Skip to content
Home » மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #8 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 1

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #8 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 1

இந்தியா விசித்திரமானது என்ற முன் அனுமானத்தை மாற்றும் நோக்கில் என் அடுத்த (இந்த) விரிவுரையில் சில விஷயங்கள் சொல்கிறேன். இங்கிலாந்தில் நாம் காணும் அறிவுத் தேடல் மிகுந்த வாழ்க்கைக்கு இந்தியா முற்றிலும் மாறுபட்டது; அங்கு 20-25 ஆண்டுகள் குடிமைப் பணி அதிகாரியாகப் பணிபுரியும் ஒருவருக்கு ஏதோ நாடு கடத்தப்பட்டதுபோல் தோன்றும். அதை முடிந்த அளவுக்கு அவர் சகித்துக் கொண்டாகவேண்டும் என்ற முன் அனுமானங்களை மாற்றியமைக்க விரும்புகிறேன். உண்மையில் இங்கிலாந்தில் வாழ்க்கையை எவையெல்லாம் மகிழ்ச்சியானதாக ஆக்குகின்றனவோ அந்த மேல் நிலைத் தேடல்களில் இருந்து இந்தியாவுக்குச் செல்பவர்கள் துண்டிக்கப்பட்டுவிடுவார்கள் என்று நம்பப்படுவதை மாற்றியமைக்க விரும்புகிறேன்.

இது அப்படி ஆகத் தேவையே இல்லை. ஆகவும் ஆகாது. உயரிய தேடல் மனம் கொண்ட ஒவ்வொருவரும் இங்கிலாந்தில் வாழ்ந்தால் வாழ்க்கை எவ்வளவு வாழத் தகுந்ததாக இருக்குமோ அதுபோலவே இந்தியாவில் வாழும் வாழ்க்கையையும் மேலானதாக ஆக்கிக்கொள்ள நிச்சயம் முடியும்.

இன்று வேறொரு குயுக்தியான முன் அனுமானத்தையும் சேர்த்தே நாம் மாற்றி அமைக்கவிரும்புகிறேன். ஏனென்றால் அந்த முன் அனுமானம், ஹிந்துக்களுக்கும் அவர்களை ஆண்டுகொண்டிருக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் ஒரு மாபெரும் பனிச் சுவரை உருவாக்கிவிட்டிருக்கிறது. இரு தரப்புக்கும் இடையே பரஸ்பரப் புரிதல், தோழமை சாத்தியமே இல்லை என்று அந்தத் தவறான புரிதல் உருவாக்கி வைத்திருக்கிறது.

இந்தியாவில் ஐரோப்பியரின் வாசம் ஒருவகையில் தார்மிக ஒழுங்குகளில் இருந்து அவர்களைப் பிறழவைக்கும் என்று தவறாக எண்ணப்படுகிறது. ஹிந்துக்கள் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்; நம்மைப்போல் தார்மிக, ஒழுக்க சிந்தனைகள் கொண்டவர்கள் அல்ல; குறிப்பாக உண்மையை மதித்தல் என்ற ஆங்கிலேயர்களின் அடிப்படை குணம் ஹிந்துக்களிடம் அறவே கிடையாது என்றெல்லாம் நம்பப்படுகிறது.

உயர்ந்த லட்சியங்களைக் கொண்ட இங்கிலாந்து இளைஞர்களுக்கு தம்மால் ஒருபோதும் நேசிக்கவோ மரியாதை செலுத்தவோ முடியாத இந்திய உள்ளூர் வாசிகளுடன் (கெளரவமான பெயரில் குறிப்பிட்டிருக்கிறேன் உண்மையாகச் சொல்லப்படும் இழிவு நிறைந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை) வாழ்க்கையைக் கழித்தாகவேண்டியிருக்கும் என்ற எண்ணம் மிகுந்த மனச்சோர்வையே அவர்கள் மனதில் உருவாக்கும். சுய மரியாதை, நேர்மை, உண்மை மீதான வேட்கை இவையெல்லாம் ஹிந்துக்களுக்குக் கிடையாது என்றே இங்கிலாந்து இளைஞர்களுக்குக் கற்றுத் தரப்பட்டிருக்கிறது. எனவே இப்படியானவர்களுடன் கூட்டு முயற்சி, பொது நலன் சார்ந்த செயல்பாடுகள், எல்லாவற்றுக்கும் மேலாக நட்புறவு இவையெல்லாம் சாத்தியமே இல்லை என்றே ஆங்கிலேயர் நினைக்கிறார்கள்.

ஹிந்துக்கள் நம்பகத்தன்மையற்றவர்கள் என்ற என்ற குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுகிறது. அப்படிச் சொல்லிச் சொல்லி அது உண்மையென்றே அனைவராலும் ஏற்றுக்கொள்ளவும்பட்டிருக்கிறது. அதை எதிர்த்துப் போராடுவது அதை மாற்ற முயற்சி செய்வதென்பது எல்லாம் டான் கியோட்டேயின் போரைப்போல் நடைமுறை சாத்தியமே இல்லாததாக கேலிக்குரியதாகவே ஆகிவிட்டிருக்கிறது.

பிற எல்லா குற்றச்சாட்டுகளைப் போலவே ஒட்டுமொத்த தேசத்தினர் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த முன் அனுமானக் குற்றச்சாட்டும் எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றியே முன்வைக்கப்பட்டிருக்கிறது என்று எனக்கு உறுதியாக, முழுவதுமாகத் தெரிந்திருக்காவிட்டால் வெல்லவே முடியாத இந்தப் போரில் நான் இறங்கவே கூடாது. அப்படி வைக்கப்பட்ட இந்தத் தவறான குற்றச்சாட்டு கடந்த காலத்திலும் இப்போதும் இனி வரும் காலங்களிலும் ஆங்கிலேய ஆதிக்கத்தை மனம் கசந்து எதிர்க்கும் ஒருவரால் ஒருபோதும் உருவாக்கிவிடவே முடியாத அளவுக்கான அவதூறாகவே இருந்துவரப்போகிறது.

இந்தியாவுக்கு குடிமைப் பணி அதிகாரியாக அல்லது ராணுவ அதிகாரியாகச் செல்லும் ஓர் ஆங்கிலேய இளைஞர், அங்கு தான் சந்திக்கவிருக்கும் நபர்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள்; பொய்யர்கள்; பிறவிப் பொய்யர்கள் அல்லது அவர்களின் தேசிய குணமே பொய்மைதான்; அவர்களுடைய எந்தவொரு செயலிலும் உண்மையின் துளி கீற்றுகூடத் தென்படாது; அவர்கள் சொல்லும் எதையும் நம்பவே கூடாது என்று முழுமையாக நம்புபவராக இருக்கிறார். ஹிந்துக்களை நேரில் பார்ப்பதற்கு முன்பே இப்படியான எண்ணம் கொண்டவர் எப்படியான வகையில் அவர்களை நடத்துவார் என்பதுபற்றி நமக்கு எந்தவொரு ஐயமும் தேவையே இல்லை.

நம்பகத்தன்மையற்றவர்கள் என்ற எண்ணத்துடன் அவர்களை அணுகும் இவர் அரசாங்கப் பொதுப் பணிகள், அல்லது தனிப்பட்ட விஷயங்கள் சார்ந்து ஹிந்துக்களுடன் தொடர்பில் வரும்போது எப்படியான வெறுப்புடன் அவர்களை நடத்துவார் என்பதை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும் அல்லவா? இப்படியான தவறான எண்ணங்களால் நட்புறவு முறிக்கப்பட்டுவிட்டால் அதைச் சரி செய்வது மிகவும் கடினம். பகைவர்களால் கோதுமை வயல்களில் களைகள் நடப்பட்டுவிட்டால் கோதுமைச் செடிக்குச் சேதமின்றி அவற்றை அப்புறப்படுத்துவது கடினம். இந்தியர்கள் எல்லாரும் பொய்யர்கள் என்பது ஏதோ விவிலிய உண்மை போல் ஆகிவிட்டிருக்கிறது. நான் அந்த மதக் கோட்பாட்டை மறுதலிக்கும் தவறைச் செய்யப் போகிறேன். இதற்கு எனக்கு மன்னிப்பே கிடைக்காது என்பது எனக்கு நன்கு தெரியும்.

இந்தியாவை விட்டுவிடுவோம். இப்படி பொத்தாம் பொதுவாக எந்த தேசத்தைக் குறித்தும் பழி சொல்வதை விட்டொழிக்கவேண்டும். இப்படியான எண்ணங்கள் எல்லாம் விசாலமற்ற, அகந்தை மிகுந்த மனங்களில் இருந்ததே எழுகின்றன. எந்தவித தர்க்க நியாயங்களும் ஆதாரங்களும் இல்லாமல் இந்த முன் அனுமானங்கள் உருவாக்கப்பட்டு நிலை நிறுத்தப்படுகின்றன.

கிரேக்கத்துக்குப் பயணம் செய்த ஒருவர் ஏதேனும் துபாஷியால் ஏமாற்றப்பட்டிருக்கலாம். கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம். அதை வைத்துக்கொண்டு பழங்கால மற்றும் நவீன கிரேக்கர்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள்; கொள்ளையர்கள் என்ற முடிவுக்கு ஒருவர் வந்துவிடமுடியுமா என்ன? அல்லது கிரேக்கர்கள் எல்லாரும் ஏமாற்றையும் கொள்ளையடிப்பையும் ஏற்றுக்கொண்டு நியாயப்படுத்துகிறார்கள் என்று சொல்லிவிடமுடியுமா?

கல்கத்தா, பம்பாய், மதராஸ் பகுதிகளில் நீதியின் முன் கொண்டுவந்து நிறுத்தப்படும் இந்தியர்கள் அல்லது நீதிமன்றங்கள், கடைத்தெருக்களில் காணப்படும் இந்தியர்கள் எல்லாம் உண்மையை நேசிப்பவர்களாகவோ நியாயமாக நடந்துகொள்பவர்களாகவோ இல்லை என்பதால் இந்தியர்கள் எல்லாருமே பொய்யர்கள் என்று சொல்லிவிடமுடியுமா? அதிலும் எதையும் பகுத்தாராய்ந்து பேசும் இன்றைய காலத்தில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது இந்த பிரமாண்ட இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 25 கோடிக்கு மேல் இருக்கும். ஒரு சில ஆயிரம் இந்தியர்கள் திருடியதாகவோ கொலை செய்ததாகவோ உண்மையே பேசவில்லை என்றோ பொய்யை மட்டுமே பேசுகிறார்கள் என்று ஆங்கிலேய நீதிமன்றத்தில் வைத்து விசாரித்ததை வைத்து 25 கோடி இந்தியர்களும் பொய்யர்கள் என்ற முடிவுக்கு வந்துவிடமுடியுமா?

கறுப்பு தோல் கொண்டவரும் வித்தியாசமான உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசுபவருமான நீதிபதி ஒருவரின் முன்பாக இங்கிலாந்து மாலுமி ஒருவர் அவர் செய்த குற்றத்தை தலைகுனிந்து ஒப்புக்கொள்வதாக வைத்துக் கொள்வோம். அந்த ஆங்கிலேயரின் தோழர்கள் அனைவரும் குற்றம் செய்த அந்த ஆங்கிலேயனுக்கு எதிராக உற்சாகத்துடன் உண்மையைச் சொல்லி சாட்சி சொல்லிவிடுவார்களா என்ன?

ஒரு தீர்மானத்துக்கு எப்படி வந்து சேர்கிறோம் என்பது தொடர்பான விதிமுறைகள் பொதுவானவைதான். ஆனால் யாருக்கு, யார் அதை அமல்படுத்தி ஒரு முடிவுக்கு வருகிறார்கள் என்பது இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள் மாறத்தான் செய்யும். ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு பதம் என்ற இந்தியப் பழமொழியை எடுத்துக்கொள்வோம். இதையே மனிதர்களைப் பற்றியும் சொல்லிவிடமுடியுமா? ஒரு ஆங்கிலேய மத போதகர் இங்கிலாந்து கப்பலில் ஒரு ஃப்ரெஞ்சு குழந்தைக்குப் பெயர் சூட்டினார். அந்தக் குழந்தைக்கு மூக்கு நீளமாக இருந்தது. அதை வைத்து அவர் ஃபிரெஞ்சு குழந்தைகள் அனைவருக்குமே மூக்கு நீளமாகவே இருக்கும் என்ற முடிவுக்கு வந்தாரென்றால் எப்படி இருக்கும். நாமும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைவைத்து மனித குலத்தில் ஓரிருவரைப் பார்த்துவிட்டு அனைவரும் அப்படியே என்ற முடிவுக்கே வந்துவிடும் தவறையே செய்தவராகிவிடுவோம்.

ஒட்டு மொத்த இந்தியர்களைக் குறித்தும் ஏதேனும் ஒரு பொதுவான விஷயத்தைச் சொல்லமுடியுமா என்று நான் தீவிரமாக யோசித்துப் பார்க்கிறேன். இந்தியர்கள் எல்லாரும் அல்லது பிராமணர்கள் அனைவரும் அல்லது எல்லா பெளத்தர்களும் என்றெல்லாம் யாரேனும் பேச ஆரம்பித்தால் எனக்குள் உள்ளூர ஒரு நடுக்கத்தை உணர்கிறேன். ஆங்கிலேயர்-ஃப்ரெஞ்சுக்காரர்-ஜெர்மானியர்-ரஷ்யர் ஆகியோருக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளைவிட ஆஃப்கானியர், சீக்கியர், ஹிந்துஸ்தானி, வங்காளி, திராவிடர் ஆகியோருக்கிடையே இருக்கும் வேறுபாடுகள் மிக மிக அதிகம். இருந்தும் இவர்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்றே அடையாளப்படுத்தப்படுகிறார்கள். அனைவருமே ஒரே முன் அனுமானத்துக்குள் திணிக்கவும்படுகிறார்கள். இது மிகப் பெரிய தவறு.

சர் ஜான் மார்ஷல் சொல்லியிருக்கும் ஒரு விஷயத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். பல பிரிவுகளைச் சேர்ந்தவர்களைக் கலந்து கட்டி ஹிந்துக்கள் என்று நாம் அடையாளப்படுத்தி, அவமரியாதை செய்தும் வரும் நபர்களிடையே எத்தனை மாறுபட்ட குணாம்சங்கள் இருக்கின்றன என்பது திறந்த கண்கள் (மனம்) கொண்டு பார்க்கும் ஒருவருக்கு நன்கு புரியவே செய்யும்.

வங்காளிகள் உடலளவில் பலம் குறைந்தவர்கள்; மனதளவில் பயந்த சுபாவம் கொண்டவர்கள். ஹிந்துக்களிலேயே இவர்கள் தோற்றத்திலும் குணத்திலும் மிகவும் கீழ்நிலையில் இருப்பவர்கள் என்று சொல்லிவிட்டு மேலும் சொல்கிறார்: ‘ஆனால் பிஹாருக்குள் நீங்கள் நுழைந்தால் அங்கிருக்கும் ஹிந்துக்கள் எல்லாம் இதமாகப் பேசும் குணம் கொண்டவர்கள்; உடலளவில் பெரிய ஆகிருதியோ வலிமையோ கொண்டவர்கள் அல்ல. எனினும் மனதளவில் அற்புதமான எண்ணங்கள் கொண்டவர்கள். வீரம், தாராள சிந்தை, மனிதாபிமானம் கொண்டவர்கள். அவர்கள் உண்மைத்தன்மையானது அவர்களின் துணிச்சலைப் போலவே போற்றுதலுக்குரியது’.

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures
பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *