Skip to content
Home » புதுவையின் கதை #6 – புதுவைப் பகுதியில் காடவராயரும் சம்புவராயரும்

புதுவையின் கதை #6 – புதுவைப் பகுதியில் காடவராயரும் சம்புவராயரும்

சோழர்களின் கலைநயம்மிக்க கோயில்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்களைத் தாங்கி நிற்கும் திரிபுனவமாதேவிச் சதுர்வேதி மங்கலம் (திருபுவனை, மதகடிப்பட்டு, திருவாண்டார்கோயில்) குறித்து கடந்த இரண்டு பதிவுகளில் பேசினோம். இவற்றிற்கு அடுத்த நிலையில் சோழரின் தடயங்களுடன் காணப்படுவது திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலாகும்.

திருநள்ளாறு

இங்கிருக்கும் சோழர்காலக் கல்வெட்டுக்கள் இத்தலத்து இறைவனைத் திருநள்ளாறுடையார் என்று அழைக்கின்றன. இங்குள்ள முதலாம் இராஜாதிராஜன் 35-ம் ஆட்சியாண்டு (கி.பி.1053) கல்வெட்டு, மாசி மகம், வைகாசி விசாகம் ஆகிய திருவிழா நாட்களில் கோயிலில் ஆரியக்கூத்து ஆடுவதற்கு (இவர்களுக்கும் இவர்கள் கூட்டத்தார்க்கும்) நெல்லும், ஒப்பனை செய்வதற்கு அரிசியும் எண்ணையும் கொடுத்தது பற்றிச் சொல்கிறது. ஆரியக் கூத்து – சோழர் காலத்தில் புகழ்பெற்றிருந்த கூத்துக்கலைகளில் ஒன்றாகும். இந்தக் கலை திருநள்ளாற்றுக் கோயிலில் 11-ம் நூற்றாண்டளவில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இரண்டாம் இராஜேந்திரன் மேஷம், அபரபஷம், சஷ்டி, உத்திராடம், புதன் கிழமை, கி.பி.19.04.1055. உலகுடையார் அகப்பரிவாரத்துப் பெண்டாட்டி, தேவன் புவனி மாணிக்கம் என்பாள் திருநள்ளாற்றுக் கோயிலில் எழுந்தருளப் பண்ணிய திருபுவன சுந்தரதேவர்க்குக் காயாக்குடிச் சபையார் நிலம் இறையிலி செய்து கொடுத்ததைச் சொல்கிறது. இங்கிருக்கும் இம்மன்னனது மற்றொரு கல்வெட்டு (கி.பி.1059) இராஜேந்திரசோழ விண்ணகர ஆழ்வார் கோயிலைக் குறிப்பிடுகிறது. திருநள்ளாற்றில் இப்படியான விஷ்ணுக்கோயில் ஒன்று அக்காலத்தில் இருந்திருக்கிறது.

முதலாம் குலோத்துங்கச் சோழன் கல்வெட்டு (கி.பி.1110) சுங்கம் தவிர்த்த சோழ வளாகம் எனும் பெயரில் நிலம் (திருநந்தவனம்) இருந்ததைத் தெரிவிக்கிறது. விக்கிரம சோழனின் கல்வெட்டு (கி.பி.1126) குலோத்துங்கச்சோழ விண்ணகர் எனும் விஷ்ணுக் கோயில் இருந்ததைக் குறிப்பிடுகிறது.

திருநள்ளாறு கோயிலில் உள்ள கல்வெட்டுகளிலேயே மிகவும் நீண்டது, விக்கிர சோழனின் 15-ம் ஆட்சியாண்டு (கி.பி.26.01.1133) கல்வெட்டாகும். இக்கல்வெட்டு 148 வரிகளில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சோழ வம்சம் மேம்படவும், போர்களில் அவர்கள் வெற்றியடையவும், சைவம் தழைத்தோங்கவும், கிராமம் செழிப்புற வேண்டும் என்பதற்காகவும் இவ்வூர் தில்லைநாயக பட்டண், மூவாயிர பட்டண், திருச்சிற்றம்பல பட்டண், நாற்பத்தெண்ணாயிர பண்டிதன் உள்ளிட்டோர் செய்த நிவந்தம் பற்றி இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி.1135) கல்வெட்டு, பச்சைப் பொதியநல்லூர் எனும் ஊரின் பெயரைக்குறிப்பிடுகிறது. திருஞானசம்பந்தர் பாடிய ‘பச்சைப் பதிகத்தின்’ பெயரால் இந்த ஊர் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இராஜராஜன் 19-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி.1165) இறைவியின் பெயரை ‘போகமார்த்த பூண்முலையால்’ எனக்குறிப்பிடுகிறது. தேவாரப் பதிகத்தில் இறைவி இப்படித்தான் குறிப்பிடப்படுகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கோயில் தானத்தாரும் மாஹேஸ்வரரும் நாடுடைநாயகன் மண்டபத்தில் கூடி பூசை காரியம் தொடர்பாக ஆராய்ந்தனர். அப்போது, கோயில் சிவப்பிராமணர் பழைய நிவந்தத்திற்கான அரிசி, எண்ணெய் முதலானவற்றை அளிக்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்குத் தண்டம் விதிக்கப்பட்டது. பின்னர் அந்தத் தண்டத்தொகையில் இருந்து நிலம் வாங்கி அந்நிலத்தால் வரும் வருவாயைக் கொண்டு முன் நிறுத்தப்பட்ட நிவந்தங்களை மீண்டும் நடத்தி இருக்கின்றனர். இந்தத் தகவலை, மூன்றாம் இராஜராஜன் ஆட்சிக்காலத்தில் துலா, சதயம், புதன்கிழமை, கி.பி. 16.10.1241 அன்று பொறிக்கப்பட்ட கல்வெட்டுத்தெரிவிக்கிறது. திருவீதி ஆண்டார்கள், தேவரடியார், ஸ்ரீபாதந் தாங்குவோர், தேவாரம் பாடுவோர், கோயில் கணக்கர்கள் முதலானோர் இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டிருக்கின்றனர். கோயிலில் விளக்கெரிக்க நெய் மட்டுமின்றி எள் எண்ணெய், மர எண்ணெய் ஆகியனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நிலதானம் குறித்த மூன்றாம் இராஜேந்திரன் 4-ம் ஆட்சியாண்டு (கி.பி.25.10.1249). கல்வெட்டில் திருநந்தவனம் ஒன்றின் பெயர் ‘ஏடெதிரிட்டான்’ என்பதாகும். இது திருஞானசம்பந்தருக்கு வழங்கப்படும் பெயராகும். திருஞானசம்பந்தர் சமணரோடு வாதிட்டபோது ஏட்டை ஆற்றிலிட அது நீரோட்டத்தை எதிர்த்துச்சென்றது எனும் நிகழ்வின் அடிப்படையில் இப்பெயர் வந்திருக்கலாம். இந்த ஆணையில் கையெழுத்து இட்டவர்களுள் ஒருவரது பெயர் காவியங்கண்ணிபங்கன். சுந்தரமூர்த்தி நாயனார் திருநள்ளாற்று இறைவனை ‘காவியங்கண்ணிபங்கன்’ எனக் குறிப்பிடுகிறார். மக்களும் இப்பெயரை வைத்துக்கொள்ளும் வழக்கம் அப்போது இருந்திருக்கிறது.

மற்றப் பகுதிகளில்

வில்லியனூர் (இதன் பழையபெயர் வில்லியநல்லூர்) திருக்காமீஸ்வரர் கோயிலில் உள்ள கவிதை வடிவிலான முதலாம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி.1070) கல்வெட்டில், ‘ஒன்பது நூற்றாண்டினுடனே’ நூற்றாண்டு எனும் தமிழ்ச்சொல் முதன் முதலாக ஆளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பண்டசோழநல்லூரில் இருக்கும் முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டு (கி.பி.1077-78) அந்த ஊரின் பழைய பெயர் முடவன்பள்ளி என்பதாகத் தெரிவிக்கிறது. திருக்காஞ்சியில் உள்ள இதே மன்னனின் (கி.பி.114) கல்வெட்டு, இப்பகுதியில் பெருங்காற்று அடித்ததால் ஏரியில் உடைப்பு ஏற்பட்டபோது, மண் அணைத்துக் கரை ஏற்படுத்தி, அதற்கு ‘குலோத்துங்கச் சோழனின்’ பெயர் சூட்டப்பட்டதைத் தெரிவிக்கிறது.

புதுவை நகரப்பகுதியில், புனித ஜெயராக்கினி மாதா கோயில் வளாகத்துக்குள் மூன்று கற்களில் நான்கு துண்டுகளாகக் கி.பி. 10, 12, 13 மற்றும் 14-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, கொத்தானப்பாக்கம் எனும் (திருபுவனைக்கு அருகிலுள்ள) ஊரைக் குறிப்பிடுகிறது. ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத் தோட்டத்திலுள்ள சிதைந்த கல்வெட்டின் காலம் தோராயமாக கி.பி.10-ம் நூற்றாண்டு ஆகலாம்.

இவை மட்டுமல்லாமல் புதுவைப் பிரதேசத்தில் நல்லம்பல், மாதூர், நெடுங்காடு, கீழ்-மேல்காசாக்குடி, தருமபுரம், காரைக்கால், திருமலைராயன்பட்டினம் உள்ளிட்ட இடங்களிலுள்ள சிவாலயங்களிலும் சோழர்காலக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

பிற்காலப் பல்லவர்

காடவராயர். தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டம், சேந்தமங்கலம் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தியவர்கள். பல்லவர் வழிவந்தவர்கள். இதனாலேயே பிற்காலப் பல்லவர் என்று அழைக்கப்பட்டனர். காடவர்களது ஆட்சி கி.பி.1076 முதல் கி.பி.1279 வரை நடந்துள்ளது. தொடக்கத்தில் சோழர் மற்றும் பாண்டியர்களின் ஆதரவாளர்களாக இருந்த காடவராயர், பின்னர் தன்னாட்சி செலுத்த முற்பட்டனர். பாண்டிய மன்னனிடம் தோற்றோடிய மூன்றாம் இராஜராஜனை, காடவராயக் கோப்பெருஞ்சிங்கன், தெள்ளாற்றில் வழிமறித்துக் கைதுசெய்த நிகழ்வு குறிப்பிடத்தக்கதாகும். ‘இதுதான் சோழப்பேரரசின் அடித்தளத்தையே தகர்த்து அதனுடைய வீழ்ச்சியைத் துரிதப்படுத்தியது’ என்பார் வரலாற்று ஆசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி.

காடவராயக் கோப்பெருஞ்சிங்கனைப் ‘பல்லவ வம்சத்தின் கடைசிமன்னன்’ எனக் குறிப்பிடுவார் வரலாற்று ஆசிரியர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம். ‘கோப்பெருஞ்சிங்கன் ஒருவரல்ல இருவர்’ என உறுதியாகச் சொல்லும் வரலாற்று ஆய்வாளர் நடன.காசிநாதன், சிதம்பரம் கிழக்குக் கோபுரத்திலுள்ள (இக்கோபுரம் கோப்பெருஞ் சிங்கனால் எடுக்கப்பட்டதாகும்) இருவரது உருவங்களைச் சுட்டிக்காட்டி தந்தை, மகன் என்பார். விழுப்புரம் மாவட்டம் ஆ.கூடலூர், ஆற்காடு கிராமங்களில் கோப்பெருஞ் சிங்கன் சிற்பங்கள் கட்டுரை ஆசிரியரின் களஆய்வுகளில் (2022) கண்டறியப்பட்டன.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக விழுப்புரம்,கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் காடவராயர்களின் வரலாற்றுத் தடயங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. புதுவை மண்ணில் திருபுவனை, வில்லியனூர், திருநள்ளாறு உள்ளிட்ட இடங்களில் காடவராயக் கோப்பெருஞ்சிங்கன் பெயரை நாம் பார்க்க முடிகிறது.

திருபுவனை வரதராஜப்பெருமாள் கோயிலில் உள்ள முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டு (கி.பி.1232-43) தமிழ், வடமொழியில் அமைந்துள்ளது. இதில், திருபுவன மாதேவிச்சதுர்வேதி மங்கலத்தில் ஏரிகளின் கரைகள் பல இடங்களில் உடைந்து, மதகுகளும் முறிந்து, கலிங்குகளும் அழிந்து கிடக்கும்போது இவற்றை எல்லாம் சீரமைத்த காடரவாயக் கோப்பெருஞ்சிங்கன், ஏரிக்கரையில் ஹேரம்ப கணபதிக்குக் கற்கோயில் எழுப்பினார் எனும் தகவல் இடம்பெற்றுள்ளது.

ஹேரம்ப கணபதி- கணபதியின் மிகவும் பிரசித்தமான, வித்தியாசமான வடிவங்களில் இதுவும் ஒன்று. ஐந்து முகங்கள், பத்து கைகளுடன் காட்சியளிப்பவர். இவரது வாகனம் சிங்கம். ஆம். சிம்மத்தின்மீது இந்தக் கணபதி அமர்ந்திருப்பார். தமிழ்நாட்டின் மிகப்பழமையான ஹேரம்ப கணபதிச்சிற்பம், மதுரைக்கு அருகேயுள்ள திருப்பரங்குன்றம் குடைவரைக் கோயிலில் அமைந்துள்ளது. கோப்பெருஞ்சிங்கன் இந்தக் கணபதிக்குக் கோயில் எடுத்ததற்கான காரணம் தெரியவில்லை. இப்படியான எந்தக்கோயிலும் திருபுவனைப் பகுதியில் தற்போது காணக்கிடைக்கவில்லை!

திருவாண்டார் கோயிலிலுள்ள கோப்பெருஞ்சிங்கன் புகழ்பாடும் துண்டுக் கல்வெட்டு ஒன்றும், ஏரி, மதகுகள், கலிங்குகள் உடைந்தத் தகவலைச்சொல்கிறது.

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலுள்ள கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டொன்று (13-ம் நூற்றாண்டு) ‘அவனி ஆளப்பிறந்தான்’ எனும் புதிய பிராமணர் குடியிருப்பை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ‘அவனி ஆளப்பிறந்தான்’ என்பது கோப்பெருஞ் சிங்கனின் விருதுப் பெயர்களுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்காணும் கோயிலின் அர்த்தமண்டபத்திலுள்ள கல்வெட்டுக்களில் ஒன்று, (கோப்பெருஞ்சிங்கன் 6-ம் ஆட்சியாண்டு கி.பி.1249) ‘அழகிய சீயர் கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு’ எனக்குறிப்பிடுகிறது. அழகிய சீயன் – இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் தந்தை ஆகலாம். இக்கல்வெட்டினைச் சுட்டிக்காட்டும் ஆய்வாளர் நடன.காசிநாதன், இரு கோப்பெருஞ்சிங்கன்கள் இருந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது என்கிறார்.

இதேகாலக்கட்டத்தைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டில், கையெழுத்திட்டவர்களில் ஒருவரது பெயர், கோப்பெருஞ்சிங்கத்தேவன் என்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கிருக்கும் இம்மன்னனின் 8-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி.1251) பூங்குன்றத்து கோட்டூர்கிழான் வீதிவிடங்கன் திருச்சிற்றம்பலமுடையானான நந்தியராயன் என்பவன், திருக்காமீஸ்வரமுடையார் கோயிலின் திருமண்டபம், கல்லால் ஆன திருப்பணி செய்ததைக் குறிப்பிடுகிறது.

திருநள்ளாறு, தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் சிதைந்த நிலையிலுள்ள 13-ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் இரண்டு, வீரமோகன் காடவராயன் மனைவி அழகிய நம்பிராட்டி என்பவர் செய்த திருப்பணிகள் குறித்துச்சொல்கின்றன. புதுவை அருகே கரியமாணிக்கம் குளக்கரைப் படிக்கட்டில், கோப்பெருஞ்சிங்கனின் 21-ம் ஆட்சியாண்டு (கி.பி.1254) சிதைந்த கல்வெட்டுக் காணப்படுகிறது.

புதுவைப் பகுதியில் பிற்காலப் பல்லவரின் (காடவராயர்) வரலாற்றுத் தடயங்கள் காணப்படுவது ‘சோழரை வெற்றிகொண்டு குறுகிய காலத்திற்குள் தம் செல்வாக்கை நிலைநாட்டச் செய்த முயற்சிகளாகவே கருதலாம்’ என்கிறார் புதுவை மாநிலக் கல்வெட்டுக்களைத் தொகுத்த பேராசிரியர் கோ.விஜயவேணுகோபால்.

சம்புவராயர்

காடவராயர்களைப் போலவே இவர்களும் தற்போதைய விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர்கள். தொடக்கத்தில் இவர்களது தலைநகரம் விழுப்புரம் மாவட்டம், முன்னூறு ஆகும். பிறகு, திருவண்ணாமலை மாவட்டம் படைவீட்டைத் தலைநகராக்கிக் கொண்டனர். 14-ம் நூற்றாண்டில் தனித்து ஆட்சியளிக்கும் செல்வாக்குப் பெற்றிருந்த சம்புவராயர்கள் முதலில் சோழருக்கும் பின்னாளில் பாண்டியருக்கும் துணையாக நின்றனர். இவர்களுக்கான வரலாற்றுத் தரவுகள் 12-ம் நூற்றாண்டில் இருந்தே காணப்படுகின்றன.

புதுவையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில், குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் சம்புரவாயர் திருப்பணிகள், கல்வெட்டுக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால், புதுவைப் பகுதியில் இவர்களைப் பார்ப்பது அரிதாகவே இருக்கிறது. வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் மட்டுமே சம்புவராயர் கல்வெட்டுக்களை நம்மால் பார்க்க முடிகிறது.

திருக்காமீஸ்வரர்க் கோயிலின் முகமண்டபத்தில் உள்ள இராஜநாராயண சம்புவராயரின் 3-ம் ஆட்சியாண்டு (கி.பி.1340) கல்வெட்டு, ‘பறியனேரி’ எனும் ஏரியைக் குறிப்பிடுகிறது. இந்த ஏரிதான் இன்று புதுவையில் புகழ்பெற்று விளங்கும் ஊசுட்டேரி என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மன்னனின் 10-ம் ஆட்சியாண்டு (கி.பி.1347) கல்வெட்டில், கோயிலைச் சேர்ந்த நன்செய், புன்செய் நிலங்கள் சிலவற்றிற்கு அரசன் வரிவிலக்கு அளித்த தகவல் இடம்பெற்றுள்ளது. இதில் வாசல் வரி, பொன் வரி, நாட்டு வரி, இனவரி, மற்கடம் வரி, எருது கிடா வரி உள்ளிட்ட வரிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், ‘பழம் கல்வெட்டுப்படி’ எனும் வாசகமும் இடம்பெற்றுள்ளது. பழைய கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நிலங்களும் இதில் அடங்கும் என்பது இதன் பொருளாகும். புதிய ஆணைப் பிறப்பிக்கப்படும்போது, பழைய கல்வெட்டுக்களையும் கவனத்தில் கொண்டு இருக்கின்றனர் என்பதற்கு இந்த ஆணை உதாரணமாகும்!

காடவராயர், சம்புவராயர்களுக்கு இடையே புதுவைப் பகுதியில் நடந்த, பாண்டியர் ஆட்சி குறித்தும், அவர்களைத் தொடர்ந்து புதுவை மண்ணில் செல்வாக்கினைச் செலுத்திய விஜயநகர் குறித்தும் அடுத்தடுத்தப் பதிவுகளில் பேசுவோம்!

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *