குமரிப் பகுதியை ஆய் என்றழைக்கப்பட்ட மரபைச் சார்ந்த குறுநில மன்னர்கள் சங்ககாலம் முதலே ஆண்டு இருக்கின்றனர். பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஆய் மன்னரும், வேளிரும் ஒருவரே எனக் கருதுகிறார். அவர்கள் வடநாட்டு யதுகுல சத்திரியர் (யாதவ) என்கிறார். அதனை பேராசிரியர் ஸ்ரீதரமேனன் மறுத்து, இவர்களும் சேர,சோழ பாண்டியர் போன்று இந்நிலத்து மக்களே என்கிறார்.
‘செங்கடலின் வழிக்காட்டி’ (கிபி81-96) என்ற கடற்பயணக்குறிப்பு நூல் ஒரு கிரேக்க மாலுமியால் எழுதப்பட்டது. அது நெல்சிண்டாவிலிருந்து கன்னியாகுமரி வரையிலான இடங்களை பாண்டியர் ஆட்சி செய்ததாகத் தெரிவிக்கிறது. இவ்விடத்திற்குப் பெரிய கப்பல்களை அனுப்புகிறார்கள். எனெனில், இங்கு மிளகு, மாலபத்திரம் போன்றவை கிடைக்கும். அதற்கு பிறகு கொமாரி(குமரி) என்ற இடம் வருகிறது எனத் தெரிவிக்கிறது.
கிரேக்கப் பயணி தாலமி, ஆய்நாடு பெரிஸ்(பம்பா ஆறு) முதல் கன்னியாகுமரி வரை பரவியிருந்தது எனவும், அங்கே பொட்டிகோ (பொதிகை மலை) இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். எனவே கிபி இரண்டாம் நூற்றாண்டில் ஆய் நாடு பாண்டிய நாட்டுக்கும், சேர நாட்டிற்கும் இடையே இருந்ததாகக் கருதப்படுகிறது. இறையனார் அகப்பொருள் உரை ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கன்னியாகுமரி வரை ஆய் மன்னர்களின் எல்லை இருந்ததைத் தெரிவிக்கிறது.
ஆய்க்குடி இவர்களின் தலைநகர். நாகர்கோயில் அருகில் உள்ள இடலாக்குடியும் (இடராய்க்குடி) தலைநகராக இருந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். தாலமியும் பிளினியும் தங்கள் குறிப்புகளில் கொட்டியாரா என்ற வணிக இடத்தைக் குறிப்பிடுகின்றனர். அது இன்றைய கோட்டார் என்கிறார் இலங்கை தமிழறிஞர் கனகசபை. பிற்கால ஆய் மன்னர் ஆட்சியில் திருவட்டாறும், விழிஞமும் மாறிமாறி அரசியல் தலைநகராக இருந்திருக்கின்றன. கோட்டாறு இரண்டாம் தலைநகராக இருந்திருக்கின்றது.
சங்க கால ஆய் மன்னர்களாக நால்வர் பெயர் கிடைக்கின்றது. இதில் முதலாவதாய் வருபவர் ஆய் அண்டிரன். இவர் கடையேழு வள்ளல்களில் ஒருவர். இவரது வள்ளல்தன்மை, உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் எனும் சங்கப் புலவரால் புறநானூற்றில் சிறப்பித்து பாடப்பெற்றுள்ளது.
’மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்
வழைப் பூங்கண்ணி வாய்வாள் அண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ
களிறுமிக உடைய இக் கவின்பெறு காடே..’
