Skip to content
Home » வரலாற்றின் கதை #3 – தொடக்கங்கள்

வரலாற்றின் கதை #3 – தொடக்கங்கள்

தொடக்கம் குறித்த கேள்விகளை எழுப்புவது எளிது. விடை கண்டுபிடிப்பது கடினம். இருந்தும், மனித மனம் தீரா ஆர்வத்தோடு இது எப்படித் தொடங்கியது, அது எப்படித் தொடங்கியது என்று எல்லாவற்றைக் குறித்தும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இது இயல்பானதுதான் என்கிறார் நீலகண்ட சாஸ்திரி.

வரலாற்றின் தொடக்கப்புள்ளி எது? வரலாறு உதித்தது இங்கேதான் என்று எந்த இடத்தையும் முதல் வரலாற்றுப் பிரதியை உருவாக்கியவர் இவரே என்று எவரையும் திட்டவட்டமாகக் குறிப்பிடுவது கடினம். வரலாற்றின் ஆரம்பப் புள்ளி என்று கற்பனையை வேண்டுமானால் குறிப்பிடமுடியும். கடந்த காலத்தின் நினைவுகளைக் கற்பனைக் கூட்டி வண்ணமயமான கதைப் பாடல்களாகவும் தொன்மக் கதைகளாகவும் பண்டைய மக்கள் உருமாற்றினர். அதுதான் அவர்களுக்கு வரலாறாகத் தோன்றியிருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான நிகழ்வுகளை அழகிய கதைகளாகவும் பாடல்களாகவும் உருமாற்றும்போது நினைவில் வைத்துக்கொள்வது எளிது; மற்றவர்களுக்குச் சுலபமாகக் கடத்தவும் முடியும்.

எழுத்துமுறை கண்டுபிடிக்கப்படும்வரை வாய்வழிக் கதைகளே வரலாறாகத் தோற்றம் கொண்டிருந்தன. எழுத்தில் பதிவு செய்யும் முறையைச் சில சமூகங்கள் கடைபிடிக்கத் தொடங்கியபோது அது மேலதிகப் பயன் தருவதாக அமைந்தது. ஒரு கதையையோ பாடலையோ கேட்டு சிறிது காலம் கழித்து. நினைவிலிருந்து மீட்டெடுக்கும்போது பிசகுகளும் மாற்றங்களும் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. எழுத்தில் பதிவு செய்யும்போது நிரந்தரத்தன்மை ஏற்பட்டுவிடுகிறது. தவிரவும், வாய்வழிக்கதைகள் சிறு குழுக்களிடையே தழைத்திருக்குமே தவிர தூர தேசங்களுக்கு அவ்வளவு எளிதில் சென்று சேராது. எழுதப்பட்ட கதைகளுக்கு எல்லைகள் கிடையாது. யாரெல்லாம் வாசிக்க முடியுமோ அவர்களுக்கெல்லாம் சென்று சேர்ந்துகொண்டே இருக்கும். மனிதப் பண்பாட்டு வரலாற்றில் எழுத்து, சந்தேகமின்றி ஒரு புதிய மைல்கல்.

0

வரலாற்று மரபு கிரேக்கத்திலிருந்து தொடங்குகிறது என்று ஐரோப்பியர்கள் பெருமிதம் கொள்வதுண்டு. ஆனால் எகிப்து, மெசபடோமியா, சிரியா ஆகிய பகுதிகளில் கடந்த காலத்தைப் பதிவு செய்யும் வழக்கம் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டது. ஹோமருக்குச் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்ட ஒரு காவியம், கில்காமேஷ். எழுத்தில் கிடைக்கும் முதல் கில்காமேஷ் பிரதி பொஆமு 2100 ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சாகசம், வீரம், அறம், துயர் அனைத்தையும் உள்ளடக்கிய அபாரமான கதைப்பாடல் இது. கில்காமேஷ் நாம் அறிந்த முதல் நாயகனா என்று தெரியாது. ஆனால் முதல் துயர நாயகன் என்று சொல்லமுடியும் என்கிறார் கில்காமேஷை மொழிபெயர்த்த என்.கே. சாண்டர்ஸ். மெசபடோமியாவைச் சேர்ந்த உருக் எனும் சுமேரிய நகரின் மன்னர், கில்காமேஷ். பாதி கடவுள், பாதி மனிதன். எந்த அளவுக்கு மக்கள் அவரை நேசித்தார்களோ அதே அளவுக்கு அவரைக் கண்டு அஞ்சியிருக்கிறார்கள். தனது நண்பன் என்கிடுவின் மரணத்தால் பாதிக்கப்பட்ட கில்காமேஷ், சாகாவரம் வேண்டும் எனும் துடிப்போடு மேற்கொள்ளும் பயணம், மரணத்தை வெல்லமுடியாது எனும் கசப்பான உண்மையை ஏற்பதில் வந்து முடிவடைகிறது.

அக்காடிய மொழியில் இயற்றப்பட்ட இந்த முற்றுப்பெறாத காவியத்தை இலக்கியவாதிகள் மட்டுமின்றி வரலாற்றாளர்களும் ஆராய்ந்து வருகின்றர். காரணம், பல அசாதாரணமான செயல்கள் இடம்பெற்றிருந்தாலும் கில்காமேஷ் முழுக் கற்பனை கதையல்ல. சுமேரிய மன்னர்களின் பட்டியலில் கில்காமேஷின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவர் ஆண்டதாகச் சொல்லப்பட்ட காலம் (126 ஆண்டுகள்) அசாதாரணமானதாக இருக்கிறது.

0

யூத மரபுக்கென்று பண்டைய வரலாற்றெழுதியலில் ஓர் இடம் இருக்கிறது. விவிலியச் சட்ட நூல்களின் தொகுப்பான எபிரேய விவிலியம் (டனாக்) தனித்தன்மை வாய்ந்த ஒரு பிரதி. யூதர்களின் புனித நூல், கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாடு. பொஆமு 10 முதல் 6ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இயற்றப்பட்ட இந்தப் பிரதியில் வரலாற்றின் சில கூறுகளைக் காணலாம். உலகம் உருவான தருணத்திலிருந்து ஜெருசலேமின் வீழ்ச்சி (பொஆமு 586) வரையிலான நிகழ்வுகள் காலவரிசைப்படி விவரிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு விரிந்த அளவில் ஒரு நிலப்பரப்பின் கதை இதற்குமுன்பு சொல்லப்பட்டதில்லை என்பதைக் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது எபிரேய விவிலயத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளமுடியும். தேசங்களின் வரலாற்றை நவீன முறையில் எழுதும் வழக்கம் பின்னர் உருவாகி வந்த ஒன்று. அவ்வழக்கத்துக்கு முன்னோடியாக யூதர்கள் திகழ்ந்தனர்.

யூதர்கள் குறித்த வரலாற்றுத் தகவல்கள் மிகுதியாக இடம்பெற்றிருக்கின்றன என்றாலும் இன்னொரு பக்கம் தொன்மக் கதைகளும் தாராளமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. மனிதனிடம் முடிவடைந்தாலும் கடவுளிடமிருந்துதான் தொடங்குகிறது இப்பிரதி. கடவுள் எவ்வாறு உலகைப் படைத்தார் என்பது விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதிப் பகுதியான ஜெருசலேமின் வீழ்ச்சியில் கடவுள் தோன்றவில்லை. பாபிலோனியாவால் ஜெருசலேம் முற்றுகையிடப்பட்டதும் வீழ்த்தப்பட்டதும் விவரிக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் நடந்ததுதான். கற்பனை மாந்தர்கள் ஒரு பக்கம் வருகிறார்கள். இன்னொரு பக்கம், பல வரலாற்று மாந்தர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

‘மனிதச் செயல்பாடுகளைவிடக் கடவுள்களின் செயல்பாடுகளே இப்பிரதிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மனிதர்கள் குறித்து மனிதர்களுக்காக இயற்றப்பட்டவை என்பதைவிட மனிதர்கள் கடவுளைப் புரிந்துகொள்வதற்காக இயற்றப்பட்ட பிரதிகள் என்றுதான் இவற்றை அழைக்கமுடியும். இத்தகைய பிரதிகளை வரலாறு என்று அழைக்க இயலாது. பண்டைய சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, எபிரேயப் பதிவுகளை பகுதியளவிலான வரலாறு என்று வேண்டுமானால் அழைக்கலாம். உண்மையான வரலாறு 4000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்க முடியாது. வரலாறு எனும் சமூக அறிவியல் துறை ஒரு நவீன கண்டுபிடிப்பு ’ என்கிறார் ஆங்கிலேய வரலாற்றாளரும் தத்துவவியலாளருமான ஆர்.ஜி. காலிங்வுட்.

வரலாற்றுத் தகவல்கள் இருப்பதாலேயே இவற்றையெல்லாம் வரலாறாகக் கொள்ளமுடியாது. கதைகள் இருப்பதாலேயே இவற்றை வரலாற்றாளர்கள் புறக்கணிக்கவும் முடியாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஓரிடத்தில் கற்பனையும் உண்மையும் கலந்த பிரதிகள் உயிர்த்திருக்கின்றன. இப்பிரதிகளில் விருப்பு வெறுப்பற்ற அணுகுமுறை கிடையாது. வேண்டுபவர்களை உயர்த்தியும் வேண்டாதவர்களைத் தாழ்த்தியும் பார்க்கும் போக்கே நிலவியிருக்கிறது. கடந்த காலம் குறித்து என்ன எழுதப்பட்டிருந்தாலும் அதை வரலாறு என்று நாம் ஏற்றுக்கொண்டுவிடக்கூடாது. கிரேக்க வரலாற்றெழுதியல் தோன்றுவதற்கு முந்தைய பிரதிகளை இந்தப் பின்னணியில்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் காலிங்வுட்.

0

மேற்கத்திய நாகரிகத்தின் தொட்டில் என்று கிரேக்கம் அழைக்கப்படுகிறது. இலக்கியம், ஜனநாயகம், வரலாறு, தத்துவம், அரசியல், அறிவியல் என்று தொடங்கி அனைத்துத் துறைகளும் கிரேக்கத்தின் மடியில்தான் பிறந்து, வளர்ந்து, தழைத்தன என்பது மேற்கத்திய சமூகங்களின் பொதுவான நம்பிக்கை.

மேற்கத்திய வரலாற்றுப் பதிவுகளை ஐந்து பிரிவுகளின்கீழ் தொகுக்கமுடியும். கிரேக்கச் செவ்வியல் பதிவுகள், கிரேக்க ரோமப் பதிவுகள், ரோமப் பதிவுகள், யூதப் பதிவுகள், கிறிஸ்தவப் பதிவுகள். கிரேக்கச் செவ்வியல் காலத்தின் தொடக்கத்திலிருந்து (பொஆமு 6-5ஆம் நூற்றாண்டு) ரோமப் பேரரசின் வீழ்ச்சி (பொஆ 6-5ஆம் நூற்றாண்டு) வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த பதிவுகள் இவை. உருவானவை ஏராளம் என்றாலும் கிடைத்திருப்பவை குறைவுதான்.

நாம் பார்த்த பிற மரபுகள்போலவே கிரேக்க வரலாற்று மரபும் வாய்வழிக்கதைகளிலிருந்தே தொடங்குகிறது. சுமேரியர்களுக்கு கில்காமேஷ் என்றால் கிரேக்கர்களுக்கு ஹோமர் (பொஆமு 8ஆம் நூற்றாண்டு). கில்காமேஷ் போலவே ஹோமரின் இலியட், ஒடிசி இரண்டும் வாய்மொழிக் கதைகளாக நீண்டகாலம் மக்களிடையே புழங்கி பின்னர் எழுத்து வடிவம் பெற்றவை. கில்காமேஷ்போலவே இவற்றிலும் கடவுள்கள் வருகிறார்கள். கில்காமேஷை இயற்றியவர் யார் என்பது தெரியாது. ஹோமர் என்றொருவர் (ஒருவரா, சிலரா, பலரா?) இருந்தார் என்பதுகூட உறுதியானதல்ல. டிரோஜன் போர் எனும் உண்மை நிகழ்வுதான் இலியட், ஒடிசி இரண்டுக்குமான அடிப்படை என்றாலும் காலிங்வுட் வரையறுப்பதுபோல் இவை வரலாற்றுப் பிரதிகள் கிடையாது. கடந்த காலம் குறித்த நினைவுகளிலிருந்து கிளர்த்தெழுந்த செழிப்பான கற்பனைக் கதைகள்.

