுது’ என்றார்கள் சிறுவர்கள்.
அன்று வீட்டுக்குத் திரும்பிய சென்னா இரவு முழுக்க, பிற சிறுவர்கள் சொன்னதைப்பற்றி யோசித்துக்கொண்டே இருந்தான். அடுத்தநாள் காலையில் அவன் சிறுவர்களோடு விளையாடுவதற்குச் செல்லவில்லை. அவன் ஏதோ யோசனையில் மூழ்கியபடி அரண்மனையில் ஓர் அறைக்குள் உட்கார்ந்திருப்பதைப் பார்க்க ராணிக்கு வருத்தமாக இருந்தது.
‘என்ன நடந்திச்சி மகனே?’ என்று பரிவோடு கேட்டாள். பிற சிறுவர்கள் அவனைப் பார்த்து சொன்ன சொற்களையெல்லாம் அவன் ராணியிடம் சொன்னான். ‘பாவம் அந்தச் சிறுவர்கள். அவுங்க பேச்சையெல்லாம் நீ ஏன் கேட்கிற? நீ உன் விருப்பம்போல நம் அரண்மனைத் தோட்டத்திலேயே விளையாடு. காட்டுக்குப் போறதுலாம் ரொம்ப ரொம்ப ஆபத்தான காரியம்’ என்று ராணி அவனை எச்சரித்தாள்.
‘இல்லை அம்மா. நான் காட்டுக்குப் போய் புலியைக் கொன்று என் வீரத்தை அனைவருக்கும் நிரூபிச்சிக் காட்டணும். கோழை போல ஒதுங்கி நிற்க எனக்கு விருப்பமில்லை’ என்று சொன்னான் சென்னா.
‘உன்னை கோழைன்னு இப்ப யாரு சொன்னாங்க? நீ எவ்வளவு பெரிய வீரன்ங்கறது எனக்குத் தெரியுமே. தினம்தினமும் நம் அரண்மனைத்தோட்டத்தின் உச்சிக்கிளையில தொங்கற மாம்பழங்களை உன் வில்லையும் அம்பையும் கொண்டு வீழ்த்தறதை என் கண்ணால ஒவ்வொரு நாளும் நான் பார்த்துட்டுதான இருக்கேன்’ என்று சென்னாவை அமைதிப்படுத்த முயற்சி செய்தாள் ராணி.
‘நான் வீரன்ங்கறது உனக்கு மட்டும் தெரிஞ்சா போதுமா? ஊரில இருக்கிறவங்களுக்குத் தெரியவேணாமா? காட்டுக்குப் போய் வேட்டையாட எனக்கு அனுமதி கொடுங்க. என் வேட்டையில புலிகளை வீழ்த்தி நான் யார்ங்கறதை இவங்களுக்குப் புரியவைக்கிறேன்.’
‘அவசரம் வேண்டாம் மகனே. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரும். அப்போது உன்னை நானே காட்டுக்கு அனுப்பிவைப்பேன். அமைதியாக இரு. இனிமேல நீ வெளியே போய் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடவேணாம். அரண்மனைக்குள்ளயே இருக்கற சிறுவர்களோடு சேர்ந்து விளையாடு. அது போதும்’ என்று சொல்லிவிட்டுச் சென்றாள் ராணி.
அவளுக்கு திடீரென ஜோதிடர் சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன. பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்வான் என்று குறிப்பிட்ட சிவபெருமானின் சொற்களும் நினைவுக்கு வந்தன. என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தோடு தன் அறைக்குத் திரும்பினாள்.
மறுநாள் விடிந்தது. காட்டுக்குச் சென்று வேட்டையாட வேண்டும் என சென்னாவின் மனம் துடித்தது. அரன்மனைக்குள்ளேயே அவனோடு நெருக்கமாகப் பழகுகிற சில வேலைக்காரர்களையும் மாடுகளைப் பராமரிக்கிற சிறுவர்களையும் சேர்த்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் காட்டுக்குப் புறப்பட்டான்.
எதிர்பாராத விதமாக, ராணி அந்த இடத்துக்கு வந்துவிட்டாள். அவன் நின்றிருக்கும் கோலத்தைப் பார்த்து அவள் திடுக்கிட்டாள். அவன் புறப்பட்டு நிற்பதைப் புரிந்துகொண்டதும் அவனை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என முயற்சி செய்தாள். அவனோடு பேசத் தொடங்கிய சில நொடிகளிலேயே அவன் மன உறுதியை அவள் உணர்ந்துகொண்டாள். அவனைத் தடுத்து நிறுத்துவது சிரமம் என்பதையும் புரிந்துகொண்டாள்.
ஒரு பெருமூச்சுடன் ‘உன் விருப்பம்போல காட்டுக்குப் போய் வேட்டையாடிட்டு வா. நான் உன்னைத் தடுக்கலை. ஒரே ஒரு கணம் நான் வெளியே போய் சகுனம் எப்படி இருக்குதுன்னு பார்த்துட்டு வரேன். அதுக்கப்புறம் நீ கெளம்பலாம்’ என்று சொல்லிவிட்டு வாசலுக்குச் சென்றாள்.
அப்போது அவள் பார்வையில் கெட்ட சகுனங்களே தென்பட்டன. எண்ணெய்க்கூடைகளோடு ஒரு வண்டி சென்றது. கோடரிகளோடு விறகுவெட்டிகள் நடந்துபோனார்கள். எல்லாமே கெட்ட சகுனங்கள். அவற்றையெல்லாம் பார்த்து மனவருத்தத்தோடு ராணி திரும்பி வந்தாள். தான் பார்த்த குறிப்புகளையெல்லாம் மகனிடம் எடுத்துச் சொன்னாள். ‘ஒரே ஒரு நல்ல சகுனம் கூட என் கண்முன்னால தென்படலை. கொஞ்ச நேரம் காத்திரு. ஏதாவது ஒரு நல்ல சகுனம் அமையட்டும். அதுக்கப்புறம் நீ புறப்பட்டுச் செல்லலாம். நான் உன்னைத் தடுக்கமாட்டேன்’ என்றாள் ராணி. அவள் கண்களிலிருந்து தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது.
ஆனால் சென்னா மன உறுதியோடு நின்றிருந்தான். ஒருமுறை எடுத்த முடிவிலிருந்து பின்வாங்குவதிலை என்பதில் உறுதியாக இருந்தான். ‘அம்மா. நான் புறப்பட்டுட்டேன். இப்பவே ரொம்ப காலதாமதமாகிட்டுது. தயவுசெஞ்சி என்னைத் தடுக்காதே. என் கூட இத்தனை பேர் வரும்போது எதுக்கும்மா கவலைப்படறீங்க? நான் பாதுகாப்பா திரும்பி வருவேன்’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டான். அவனோடு அரண்மனையைச் சேர்ந்த ஆட்களும் பின்தொடர்ந்து சென்றனர். ஒரு பாதுகாப்புக்காக ராணி தன் சகோதரனையும் அவர்களோடு அனுப்பிவைத்தாள்.
ஆவேசத்துடன் காட்டுக்குள் புகுந்த சென்னா முதலில் ஒரு முயல்களின் கூட்டத்தைப் பார்த்தான். சிறிது நேரம் அவை துள்ளியோடும் அழகைப் பார்த்து ரசித்தான். பிறகு குறிபார்த்து ஒவ்வொன்றாகக் கொன்று வீழ்த்தினான். பிறகு தன் வெற்றியைப்பற்றிய தகவல் தன் தாய்க்குத் தெரியவேண்டும் என்பதால் வீழ்த்தப்பட்ட முயல்களையெல்லாம் ஒரு வண்டியில் ஏற்றி அரண்மனைக்கு ஓட்டிச் சென்று ராணியிடம் காட்டுமாறு சொன்னான். முயல்களின் உடல்களைச் சுமந்த வண்டியை ஒரு வேலைக்காரன் ஓட்டிக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பினான்.
முதல் வேட்டையை எளிதாக நிகழ்த்திமுடித்த உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் தொடர்ந்து காட்டுக்குள் சென்றான் சென்னா. நீண்ட நேர பயணத்துக்குப் பிறகு ஒரு பெரிய குளத்தைச் சுற்றி திரிந்துகொண்டிருந்த ஒரு மான்கூட்டத்தைப் பார்த்தான். சிறிது நேரம் அவை துள்ளியோடும் அழகைப் பார்த்து ரசித்தான். பிறகு குறிபார்த்து ஒவ்வொன்றாகக் கொன்று வீழ்த்தினான். பிறகு தன் வெற்றியைப்பற்றிய தகவல் தன் தாய்க்குத் தெரியவேண்டும் என்பதால் வீழ்த்தப்பட்ட மான்களையெல்லாம் ஒரு வண்டியில் ஏற்றினான். ஒரு வேலைக்காரனை அழைத்து வண்டியை அரண்மனைக்கு ஓட்டிச் சென்று ராணியிடம் காட்டுமாறு சொன்னான். மான்களின் உடல்களைச் சுமந்த வண்டி அரண்மனையை நோக்கிச் சென்றது.
முயல்களையும் மான்களையும் வீழ்த்திய உற்சாகத்தோடு சென்னா தொடர்ந்து காட்டின் மையப்பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கினான். நெடுந்தொலைவு பயணம் செய்த பிறகு ஒரு சிறிய குன்றைச் சுற்றி மரங்கள் அடர்ந்திருந்த ஒரு பகுதியில் திரிந்துகொண்டிருந்த ஒரு புலிக்கூட்டத்தைப் பார்த்தான். சிறிது நேரம் அவை அசைந்து அசைந்து நடக்கும் அழகையும் கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமுடன் பாய்ந்து தாவி எழும் அதிசயத்தையும் கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்தான். பிறகு குறிபார்த்து ஒவ்வொரு புலியாக கொன்று வீழ்த்தினான். பிறகு வழக்கம்போல புலிகளின் உடல்களையெல்லாம் திரட்டி ஒரு வண்டியில் ஏற்றினான். வண்டியை அரண்மனைக்கு ஓட்டிச் சென்று ராணியிடம் காட்டுமாறு சொன்னான். புலிகளின் உடல்களோடு வண்டி அரண்மனையை நோக்கிச் சென்றது.
முயல்களின் உடல்களையும் மான்களின் உடல்களையும் புலிகளின் உடல்களையும் சுமந்த வண்டிகள் அடுத்தடுத்து அரண்மனை வாசலுக்கு வந்து நின்றதைப் பார்த்ததும் ராணி ஓரளவு மனம் தெளிந்தாள். ‘உங்களை கவலைப்பட வேணாம்னு இளவரசர் சொன்னாரு’ என்று ஒவ்வொரு வண்டிக்காரரும் அவளிடம் சொன்னதைக் கேட்டதும் அவள் மனம் நிறைந்தது. தன் மகன் பெரிய வீரன் என்று நினைத்து மகிழ்ச்சியில் மூழ்கினாள்.
அதே நேரத்தில் அன்றைய வேட்டை வெற்றிகரமாக முடிந்ததை ஒட்டி தன் நண்பர்களோடு மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்தான் சென்னா. அவனுக்குத் துணையாக நின்றிருந்த அவனுடைய மாமா ‘இன்றைக்கு இது போதும். நாம் வீட்டுக்குச் செல்லலாம்’ என்று சென்னாவுக்கு நினைவூட்டினார். சென்னாவும் அவர் சொற்களை ஏற்றுக்கொண்டான். மொத்த குழுவும் அரண்மனையை நோக்கித் திரும்பி நடந்தது.
பொழுது அடங்கி இருள் சூழ்ந்த நேரத்தில் வழியில் ஒரு கோவில் தென்பட்டது. அதைப் பார்த்ததும், முதல் வேட்டை வெற்றிகரமாக முடிந்ததை ஒட்டி நன்றி தெரிவிக்கும் விதமாக கோவிலுக்குச் செல்லவேண்டும் என சென்னாவுக்குத் தோன்றியது. மாமாவிடம் தன் எண்ணத்தைச் சொன்னான். அவரும் அவன் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். உடனே அனைவரும் அந்தக் கோவிலுக்குள் சென்றனர்.
வெளியே இருந்ததைவிட கோவிலுக்குள்ளே கூடுதலான இருள் அடர்ந்திருந்தது. அக்கம்பக்கம் எதுவும் தெரியவில்லை.
‘உள்ளே எதுவும் தெரியலையே. எப்படிச் சென்று எப்படி வணங்குவது?’ என்று கவலையோடு கேட்டான் சென்னா.
அப்போது ஒரு வீரன் ‘கொஞ்ச நேரம் பொறுத்திருங்க இளவரசரே. என்னிடம் சிக்கிமுக்கிக்கல் இருக்குது. அதைத் தேய்ச்சி நெருப்பை உண்டாக்கறேன். வெளிச்சம் வந்த பிறகு செல்லலாம்’ என்றான்.
‘சரி’ என்று தலையசைத்த சென்னா ஓரமாக ஒதுங்கி நின்றான்.
வீரன் வேகவேகமாக வெளியே சென்று கைநிறைய சருகுகளைச் சேகரித்து எடுத்துக்கொண்டு கோவில் வாசலில் குவித்தான். தன் பையிலிருந்த சிக்கிமுக்கிக்கற்களை எடுத்து ஒன்றோடொன்று தேய்த்து நெருப்பை எழுப்ப முயற்சி செய்தான். ஆனால் நெருப்புப்பொறி விழவில்லை. அடுத்தடுத்து பல முறைகள் முயற்சி செய்தான். எல்லாமே தோல்வியில் முடிவடைந்தன.
விரைவில் அனைவரையும் அழைத்துக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பவேண்டும் என்ற கவலையில் இருந்த மாமாவைப் பதற்றம் தொற்றிக்கொண்டது.
‘வெளிச்சத்துக்காகக் காத்திருக்கவேணாம். சீக்கிரமா நாம அரண்மனைக்குத் திரும்பியாவணும். இருட்டா இருந்தாலும் பரவாயில்ல. வாசலில் இருந்து பார்க்கிறமாதிரிதான் கருவறை இருக்கும். நூல் பிடிச்சதுபோல நேரா நடந்து போனா, தெய்வத்தின் முன்னால் போய் நின்னுடலாம். அதே இடத்துல நின்னு கண்ண மூடி வணங்கிட்டு சட்டுனு திரும்பிடலாம்’ என்று அவர் வழி சொன்னார்.
மாமா சொன்ன ஆலோசனையை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ‘மெதுவா…. மெதுவா…..’ என ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டே ஒருவர் தோளை ஒருவர் பிடித்தபடி ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து கருவறைக்கு முன்னால் சென்று நின்றார்கள். இருட்டுக்குள் நிழலாக தெய்வத்தின் கரிய உருவத்தைப் பார்த்து தலைகுனிந்து வணங்கினர். பிறகு சென்ற வழியிலேயே ஒவ்வொரு அடியாக வைத்து திரும்பி நடக்கத் தொடங்கினர்.
சிக்கிமுக்கிக்கற்களைத் தேய்ப்பதன் வழியாக நெருப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்தபடியே இருந்தான் வீரன். அவனே எதிர்பாராத வகையில் சட்டென ஒரு நெருப்புப்பொறி தோன்றி சருகுகளிடையில் விழுந்தது. அக்கணமே நெருப்பு பற்றிக்கொள்ள எங்கெங்கும் வெளிச்சம் பரவியது. எதிர்பாராத வெளிச்சத்தில் கண்கள் கூசின. அனைவரும் கண்களை மூடிமூடித் திறந்தனர்.
அந்த வெளிச்சத்தில் கருவறைத் தெய்வத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்தான் சென்னா. தெய்வத்தின் பின்னால் சுவர்மீது ஒரு பெரிய புலியின் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. பெரிய முகம். பெரியபெரிய பற்கள். பெரிய கண்கள். பெரிய உடல். பெரிய நகங்கள். பாய்வதற்குத் தயாராக இருப்பதுபோன்ற தோற்றம். அதைப் பார்த்த கணமே இனம்புரியாத அச்சத்தில் மூழ்கினான் சென்னா. காட்டில் நேருக்கு நேர் பார்த்த புலி எழுப்பாத அச்சத்தை அச்சுவரில் தீட்டப்பட்டிருந்த புலியின் சித்திரம் எழுப்பியது. அவனைத் தாக்கி வீழ்த்துவதற்காக அந்தப் பேருருவம் தக்க தருணத்துக்காகக் காத்திருப்பதுபோல அவனுக்குத் தோன்றியது.
எந்தக் கணமும் அந்தப் புலி தன் மீது பாய்ந்து தன்னைத் தாக்கும் என சென்னாவுக்குத் தோன்றியது. அவனால் அப்போது மூச்சுகூட விடமுடியவில்லை. விரைவில் வெளியேறிவிடலாம் என நினைத்துக்கொண்டு வாசலை நோக்கிப் பாய்ந்தான். அவன் கண்கள் அவனையறியமால் சுற்றுச்சுவர்கள் மீது படிந்தன. அச்சுவர்களிலும் புலிகளின் அதே பேருருவம். அதே கண்கள். அதே தோற்றம். தன்னைச் சுற்றி எல்லாத் திசைகளிலும் புலிகள் சூழ்ந்து நிற்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. அச்சத்தில் சென்னாவின் உடல் நடுங்கியது. என்ன நிகழ்கிறது என்று புரிந்துகொள்வதற்கு முன்பேயே சென்னா அந்த இடத்தில் மயங்கி விழுந்தான்.
‘ஐயோ’ என அலறியபடி அவனை நோக்கி அவனுடைய மாமா ஓடினார். அவன் மயங்கியிருந்தான். சுய உணர்வு இல்லை. உடனே இரு கைகளாலும் அவனைத் தூக்கி ஏந்தியபடி வெளியே வந்தார். எல்லோரும் சென்னாவைப் பார்ப்பதற்காக அவனைச் சூழ்ந்து நின்றனர். அவன் கன்னத்தைத் தொட்டு அசைத்துப் பார்த்தார் அவனுடைய மாமா. எந்த அசைவும் இல்லை. மூக்கின் கீழே விரலை வைத்து மூச்சைப் பரிசோதித்துப் பார்த்தார். மூச்சின் தடமே இல்லை. ‘ஐயோ, என் மருமகனே. தவமாய்த் தவமிருந்து என் அக்கா பெத்த பிள்ளையை இப்படி பறிகொடுத்துட்டேனே’ என்று அழுதார்.
சுற்றி நின்றிருந்தவர்கள் அனைவருடைய கண்களிலும் கண்ணீர் தேங்கியது. சிறிது நேரத்துக்கு முன்புவரை அந்தக் கூட்டத்தினரிடையில் நிலவிய மகிழ்ச்சித்தடம் முற்றிலும் அழிந்து மண்ணோடு மண்ணாகிவிட்டது. உடனே நான்கைந்து பேர் அருகிலிருந்த மரங்களில் ஏறி பொருத்தமான கிளைகளை வெட்டி வீழ்த்தினார்கள். அக்கிளைகளை ஒன்றுடன் ஒன்றை இணைத்து கட்டிலைப்போல ஆக்கினார்கள். அதன் மீது சென்னாவின் உடலைத் தூக்கிக் கிடத்தினார்கள். பிறகு அதைச் சுமந்தபடி அரண்மனையை நோக்கி நடந்தனர். ‘ஐயோ, என் அக்காவுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே எனக்குப் புரியவிலையே…’ என்று சொல்லி வாய்விட்டுப் புலம்பியபடியே வந்தார் மாமா.
வேட்டையில் கொல்லப்பட்ட முயல், மான், புலி என விலங்குகளின் குவியல்கள் வாசலில் வந்து குவிவதைப் பார்த்துவிட்டு, வெற்றியோடு வருகை தரும் மகனுக்காகக் காத்திருந்த ராணி, மரக்கட்டில் மீது வைத்து சுமந்துவரப்பட்ட அவனுடைய உடலைப் பார்த்து மயக்கமுற்று விழுந்தாள். உடனே பணிப்பெண்கள் ஓடோடி வந்து அவளுடைய மயக்கம் தெளிய தேவையான சிகிச்சையைச் செய்தனர். ‘ஐயோ, அக்கா’ என்று வீறிட்டு தலையில் அடித்துக்கொண்டு அழுதார் அவளுடைய சகோதரர். செய்தி கேட்டு ஓடோடி வந்த ராஜாவும் சென்னாவின் உடலைப் பார்த்து இடிந்துபோய் அமர்ந்துவிட்டார். ‘எல்லாம் விதியின் பயன்’ என்று மனம் நொந்து பேசியபடி இருந்தார்.
மயக்கம் தெளிந்து எழுந்த ராணி, சென்னாவின் உடலை தன் மார்போடு சாய்த்துக்கொண்டு அழுதாள். குழந்தைவரம் கொடுத்த சிவபெருமான் சொன்ன வாசகம் நினைவுக்கு வந்து அவள் மனத்தை அழுத்தியது. ‘சிவனே. நீ சொன்னபடியே பதினாறு வயதில் என் மகனைப் பறிகொடுத்துட்டேனே’ என்று ஆற்றாமையோடு சொல்லிச்சொல்லி கண்ணீர் விட்டாள். ராஜாவால் எதுவும் பேச இயலவில்லை. ‘முட்டாளா இருந்தாலும் பரவாயில்லை, நூறு வருஷம் வாழற பிள்ளையைக் கொடுன்னு நாம கேட்டிருக்கலாம்’ என்று தனக்குத்தானே சொல்லி அழுதார்.
அரண்மனையில் இருந்தவர்கள் அனைவரும் இளவரசனின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர். அதைக் கவனித்ததும் ராணி அவர்களைப் பார்த்து சத்தம் போட்டு தடுத்தாள்.
‘நான் அவனுக்கு ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துவைக்ணும்னு மனசுக்குள்ள நினைச்சிருந்தேன். அது நடக்கலை. ஆனாலும் நான் என் ஆசையை நிறைவேற்றிக்காம விடமாட்டேன். அவனுக்கு ஒரு பெண்ணைத் தேடி திருமணம் செய்வேன். இது சத்தியம். இதை நான் செய்து காட்டுவேன். அந்தத் திருமணம் நடக்கும்வரை அவனுடைய உடலை அரண்மனையிலிருந்து எடுத்துச் செல்லவோ, அடக்கம் செய்யவோ அனுமதிக்கமாட்டேன்’.
அவளுடைய சூளுரையைக் கேட்டு அனைவரும் திகைத்து நின்றனர். ‘இறந்துபோன ஒருவனுக்கு யாரு இந்த உலகத்திலே பெண் கொடுப்பாங்க?. இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா? ஏன் இந்த ராணி இப்படி பைத்தியக்காரத்தனமா பேசுறா?’ என்று நினைத்துக்கொண்டனர். ஆனாலும் அவள் ராணி என்கிற காரணத்தால் யாரும் எதையும் வெளிப்படையாகச் சொல்லமுடியாமல் நெஞ்சிலேயே அடக்கிக்கொண்டனர்.
அரண்மனை கருவூலத்திலிருந்த தங்க ஆபரணங்களையெல்லாம் ஒரு பெரிய மூட்டையில் போட்டுக் கட்டி எடுத்துவரச் செய்தாள் ராணி. அந்த மூட்டையை ஒரு மாட்டுவண்டியில் தூக்கிவைக்கச் சொன்னாள். பிறகு தன் அண்ணனையும் அவனுக்குத் துணையாக இன்னும் சில வீரர்களையும் அந்த வண்டியோடு செல்லும்படி சொன்னாள்.
‘இந்த ராஜ்ஜியத்தையே ஒரு சுத்து சுத்துங்க. என் மகனுக்கு யாரு பொண்ணு கொடுக்க தயாரா இருக்கறாங்களோ, அவுங்களுக்கு வண்டியில இருக்கிற இந்த தங்கமூட்டையை பரிசா கொடுத்துட்டு, அந்தப் பொண்ணை வண்டியில ஏத்திகிட்டு வாங்க.’
ராணியின் பேச்சைத் தட்டமுடியாமல் அவளுடைய சகோதரனும் பிற வீரர்களும் வண்டியை ஓட்டிக்கொண்டு ராஜ்ஜியத்தின் ஒவ்வொரு தெருவாகச் சென்றார்கள். வண்டி நிற்கும் இடங்களிலெல்லாம் ராணியின் கோரிக்கையை அறிவித்தபடி சென்றார்கள்.
அந்த ஊர்க் கடைசியில் ஒரு ஏழைக் குடும்பம் வசித்துவந்தது. அவருக்கு ஏழு பெண்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கும் அவரால் திருமணம் செய்துவைக்கமுடியவில்லை. மிகுந்த மனவேதனையோடு நாட்களைக் கடத்திவந்தார். மாட்டுவண்டியோடு வந்தவர்களின் கோரிக்கை அவருடைய காதில் விழுந்தது. உடனே அந்த வண்டியை நிறுத்தி, அவர்களிடம் சென்று ‘இறந்துபோன இளவரசனுக்கு நான் என் பொண்ணை மனப்பூர்வமா கல்யாணம் செஞ்சி வைக்கறேன்’ என்று சொன்னார்.
கோரிக்கையின் விவரம் அந்தப் பெரியவருக்குப் புரிந்ததா, புரியவில்லையா என்று தெரியாமல், அவர்கள் நிதானமான குரலில் எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னார்கள். அந்தப் பெரியவர் ‘நீங்க சொல்றது எனக்குத் தெளிவாவே புரியுதுங்க ஐயா. நான் என் பொண்ணை அனுப்பிவைக்கத் தயாரா இருக்கறேன். வாங்க’ என்று அமைதியாகச் சொன்னார்.
வந்த வேலை இவ்வளவு சீக்கிரமாக முடிந்ததில் ஓரளவு ஆறுதல் கொண்ட அக்குழுவினர் மாட்டுவண்டியை அந்தப் பெரியவரின் வீட்டுக்கு ஓட்டிச் சென்றனர். பெரியவர் வண்டிக்கு முன்னால் வழி சொல்லிக்கொண்டே சென்றார். வீட்டை அடைந்ததும் திண்ணையைக் காட்டி ‘ஒரு நிமிஷம் இப்படியே உக்காந்திருங்க. நான் வீட்டுக்குள்ள போய் விவரத்தை சொல்லி பொண்ணை தயார் செஞ்சி அழைச்சிட்டு வரேன்’ என்று சொன்னார். வண்டிக்குழுவினர் திண்ணையில் உட்கார்ந்து இளைப்பாறினர்.
வீட்டுக்குள் சென்ற பெரியவர் தன் மனைவியிடமும் பெண்களிடமும் வாசலில் வண்டி வந்து நின்றிருக்கும் விவரத்தைத் தெரிவித்தார். தொடர்ந்து தன் ஏழு மகள்களையும் பார்த்து ‘இந்தக் கல்யாண ஏற்பாட்டுல உங்கள்ல யாருக்கு விருப்பம் இருக்குதோ, அவுங்க போகலாம். நான் யாரையும் கட்டாயப்படுத்தமாட்டேன். ஆனா, யாராவது ஒருத்தவங்க போனாதான் கிடைக்கப்போற இந்த செல்வத்தால நம்ம குடும்பம் மேல வரும்’ என்றார்.
பெண்கள் ஒவ்வொருவரும் அடுத்தவர் முகத்தைப் பார்த்தபடி எந்தப் பதிலும் சொல்லாமல் சிறிது நேரம் நின்றிருந்தனர். அப்போது எல்லோருக்கும் இளைய பெண்ணான சென்னவ்வா ‘அப்பா, நான் இந்தக் கல்யாணத்துக்குத் தயாரா இருக்கேன். என்னை அனுப்புங்கப்பா’ என்று முன்வந்தாள்.
அதுவரை திடமானவர் போல இருந்த அந்தப் பெரியவர் திடீரென உடைந்து அழத் தொடங்கினார். ‘நீ இந்த வீட்டுக்குக் குலதெய்வமா இருப்பம்மா’ என்று சொல்லிவிட்டு வாசலுக்குச் சென்றார். மற்ற பெண்கள் அவளுக்கு நல்ல உடைகளை உடுத்தி வெளியே அழைத்துவந்தனர். வண்டிக்காரர்கள் வண்டியிலிருந்த தங்கமூட்டையை இறக்கி அந்த வீட்டுத் திண்ணையில் வைத்துவிட்டு, அந்தப் பெண்ணை உட்காரவைத்தார்கள். ‘போய்வா சென்னவ்வா. உனக்கு கொடுப்பினை இருந்தா சாவித்திரிக்கு செத்துப்போன புருஷன் உயிரோடு திரும்பவும் கிடைச்சமாதிரி உனக்கும் கிடைக்கட்டும்’ என்று கைகளை உயர்த்தி வாழ்த்தினார் பெரியவர்.
அடுத்த கணமே வண்டி புறப்பட்டது. அந்த வண்டி அந்தத் தெருவைக் கடக்கும்வரை கைகுவித்தபடி நின்றிருந்த பெரியவர் பிறகு ஒரு பெருமூச்சோடு வீட்டுக்குள் போனார்.
அரண்மனைக்குச் சென்றதுமே சென்னவ்வாவுக்குத் திருமண அலங்காரம் செய்தார்கள். செத்துப்போன சென்னாவுக்கும் மாப்பிள்ளை அலங்காரம் செய்யப்பட்டது. சிறிது நேரத்தில், எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களோடும் அந்தத் திருமணம் நடைபெற்று முடிந்தது. அனைவரும் அட்சதை தூவினார்கள். சென்னவ்வாவின் கழுத்தில் தாலி ஏறியது.
திருமணம் முடிந்த கையோடு சவ அடக்க ஏற்பாடுகளும் நடைபெற்றன. சென்னாவின் உடலைக் குளிப்பாட்டி, மாலையிட்டு பாடையில் கிடத்தினர். சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு, பாடையைக் தூக்குவதற்கு முற்பட்டனர். அந்த நேரத்தில் அங்கே நின்றிருந்த சென்னவ்வா மணப்பெண் கோலத்தோடு வேகமாக நடந்துவந்து அந்தப் பாடையில் சென்னாவின் உடலுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டாள்.
அதைப் பார்த்து அனைவரும் ‘இப்படி நீ செய்யக்கூடாதும்மா. நீ வீட்டுலதான் இருக்கணும்’ என்று சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொற்களைக் கேட்க சென்னவ்வா தயாராக இல்லை. அவள் மிகவும் உறுதியான குரலில் ‘நானும்தான் வருவேன். என்னை யாரும் தடுக்கமுடியாது. அவர் என்னுடைய கணவர். அவரைப் புதைக்கற இடத்துல என்னையும் சேர்த்துப் புதைங்க. அவர் இல்லாத உலகத்துல வாழ எனக்கு விருப்பமில்லை’ என்று தெரிவித்துவிட்டு உறுதியாக உட்கார்ந்துகொண்டாள்.
வேறு வழியில்லாமல் சென்னவ்வாவையும் சேர்த்து சுமந்துகொண்டு இடுகாட்டுக்குச் சென்றார்கள் பணியாட்கள். அவர்கள் இடுகாட்டை நெருங்கும் சமயத்தில் இடிமின்னலோடு கடுமையான மழை பொழியத் தொடங்கியது. இடுகாட்டில் பாடையை இறக்கிவைத்துவிட்டு, அனைவரும் ஓரமாக ஒதுங்கி நின்றனர்.
இரண்டுமூன்று மணி நேரங்களாக காத்திருந்தபோதும் மழை நிற்கவே இல்லை. கொஞ்சம்கொஞ்சமாக வலுத்து பேய்மழையாக மாறியது. புயல்போல காற்று வீசியது. கிழக்கு மூலையில் இருந்த ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வெள்ளம்போல இடுகாட்டை நோக்கிப் புரண்டு வந்தது. அதைப் பார்த்து அச்சம் கொண்ட அனைவரும் இடுகாட்டைவிட்டு வெளியேறி தத்தம் வீட்டை நோக்கியும் அரண்மனையை நோக்கியும் ஓடத் தொடங்கினர்.
மெல்ல மெல்ல பொழுது அடங்கத் தொடங்கியது. எங்கெங்கும் இருள் சூழ்ந்தது. மழை ஓயவே இல்லை. அந்த நேரத்தில் கூட பாடையில் இளவரசனின் உடலுக்கு அருகிலேயே உட்கார்ந்திருந்தாள் அவள். மழை வெள்ளத்தில் அவளைச் சுற்றி சேறும் சகதியும் ஓடியது.
‘நான் என்ன செய்யறது? இதுதான் என் விதி’ என்று சொன்னபடி அந்தச் சேற்றில் கையை விட்டு அளைந்தபடி இருந்தாள் சென்னவ்வா. அவள் கைகள் தன்னிச்சையாக அந்தச் சேற்றை அள்ளிக் குழைத்து ஒரு உருண்டையாக உருட்டின. அந்த உருண்டையை மனம்போன போக்கில் அழுத்தியும் தட்டையாக்கியும் வெவ்வேறு வடிவமாக மாற்றி மாற்றிச் செய்தன. ஒருமுறை உருவாக்கிய வடிவம் சிவன் கோவில் நந்தியைப்போல இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.
நந்தீஸ்வரா என்று மனத்துக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள் சென்னவ்வா. அந்த நந்தியை தனக்கு முன்னால் நிற்கவைத்து, பல கோணங்களில் பார்த்து திருப்தியடைந்தாள். செத்துப்போன உடல்மீதிருந்த மாலையிலிருந்து பூக்களைப் பிரித்தெடுத்து அதன் மீது தூவினாள். தொடர்ந்து தனக்குத் தெரிந்த சிவன் பாடலை பக்தியோடு பாடத் தொடங்கினாள்.
அவள் பாடப்பாட அந்த நந்தி உருவம் தன் உடலை அசைப்பதுபோல இருந்தது. சில நொடிகளில் உண்மையிலேயே அவள் முன்னால் நந்தி உயிர்பெற்று எழுந்து நின்றது. ‘சென்னவ்வா, உன் பக்தி என்னை மெய்சிலிர்க்க வைக்குது. உனக்கு ஏதாவது செய்யணும்னு தோணுது. உனக்கு என்ன வேணும், கேள்’ என்று கேட்டது.
உடனே சென்னவ்வா கண்ணீரோடு தன் கதையையெல்லாம் நந்தியிடம் சொன்னாள். ‘என் புருஷனுடைய உயிர்தான் எனக்கு வேணும் நந்தீஸ்வரா. அவரோடு சேர்ந்து சிவபெருமான் பார்வதி மாதிரி நல்லவிதமா குடும்பம் நடத்தணும்’ என்று முறையிட்டாள். ‘உனக்காக நான் முயற்சி செய்றேன் சென்னவா, கவலைப்படாதே’ என்று ஆறுதல் சொன்னது நந்தி. அடுத்த கணமே அது மெல்ல அசைந்து கைலாசத்தை நோக்கிப் பறந்து சென்றது.
கைலாசத்தில் பார்வதியோடு உரையாடிக்கொண்டிருந்த சிவபெருமான் முன்னால் இறங்கி நின்று வணங்கியது நந்தி. உடனே சிவபெருமான் நந்தியை ஏறிட்டுப் பார்த்தார். உடனே ‘ஐயா, எனக்காக நீங்க ஒரு காரியம் செஞ்சிக் கொடுக்கணும்’ என்று சிவபெருமானிடம் முறையிட்டது நந்தி.
‘என்ன செய்யணும், சொல்’ என்று கேட்டார் சிவபெருமான்.
‘பூமியில நடக்கிற விஷயங்கள் எல்லாத்தையும் நீங்களும் பார்த்திருப்பீங்க. சென்னவ்வாவுடைய புருஷனுக்கு நீங்க மறுபடியும் உயிர் கொடுக்கணும். பாவம், ரொம்ப சின்ன பொண்ணு. செத்துப்போன வீட்டுக்காரன் பக்கத்துல அது உக்காந்திருக்கிறத பார்க்கப்பார்க்க மனசுக்கு சங்கடமா இருக்குது. அவுங்க ரெண்டுபேரும் சேர்ந்து வாழ நீங்க ஒரு வழி செய்யணும்.’
‘அது அவ்வளவு சுலபமான காரியமில்லை. இப்படியெல்லாம் எடுத்த உயிரை கொடுத்துகிட்டே போனா, அதுக்கு ஒரு முடிவே இருக்காது. உனக்காக, அந்த சென்னவ்வாவுக்கு சின்னதா ஒரு சோதனை வைக்கலாம். அவளுடைய எதிர்வினை எப்படி இருக்குதுன்னு கவனிக்கலாம். அதுக்கப்புறம் நாம் உயிரைத் திருப்பிக் கொடுக்கிறதைப்பத்தி நாம ஒரு முடிவெடுக்கலாம்’ என்றார் சிவபெருமான். ‘சரி ஐயா’ என்று ஏற்றுக்கொண்டது நந்தி.
சிவபெருமான் அக்கணமே ஒரு புலியை சென்னவ்வா அமர்ந்திருக்கும் இடுகாட்டுக்குச் சென்று தாக்குதல் நிகழ்த்தும்படி ஏவிவிட்டார். இருளும் மழையும் சேர்ந்திருந்த அந்தப் பொழுதில் சிவபெருமான் ஏவிய புலி சென்னவ்வாவுக்கு அருகில் சென்று நின்று உறுமியது. சென்னாவின் உடலை இழுத்துச் சென்று தின்ன அது முயற்சி செய்தது. அதைப் புரிந்துகொண்ட சென்னவ்வா உடனடியாக இளவரசனின் உடலை மறைத்தபடி குறுக்கே படுத்துக்கொண்டு ‘புலி அண்ணா, புலி அண்ணா, உனக்குப் பசிச்சா நீ என்னை வேண்டுமானா அடிச்சிச் சாப்பிடு. தயவுசெஞ்சி என் கணவரை விட்டுடு’ என்று கைகூப்பிக் கெஞ்சினாள்.
அவள் கண்ணீரோடு கெஞ்சியதைப் பார்த்து அந்தப் புலியின் மனம் கரைந்துவிட்டது. இளவரசனின் உடலை நோக்கி முன்வைத்த காலை தயக்கத்தோடு பின்னால் எடுத்துக்கொண்டது. ஒருகணம் சென்னவ்வாவைப் பார்த்தது. ‘உன்னைப் பார்த்தால் பாவமா இருக்குது. நான் அவனையும் சாப்பிடலை, உன்னையும் சாப்பிடலை, போதுமா?’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டது.
மறுகணமே கைலாசத்துக்குத் திரும்பிவந்து சிவபெருமான் முன்னால் நின்று வணங்கியது. உடனே சிவபெருமான் புலியை ஏறிட்டுப் பார்த்தார். ‘ஐயா, நீங்க சொன்ன வேலையைச் செய்யாமலே கைலாசத்துக்குத் திரும்பிவந்துட்டேன். என்னை மன்னிக்கணும்’ என்று சிவபெருமானிடம் முறையிட்டது புலி.
‘சொன்ன வேலையைச் செய்யவிடாத அளவுக்கு உன்னை எது தடுத்தது, சொல்’ என்று கேட்டார் சிவபெருமான்.
‘சென்னவ்வாவுடைய பக்திதான் பெருமானே. அந்தச் சின்ன பொண்ண பார்க்க ரொம்ப பாவமா இருக்குது. செத்துப்போன வீட்டுக்காரன் பக்கத்துல அது உக்காந்திருக்கிறத பார்க்கப்பார்க்க மனசுக்கு சங்கடமா இருக்குது. கொல்லறதுக்கு மனசே வரலை. அவுங்க ரெண்டுபேரும் சேர்ந்து வாழ நீங்க ஒரு வழி செய்யணும் பெருமானே.’
‘அது அவ்வளவு சுலபமான காரியமில்லை’ என்று சொல்லிவிட்டு யோசனையில் மூழ்கினார் சிவபெருமான். தன் முயற்சி தோற்றுப்போனதை நினைத்து வருத்தத்தோடு ஒதுங்கி நின்றது புலி.
நீண்ட யோசனைக்குப் பிறகு சிவபெருமான் ஒரு சிங்கத்தை அந்த இடுகாட்டை நோக்கிச் செல்லுமாறு ஏவினார். அந்தச் சிங்கமும் சென்னவ்வாவின் கண்ணீரில் மனம் கரைந்து திரும்பி வந்து ‘ஐயா, நீங்க சொன்ன வேலையைச் செய்யாமலே கைலாசத்துக்குத் திரும்பிவந்துட்டேன். என்னை மன்னிக்கணும்’ என்று சிவபெருமானிடம் முறையிட்டது. மேலும் அதுவும் சென்னவ்வாவுக்காக வாதாடியது.
சிங்கத்தின் வேண்டுகோளைக் கேட்டு சலித்துப்போன சிவபெருமான் அடுத்து ஒரு யானையை ஏவினார். அந்த யானையும் சென்னவ்வாவின் கண்ணீரைக் கண்டு மனம் இரங்கி திரும்பி வந்து ‘ஐயா, நீங்க சொன்ன வேலையைச் செய்யாமலே கைலாசத்துக்குத் திரும்பிவந்துட்டேன். என்னை மன்னிக்கணும்’ என்று சிவபெருமானிடம் முறையிட்டது. மேலும் அதுவும் சென்னவ்வாவுக்காக வாதாடியது.
எல்லோரும் சென்னவ்வாவுக்காக வாதாடியதைக் கண்ட சிவபெருமான் தானே நேரில் பார்த்து நிலைமையைப் புரிந்துகொள்வதற்காக கைலாசத்திலிருந்து புறப்பட்டு இடுகாட்டுக்கு வந்தார். வழக்கம்போல ஒரு சாமியாரின் கோலத்தில் தோளில் ஒரு பிச்சைப்பையை மாட்டிக்கொண்டு இன்னொரு கையால் ஓர் ஊன்றுகோலை ஊன்றி ஊன்றி கொட்டும் மழையில் அவளுக்கு முன்னால் வந்து நின்றாள். ‘அம்மா, ஏதாவது தானம் செய்யுங்கம்மா’ என்று சென்னவ்வாவை நோக்கி கை நீட்டினார்.
இடுகாட்டில் மழையில் இறந்துவிட்ட உடலுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு ஒரு சாமியாருக்கு எதைத் தானமாகக் கொடுப்பது என்று புரியாமல் தவித்த சென்னவ்வா ஒருகணம் யோசனையில் மூழ்கினாள். மறுகணமே எவ்விதமான தயக்கமும் இல்லாமல் தன் கழுத்தில் தொங்கிய தங்கத்தாலியைக் கழற்றியெடுத்து சாமியார் நீட்டிய கையில் வைத்தாள்.
‘இதைக் கொடுக்கறேன்னு தயவுசெஞ்சி நீங்க தப்பா நினைச்சிக்காதீங்க ஐயா. இந்த இடுகாட்டுல உக்காந்துகிட்டு இந்த மழையில உங்களுக்கு வேற எதையும் கொடுக்கமுடியாத நிலையில இருக்கேன். என்னை மன்னிச்சிடுங்க’ என்று சொன்னாள் சென்னவ்வா.
சென்னவ்வாவின் செய்கை சிவபெருமானின் மனத்தைக் கரைத்துவிட்டது. உடனே அவர் அந்தத் தாலியை அவள் கழுத்திலேயே மீண்டும் அணிவித்துவிட்டு, இறந்துபோன இளவரசனை மீண்டும் உயிர்ப்பித்தார். ‘நூறாண்டு காலம் வாழ்க’ என்று சொல்லி இருவரையும் வாழ்த்தினார். தனக்கு அருகில் இருந்த இளவரசனின் உடலில் அசைவை உணர்ந்த சென்னவ்வா சாமியாருக்கு நன்றி சொல்லத் திரும்பினாள். அதற்குள் அவர் மறைந்துவிட்டார்.
அவர் சென்ற திசையைப் பார்த்து ஆனந்தக் கண்ணீரோடு நன்றியோடு கைகுவித்து வணங்கினாள் சென்னவ்வா. உயிர்பிழைத்த இளவரசன் சென்னா மெல்ல எழுந்து உட்கார்ந்தான். தான் இடுகாட்டில் இருப்பதையும் தனக்கு அருகில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பதையும் பார்த்து அவன் குழப்பமுற்றான். அவன் குழப்பம் தீரும் வகையில் சென்னவ்வா பொறுமையாக எல்லாவற்றையும் விரிவாக அவனுக்கு எடுத்துரைத்தாள். பிறகு இருவரும் அங்கிருந்த ஒரு மரத்தடிக்குச் சென்று ஒதுங்கி விடியவிடிய கதைபேசி மகிழ்ந்தனர்.
காலையில்தான் மழை நின்றது. வெள்ளத்துக்கு அஞ்சி இடுகாட்டிலேயே பாடையை வைத்துவிட்டு ஓடிவிட்ட அனைவரும் மீண்டும் இடுகாட்டுக்கு வந்தனர். அங்கே சென்னாவும் சென்னவ்வாவும் மரத்தடியில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்தனர். பிறகு அவர்களிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டனர். எல்லாக் கேள்விகளுக்கும் இருவரும் பொறுமையாக விளக்கம் கொடுத்தனர். அரண்மனையிலிருந்து ஒரு புதிய வண்டியை வரவழைத்து, அதில் இளவரசன் சென்னாவையும் சென்னவ்வாவையும் உட்காரவைத்து அரண்மனைக்கு ஓட்டிச் சென்றனர்.
வழிநெடுக அந்த ஊர்மக்கள் நின்று அந்த மணமக்களை வாழ்த்தினர். அரண்மனை வாசலிலேயே நின்றிருந்த ராஜாவும் ராணியும் அவ்விருவரையும் நெஞ்சோடு தழுவி மகிழ்ந்தனர். இறைவனின் கருணையே கருணை என கைலாசம் இருக்கும் திசையை நோக்கி எல்லோரும் கையை உயர்த்தி வணங்கினர். பிறகு ‘வலது காலை வச்சி உள்ள வாங்க’ என உரைத்து, மணமக்களை அரண்மனைக்குள் அழைத்துச் சென்றாள் ராணி.
0