இவன் அந்துவன் சேரல் காலத்தவன்
முகிலினங்கள் சென்று தங்கும் உயர்மலைக்குத் தலைவன், சுரப்புன்னை மலர்க் கண்ணியையும் தப்பாத வாளினையும் உடையவன். அத்தகைய ஆயின் மலையை எம்மையன்றிக் களிறு செறிந்த கவின் காடும் பாடினவோ! யானை மிகுதியாயிருந்த காட்டின் யானைகளையெல்லாம் பரிசிலர் பெற்றுப் போயினர். அதனால்தானோ என்னவோ யானைகள் வேண்டுமென இவ்வழகிய காடு நின்னைப் பாடியதோ? என்று ஆய் அண்டிரனின் கொடைச்சிறப்பினைப் பாடுகிறார் முடமோசியார். சங்கப்புலவர்களுக்கு குதிரை, தேர், யானை எனப் பல பரிசுகள் வாரி வழங்கியவன். இவன் இறந்தபோது அவன் உரிமை மகளிர் அனைவரும் உடன்கட்டை ஏறினர். யானையை அரசச் சின்னமாகக் கொண்டவன் இவன் என்கிறார்.
முதலாம் திதியன்:
புறநானுற்றில் பொதிகைச்செல்வன் என அழைக்கப்படும் இவன், சங்க கால அரசனும், புலவனுமான ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் காலத்தவன். பூதப்பாண்டியை தனது நாட்டின் மேற்கு எல்லையாக அமைத்துக்கொண்டான். இவனுக்கு அதியன் என்றொரு பெயரும் உண்டு. அதியன் நாட்டில் எப்போதும் மழைபெய்யும் என அகநானுறு குறிப்பிடுகிறது. குமரி மாவட்டம் தோவளை வட்டத்தில் உள்ள அழகியபாண்டிபுரம் ஊர் இவனது பெயரால் அதியனூரான அழகியபாண்டிபுரம் என 12ஆம் நூற்றாண்டு கல்வெட்டொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் காலத்தைச் சார்ந்த பசும்பொன் பாண்டியன் என்ற அழகியபாண்டியனின் பெயரும் இவன் பெயரும் இணைந்து அழைக்கப்படுகிறது இவ்வூர்.
இரண்டாம் திதியன்:
சேரன், சோழன் என்ற முடியுடைய வேந்தர் இருவரும், திதியன், எழினி முதலிய ஐம்பெரும் வேளிரும், படையெடுத்து இளைஞனான நெடுஞ்செழியனை வெல்வதற்குப் பெரும்படையுடன் வந்தனர். அவர்களைப் பெருவீரத்துடன் வென்றான் பாண்டியன். தமிழ்நாட்டையே தன் வசப்படுத்தினான். அப்போரில் கலந்துகொண்டு தோற்றவனே இரண்டாம் திதியன். இவன் காலத்தில் ஆய்நாட்டின் எல்லை குன்றியது.
எழினியாதன்:
சங்ககாலத்தில் எழினியாதன் என்பவனும் ஆண்டிருக்கிறான். இவனும் ஆய் பரம்பரை என்கின்றனர் ஆய்வாளர்கள். இவன் காலம் யானைக்கட்சேய் மாந்தரம்சேரல் இரும்பொறை, குட்டுவன் சேரன், தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகியோரின் காலம் என்பர். இவன் புறநாநூற்றில் (366) இடம்பெறுகிறான். இவன் சேரனுக்கு உதவியாக சோழனை எதிர்த்தவன் என்பர். இது போன்று நாஞ்சில் பொருநன் என்ற நாஞ்சில் வள்ளுவன் குறித்தும் சங்கப் பாக்களில் காணப்படுகிறது. இவர்கள் இருவரும் ஆய் மன்னனின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்திருக்கலாம்.
சங்க காலத்திற்குப் பின் எட்டாம் நூற்றாண்டு வரை ஆய் மன்னர்கள் பெயர்கள் எங்கும் காணப்படவில்லை. அதன்பின் கல்வெட்டுகளில் மீண்டும் வருகின்றனர்.
விளக்கமைத்து நாள்தோறும் நெய் வழங்க ஏற்பாடு செய்ததை வட்டெழுத்தில் இந்தப் பெயரிலே கல்வெட்டாக அமைத்துள்ளான். ஆனால் அன்று வழங்கப்பட்ட வட்டெழுத்தைப் பயன்படுத்தாமல் பல்லவர் கால சாசனங்களில் பயன்படுத்தப்படும் தமிழால் இச்சாசனம் எழுதப்பட்டுள்ளது. ஏட்டின் எழுத்துக்கள் இருவர் எழுதியதாக காணப்படுகிறது. மொத்தம் 73 வரிகளைக் கொண்டுள்ளது.
ஆய் மன்னான கோகருந்தடக்கனின் சிறப்புப் பெயரில் அமைத்த பார்த்திவசேகரபுரச்சாலைப் பற்றியது இச்சாசனம். காந்தளூர்சாலையை மாதிரியாகக் கொண்ட தொண்ணூற்றைவர் சட்டர்களுக்கு அமைத்தச் சாலை மற்றும் கோயில் ஆகியவை நன்கு செயல்பட வகுத்த விரிவான திட்டங்களே இது.
சாசனம்,
ஸ்வஸ்தி ஸ்ரீ கலியுகக் கோட்டு நாள் பதினான்கு நூறாயிரத்து நாற்பத்து
ஒன்பதினாயிரத்து எண்பத்து ஏழு சென்ற நாள்
ஸ்வஸ்தி ஸ்ரீ கோக் கருநந்தடக்கனுக்கு யாண்டு ஒன்பது நாள் பதினைஞ்சு
இந்நாளால் முடால நாட்டு பசுங்குளத்துப் படுநிலத்தில் …
செய்யப்பட்டது. இதனை கலி அப்தம் 3967 கற்கடக மாதம் 15ஆம் நாள், அதாவது கிபி 866 ஜூலை 8ஆம் தேதி என சுவெல் மற்றும் ப்ளிட் ஆகிய தொல்லியல்துறை ஆராய்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்துமத நம்பிக்கையாளர்கள் மகாபாரதப் போர் முடிந்ததிலிருந்து கலியாண்டு தொடங்குவதாகக் கருதுவர். அதுபோன்று மகாபாரதப் போர் முடிந்த கலியுக தொடக்கமான கிமு 3100 என்பதிலிருந்து நாள் கணக்கிடப்பட்டுள்ளது.
காணம், கழஞ்சி, காசு என்ற நாணயங்கள் சில இடங்களில் இச்சாசனத்தில் தண்டம் பற்றிக் குறிப்பிடும்போது சொல்லப்பட்டுள்ளது. எனவே கருநந்தடக்கன் காலத்தில் காணம், கழஞ்சி, காசு மக்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. 9ஆம் நூற்றாண்டில் காணம் 1, 21/2, 5 ,10, ஆகிய மதிப்புகளில் வெளியிடப்பட்டிருந்தன. அன்று ஒரு கழஞ்சி என்பது 10 காணம். ஒரு பழங்காசு என்பது 6 கழஞ்சி ஆகும். இவை பொன் நாணயமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டர்கள் தங்களுக்குள் வழக்கிட்டுக் கொண்டால், ஆயுதம் பயன்படுத்தி புண் ஏற்படுத்தினால் ஐந்து காணம் பொன் தண்டம், உணவு நிறுத்துதல் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டன. வெளிக்கூட்டத்திற்கு ஆயுதம் எடுத்துச் செல்லக்கூடாது, மடத்தில் வெள்ளாட்டிகளை(கோயில் பெண்டிர்) வைத்துக் கொள்ளக் கூடாது, மீறினால் அரசர் ஆணையின்றிச் சாலையிலிருந்து விலக்கம் செய்யப்படுவர் எனச் சொல்லப்பட்டது. ஐந்து கழஞ்சி பொன் தண்டமும், அதுவரை பெறப்பட்டவைகளுக்குப் பத்துமடங்கும் வழங்க வேண்டும், கிராமசபையினர் செலுத்த வேண்டியவரியை வழங்கவில்லை எனில் மூன்று பிரிவிலிருந்து மூன்று சட்டர்கள் சென்று 54 காணம் பொன் தண்டம் பெற வேண்டும். சாலைக்கான கடமையை மறுப்பவர் நியதி கழஞ்சி பொன் தண்டம் செலுத்தவேண்டும், சாலையில் உணவு பெறும் பணிமக்கள் சட்டரை பிழை சொன்னால் ஒரு காசு தண்டம் எனத் தண்டனைக் குறிப்புகள் கடுமையாகயுள்ளன.
வேதங்கள், அவற்றின் பிரிவான வியாகரணம், மற்றும் ப்ரோஹிதம், மூவரசர் ஆட்சி நிர்வாகத்திற்கான கல்வி, அவற்றோடு ஆயுதப்பயிற்சி ஆகியவை ரிக், யஜூர், சாம வேதப்பிரிவு பிராமணர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யும் கல்விச்சாலையாக இது செயல்பட்டுள்ளது. காந்தளூர்சாலை மாதிரியாகக் கொண்டு இது அமைக்கப்பட்டது. கோகருநந்தடக்கன் தன் ஆட்சிக் காலத்தில் நான்கு சாலைகள் அமைத்துள்ளான். அவை காந்தளூர்ச்சாலை, பார்த்திவசேகரபுரம்சாலை, திருவல்லாச்சாலை மற்றும் மூழிகுளம்சாலை என்பர். பிற்காலத்தில் காந்தளூர்சாலை ராஜராஜ சோழனால் அழிக்கப்பட்டது. இது தற்போது திருவனந்தபுரத்தில் வலியசாலை என அழைக்கப்படுகிறது என்கின்றனர். இது இந்தியாவில் மிக நீளமான அக்ரஹாரம் ஆகும்.
இச்சாசனம் தெரிவிப்பது, பிராமணர்களுக்குச் சமுகத்திலும், ஆட்சியாதிகாராத்திலும் பங்கு வகிக்க வழங்கும் கல்விக்கான சாலை அமைக்க, பிராமண ஊர்களுக்கு (முன்சிறை) பதலி இடமாக நிலங்கள் அவர்களுக்குத் திருப்தி ஏற்படும் வரை பலமுறை அளித்து, பின் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிற நாட்டுக்குடிகளின் நிலங்களும் அவர்களது வருமானங்களும், சாலை பராமரிப்புக்காகவும், ஊதியத்திற்காகவும் அக்குடிகளிலிடமிருந்து ஒரு ஆணை மூலம் பறித்தளிக்கப்பட்டிருக்கிறது. இச்சாசனத்தில் அந்த ஊர்களும் நாடுகளும் குறிப்பிடப்பட்டிருக்கிறன.
காந்தளூர்ச்சாலையின் அனுபவம் இச்சாசன தண்டனை குறிப்பு வழி தெரியவருகிறது. பிராமணர்கள் பொது இடங்களில் ஆயுத துஷ்ப்ரையோகம் செய்பவர்களாக இருந்திருப்பதால் இதில் பொது இடங்களிலும், சாலையின் உள்ளும் ஆயுதம் பயன்படுத்த கட்டுப்பாடு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிராமணர்கள் அவர்களின் வேதப்பிரிவு சார்ந்து சண்டையிடுபவர்களாக இருந்திருக்கிறார்கள் அப்பிரிவின் அரசியல் அதிகாரத்திற்கானதாக அது இருக்கலாம். எனவே கல்விச்சாலையினுள் சட்டர்களினிடை தகராறு நடைப்பெற்றால் தண்டம் வழங்க சரத்து உள்ளது. கோயில் பணிப்பெண்டிரை பிராமணர்கள் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதால் இச்சாசனம் சாலைக்குள் கோயில்பெண்டிரை(வெள்ளாட்டி) சட்டர்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கிறது.
இந்த இடம் அப்போது சேர ஆளுககைக்குள் உள்ளது என்பர். நிலத்தோடு புலையர்களையும் தானம் செய்ததாகக் கூறுவர். இந்த ஸ்ரீமூலவாசகம் சோழர்களால் அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது 15ஆம் நுற்றாண்டில் இடப்பள்ளியை ஆட்சி செய்த பிராமணர்களால் அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது கடல் கொண்டுப்போயிருக்கலாம் என்கின்றனர்.
ஏட்டின் வடமொழிச் சுலோகங்கள் ‘யாதவகுலமானது மற்ற அரசர்களுக்கு தலையாக சந்திரன் நட்சத்திரம் உள்ளவரை நீடித்திருக்கும். பக்தியினால் வணங்கியவனும், தன் சேனைத் தொகுதியால் எழுப்பட்ட தூசிகளாகிய புகையினால் தன் எதிரிகளின் மனைவிகளை அழச்செய்தவனுமான விலிஞ்ஜம்(விழிஞம்) என்ற நாட்டின் அரசனால்…’ என்ற இச்சுலோகத்தின் தொடர்ச்சியேடு கிடைக்கவில்லை. மேலும் இச்சாசன சுலோகம், சூரியன் மகர ராசியில்(தை மாதம்) இருக்கும்போது பௌஷ மாத மிருகஷிரிட நட்சத்திரம் கூடிய வியாழக்கிழமை அரசன் தன் முப்பத்து ஐந்தாவது வயதில் புத்தக்கோயிலுக்கு நிலம் தானம் செய்ததைக் கூறுகிறது. இந்நிலத்தின் திசை, எல்லை முதலான அனைத்தும் தமிழ் வசனத்தில் காண்க என்கிறது. மேலும் வீரகொத்தன் என்பவனைத் தானபூமியைக் காக்கும் பொறுப்பில் அரசன் அமர்த்தியதைச் சொல்கிறது.
பின்பு, ‘எவன், பிறர் தன்னிடம் இரத்தலை அன்பினால் மட்டும் விரும்புகிறானோ, எவன் மற்றவர்களிடம் எப்போதும், கனவிலும் கூட இரப்பதில்லையோ அப்படிப்பட்ட புண்ணியாத்மாவான வரகுணன் என்ற அரசன் தன் வம்சத்தவர்களை ‘நீங்கள் இந்த வம்சத்தை அழிக்ககூடாது’ என்று இரந்து வேண்டுகிறான். மறுபடியும் இந்த மேன்மையுள்ள அரசன் தலைவணங்கிப் பக்தர்களின் அன்பர்களான எல்லோரையும் கேட்டுக்கொள்கிறான்‘
‘இந்தப் பூமியை உள்ளத்தில் வைத்துக்கொண்டு, மனைவியை மற்றொருவர் அனுபவிக்கும் ஆபத்து ஏற்படுமோ என்று காப்பதுபோல், இதையும் அந்த காலத்தில் காப்பற்ற வேண்டும். ஓ மனிதர்களே மனத்தைப் புண்ணியம் செய்வதற்கு விரைவுப்படுத்துங்கள். கொடியவனான யமன் உங்களுடைய காலத்தை எதிர்ப்பார்த்து வாய் திறந்து கொண்டு உங்கள் அருகிலே சுற்றி வருகிறான். அந்த யமனுக்கு நன்மை செய்ய விரும்பிச் சூரியன் தன்னுடைய பயணத்தால் உங்களுடைய ஆயுளின் மீதிப் பாகத்தை விரைவாக உறிஞ்சிவிடுகிறான். மங்களம் உண்டாகட்டும். ந கோத் துவாதசி’ என சுலோகங்கள் முடிகின்றன.
இதிலிருந்து புத்தக்கோயிலுக்கு நிலமளித்த விவரமிருந்தாலும், வரகுணன் என்ற மன்னன் தன்நாட்டில் தன்மக்களால் தனிமையாக விடப்பட்ட நிலை தெரியவருகிறது. இதில் தெரிவிக்கப்படும் வீரகொத்தன் என்பவன் சேரன் கோதை ரவிவர்மா காலத்தில் கோயிலதிகாரியாக இருந்த இந்துகோதைவர்மா ஆகும். இவர் கோதை ரவிவர்மனுக்குப் பின் ஆட்சிக்கு வருகிறார்.
பார்த்திவசேகரபுரம் கோவில், பார்த்திவபுரம் :
குமரிமாவட்டம், புதுக்கடையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இவ்வூரினைச் சென்றடையலாம். ஆய்வம்ச மன்னன் கருநந்ததடக்கனால் கட்டப்பட்ட கோவில் இது. கல்வெட்டுப்படி இவ்வூரின் பெயர் பார்த்திவசேகரபுரம். ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழம்பெருமை வாய்ந்த கோவில். சங்ககால சிறப்புமிக்க குலமான ஆய்வம்சதோன்றல் மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் இன்று வெளித்தோற்றத்தில் அவ்வாறு தெரியாவிடினும், கூர்ந்து நோக்குங்கால், அதன் கருவறை சுற்றுச்சுவர் விமானம், கோபுரம், அதிட்டானம் என அதன் தொன்மை புலப்படும்.
பார்திவசேகரபுர கோவில் கல்வெட்டுகள்:
இங்கு மொத்தம் 5 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளது. காமன் தடக்கன் என்பவர் இறைவனுக்கு நிலக்கொடை தானமளிக்கிறார். இதுவே தொன்மையான கல்வெட்டு. கி.பி 923இல் மன்னர் பெயரிலில்லாத கிரந்தம் கலந்த தமிழ் கல்வெட்டுள்ளது. பஞ்சவன் பிரம்மாதிராஜனாயின குமரன் நாராயணன் என்பவர் இரண்டு விளக்குகள் கொடையளிக்கிறார். இரு சோழர் கல்வெட்டும், சுந்தரசோழ பாண்டியர் கல்வெட்டும் உள்ளது. இவையும் நிலக்கொடை, நந்தாவிளக்கு கொடை குறித்த கல்வெட்டுகளே.
ஆய்குல முன்னோன் புகழ்வாய்ந்த கருந்தடத்தக்கன் கட்டிய இக்கற்றளி இன்றும் தொன்மை மாறாமல் நன்முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆய்மன்னர்களின் கலைச்சிறப்பினை இங்கு காணலாம்.
விக்ரமாதித்ய வரகுணன்:
இவரது கல்வெட்டுகள் சிதறால், திருநந்திக்கரை, கழுகுமலை, போன்ற இடங்களில் காணப்படுகிறது. இம்மன்னன் சைவ, வைணவ, சமண சமயங்களை ஆதரித்துள்ளான். சிதறாலில் நிறைய சமண இயக்கியர் உருவங்கள் செய்துள்ளமை தெரியவருகிறது. இவன் காலத்தில் பராந்தக சோழன்(907-955), 2ஆம் பாண்டியன் மாறவர்மா ராஜசிம்கா(905-920) என்ற மன்னனைத் தோற்கடிக்கிறான். சோழனை எதிர்க்கும் போரில் வரகுணன் பாண்டியனுக்கு ஆதரவாக நிற்கிறான். பாண்டியநாடு சோழநாட்டுடன் இணைக்கப்படுகிறது. அத்துடன் நாஞ்சில் நாடும் சோழ ஆளுகைக்குள் போகிறது. இதன்பின் இம்மன்னர்கள் குறித்த தகவல்கள் இல்லை.
ஆய்மன்னர்கள் கலைப்பாணி: திருநந்திக்கரை குடைவரை கோவில்
முதல் கல்வெட்டு
இங்கே பழமையான இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. இதில் அரசர் பெயரும் ஆட்சியாண்டும் இல்லை. ஆனால் இதனை ஆய்மன்னர் விக்ரமாதித்ய வரகுணனின் கல்வெட்டாகக் கருதுகின்றனர். குடவரையின் அமைப்பும் பழையதாகவேயுள்ளது.
இக்கல்வெட்டில் உள்ள செய்தியாவது இவ்வூர் பெருமக்களும், தளியாள்வானும் குருந்தம்பாக்கத்தில் கூடி இவ்வூரின் பெயரை ஸ்ரீநந்திமங்கம் என மாற்றுகின்றனர். இவ்வூரின் எல்லையாய் பெயரறியாத ஒரு ஆற்றுடன் நந்தியாறும், முதுகோனூரும் பாக்கமங்கலமும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வூர்கள் இன்னும் அதேபெயரில் வழங்கப்படுவது சிறப்பு.

இரண்டாம் கல்வெட்டு
இக்கல்வெட்டும் முதல் கல்வெட்டின் எழுத்தமைதியிலுள்ளது. இவ்வூரைச்சேர்ந்த திருவல்லாழ் மகாதேவர்க்கு மங்கலச்சேரி நாராயணன் சிவாகரன் அளித்த நிலக்கொடைகளை விரிவாய் கூறுகிறது.
சிதறால்
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுக்காவில் இவ்வூர் அமைந்துள்ளது. இங்குள்ள மலைகளில் இயற்கையாகவே சில குகைகள் காணப்படுகின்றன. தற்சமயம் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது இந்த இடம். தொல்லியல்துறை ஏற்பாட்டில் மலை ஏற்றத்திற்கு வாகாக படிகள் வெட்டப்பட்டுள்ளன. சுமார் ஒரு கி.மீ தொலைவில் மலையேற்றம் ஏறியபின் இச்சமண தலத்தை அடையலாம். கல்வெட்டில் இம்மலை திருச்சாரணத்து மலை என அழைக்கப்படுகிறது. சாரணர்களாகிய சமணர்கள் வாழ்ந்ததினால் இம்மலைக்கு இப்பெயர் வந்திருக்க கூடும்.

9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆய்மன்னன் விக்ரமவரகுணவர்மனது கல்வெட்டு இங்கு பழமையானது. இவர் இக்கோவிலிலுள்ள இறைவிக்கு (பட்டாரிக்கு) அணிகலன்கள் கொடுத்ததைத் தெரிவிக்கிறது. இதனால் இந்த இறைவி(பகவதி) சமண சமய யக்ஷியாக இருந்திருக்கக்கூடும்.
மேலும் இக்கோவில் பின்னர் 13ஆம் நூற்றாண்டளவில் இந்துமத கோவிலாய் மாற்றமடைந்ததைப் பிற்காலத்திய கல்வெட்டுகள் வாயிலாகவும், கட்டுமானம் வாயிலாகவும் உணரலாம்.
குறத்தியறை குடைவரை
அழகியபாண்டியபுரம் ஊராட்சியில் உள்ளது இவ்வூர். இங்கு ஓர் எளிய குடைவரை உள்ளது. குடைவரைப்பெருமாள் அவ்வையாரம்மன் என அழைக்கப்படுகிறார். இங்கே மிகவும் அழகிய நின்றநிலைப்பெருமாள் சிலையும், சிதைந்த அமர்ந்தநிலை பெருமாள் சிலையும் உள்ளது. இவை ஆய்மன்னர்களின் கலைப்பாணியாகக் கருதப்படுகின்றன. இவை தவிர கன்னியாகுமாரி அருங்காட்சியகத்திலும் ஓர் அழகிய பெருமாள்சிலை உள்ளது.
விழிஞம் குடைவரை
இக்கோவில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. இதில் கல்வெட்டு இல்லையெனினும், ஆய் மன்னர்களின் பழைய நகராய் விழிஞம் இருந்ததினால், இக்குடைவரை அவர்களாய் குடைவித்ததாய் கருதப்படுகிறது.

(தொடரும்)
_______________
உதவிய தரவுகள்
1.வேளிர் வரலாறு
2.பாண்டியர் செப்பேடுகள் பத்து
3.தென்மாவட்ட குடைவரைகள்
4. ஆய் மன்னர்கள் நான்கு செப்பேடுகள் மற்றும் சில சேதிகள் – ச. அனந்த சுப்பிரமணியன்( திணை ஜூன் 2015- ஆகஸ்டு 2015 இதழில் வெளிவந்த கட்டுரை)
| குறுநிலத் தலைவர்கள் #3 | 

 
 