0

நாம் இதுவரை பார்த்த பிரதிகளில் சில பொதுப்பண்புகளைக் காணமுடியும். கடவுள்களும் அரைக் கடவுள்களும் அசாதாரண ஆற்றல்மிக்க ஆட்சியாளர்களும் பண்டைய படைப்புகளில் மிகுந்திருந்தனர். ஆட்சியாளர்களின் பட்டியல், குல வரிசை போன்றவற்றிலும் மிகை கலந்தே இருந்தது. கற்பனைக்கும் உண்மைக்கும் இடையில் எந்த எல்லைக்கோட்டையும் அப்போதைய மக்கள் உருவாக்கிக்கொள்ளவில்லை.

கில்காமேஷ் தொடங்கி ஒடிசி வரையிலான படைப்புகளில் இயற்கை ஒரு முக்கியச் சக்தியாகத் திகழ்கிறது. இன்று நாம் இயற்கையிலிருந்து விலகி நிற்கிறோம். அப்போதைய மக்கள் இயற்கையைத் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாகக் கண்டனர். இடி, மின்னல், மழை, வெள்ளம் அனைத்தும் அவர்களுக்கு இயற்கையின் உயிரோட்டமான செயல்பாடுகள்.

வரலாற்றுக்கு முந்தைய மக்களின் சிந்தனையோட்டத்தில் மூன்று பிரதான அம்சங்கள் காணப்படுகின்றன என்கிறார் நவீன வரலாற்றெழுதியல் குறித்த விரிவானதோர் அறிமுக நூலை எழுதியிருக்கும் சஷி பூஷன் உபாத்யாய். முதலாவது, காலம் குறித்த பார்வை. காலத்தைத் தொடர்ந்து சுழன்றுகொண்டே இருக்கும் சக்கரமாகக் அவர்கள் கண்டனர். முன்பொரு காலத்தில் என்னவெல்லாம் நடந்ததோ அவைதான் இன்றும் நடந்துகொண்டிருக்கின்றன. இனியும் நடக்கும். மேலே இருப்பது கீழே வரும், கீழே இருப்பது மேலே வரும். இதுதான் வாழ்க்கை.

இரண்டாவது, தொன்மத்தின்மீதான மரியாதை. கடந்த காலம் தொன்மங்களிலிருந்து தொடங்குகிறது என்று பண்டைய மக்கள் நம்பினார்கள். அசாத்தியங்களும் அதிசயங்களும் அவர்களைப் பொறுத்தவரை மனித வாழ்வோடு ஒன்று கலந்தவை, இயல்பானவை. மூன்றாவது, மனித ஆற்றல் குறித்த பார்வை. மனிதர்கள் ஆள்பவர்கள் அல்லர், ஆளப்படுபவர்கள். நன்மையும் தீமையும் மனிதர்களின் செயல்பாடுகள்மூலம் வருபவை அல்ல. கடவுள்களும் இன்னபிற இயற்கைச் சக்திகளும்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். எனவே மனித ஆற்றல் எல்லைக்குட்பட்டது என்று அவர்கள் கருதினார்கள்.

இந்தப் பொதுத்தன்மைகளிலிருந்து பாம்பு தன் சட்டையை உரிப்பதுபோல் உரித்து, விடுபடுவதற்கு நீண்ட அவகாசம் பிடித்தது வரலாறுக்கு. ஹெரோடோடஸின் வரவுக்குப் பிறகு வரலாறு ஒரு புதிய பாதையில் நடைபோட ஆரம்பித்தது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *